மகாகவியின் பலம் பொருந்திய சொற்கள் இன்றைய வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு நிபந்தனைகளின்றிப் பொருந்துகிறது. பொதுவாகவே வங்கிகளின் கிஜிவிகளில், பணம் நிரப்புவதற்கு பல பொதுவான விதிகள் உண்டு. சேர்ந்தாற்போல் வரும் விடுமுறை தினங்கள், மற்றும் பண்டிகைக்காலப் பயன்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பணம் நிரப்பப்படும். இப்பணியினில், இரண்டுநிலைப் பணியாளர்கள் ஈடுபடுவார்கள். பணம் போதாமல் போகிற நிலையே பெரும்பாலும் வராமல்தான் பல வங்கிகள் பணிபுரிந்து வருகின்றன. அப்படிப்பட்ட நிலையில், 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகாது என்று அறிவித்த பிறகு, தக்க பணப்பரிமாற்றக் கட்டமைப்புச் செய்யத் தவறி விட்டது ரிசர்வ் வங்கி.

bank queue 370ஆறுமாதங்களாகத் திட்டமிட்ட நிலையில் ,ஒட்டுமொத்த 100ரூபாய் கையிருப்புக்குப் பற்றாக்குறை வரும் என்பதை யோசித்து, இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் சந்தைப்படுத்துதலில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து, போர்க்கால அடிப்படையில், 100ரூபாய் நோட்டுக்களை தயாராக அச்சடித்து வைத்திருந்திருக்க வேண்டும்.

அவசரத்துக்கு, அதிகம் புழங்கப்படாத 20ரூபாய் கட்டுகளும் அச்சடிக்கப்பட்டு, வங்கிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தால், ஒரு 2000 ரூபாய் நோட்டினை கால் கடுக்க வரிசையில் நின்று பெற்று அதற்குச் சில்லறை மாற்ற வேண்டிய முட்டாள்தனமான, பரிதாபகரமான நிலைக்கு மக்கள் வந்திருக்க மாட்டார்கள்.

இதில், நெருடலான விஷயம் மூன்று. தனியார் வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட பணத்தினைவிட மிகக்குறைவான பணம்தான் ஏனைய பொதுத்துறை வங்கிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பொதுத்துறைவங்கியின் கிளை தோராயமாக 85 லட்சம் பெற்றிருக்கிறது என்றால், இந்தத் தனியார் வங்கியின் கிளை கிட்டத்தட்ட 7.5 கோடி பெற்றிருக்கிறது. இவர்களின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களேயன்றி பொதுத்துறை வங்கிகளின் வரிசையில் நின்றுகொண்டிருந்த நடுத்தட்டு மக்களோ, ஓய்வூதியர்களோ அல்லர்.

அனைத்து ஓய்வூதியமும், பொதுத்துறை வங்கிகளின் மூலம்தான் வழங்கப்படுகிறது. அரசு சார்ந்த ஊதியங்கள் பாரத ஸ்டேட் வங்கி மூலம் அளிக்கப்பட்டு வரும்நிலையில், எந்த விதப் பொதுச் சேவையும் செய்யாத, இந்த மூன்று வங்கிகளின் ஆயிரத்துக்கும் குறைவான கிளைகள் பெருமளவில் பணம்பெற்றது எந்த அடிப்படையில்?

தங்களிடம் போதிய கையிருப்பு இல்லாமல் பொதுத்துறை வங்கிகளின் அலுவலர்களும், ஊழியர்களும் மக்களின் கோபத்துக்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாகியிருக்கின்றனர்.

இவர்களில் சில கறுப்பு ஆடுகள் செய்த தில்லுமுல்லு காரணமாக, கடந்த ஒன்றரை மாதங்களாக அவதியும் அல்லலும் அவமானமும் அடையும், உண்மையான ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் துயரம் எப்போது தீரும் என்பதே மிகப்பெரிய கேள்வி.

காரணம், --எந்த வாடிக்கையாளரின் கோபத்திற்கு அவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ அந்த வாடிக்கையாளரின் சேவைதான் தன் பணி; -தான் வாங்கும் ஊதியத்தின் ஊற்றுக்கண் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறர்கள்.

ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள்தான் அதனை உணரவில்லை.

எப்போது உணரப்போகிறார்கள் ?