OPS EPS 350தேனியில் அரசு சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நானும் ஓபிஎஸ்ஸும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாகச் செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

இரட்டைக்குழல் துப்பாக்கி என்னும் தொடர் தமிழக அரசியலில் புகழ் பெற்ற  தொடர். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டும் இணைந்து செயல்படும் என்பதை அறிவித்த தொடர். அதனை இன்று சற்றும் பொருத்தமில்லாமல் எடப்பாடி பயன்படுத்தியுள்ளார்.

இந்த இரண்டு துப்பாக்கிகளும் ஒன்றையொன்று சுட்டுக்கொள்ளத் தருணம் பார்த்திருப்பவை. ஏற்கனவே சுட்டுக்கொல்ல முயன்றவையும் கூட. சட்டமன்றத்தில் எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தபோது, ஓபிஎஸ் தலைமையிலானவர்கள் அதனை ஆதரித்தும், எடப்பாடியை எதிர்த்தும் வாக்களித்தவர்கள்.

எடப்பாடி ஆட்சி ஊழல் நிறைந்தது என்று அறிவித்தவர்கள் ஓபிஎஸ் அணியினர். பிறகு அதனைப் பேசிச் சரி செய்துவிட்டோம் என்றார் மூத்தத முன்னாள் அமைச்சர் பொன்னையன். (உலகிலேயே ஊழலைப் பேசிச் சரி செய்தவர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும்).

இப்போதும் முன்னாள் தமிழக ஆளுனர் கைககளைப் பிடித்துச் சேர்த்து வைக்க, சேர்ந்திருப்பதுபோல் ஒருகாட்சி தருகின்றனர். பணம், பதவி இரண்டையும் காப்பாற்றிக் கொள்ள இந்த இணைப்பு அவர்களுக்குத் தேவைப்பட்டுள்ளது என்பதைச் சின்னக் குழந்தை கூட அறியும்.

இவர்களா இரட்டைக்குழல் துப்பாக்கிகள்? ஒருவேளை, உண்மை, நேர்மை, நியாயம் அனைத்தையும்  சுட்டுக்கொல்லும்  துப்பாக்கிகளாக இருக்கலாம்!