பிரான்ஸிஸ் போ˜ர்டு கொப்Šபாலாவுடன் ரோபர்ட்˜† ஸ்டார்˜ உரையாட™ல் 

ஞாபக மறதிக்கு எதிரான போராட்டம் என்பது கலைஞர்களும் அறிவாளிகளும் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது. கியூப சமுகத்தின் மீது வைக்கப்படும் மிகப் பெரும் குற்றச் சாட்டுக்களில் ஒன்று அங்கு சுதந்திரம் இல்லை என்பது. பிறிதொரு குற்றச்சாட்டு அங்கு வறுமை நிறைந் திருக்கிறது என்பதாகும். இலத்தீனமெரிக்க நாடுகளின் தொடர்ந்த வறுமைக்கான காரணங்களாக 500 ஆண்டு காலத்திற்கும் மேலான காலனியச் சுரண்டலையும் அதற்குப் பின் இன்று வரை இராணுவச் சர்வாதி காரிகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஊட்டி வளர்த்ததையும் இன்று வரை கியூப சமூகத்தின் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளையும் பெரும்பாலானவர்கள் ஞாபகம் கொள்வதில்லை. புகாசுர நிறுவனங்களின் சுதந்திரமாக இருக்கிற அமெரிக்க ஐரோப்பிய சுதந்திரங்களின் போலிமுகம் பற்றியும் ஞாபகமாக இவர்கள் மறந்து விடுகிறார்கள். கியூப சினிமாவின் மாபெரும் ஆளுமை யாகத் திகழ்ந்த காலஞ்சென்ற கிதராஸ் அலியாவின் ‘மெமரீஸ் ஆப் அன்டர் டெவலப்மென்ட்’ படத்தை நியூயார்க் சினிமா விமர்சகர்கள் மிகச்சிறந்த படமாகத் தேர்ந்தெடுத்து அலியாவை அமெரிக்காவுக்கு உரையாற்ற வர அழைத்தபோது அவருக்கு அன்றைய அமெரிக்க அரசு விசா தருவதற்கு மறுத்தது. அதே கலைஞனின் ‘ஸ்ட்ராபெரி அன்ட் சர்க்கலேட்’ படத்திற்கு பின்னாளில் ஆஸ்கர் பரிசுக்குழு அங்கீகாரம் அளித்தது. ஆலிவர் ஸ்டோன் போன்ற இயக்குனர்களும் பிரான்ஸிஸ் போர்டு கொப்போலாவும் என்றைக்கும் இலத்தீனமெரிக்கப் புரட்சிகளையும் புதிய சமூகத்தை உருவாக்கும் அவர்களது சோதனைகளையும் ஆதரித்து வந்திருக்கிறார்கள். பிரான்ஸிஸ் போர்டு கொப்போலாவின் கியூப விஜயத்தின் பின் 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் நாள் எடுக்கப்பட்ட இந்த நேர்முகம் பத்தாண்டுகள் கழித்து ‘தி கியூபன் இமேஸ்’ எனும் பெயரில் வெளியான கியூப சினிமா பற்றிய புத்தகத்தில் மறுபிரசுரமானது. இப்புத்தகத்தைப் பதிப்பித்த மைக்கேல் சானன் கலாச்சார மார்க்சீயரும் இசை விமர்சகரும் ஆவார். எல்ஸால்வடார் திரைப்படக் கழகத்தை இலண்டனில் உருவாக்க முன்னணியிருந்ததும் இவர்தான். இந்நேர்முகம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், பிரான்ஸிஸ் போர்டு கொப்பாலோ கியூப சமூகம் பற்றிக் கொண்டிருக்கும் அச்சங்களும் அமெரிக்க சுதந்திரம் பற்றி அவர தெரிவித்த கடுமை யான விமர்சனங்களும் அவ்வாறே அர்த்தமுள்ளதாகத் தான் இருக்கிறது. ஞாபக மறதிக்கு எதிராக வரலாற்று ஆவணங்களைப் பதிவதென்பது கலைஞர்களுடையதைப் போலவே சிந்திக்கிறவர்களதும் கடமையாகிறது. அவ்வகையில் இவ்வுரையாடல் தமிழாக்கம் பெறுகிறது. பிரான்ஸிஸ் போர்டு கொப்போலா வரலாற்றின் மனசாட்சியை என்றென்றும் உலுக்கிக் கொண்டிருக்கும் வியட்நாம் பற்றிய ‘அப்போகலிப்ஸ் நவ்’ படத்தைக் கொடுத்தவர். அதைப்போலவே அவரது காட்பாதர் திரைப்படமும் சினிமா சரித்திரத்தில் என்றென்றும் நிலை பெற்றிருக்கும் படங்களிலொன்றாகும். தொடர்வது கொப்போலாவுடனான ரோபர்ட் ஸ்டாரின் உரையாடல்.

தமிழில்: யமுனா ராஜேந்திரன்

fidel castro and ernest hemingway copy

எல்லாக் கியூபப் படங்களையும் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்ததா?

எந்தப்படத்தை நாம் பார்க்க விரும்பினாலும் அதை நாம் அங்கு பார்க்கலாம். நீங்கள் உங்கள் விருப்பத்தைச் சொல்லிவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். அப்படம் அங்கு திரையிடப்படும்.

அவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அவர்கள் திறன் வாய்ந்தவர்கள் நல்லவர்கள் என நினைக்கிறேன். நான் உலகம் முழுக்க நிறையப் பயணம் செய்திருக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்குக்கூடப் போயிருக்கிறேன். அந்தச் செல்வ வளம் மிக்க உயர் நாகரீகம் கொண்ட நாட்டில் சினிமா தொழிலாக இல்லை என்பது வேதனை மிக்கது. அவர்கள் நமது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பழைய படங்களையும் மிகச் சொற்ப விலைக்கு வாங்கித் திரையிடுகிறார்கள்.கொஞ்சமாகவேனும் கியூபர்கள் தமது சொந்த சினிமாவை உருவாக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலிலிருந்து கியூபாவைப் பாருங்கள். ஒப்பீட்டளவில் அது மிகச் சின்ன நாடு. அவர்களிடம் ஆரோக்கியமான வேட்கை கொண்ட சினிமா இருக்கிறது.

கியூபாவில் சோதனை முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

சோசலிஷ சமூகத்தை அணுகுகிற கலைஞன் மிகுந்த கவலையுடன்தான் அதை அணுகுகிறான். கலை என்பது அவ்வமைப்பில் சில குறிப்பிட்ட பார்வைகள் சில கோட்பாட்டு நிலைகளிலிருந்து மிகச் சாதாரணமாக அணுகப்படும் என நினைக்கிறான். கியூபாவில் நிறைய வேறுபட்ட நிலைகள் இயங்குகின்றன. கியூப ஆட்சியாளர்கள் மக்களின் மிகச்சிக்கலான அனுபவங்களை வேறுபட்ட தன்மைகளை அறிந்திருக்கிறார்கள். அவர்களது சினிமா இதை அணுகிப்பார்க்கிறது; தேடிச்செல்கிறது. பல ஆண்டுகளின் முன் நான் கிதராஸ் அலியாவின் ‘மெமரீஸ் ஆப் அண்டர்டெவலப்மென்ட்’ படத்தைப் பார்த்தபோது அப்படம் மிகச்சிக்கலான பிரச்சினைகளைச் சித்தரிப்பதாகவும் பல்வேறு நிலைப்பாடுகளை வைப்பதாகவும் நான் உணர்ந்தேன். அவர்கள் சிக்கல்களை முரண்பாடுகளை அங்கீகரிக்கிறார்கள். ஒரு புதிய சமூக அமைப்பை முன்வைப்பது என்பது குழந்தைகள் விளையாட்டு அல்ல என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதன் கடினத்தையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பெற்ற வெற்றிகளின் அதே அளவு அவர்கள் தோல்விகளையும் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் அத்தோல்விகள் சரியானதுதான் என அறிந்திருக்கிறார்கள். ஆகவே தொடர்ந்து மேற்செல்ல உறுதியேற்கிறார்கள்.

fidel castro and allende

மக்களுக்கு இது கடினம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மனநல ஆய்வகத்தைச் சேர்ந்த மருத்தவரொருவர் புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட தற்போது மனம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்திருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்.

சோசலிஷ சமூகத்தை உருவாக்குவதில் உள்ள நெருக்கடிகளை அவர்கள் மிக நேர்மையாக உணர்ந்திருக்கிறார்கள். சொத்துரிமை குறித்து கியூப மக்கள் மறுசிந்தனை செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள். பொருளாதாரரீதியிலான சலுகைகள் அங்கு கிடைக்காது.பரந்துபட்ட அடிப்படையிலான போட்டியுள்ள சமூகம் அங்குள்ளது. அதன் பொருட்டு தொழிலாளர்களுக்குப் பொருளியல் சுபிட்சமும் கிடைக்கிறது. அடுத்தவனைக் காட்டிலும் உங்கள் உழைப்பு அதிகபட்சமாக இருக்குமானால் உங்களால் வாஷிங்மெஷின் வாங்கமுடியும். மிகக் குறைந்த அளவு சம்பளம் பெறுகிற ஒருவர் 150 டாலர்களை ஒரு மாதத்தில் சம்பாதிக்கிறார். பிடல் 700 டாலர்களைப் பெறுகிறார். உண்மைதான். சம்பளத்தில் சில வித்தியாசங்கள் இருக்கின்றனதான். நாங்கள் நிறைய நெருக்கடிதரும் கேள்விகளைக் கேட்டோம். உதாரணமாக தெருக்கழிவு சுத்தம் செய்பவராக இனி நீங்கள் இருக்க விருப்பமில்லை என வைப்போம். எவ்வாறு அதிலிருந்து வெளியேற முடியும் ? படிப்பு. படிப்புதான் பதில். தெருச்சுத்தம் செய்கிற வேலையைவிட்டு டிராப்ட்ஸ்மேனாகவோ எலக்ட்ரானிக் என்ஜினியராகவோ நீங்கள் வரவிரும்பினால் தினமும் மூன்று மணிநேரம் கல்வி கற்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் அதற்காக எதுவும் காசு செலவு செய்யத் தேவையில்லை. அரசு இதை ஊக்கப்படுத்தகிறது. அவர்களுக்கு வேண்டியது கிடைக்கிறது. காசு காரணமாக அது அவர்களுக்குத் தடைப்படுவதில்லை. அந்த வாய்ப்பு என்னளவில் மிக அற்புதமான விஷயமாகும்

கலைஞர்களின் சுதந்திரம் பற்றிய கேள்விகளை அவர்களிடம் நீங்கள் கேட்டார்களா?

ஆமாம். அவர்களுக்கு வழங்கப்பட்ட வழிவகைகள் தவிர பிற வகைகளில் எவரும் அரசாங்கத்தை விமர்சிக்க அனுமதிக்கப்படுவதில்லை. நீங்கள் ஒரு தொழிலாளியாகவோ ஒரு எழுத்தாளராகவோ இருந்தால் உங்களுடைய பல்வேறு அமைப்புக்களில் உங்கள் விமர்சனத்தை நீங்கள் முன் வைக்கலாம். ஓரு தொழிற்சாலையில் ஒரு வாரத்தின் சில நாட்களில் இரவு நேரங்களில் விவாதக்கூட்டங்களை அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். ஆக்கபூர்வமானதும் எதிர்மறையானதுமான உங்கள் அபிப்பிராயங்களை அங்கே முன்வைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். சமூக அமைப்பின் அடிப்படைக்கருத்து நிலையை விமர்சிக்காமல் இச்சமூகத்தை மேம்படுத்துவது தொடர்பான விவாதங்களுக்கு அங்கே பல படிநிலைக் கட்டமைப்புக்கள் உள்ளன. அந்த நேர்மையை நான் போற்றுகிறேன். அரசை விமர்சிக்க உமக்குச் சுதந்திரமில்லை. அந்தச் சுதந்திரம் உமக்கு இல்லை.

இங்கு அமெரிக்காவில் நீங்கள் விரும்புகிற ஏதொன்றையும் நீங்கள் எழுதலாம் பேசலாம். அங்குள்ள கியூப மக்களுக்கு இதைச் சொல்லும்போது அவர்கள் மிகவும் சந்தோஷம் கொள்கிறார்கள். ‘காட் பாதர்- இரண்டாம் பாகம் ‘ படத்தைப் பார்க்கும் போது கியூபப்புரட்சியை நல்லவிதமாகச் சொல்லும் படங்களை எப்படி உங்களால் உருவாக்க முடிகிறது என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இந்த மாதிரிச் சுதந்திரம் நமது நாட்டுக்குச் சாத்தியமானதுதான்.

இப்போது நமது நாட்டை ஆளும் மிகப்பெரும் நலன்கள் கொண்டோரை (Big Interests) ஆட்டம் காண வைப்பதற்கு அருகில் இந்த வகைச் சுதந்திரங்கள் வருவதில்லை. ஓரு மனிதன் - ஒரு அரசியல் தலைவன் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பகாசுர நலன் கொண்டோர்க்கு எதிராக ஒரு திட்டத்தோடு அந்தத் தலைவன் வருவானாகில் அப்போது ஒரு இராணுவக் கவிழ்ப்போ கொலையோதான் அமெரிக்காவில் நடக்கும். அப்போது நாம் நம்பிக் கொண்டிருக்கும் சுதந்திரம் இல்லாது போய்விடும் என நான் நினைக்கிறேன்.

fidel and marquez

(மார்க்வெஸ் உடன் பிடெல்)

கியூபர்களிடம் இந்தவிதமான அரசியல் சுதந்திரம் குறித்த மாயைகள் எதுவும் கிடையாது. எங்களது புரட்சி மிகவும் இளையது. எமக்கு நிறைய எதிரிகள். இச்சூழலில் உள்ளேயும் சரி வெளியேயும் சரி புரட்சிக்கு எதிரானவர்களை அனுமதிப்பதென்பது சாத்தியமில்லை என அவர்கள் சொல்கிறார்கள். இதை நான் ஒப்புக் கொள்கிறபோது இதிலிருக்கும் ஆபத்துக்களையும் நான் அறிந்து தானிருக்கிறேன்.

நான் இவ்வாறு இதனை முன்வைக்கிறேன் : அவர்கள் சொல்வது சரியானால்-அவர்களது சமூகம் அழகானதும் மேன்மையானதும் சுபிட்சமானதும் என்றால்-அதைப்பாதுகாப்பது என்பது நியாயம்தான். இத்தகைய சுதந்திரத்தை விட்டொழிப்பது நியாயமானதுதான்.

சிலியில்- புதிதாகப் பிறந்த சிலியில் தேர்நதெடுக்கப்பட்ட அரசாங்கம் பாதுகாக்கப்பட முடியவில்லை. அது அழிக்கப்பட்டது. மிகவும் சோகமயமானதாக அலண்டேவை அழித்துவிட்டுப் பதவிக்கு வந்த ஆட்சி பத்திரிக்கைச்சுதந்திரத்தையும் எதிர்க்கட்சிகளையும் ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. அலண்டே ஒரு நாளும் இதைச் செய்யவில்லை.

நீங்கள் சொல்வதைப் பாரக்கும் போது கியூப மக்களுக்கு உடனடியாகச் சில சுதந்திரங்கள் கிடைத்திருக்கிறன. ஆக்கபூர்வமான சமூகத்தை உருவாக்கக்கூடிய புதிய மனநல ஆய்வகத்தை உருவாக்கக்கூடிய அல்லது கல்வி நிலையங்களை உருவாக்கக்கூடிய சுதந்திரங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. இவை எமக்கு இல்லாத சுதந்திரங்கள். அடிப்படையில் எமது சுதந்திரம் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம்தான்.

ஆரோக்கியமான உடல்நலம் மனநலம் பேணும் ஒரு சமூகத்தில் வாழும் சுதந்திரம் நமக்கு இல்லை. அதுதான் உண்மையான சுதந்திரம். மக்களைப் பொறுப்பேற்கிற ஒரு சமூகத்தில் வாழக்கூடிய சுதந்திரம் நமக்கு இல்லை.