ஆடத் தெரியாத பெண்ணுக்குத் தெரு கோணலாக இருந்ததாம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆளத் தெரியாத பெண்ணுக்கு ஆட்சியே கோணலாக இருந்ததை கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

மக்களின் நலன், நாட்டின் வளம் இவைகளுக்காகஅதிகாரத்தைப்பயன்படுத்தும் ஆட்சி, நேர்மையான ஆட்சி.

தற்பெருமை, சுயநலம், ஆடம்பரம், பிடிக்காதவர்களைப் பழிவாங்க அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஆட்சி, கோணல் ஆட்சி.

நான், எனது ஆட்சி, நான் ஆணையிட்டேன்,  என் ஆணைக்கிணங்க & இப்படி எல்லாம் தற்பெருமை பேசிக் கொண்டிருப்பவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

எங்கு பார்த்தாலும் தானே இருக்க  வேண்டும், தன் படமே இருக்க வேண்டும், மக்கள்வரிப்பணத்தில் தன் படத்துடன் விளம்பரங்கள், தன் படத்துடன் அரசு நாள்காட்டிகள், நாளிதழ்களுக்கு முழுப்பக்கம் விளம்பரங்கள் என்று ஆடம்பரத்தில் குளித்தெழும் முதலமைச்சர், தமிழ்நாட்டில்

மக்களின் வரிப்பணத்தில், அரசுக்குச் சொந்த இடமாகப் புதிய தலைமைச் செயலகம் கட்டினார் முன்னாள் முதல்வர் கலைஞர்.

அந்தக் கட்டிடத்திற்குள் கால் வைக்கமாட்டேன், என்றுவாடகை கொடுத்துக் கொண்டிருக்கும் கோட்டையிலே தலைமைச் செயலகம் என்று தொடர்ந்து கொண்டு இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

மக்கள் நோக்கத்திற்காக செலவிடப்பட்ட மக்கள் வரிப்பணம் சிதறுண்டு போனது இங்கே-.

பல்நோக்கு மருத்துமனை என்றார், அதற்கு அளவுக்கு மீறிய இவ்வளவு பெரிய கட்டிடமா? அதற்கான அரங்க அமைப்புகள் உண்டா அங்கே?

உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கினார் கலைஞர். உலகமே வியந்தது.

பொறுக்குமா அம்மையாருக்கு, கேட்பாரற்ற நிலையில் போட்டுவிட்டார் அதை. இன்று நீதிமன்றம் கண்டனம் செய்கிறது அதற்காக.

கலைஞர் கட்டிய தலைமைச் செயலகம், அவர் உருவாக்கிய நூலகத்தைத் தீட்டாகப் பார்க்கும் அம்மையார், கலைஞர் ஆட்சியில் மாநகரத் தந்தை ஸ்டாலின் நேர்பார்வையில் கட்டப்பட்டனவே மேம்பாலங்கள்.

அதன்மேல் இவர் பயணம் செய்யாமல் மாற்றுப்பாதையிலா போய்க்கொண்டு இருக்கிறார்?அந்தப்பாலங்கள்உறுதியைச் சோதிக்க முயன்றவர்தானே இவர்.

எத்தனைஅவதூறு வழக்குகள்! எத்தனை வழக்குகள் ஊடகங்கள் மீது.

காஷ்மீர் சிங்கம் சேக் அப்துல்லாவின் வாரிசு, பருக் அப்துல்லா அண்மையில் சொன்னார். இந்தியாவின் முதுபெரும் அனுபவம் மிக்கதலைவர் கலைஞர் என்று. நாட்டின் வடகோடித் தலைவர்களுக்கு இது புரிந்திருக்கிறது.

கலைஞர் பிறந்த தென் கோடித் தமிழகசட்டமன்றத்தில் கலைஞரை ஒருவர் தரக்குறைவாகப் பேசினார் & தடுக்கவில்லை அம்மையார்.

கலைஞர் மீது உரிமைப்பிரச்சனை கொண்டு வந்து சட்டப் பேரவையில் நிறைவேற்றுகிறார்-. இப்பொழுது கலைஞரைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் எதிர்கட்சிகள் கூட இதை ஏற்க மறுத்தன.

முந்தைய அரசின் திட்டங்களையும், எதிர்கட்சித் தலைவர்களையும் தூக்கி எறிந்து, பழிவாங்குவது என்ன நேர்மையான ஆட்சியா?அன்றி கோணல் ஆட்சியா?

மழை வெள்ளம், செம்பரம்பாக்கம் ஏரி நீர் அதிரடித் திறப்பு இவைகளால் தண்ணீரில் தத்தளித்தது தமிழகம்.

உணவுப் பொருள், நிவாரணப் பொருள்களுக்காக மக்கள் கைகளை நீட்டி அழுது கொண்டிருந்த போது, ஜெயலலிதாவின் அரசு (எனது அரசு?), அந்தநிவாரணப் பொருள்கள் சென்று சேர்வதில் கவனம் செலுத்தாமல், அதில் ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு இருந்தது.

தனியார், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் சேகரித்துக் கொண்டு வந்த பொருள்களைப் பறித்து அதிலும் ஜெயலலிதா அரசு ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு இருந்தது.

அவ்வளவு ஏன்? திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பேரவைத் துணைத்தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமனும், வனத்துறை அமைச்சர் ஆனந்தனும், ஸ்டிக்கர் பாய்ஸ் என்று கூறுமளவுக்கு மக்கள் தலையில் ஸ்டிக்கர் ஒட்டி விட்டார்கள்.

ஜெயலலிதாவின் 68ம் வயதை நினைவுபடுத்த இலவசத் திருமணம் என்றார்கள்.என்ன செய்தார்கள்?

68 மணமக்கள் தலையிலும் ஜெயலலிதா ஸ்டிக்கரை ஒட்டி (மாட்டி) விட்டார்கள். ஆடு, மாடுகள் கழகத்தில் தொங்கவிடப்பட்ட ஸ்டிக்கர்களை இன்று ஆண் & பெண் நெற்றியில் ஒட்டத் தொடங்கி விட்டார்கள்.

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடுகூடத் தெரியவில்லை இவர்களுக்கு.

மந்திரிகளை அடிமையாகக் காலில் விழவைத்துக் கொண்டு, அதில் ஒரு ஆனந்தத்தைக் காணுகிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கு மக்களை அடிமையாக்க வேண்டும் என்று அவரின் அடிமைகள் நாட்டு மக்களின் நெற்றியில் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால்...?

இது என்னநாடா, இல்லை காடா! வாழ்பவர்கள்மக்களா, இல்லை மந்தை விலங்குகளா?

ஆட்சிமாற வேண்டும்! அதிகாரம் உங்கள் கையில்! நேரம் நெருங்கிவிட்டது! நல்ல தீர்ப்பளிப்போம் - வாருங்கள்!