ஆரியச்சான்றுகள் காட்டினர்

Annaduraiவரலாற்று உண்மைக்குப் புறம்பாக, தமிழர்களின் இனப்பெயர் ‘திராவிடர்’ என்று பெரியாரும் அண்ணாவும் திரும்பத் திரும்பக் கூறினர்.

அதற்கான சான்றுகளை உரியவாறு பெரியார் காட்ட வில்லை. ஆரியச் சான்றுகளைக் காட்டினார். தமிழரின் அகச் சான்றுகள் காட்டவில்லை.

“திராவிடர் என்ற பெயரை மனுதர்ம நூலில் காணலாமே! இராமாயணத்தில் பாரதத்தில் கூட இதற்கு ஆதாரம் உண்டே” என்றார் (ஈ.வெ.ரா.சி பாகம் 1 - பக். 547).

அண்ணா கூறிய சான்றுகளும் ஆரியர்கள், பார்ப்பனர்கள் கூறியவையே தவிர, தமிழர்கள் கூறியவை அல்ல.

சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் முதலிய தமிழ் இலக்கியங்களில் உள்ள சான்றுகள் அல்ல அவை.

இதோ அண்ணா கூறுகிறார் :

இரவீந்திரநாத் தாகூரின் ஜனகனமன பாட்டில் “திராவிட உத்கல வங்கா” வருகிறது. சென்னை மாநிலக் கல்லூரி வாயிலில் நிற்கும் உ.வே. சாமிநாதய்யர் சிலையின் கீழ் அவரைத் “திராவிட கலாநிதி” என்று குறிப்பிட்டுள்ளார்கள். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களைத் திராவிட சிற்பக்கலை என்று எழுதி வைத்துள்ளார்கள். சென்னை கொத்தவால் சாவடியில் 04.06.1961-இல் அண்ணா ஆற்றிய உரை, “திராவிட தேசியம் மாநில சுயாட்சி ஏன்?” என்ற நூலிலிருந்து, திராவிடர் கழக வெளியீடு, மூன்றாம் பதிப்பு 2012, பக்: 11 - -13.

மகாபாரதம், மனுசுமிருதி போன்ற நூல்களிலிருந்து தொடர்ந்து ஆரியப் பார்ப்பனர்கள் திரிபாகக் கூறி வந்த திராவிடத்தின் தொடர்ச்சிதான் வங்கத்தைச் சேர்ந்த இரவீந்திரநாத் தாகூர் திராவிடம் பற்றி எழுதியது.

இரவீந்திரநாத் தாகூர் கூறும் திராவிடத்தை ஏற்றுக் கொண்ட அண்ணா, அவர் அதே பாட்டில் கூறிய பாரதத்தை ஏற்றுக் கொண்டாரா? ஜனகனமனப் பாட்டின் பொருள் என்ன?

“பாரதத் தாயே நின் திருப்பெயர் பஞ்சாபையும் சிந்துவையும், குசராத்தையும், மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது” என்கிறார் தாகூர். தாகூரின் இந்தப் பாட்டைக் கேட்டு அண்ணா உள்ளக் கிளர்ச்சி அடைகிறார்.

பாரதத் தாயின் தலைமையை ஏற்றுக் கொண்ட “திராவிடம்” என்று ஆரியப்- பார்ப்பனியப் பார்வையில் தாகூர் கூறுவதையும் அண்ணா ஏற்றுக் கொண்டாரா? இல்லை. இந்த விளக்கம் கொடுத்த 1961 -காலத்தில் பாரதத்திற்கும் திராவிடத்திற்கும் எந்தத் தொடர்பு மில்லை, நாங்கள் தனிநாட்டவர் என்று கூறித் தனிநாடு கேட்டார் அண்ணா.  “வடவர் நம்மவரும் இல்லை; நல்லவரும் இல்லை” என்று அக்காலத்தில் அண்ணா கூறிக் கொண்டிருந்தார்.

தாம் சார்ந்த தமிழினத்தில் திராவிடத்திற்குச் சான்றில்லை, எதிரியின் தரப்பில் கொச்சையான திரி பான சான்றாக இருந்தாலும், ஏதோ ஒன்று இருக்கிறது, அதை எடுத்துக் காட்டுவோம் என்று அண்ணா காட்டியுள்ளார். அவர்கள் ஏற்றுக் கொண்ட ஆரிய நாமகரணமான - திராவிடம் -- அவர்களை அங்கேதான் கொண்டு போய்ச் சேர்க்கும்.

இதோ, அடுத்த ஆரியச் சான்று. தமிழறிஞர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுக்கு “திராவிட கலாநிதி” என்று பட்டம் இருக்கிறதே என்கிறார் அண்ணா!

“திராவிட வித்யா பூஷணம்” என்ற பட்டத்தைப் பனாரஸ் பல்கலைக் கழகத்தில் ‘பாரத தர்ம மகா மண்டல்’ என்ற இந்துத்துவா பார்ப்பனிய அமைப்பு 31.01.1917-இல் உ.வே.சா. அவர்களுக்கு வழங்கியது. இந்துத்துவா மற்றும் பார்ப்பனியத்தில் காலூன்றி நின்று கொண்டு காங்கிரசுத் தலைவராகவும் விளங்கியவர் வடநாட்டு மதன்மோகன் மாளவியா.

அவரும் அவரைச் சார்ந்தோரும் நடத்திய அமைப்பு தான் “பாரத தர்ம மகா மண்டல்”. இதே மண்டல் தான் 1916 இல் பனாரஸ் (காசி) இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியது. “சனாதன தர்மத்தையும் இந்து பண்பாட்டையும் பரப்புவதற்காக பாரத தர்ம மகா மண்டல் தொடங்கப்பட்டதாக” அதன் நோக்கங்களில் கூறப்பட்டுள்ளது.

எனவே அவர்கள் மகாபாரதம், மனுசுமிருதி நூல்களைப் பின்பற்றி “திராவிட வித்யா பூஷணம்” என்று உ.வே.சா.வுக்கு பட்டம் வழங்கினர். ஆரியம் -- பார்ப்பனியம் - பாரத மாதா - இந்துத்துவா ஆகிய வற்றை எதிர்த்த அண்ணா, ஆரியத்தின் “திராவிடத்தை” மட்டும் ஏற்றது ஏன்?

தமிழில் சான்றில்லை என்பது மட்டுமல்ல, பெரியாரும் அண்ணாவும் தமிழர்களுக்கு மட்டுமான கட்சியைத் தொடங்கவில்லை. தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோருக்கான கட்சியைத் தொடங்கினர். தொடங்கினர் என்று கூறுவது பிழை. அப்படியான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக் கட்சி) - 1930களில் பெரியாரின் தோழமை அரசியல் கட்சியாக விளங்கியது. பின்னர் 1939-இல் அதன் தலைமை பெரியாருக்கு வந்தது.

ஒரு தொழிற்சங்கப் பெயர் போல் இருந்த அந்தப் பெயரை மாற்றி - இனம் சார்ந்த புதிய பெயர் வைக்கப் பெரியாரும் அண்ணாவும் விரும்பினர். அப்போது “தமிழர்” என்ற பெயர் வேண்டாம் என்று கருதி தெலுங்கர், கன்னடர், மலையாளிகளுக்கும் பொதுவான இனப்பெயராக ஆரியப் பார்ப்பனர் அழைத்து வந்த “திராவிடர்” என்ற திரிபுப் பெயரைச் சூட்டினர்.

எனவே அவர்களுக்குத் திராவிடத்தை அடையாளப்படுத்த ஆரியச் சான்றுதான் கிட்டுமே தவிர தமிழ்ச் சான்று கிட்டாது. இன்றும் அண்ணா காட்டிய அதே மேற்கோள்களைத்தாம் கலைஞர் கருணாநிதி திராவிடத்திற்குச் சான்றாகக் காட்டி வருகிறார்.

ஆரியம் கூறிய திராவிடப் பெயரை ஐரோப்பிய ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டு திராவிட மொழி, திராவிடப் பண்பாடு, திராவிடக் கட்டடக்கலை என்று கூறி, தமிழ் - தமிழர் வரலாற்றை, தமிழர் பண்பாட்டை, தமிழர் ஆற்றலை திராவிடத்திற்குள் மூடி வைத்தனர். அந்த ஆரியச் சான்றுகளைக் காட்டுவதில் என்ன வரலாற்றறிவு இருக்கிறது? என்ன தன்மான உணர்ச்சி இருக்கிறது? எதுவுமில்லை.

தமிழர் அகச்சான்றுகள்

தமிழ், தமிழர், தமிழகம், தமிழ்நாடு என்பவை மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழ் இலக்கியங் களில் பயின்று வரும் சொற்கள்.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ் கூறும் நல்லுலகம்”- தொல்காப்பியப் பாயிரம்.

”இமிழ்கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கைத்

தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து” - புறநானூறு- 19.

”நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி

வடிநவில் அம்பின் வில்லோர் பெரும

கைவள் ஈகைக் கடுமான் கொற்ற

வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்

பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்

பாடுப என்பர் பரிசிலர் நாளும்

ஈயா மன்னர் நாண

வீயாது பரந்த நின் வசையில் வான் புகழே” - புறநானூறு- 168.

“தமிழ்கெழு மூவர் காக்கும்

மொழிபெயர் தேஎத்தே பன்மலை யிறந்தே.” - அகநானூறு- 31.

”தமிழகப் படுத்த விமிழிசை முரசின்

வருநர் வரையாப் பெருநாளி ருக்கை” - அகநானூறு- 227.

தண்டமிழ் வலித் தமிழ்நாட்டக மெல்லாம்

நின்று நிலையிற் புகழ்பூத்த லல்லது

குன்றுதல் உண்டோ மதுரைக் கொடித்தேரான் -

- பரிபாடல்- 410.

”இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்

தமிழ்முழு தறிந்த தன்மையன் ஆகி” -

- சிலப்பதிகாரம், அரங்கேற்றுக்காதை.

”இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய”

- சிலப்பதிகாரம், காட்சிக்காதை.

”ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”

-- திருநாவுக்கரசர் (தேவாரம்).

வினாவும் விடையும் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்கான தொல்காப்பிய நூற்பாவான “செப்பும் வினாவும் வழா அல் ஓம்ப’’ என்பதற்கு விளக்க வுரை எழுதிய இளம்பூரணர் எடுத்துக்காட்டாக “நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்’’ என்றார்.

இன்னும் இப்படி எத்தனையோ அகச் சான்று களாகத் தமிழ் இலக்கியம் தந்தவை தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்கு இருக்கின்றன.

ஆந்திர நாயக்கர் ஆட்சியில் திராவிடம்

திராவிடம், திராவிடர், திராவிடநாடு என்று பழந் தமிழிலக்கியம் ஒன்று கூடக் குறிப்பிடவில்லை.

தமிழர்கள் ஆந்திர நாயக்க மன்னர்களுக்கு அடிமை யாக்கப்பட்டு ஆரியமும் தெலுங்கும் கோலோச்சிய 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்தான் ஆரியர் சூட்டிய “திராவிடர்’’ என்ற பெயரைத் தமிழர்கள் தாங்களும் கூறிக் கொண்டனர்.

“சூத்திரர்கள்’’ என்றும் தங்களைத் தமிழர்கள் கூறிக் கொண்ட அடிமை வாழ்வு மேலோங் கிய காலம் அது! வீரம் மிக்க சைவ மரபு பேசிய ஆறுமுக நாவலரே தங்களைச் சற்சூத்திரர் என்று கூறிக் கொண்டார். ஒட்டுமொத்தத் தமிழகமும் கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து அயலார்க்கு அடிமைப்பட்ட பேரவலத்தின் விளைவுகள் இவை!

இந்தப் பின்னணியில்தான் தாயுமானவர் (1705- - 1742) தமிழ் இலக்கியத்தில் முதல் முதலாகத் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதுவும் திராவி டத்தைப் பெருமைப்படுத்தும் நோக்கில் அன்று; குதர்க்க வாதிகளின் குழப்பவாதத்தை அம்பலப்படுத்தும் நோக்கில்!

கோவையில் 1950 மே 27, 28 ஆகிய இருநாளும் தி.மு.க. முத்தமிழ் வளர்ச்சி மாநாடு நடத்தியது. அம்மாநாட்டின் தலைவர் புரட்சிப்பாவலர் பாரதிதாசன்; மாநாட்டின் திறப்புரையாளர் நாவலர் ச. சோம சுந்தர பாரதியார். அறிஞர் அண்ணா நிறைவுரையாற்றினார்.

அம்மாநாட்டில் பேசிய அண்ணல் தங்கோ அவர்களும் நாவலர் பாரதியார் அவர்களும் தி.மு.க. கழகம், திராவிடர் என்ற சொல்லைக் கைவிட வேண்டும் என்று பேசினர். அதற்கு விடையிறுத்த பாவேந்தர் பாரதிதாசன் பின்வருமாறு பேசித் தாயுமானவர் பாடலை எடுத்துக்காட்டினார்.

“தமிழ் என்ற சொல்லே திராவிடம் என்று திரிந்தது; ஆதலால் திராவிடம் தமிழே. திரிபடைந்த தமிழ்ச் சொல்லைத் தமிழல்ல என்று ஒதுக்குவது சரியல்ல. வாழைப் பழத்தை வாளைப்பளம் என்றால் அது தமிழல்ல என்று ஒதுக்குவாருண்டா என இவ்வா றெல்லாம் நான் பன்முறையும் விளக்கியிருக்கிறேன்.

இப்போதும் இத்தாயுமானவர் பாடலைக் கேளுங்கள்:

கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள்;

கற்றுமறி வில்லாதவென்

கன்மத்தை என்சொல்கேன்? மதியையென்   சொல்லுகேன்?

கைவல்ய ஞான நீதி

நல்லார் உரைக்கிலோ கன்மமுக் கியமென்று

நாட்டுவேன்; கன்மமொருவன்

நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று

நவிலுவேன்; வடமொழியிலே

வல்லா னொருத்தன்வர வுந்திரா விடத்திலே

வந்ததா விவகரிப்பேன்;

வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்

வசனங்கள் சிறிதுபுகல்வேன்;

வெல்லாம லெவரையு மருட்டிட வகைதந்த

வித்தையென் முத்திதருமோ?

வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற

வித்தகச் சித்தர்கணமே!” என்றார்.

“தமிழே திராவிடம் என்பதை உட்கொண்டே தாயுமானவர் இப்பாடலைச் சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.”

( பாரதிதாசன் தலைமை உரை, நூல் - பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்,

தொகுதி - 1, பூம்புகார் பதிப்பகம் பக்கம் 507).

“ஒரு கருத்து” பற்றிய தருக்கத்தில் வெல்ல முடியாமல் எதிரியைக் குழப்பிவிடும் தந்திரக்காரர் செய்யும் குதர்க்கவாதம் பற்றித் தாயுமானவர் தற்குறிப்பில் எள்ளல் செய்கிறார். - அந்தக் குதர்க்கவாதி “அக்கருத்து” வடமொழியில் இருப்பதாகக் கூறுவார்; வடமொழி வல்லார் வந்து அவரை மடக்கினால், திராவிட மொழி யில் இருப்பதாகத் திசை திருப்புவார் என்று தாயு மானவர் கூறுகிறார். அரைகுறைப் படிப்பாளிகளை விடப் படிக்காதவர்களே மேலானவர்கள் என்று பேசுகிறார். “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்வர்கள்” என்று தாயுமானவர் சலித்துக் கொண்ட பாடல் இது!

அவர் காலத்தில் (நாயக்கர் ஆட்சி காலத்தில்) புழக்கத்தில் இருந்த திராவிட மொழி என்பதை இந்த இடத்தில் தாயுமானவர் கையாள்கிறார்.

தமிழ்தான் திராவிடம் என்ற நேர்பொருளில் தாயுமானவரும் கையாளவில்லை.

வாழைப்பழத்தை வாளைப்பளம் என்று சொன்னால் அது தமிழல்லாமல் வேறு மொழியா என்று பாவேந்தர் கேட்கிறார். பாவேந்தரோ, மற்ற எழுத்தாளர்களோ தங்கள் பாடல்களில், கட்டுரை களில் வாளைப்பளம் என்றா எழுதினார்கள்? வாளைப் பளம் கொச்சைச் சொல் என்று புறக்கணித்துவிட்டு, வாழைப்பழம் என்று செந்தமிழில் தானே எழுதினர். “திராவிடம்’’ என்ற கொச்சைச் சொல்லை மட்டும் ஏற்றுப் போற்றி இலக்கியங்களில் குந்த வைத்துக் குதூகலப்படவேண்டிய தேவை என்ன? அந்தக் காரணத்தைப் பாவேந்தர் விளக்கவில்லை!

பெரியார், அண்ணா ஆகியோரின் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, பகுத்தறிவுக் கருத்துகள் ஆகியவற்றால் ஈர்க்கப் பட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அரசியல் தந்திர நோக்கோடு வலியுறுத்திய திராவிடத்தை ஏற்றுக் கொண்டு அதற்காக வாதாடினார். மற்றபடி பாவேந் தரின் திராவிட வாதத்தில் சத்தும் இல்லை, சாரமும் இல்லை!

தமிழ்நாடும் திராவிடமும் ஒன்றுதானா?

தமிழ்நாட்டைத் தானே திராவிடம் என்று ஆரியர்கள் சொன்னார்கள் அதை ஏற்றுக் கொண்டால் என்ன என்று நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். ஆரியர்கள் சொன்னால் “திராவிடம்” என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; சங்க காலத்திலிருந்து தமிழர்கள் தமிழ்ச் சான்றோர்கள் தமிழர், தமிழகம், தமிழ்நாடு என்று சொல்லி வந்ததை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? அது என்ன ஆரிய எதிர்ப்பு? அப்படியென்றால் ஆரியர்கள் தமிழர்களை “சூத்திரர்கள்” என்றார்கள் அதையும் ஏற்றுக் கொள்வார்களா?

ஆரியர்கள் தமிழ்நாட்டை மட்டும் திராவிடம் என்று சொல்லவில்லை. ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாட கம், மராட்டியம், குசராத் வரை உள்ள மண்டலத்தை “திராவிடம்” என்றார்கள். “பஞ்ச திராவிடம்” என்றார்கள். அவர்கள் வரையறுப்பின்படி திராவிட மண்டலத்தில் தமிழ்நாடும் ஒரு பகுதி! அறிஞர் அண்ணாவே கூறியுள்ளாரே, “ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையே நர்மதை ஆறு ரம்மியமாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்று! நர்மதை குசராத்தில் ஓடுகிறது.

இத்தனை குழப்பங்களும் கொச்சைத்தனங்களும் நிறைந்த “திராவிடம்” என்ற சொல்லை ஏற்றுப் போற்றுவதேன்? இன்றும் நிலைத்துள்ள இனியும் நிலைக்கப்போகும் தமிழர், தமிழ்நாடு என்ற இயற்கை வழிப்பட்ட இனப்பெயரை - நாட்டுப் பெயரை இரண்டாந்தரமாகப் புறந்தள்ளுவதேன்? அங்கேதான் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது!

பெரியாரும் அண்ணாவும் முன்னெடுத்த திராவிட இயக்கம் முற்றிலும் தமிழர்க்கான இயக்க மன்று; தமிழரையும் ஒரு கூறாக இணைத்துக் கொண்ட, தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையா ளிகள் ஆகியோருக்கான ஒரு கூட்டு இன இயக்கம்! அதை வெளியே சொல்வது உசிதமல்ல என்று கருதி, திராவிடம் என்றால் அதில் பார்ப் பனர் வர முடியாது, திராவிடர் என்பதுதான் இனப்பெருமை என்றெல்லாம் கூறி, ஒப்பனை வேலை செய்தார்கள்.

திராவிடப் பெயரைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

periyar 250ஆனால் ஓர் இடத்தில் பெரியார் உண்மையை போட்டு உடைத்து விட்டார். சேலம் செவ்வாய்ப் பேட்டையில் 16.01.1944இல் பெரியார் பேசிய மேற்கோளை ஏற்கெனவே இக்கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுள்ளோம். இடப் பொருத்தம் கருதி அதை மீண்டும் சுருக்கமாகத் தருகிறோம்.

”இங்கேயே பாருங்கள். கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொறுத்த வரையில் நான் தமிழன் என சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால் எல்லாக் கன்னடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

தெலுங்கரும் அப்படியே. எனவே திராவிட சமுதாயத்தின் அங்கத் தினர்கள் நாம்: நம் நாடு திராவிடநாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும்” (ஈ.வெ.ரா. சிந்தனைகள் பாகம் 1, பக்கம் 551).

இந்த உண்மையை மறைப்பதற்கான  ஓர் உத்தி யாகவே, திராவிடர் என்றால் ஆரியப்  பார்ப்பனர்கள் வரமாட்டார்கள் என்று பெரியார் கூறினார். பெரியா ரின் அக்கூற்றும் வரலாற்று உண்மையோ அல்லது நடைமுறை உண்மையோ கொண்டதன்று என்பதைக் காட்டவே பண்டைக் காலத்திலிருந்து இக்காலம் வரை பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) தங்களைத் திராவிடர்கள் எனக் கூறிக் கொள்ளும் சான்றுகளை ஏற் கெனவே வரிசைப் படுத்தினோம்.

அண்ணாவுக்கு இந்த உண்மைகள் தெரியும். ஆனால், திராவிடத்தைக் கைவிட்டால் பெரியார் அதை வைத்தே திமுகவை ஓரங்கட்டி விடுவார் என்று அஞ்சியிருக்கக் கூடும். அத்துடன் பிறமொழி பேசு வோரை இணைத்துக் கொள்ள திராவிடர் என்பது பொருத்தமாக இருக்குமென்றும் அண்ணா கருதியிருப்பார்.

அதற்காகப் பெரியாரைப் போல், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் என்றும், தமிழனை முட்டாள் என்றும் அண்ணா வசைபாடவில்லை; மாறாகத் தமிழின் பெருமை -- தமிழர்களின் வரலாற்று பெருமிதங்கள் -- தமிழர் அறிவாற்றல் -- திருக்குறள் பெருமை -- சிலப்பதிகாரச் சிறப்பு எனத் தமிழையும் தமிழரையும் போற்றிச் சிறப்பித்தே பேசினார்; எழுதினார். அதனால்தான் இலட்சக்கணக்கான இளைஞர்கள் அவர் பின்னால் திரண்டனர்.

குறிப்பு

தமிழர் கண்ணோட்டத்தில் இக்கட்டுரைத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்னும் நிறையப் பகுதிகள் இருப்பதால் விரைவில் இக்கட்டுரைகள், இரு நூல்களாக வர உள்ளன. ஒன்று திராவிடத் தலைப்பில், இன்னொன்று மார்க்சியத் தலைப்பில்.