கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
பச்சைப் பசேலென்று மரங்கள், அடர்ந்த காடுகள், பூஞ்சோலைகள், வண்ண வண்ணப் பூக்கள் காணப்படும் பூமி வெளிப்புறத் தோற்றத்திற்கு அழகாகக் காட்சி தருகிறது என்றாலும், அதன் ஆழமான உட்பகுதி எரியும் தீப்பிழம்புகளாக, நெருப்புக் கோளமாக உள்ளது. இதன் வெளிப்பாடே எரிமலைகள். ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’, ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்று பூமி போற்றப்படுகிறது. ஆனால் இதன் உட்பகுதி இன்றும் நெருப்பாக உள்ளது.
பூமியின் மேற்பகுதி பல கண்டங்கள் அல்லது தகடுகளால் ஆனது. இவை அனைத்தும் எப்போதும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. முக்கியமான 15 தகடுகள் கண்டங்களை நகர்த்தும் ஆற்றல் பெற்றவை. இவற்றில் இந்தியப் பெருங்கண்டம் வடகிழக்குப் பகுதியை நோக்கி மெல்ல நகர்கிறது. கடற்கரைப் பகுதிகளில் இருக்கும் தகடுகளும், நிலப்பகுதியில் இருக்கும் தகடுகளும் ஒன்றோடொன்று மோதும் பகுதிகளில் எரிமலைகள் அதிகம் காணப்படுகின்றன. பசுபிக் பெருங்கடல், வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் மேற்குப்பகுதி, ஜப்பானின் கடற்கரைப் பகுதி, இந்தோனேஷியாவின் கடற்கரைப் பகுதி போன்றவை இவற்றில் முக்கியமானவை. இவற்றின் வடிவம் ஒரு குதிரை லாடம் வடிவத்தில் உள்ளது. இப்பகுதி புவியியல் ரீதியாக ‘நெருப்பு வளையப் பகுதி’ (Ring of fire) என்று அழைக்கப்படுகிறது. இங்கு கண்டங்களின் மோதல் காரணமாக எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
இது தவிர அட்லாண்டிக் பெருங்கடலின் மத்தியப் பகுதி, பசுபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதி ஆகியவற்றில் பிளவுகள் உருவாகின்றன. இப்பிளவுகள் (ridges) கடலின் மத்தியில் ஏற்படுகின்றன. இவை குறைந்தபட்சம் 50,000 கி.மீ நீளமுடையவையாக உள்ளன. இவற்றால் கடற்கரையின் பகுதி இரண்டாகப் பிளந்து அங்கு புதிய தரைப் பகுதி உருவாகிறது. இங்கும் எரிமலைகள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பூமியின் உட்பகுதிக்குள் செல்லச் செல்ல அங்கு பாறைக் குழம்புகள் காணப்படுகின்றன. இதன் வெப்பநிலை மிக அதிகம். இதனால் வெப்ப சுழற்சி (thermal convention) ஏற்படுகிறது. பூமியின் ஆழத்தில் இருக்கும் இந்த எரிகுழம்பு மேலும், கீழுமாக சுழலும்போது, வெளிநோக்கி அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பூமியின் மேற்பகுதியில் நகர்ந்து கொண்டிருக்கும் கண்டங்கள் மோதி எரிமலைகள் உருவாகின்றன.கண்டங்கள் ஒன்றோடொன்று மோதும்போது அவற்றில் கடினமான பகுதி கீழாகவும், லேசானது மேலாகவும் செல்கின்றன. உள்நோக்கிச் சென்று பகுதி வெப்பத்தால் உருகிய நிலையில் குழம்புடன் வெளிநோக்கிப் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. கடற்பகுதியில் ஏற்படும் பிளவுகளால் எரிமலைகள் ஏற்பட்டு அவை தீவு போல மாறுவதும் உண்டு. கடலின் நடுவில் ஏற்படும் எரிமலைகளில் சிலிகா என்ற தாதுப்பொருள் மிகக் குறைவாக இருக்கும். இரும்பு, மக்னீசியம் போன்ற பொருட்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் எரிகுழம்பின் திரவத்தன்மை நீர் போல உள்ளது. பூமியின் தரைப்பகுதிக்குள் இருக்கும் வரை இந்தக் குழம்பு மேக்மா என்றும், பூமிக்கு மேல் வந்தபின் இது லாவா என்றும் அழைக்கப்படுகிறது. இக்குழம்பு சுமார் 500 முதல் 1400 டிகிரி வரை வெப்பம் கொண்டதாக இருக்கும்.
சிலிகா குறைவாக உள்ள எரிமலைகள் மறுபடி அதே இடத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச் சிதற வாய்ப்புள்ளது. இவற்றில் எரிமலைக் குழம்பு துவாரங்கள் வழியாகவே வெளிவரும். இது ஆங்கிலத்தில் volcanic vent என்று அழைக்கப்படுகிறது. இத்துவாரங்கள் வழியாக அவ்வப்போது எரிமலைக் குழம்பு கக்கிக் கொண்டே இருக்கும். இந்தத் துவாரங்கள் புனல் போன்ற ஒரு வடிவத்தில் காணப்படுகிறது. இவ்வாறு வெளியில் வரும் குழம்பு அடுக்குகளாக வெளிவருகின்றன. சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் வேறு அடுக்குகள் தோன்றுகின்றன. இவை எல்லாம் சேர்ந்து ஒரு கவசம் போல மாறுகிறது. இதனால் இவ்வகை எரிமலைகளுக்கு (shield volcano) என்று பெயர். இதனால் இவ்வாறு உருவாகிய எரிமலைகள் எளிதில் ஒருவர் மேலே ஏறிச் செல்லும் வகையில் கேடயம் போன்ற அமைப்பைப் பெற்றிருக்கும்.
அதிக பாதிப்பை உருவாக்கும் எரிமலைகள் ஆங்கிலத்தில் composit valcanos என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் எரிமலைக் குழம்பில் சிலிகாவின் அளவு மிக அதிகமாக இருக்கும். இதனால் இதன் கடினத் தன்மை சுலபமாக நீர் போலப் பாயமுடியாத அளவு கடினமாக இருக்கும். இவற்றில் அலுமினியம் போன்ற தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது. இதனால் இத்தகைய எரிமலைகளில் எரிமலைக் குழம்பு அதிக அளவில் வெளிவருவதில்லை. ஆனால், இவை வெளியே தரைப்பகுதியில் இருக்கக்கூடிய பாறைகளை உடைத்துக் கொண்டு மிகுந்த வேகத்துடன் வெளிவருகின்றன. சிறிதளவே எரிமலைக் குழம்பு வெளியில் வந்தாலும் இது பீறிட்டு வெளிவரும். இதனால் ஏற்படும் பாதிப்பு அதிகம். இவை கண்டங்களின் மோதலால் ஏற்படுகின்றன. பசுபிக் பெருங்கடலின் தரைப்பகுதியில் அதிகம் உள்ளன. இவை 50 முதல் 250 கி.மீ வரை ஆழத்தில் உருவாகக் கூடியவை. அதனால் பீய்ச்சியடிக்கப்படும் எரிமலைக் குழம்பின் வேகம் மிக அதிகமாக இருக்கும்.
அதிக வேகத்துடன் குழம்பு வெளியே வருவதால் உள்ளே இருக்கும் வாயுக்களையும் இது வெளியே சுமந்து கொண்டு வருகிறது. இத்தகைய எரிமலை சீற்றத்தின்போது உருவாகும் சத்தம் பல மைல்கள் தூரத்திற்குக் கேட்கக் கூடியதாக இருக்கிறது. இவற்றில் எரிமலைக் குழம்பு துவாரங்கள் வழியாக வெளியே வராமல் முட்டிக்கொண்டு பீறிட்டு வருவதால் தரையின் பகுதி ஒரு மலை போல உப்பி விடுகிறது. இத்தகைய எரிமலைகளின் பக்கவாட்டுப் பகுதிகள் எல்லாவற்றிலும் ஒரு மரத்தின் கிளைகளைப் போல வழிந்து அதன் வழியாக எல்லாம் எரிமலைக் குழம்பு ஒழுகும். இந்த எரிமலைகள் மிக அதிக உயரமானவையாக உருவாகின்றன. எடுத்துக்காட்டு இந்தோனேஷியாவில் உள்ள டாம்ப்போலோ, கரகாட்டோ, எரிமலை மெராபி.
பூமியின் ஆழத்தில் எங்கோ புதையுண்டு கிடக்கும் தீப்பிழம்புப் பாறைகளையும், எரிகற்களையும் பூமியின் தரைப்பகுதிக்குக் கொண்டு வரும் அற்புத இயற்கை நிகழ்வே எரிமலை. இது சாதாரணமான ஓர் இயற்கை நிகழ்வு என்பதில் இருந்து, ஓர் இயற்கைப் பேரிடராக மாறுவதற்கும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் காரணமாக அமைகின்றன. எரிமலை பாதிப்பு உள்ள நாடுகளான இந்தோனேஷியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இத்தாலி, வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதி, கரீபியன் தீவுகள், ஐஸ்லாந்து போன்ற பகுதிகளில் 2010 முதல் இவை இயற்கைப் பேரிடராக அறிவிக்கப்பட்டன. 2010ல் ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை பல மைல் தூரத்திற்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் விமானங்கள் செல்லும் வான்பாதைகள்கூட பாதிப்புக்கு உள்ளாயின. உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வணிகரீதியிலான ஒரு விமானம் 10 முதல் 12 கி.மீ உயரத்தில் பறக்கக் கூடியது. அந்த அளவு உயரத்தில் இந்த எரிமலை வெடிப்பால் உருவான வாயுக்களின் கலவை புகைமண்டலமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. விமான என்ஜின்களே பாதிக்கப்படும் அளவிற்கு இது இருந்தது. பொருளாதார இழப்பும் பெரிய அளவில் ஏற்பட்டது. இது தவிர புகையில் அடங்கியிருந்த சாம்பல் துகள்கள் பல கிலோமீட்டர் வரை பரவியது. எரிமலை வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் வசித்த மக்களால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதனால் பலர் உயிரிழந்தனர். பயிரிட்ட பயிர்கள் மீது இந்தச் சாம்பல் ஒரு போர்வை போல மூடிக்கொண்டது. அவை முற்றிலுமாக அழிந்தன. பல ஆண்டுகளுக்கு இந்தப் பகுதிகளில் பயிர் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. விலங்குகளும் பாதிக்கப்பட்டன. 500 முதல் 1400 டிகிரி வரை வெப்பத்துடன் எரிமலை வெடித்துச் சிதறும்போது பரவி அவை செல்லுமிடங்களில் எல்லாம் அழிவை ஏற்படுத்தியது. இப்பாதிப்புகளில் இருந்து எதுவும் எளிதில் தப்ப முடியவில்லை.
உலக அளவில் நடந்த மிகப் பெரிய 10 எரிமலைப் பேரிடர்களை நோக்கினால், அந்நிகழ்வுகள் எல்லாவற்றிலும் 10,000 முதல் 40,000 பேர் வரை உயிரிழக்க இப்பேரிடர்கள் காரணமாக இருந்துள்ளன. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் ஏறக்குறைய 92,000 பேர் உயிரிழந்தனர். எரிமலை இருக்கும் இடங்களுக்கு அருகில் இருந்த கிராமங்கள் பலவும் முழுமையாக எரிமலையால் அழிக்கப்பட்டன. எல்லா எரிமலைகளையும் இது போல பேரிடர்களாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 2004ல் சுனாமிக்குப் பின் உடனே எரிமலை வெடித்தது. ஆனால், அதன் சீற்றம் மிகவும் குறைவாக இருந்தது. பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த எரிமலை கடலோரப் பகுதியில் இருந்து விலகி கிழக்குப் பகுதியில் தள்ளி அமைந்திருந்தது. குடியிருப்புப் பகுதிகள் எதுவும் அங்கு இல்லை. பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அதனால், ஓர் எரிமலையின் அருகாமையில் குடியிருப்புப் பகுதிகள் இருக்கும் நிலை, எந்த வகையான வெடிப்பு ஏற்படுகிறது, எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது போன்றவற்றைப் பொறுத்தே ஓர் எரிமலை வெடிப்பு ஒரு பேரிடராக மாறுகிறது.
பூமியில் எரிமலைகள் வெடிக்கக்கூடிய பகுதிகளை புவியியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் செயற்கைக் கோள்களின் பங்கு மகத்தானது. ஒரு எரிமலை எங்கு உருவாகும், அது அவ்வாறு உருவாவதில் இருந்து எவ்வாறு கண்காணிப்பது போன்ற துறைகளில் அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், முன்கூட்டியே எரிமலை வெடிப்பைப் பற்றி கணித்துக் கூறுவது கடினம். வளிமண்டலத்தில் உள்ள மின்காந்தத் துகள்களில் இது சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஓர் எரிமலை வெடிப்பதற்கு முன் அது சில வாயுக்களை வெளியிடுகிறது. இந்த வாயுக்களை முன்கூட்டியே கண்டுபிடித்து அதன் மூலம் எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளதா என்பதைப் பற்றி முன்கூட்டிக் கூறுவது என்பது பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்த வாயுக்களைக் கொண்டு பூமியின் காந்த அதிர்வுகளை வைத்து ஓர் எரிமலை வெடிப்பதற்கான வாய்ப்புகள் பற்றி கூற முடிந்தாலும் கூட, வெடித்தபின் அது எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி இன்னமும் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. அமெரிக்காவிலும், இன்னும் பல நாடுகளிலும் சுனாமி வருவதற்கு முன் கொடுக்கப்படும் முன்னறிவிப்புகள் போல எரிமலையைப் பற்றியும் முன்னறிவிப்புகள் தரப்படுகின்றன. வானிலை அறிக்கை சொல்வதைப் போல எரிமலை வெடிப்புகள் பற்றியும் அறிக்கைகள் வழங்கப்படுகின்றன.
எரிமலைகள் உருவாகக் கூடிய இடங்களில் சில நிறங்கள் கொடுக்கப்பட்டு அவற்றின் தீவிரம் எடுத்துக் காட்டப்படுகிறது. சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்தால், அவை மிகத் தீவிர பாதிப்புகளை உருவாக்கக் கூடியவை என்று பொருள். மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது சாதாரணமானது, என்றாலும் அது பற்றி சிறிய முன்னெச்சரிக்கை தேவை என்று பொருள். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி வெடித்துச் சிதறி மறைந்துபோன எரிமலைகள் பச்சை போன்ற நிறங்களில் குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய எரிமலைகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
பூமியின் மேற்பகுதியில், எந்தப் பகுதிகளில் எரிமலை வரக்கூடிய வாய்ப்பு உள்ளது, அது எந்த அளவுக்குத் தீவிரமானது என்று கணித்திருந்தாலும், சீற்றம் வர வாய்ப்பு இருக்கிறது என்ற அளவில்தான் முன்னெச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. எந்த அளவில் அதன் சீற்றம் இருக்கும், பாதிப்பு எந்த அளவுக்கு ஏற்படும் என்பது பற்றி முன்கூட்டியே அறிவிக்கும் அளவு நாம் இன்னும் முன்னேறவில்லை. இது பற்றி ஆய்வுகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன.
எந்த ஒரு இயற்கை நிகழ்வும் மனிதனுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. நிலநடுக்கம் ஏற்படும்போது வலுவான கட்டிடங்களைக் கட்ட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. சுனாமி வரும்போது கடலோரத்தில் கடலாத்திக் காடுகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. இருக்கும் காடுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது.
எந்த ஒரு இயற்கைப் பேரிடர் என்றாலும் அதன் பிற்கால விளைவுகளாக பல நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன. பல சேதங்களை இவை ஏற்படுத்தினாலும் இவற்றால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. பூமியின் மேற்பரப்பில் 70%க்கும் மேலான பகுதி எரிமலைகளால்தான் உருவாகியுள்ளன. இவை இல்லை என்றால், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உருவாகியிருக்க முடியாது. ஹவாய் தீவுகள் தோன்றியே இருக்காது.
இந்தியாவின் வடபகுதியில் இருக்கும் மகாராஷ்டிராவில், மும்பை முதல் குஜராத் வரை உள்ள பகுதிகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைகளால் உருவானவையே. இது ஆங்கிலத்தில் Deccan drafts என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மலைப்பகுதிகள் எல்லாம் எரிமலைக் குழம்பினால் உருவான பஸால்ட் என்ற ஒருவகைப் பாறைகளால் உருவானவையே. இவற்றை உடைத்தே அஜந்தா எல்லோரா குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 5 லட்சம் சதுர கி.மீ அளவு எரிமலைகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உருவாகியுள்ளன. இப்போது இப்பகுதிகள் பூமியின் தரைப்பகுதிகளாக உள்ளன. எரிமலைகள் இங்கு தோன்றியதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லாதவிதத்தில் இப்பகுதிகள் முழுவதும் மக்களின் ஆக்ரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்கு அடுத்து வந்த கிரிக்கேசியஸ் காலகட்டத்தில் எரிமலைகள் இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவின் சில பகுதிகளில் அதிக சீற்றத்துடன் காணப்பட்டன. இவை இவ்வாறு தொடர்ச்சியாக 300,000 ஆண்டுகள் சீற்றத்துடன் இருந்தன. இந்த அளவுக்கு உருவான எரிமலைகள் டைனோசர்களையே அழித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தக்காண பகுதியில் பசால்ட் எரிமலைப் பாறைகளால் கருப்பு பருத்தி மண்வகை (black cotton soil) உருவானது. இங்கு பருத்தி வகைகள் அதிகம் விளையக்கூடிய சத்துள்ள மண் உள்ளது. ரோமானிய ஆதிக்கம் மிகுந்திருந்த காலத்தில் இத்தாலியில் எரிமலைகள் ஒட்டியிருந்த பகுதியில் நாகரீகம் தோன்றியது. இதற்குக் காரணம் எரிமலைக் குழம்பால் உருவாகும் மண் வளம் நிறைந்தது என்பதே. விளைச்சல் நன்றாக இருக்கும். எரிமலைகள் தோன்றி மறைந்த நாடுகளில் கனிமவளம் அதிகம் காணப்படுகிறது. எரிமலைகள் பூமிக்குள் பல மைல்கள் உள்ளே இருக்கும் தாதுப்பொருட்களை வெளியே கொண்டு வந்து சேர்க்கின்றன. ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் வஜ்ரக்ரூர் பகுதியில் வைரம் கிடைப்பதற்கும் எரிமலைகளே காரணம்.
எரிமலைக் குழம்பை வெளிக்கொண்டுவரும் குழாய்ப் பாதைகளை கின்டர்லைக் குழாய்கள் என்று புவியியல் வல்லுநர்கள் அழைக்கின்றனர். இவை புனல் வடிவம் உள்ள குழாய்கள். பூமித்தாய் தனக்கு ஏற்படும் சிறு அசதியை எரிமலை என்ற நிகழ்வின் மூலம் வெளிப்படுத்தினாலும், அவை கூட மனிதனுக்கு நன்மைகள் பல செய்வதாக அமைகின்றன. இயற்கையை நாம் சிறிதுசிறிதாக அழிக்கும்போது அதனால் ஏற்படக்கூடிய பேரிடர்கள் எந்த அளவுக்கு அதே இயற்கைச் செல்வங்களை அழிக்கின்றன என்கிற பரிதவிப்பை நமக்கு ஏற்படுத்துவதும் இது போன்ற பேரிடர்கள்தான். பூமிக்குள் நடக்கக்கூடிய சிறு நிகழ்வாக இவை இருந்தாலும், இவை வெடித்துச் சிதறி டைனோசர்களை அழித்ததால்தான் மனித சமுதாயம் தோன்றியது. டைனோசர்களுடன் மனிதனால் நிச்சயமாகப் போட்டி போட்டு வாழ முடியாது, வாழ்ந்திருக்கவும் முடியாது. இயற்கையின் எல்லா நிகழ்வுகளும் மனிதனை வாழ வைப்பதற்கே என்பதை இவை உணர்த்துகின்றன.
எரிமலை வெடிப்பு என்பது காணக் கண் கோடி வேண்டும் என்று சொல்லுமளவுக்கு ஓர் அற்புத நிகழ்வு. அதன் சீற்றத்தை நேரில் பார்த்தவர்களுக்கு அது ஏற்படுத்திய இனம் புரியாத பேரானந்தத்தை உணர முடியும். வானத்தின் வர்ணஜாலங்கள் போல இவை பூமியின் வர்ணஜாலம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றி, இருந்து, பின்னர் மறைகிறது. ஆனால், அவை பல பாடங்களை நமக்குக் கற்றுத் தருகின்றன. எரிமலைகள் நமக்குத் தந்த பாடங்களை, அவை தரும் நன்மைகளை மனித சமுதாயத்தின் நன்மைக்காகப் பயன்படுத்தினால் மேலும் நாம் வளரலாம். வாழலாம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
சிந்திக்கும் ஆற்றலும், பகுத்தறியும் திறனும் உடைய மனிதன் மாறி விட்டான். அவன் போக்கு மாறியதால் இன்று இயற்கையின் படைப்பில் பூமியைக் காக்க உருவான பல இயல்பான நிகழ்வுகளும் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்றே ஜெட் ஸ்ட்ரீம். இவை தங்கள் பாதையை மாற்றிக் கொண்டிருக்கின்றன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி ஏற்படும், பீதியூட்டும் வகையில் காலநிலை மாறும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
அறியப்படாத ஜெட் ஸ்ட்ரீம்
புவி வெப்ப உயர்வு என்ற நிகழ்வு பூமியை மோசமாக தாக்கத் தொடங்கி, இப்போது இருபது ஆண்டுகளாகி விட்டன. இதனால் பூமியின் காலநிலை உட்பட பல்வேறு சூழல் நிகழ்வுகளின் இயல்பான போக்கு தாறுமாறாகின்றன. இதன் பலனாகவே சில ஆண்டுகளாக பூமியில் பல்வேறு இடங்களில் பேரிடர் சம்பவங்கள் தொடர்கின்றன. புவி வெப்ப உயர்வினால் ஏற்படும் பாதிப்புகளில் மிக சமீபத்தில் ஜெட் ஸ்ட்ரீம் போக்கில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
ஜெட் ஸ்ட்ரீம் என்றால் என்ன?
ஜெட் ஸ்ட்ரீம் என்பது பூமியில் வடதுருவப் பகுதிக்கு அருகில் எப்போதும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணிக்கும் காற்றோட்டங்கள். குறிப்பாக வட அமெரிக்கா, ஐரோப்பாவில் காலநிலையின் சமநிலையை நிலைநிறுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இது வடக்கு துருவப் பகுதியில் இருந்து வீசும் குளிர்ந்த காலநிலையையும், தெற்கு பூமத்தியரேகைப் பகுதியில் இருந்து வீசும் உயர்ந்த வெப்பநிலையுடன் கூடிய காலநிலையையும் கட்டுப்படுத்தி பிரித்து வைக்கிறது.ஆனால் புதிய ஆய்வு முடிவுகளின்படி இதன் இடம் மாறுகிறது. வெப்ப உயர்வைப் பொறுத்து மேலும் வட திசை நோக்கி நகர்ந்து துருவப் பகுதியுடன் இவை நெருங்கிச் செல்கின்றன. இது காலநிலையை மேலும் தீவிரமாகப் பாதிக்கிறது. பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு இன்றுள்ள நிலையில் தொடர்ந்தால் 2060ல் இந்த மாற்றங்கள் தீவிரமடையும்.
வடபகுதியில் உருவாகும் ஜெட் ஸ்ட்ரீமின் போக்கில் ஏற்படும் மாற்றம் பூமியில் இப்போது தாளம் தப்பி சென்று கொண்டிருக்கும் காலநிலையை பீதி ஏற்படுத்தும் நிலைக்குக் கொண்டு போய்விடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வடதிசை நோக்கி
இக்காற்று வடக்கு திசை நோக்கி செல்வது ஏற்கனவே தொடங்கி விட்டது என்று அரிசோனா பல்கலைக்கழக காலநிலை மாற்றம் பற்றி ஆராயும் பிரிவின் ஆய்வாளர் பேராசிரியர் மாத்யூ ஒஸ்மான் கூறுகிறார். இதனால் ஐரோப்பா போல குளிர் தட்பவெப்பநிலை நிலவும் பகுதிகளில் கடும் வறட்சியும், வெப்ப அலைத் தாக்குதல்களும் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
தெற்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு அமெரிக்காவில் இது தீவிரமாக ஏற்படும். வட அமெரிக்கா மற்றும் ஸ்காண்டிநேவியன் பிரதேசத்தில் பெருமழையும் அதனால் பெரு வெள்ளப்பெருக்குகளும் சாதாரண சம்பவங்களாக மாறும். இப்பகுதிகளில் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் இதையே உறுதிப்படுத்துகின்றன. மேலும் வரும் ஆண்டுகளில் ஜெட் ஸ்ட்ரீம் தீவிரமடைவதுடன் இப்பகுதிகளில் காலநிலை இன்னும் மோசமடையும்.
வட அட்லாண்டிக் ஜெட் ஸ்ட்ரீம்
ஆர்க்டிக் பகுதியில் இருந்து வரும் குளிர்ந்த வாயுவும் தெற்கு பகுதியில் இருந்து வரும் வெப்பம் மிகுந்த வாயுவும் ஒன்றுடன் ஒன்று நேருக்குநேர் பயணம் செய்து மோதி முட்டிக்கொள்வது ஜெட் ஸ்ட்ரீம் காற்றுகளுடன் சங்கமிக்கும்போதே நிகழ்கிறது. இது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் ஜெட் ஸ்ட்ரீம் காற்றை ஒரே பகுதியில் தொடர்ந்து வீச உதவுகிறது.
இந்த காற்று எப்போதும் ஒரே பகுதியில் தொடர்ந்து வீசுகின்றது என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்றாலும், கடந்த 1000 ஆண்டுகளின் சராசரியைக் கொண்டு கணக்கிட்டால், இது ஏறக்குறைய ஒரே பகுதியிலேயே தொடர்ந்து நிலைகொண்டுள்ளது. ஆனால் வெப்பநிலை மாறுவதால் வட துருவப் பகுதியின் சூடு அதிகமாகிறது. இதனுடன் தெற்கில் இருந்து வரும் சூடான காற்று குளிர்ந்த காற்றுடன் மோத நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
இதன் காரணமாக காற்றின் பயணப்பாதை மாறுகிறது. இவற்றிற்கு இடையில் இருக்கும் ஜெட் ஸ்ட்ரீம் மேலும் வடக்கு நோக்கித் தள்ளப்படுகிறது. இந்த மாற்றமே வரும் காலத்தில் காலநிலை சீரழிவுகளை கற்பனைக்கெட்டாத விதத்தில் பேரிடர்களாக மாற்றமடையச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது.
பூமி முழுவதும் பயணம் செய்து கொண்டே இருக்கும் காற்றோட்டங்களான ஜெட் ஸ்ட்ரீம்கள் பூமியின் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியா, மத்திய தரைக்கடல் உட்பட உலகின் பல பகுதிகளில் பருவநிலையை நிர்ணயிப்பதில் இவை இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் குளிர்காலத்தில் இக்காற்று ஓட்டங்களே வட மாநிலங்களுக்கு மழை கொண்டு வருகின்றன. பருவமழைப் பொழிவிலும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
பல நாடுகளிலும் விவசாய முறைகள் இவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இக்காற்று சாதாரணமாக தரையில் இருந்து 12,000 மீட்டர் வரை உள்ள உயரத்தில் காணப்படுகின்றது. எவரெஸ்ட்டின் வழியாகக் கடந்து செல்லும் ஜெட் ஸ்ட்ரீம் தெற்காசிய ஜெட் ஸ்ட்ரீம் என்று அழைக்கப்படுகிறது.
அதிதீவிரமடையும் காலநிலை
ஜெட் ஸ்ட்ரீமில் உண்டாகும் மாற்றம் அதிதீவிர வறட்சி, வெப்ப உயர்வை இரு மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது தவிர எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடங்களில் பெருமழையையும், வெள்ளப் பெருக்கையும் இவை அடிக்கடி ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. ஜெட் ஸ்ட்ரீமுடன் சேர்ந்திருக்கும் பகுதிகள் என்பதால் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மிக அதிகமாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூழல் சீரழிவினால் பேர் தெரியாத புதிய நோய்கள் நுண்ணுயிரிகள் மூலம் மட்டுமில்லாமல் காலநிலை மாற்றத்தாலும் மனிதனை ஆட்டிப் படைக்கும்போது வெப்ப உயர்வைக் குறைக்க எதையும் செய்யாமல் நாம் அலட்சியப்படுத்தும் ஒவ்வொரு நொடியும் நம் சவப்பெட்டிக்கு நாமே ஆணி அடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
இயற்கையின் படைப்பில் அன்னை பூமியில் வேறெந்த கோளிலும் காண முடியாத அற்புத அமைப்புகள் உள்ளன. மலைகள், குன்றுகள், சமவெளிகள், பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், நதிகள் என்று இவை பூமியின் பிறவியில் இருந்து உருமாறி வந்த கால ஓட்டத்தின் நேர்சாட்சிகளாக திகழ்கின்றன. இத்தகைய நில அமைப்புகள் தோன்ற பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை பூமியின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் உருவாகும் மாற்றங்கள்.
காற்று, அலைகள், நதிகள், மழை, மண், பனிப்பாறைகள், ஓடும் நீர் போன்றவை இவற்றில் ஒரு சில. நிலநடுக்கம், எரிமலை போன்றவை உட்புறத்தில் ஏற்படும் மாற்றங்கள். இத்தகையவற்றால் நாம் இன்று காணும் நிலப்பகுதியும், பெருங்கடல்களும் தோன்றியுள்ளன. கண்டத்திட்டுகளின் ஆற்றலால் (tectonic force) நிலநடுக்கம், எரிமலைகள் ஏற்படுகின்றன. கிடைமட்டம், செங்குத்து திசையில் இது வெளிப்படுகிறது. பூகம்பங்கள் துரித மற்றும் மந்தமான நிலநடுக்கங்கள் என இருவகைப்படும்.
துரிதகதியில் ஏற்படும் எரிமலை, நிலநடுக்கங்களின் பலனாக பூமியின் மேற்பரப்பில் ஏதேனும் ஒரு பகுதி உயர்த்த அல்லது தாழ்த்தப்படுகிறது. தென்னமெரிக்கா சிலியில் 1822ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கடற்கரை ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டது. 1891ல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கரையின் ஒரு பகுதி 6 மீட்டர் அளவிற்கு தாழ்ந்து போனது. 1993ல் மகாராஷ்டிரா லாத்தூரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பெருத்த இழப்புகள் ஏற்பட்டன.
பூமியின் உட்புறத்தில் ஏற்படும் மாற்றங்களே மேற்பகுதியில் பல அமைப்புகளைத் தோற்றுவிக்கின்றன. இதனால் கரை கடலாக மாறவும், கடல் கரையாக மாறவும் வாய்ப்பு உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 20 மீட்டர் உயரத்தில் கரை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் குஜராத் கத்தியவாரில் உயர்த்தப்பட்ட கரைப்பகுதியில் இருந்து கடல்வாழ் உயிரிகளின் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்கள் அப்பகுதி ஒருகாலத்தில் கடலாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.பூமியின் உட்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களால் மலைகள் உருவாகியுள்ளன. எதிரெதிர் திசையில் செயல்படும் இரு விசைகள் பொதுவான ஒரு புள்ளியில்/தளத்தில் விசையை செலுத்துவதால் இவ்வாறு நிகழ்கிறது. பூமியின் ஆழமான பகுதியில் இந்த விசைகள் செயல்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இருந்து எதிர் திசையில் பெரும் சக்தி பரவுவதால் பூமியின் மேற்பகுதியில் உள்ள பாறைகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன. இதனால் நிலப்பகுதி உயர அல்லது தாழ வாய்ப்பு உண்டு.
இதுபோன்ற நிகழ்வுகளால் சமவெளிகள், பள்ளத்தாக்குகள் உருவாகின்றன. எடுத்துக்காட்டு உலகில் பெரிய சமவெளியான நைல் நதி சமவெளி, ஜோர்டான் பள்ளத்தாக்கு. சமமான இரு விசைகள் மூலம் நடுவில் உள்ள பகுதி உயரும்போது பீடபூமி தோன்றுகிறது. இதனால் மலையின் உச்சியில் சமதளப் பகுதி உண்டாகிறது. காற்று, மழை, நகர்ந்து செல்லும் மண், அலைகள் போன்றவற்றால் பள்ளத்தாக்குகள் சமதளப் பகுதிகளாக மாறுகின்றன.
நீரோட்டமே பூமியின் மேற்பகுதியில் அதிக மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணம். மலைகளில் உற்பத்தியாகி தாதுக்களை சுமந்து குறிப்பிட்ட திசையில் பயணிக்கும் நீர்ப்பெருக்கே நதி எனப்படுகிறது. அதன் இரண்டாம் கட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இடுங்கிய பள்ளத்தாக்குகள் இதனால் உருவாகின்றன. அதன் இரண்டாம் கட்டப் பயணத்தில் அகண்ட பள்ளத்தாக்குகள் வழி பாய்ந்து செல்கின்றன. பக்கவாட்டில் உள்ள அழுத்தம் காரணமாக அதன் அகலம் அதிகரிக்கிறது.
அதன் மூன்றாவது கட்டப் பயணத்தில் அது நிதானமாக ஓடி வண்டல் மண்ணை சேர்த்து புதிய செழுமையான சமவெளிப் பகுதிகளை ஏற்படுத்துகிறது. திறந்தவெளி மணற்பரப்புகளில் காற்றின் சக்தியால் மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால் பாலைவனப் பகுதியில் குன்றுகள், பள்ளங்கள் போன்றவை உருவாகின்றன. பாறைக்கற்கள் பலவிதங்களில் காணப்படுகின்றன. சில அடர்த்தி மிகுந்தவை, சில எடை குறைந்தவை.
காலநிலை மாற்றம், வேதிமாற்றம் காரணமாக பாறாங்கற்கள் உருமாற்றம் அடைகின்றன. எடை அதிகமுள்ள பாக்சைட், சுண்னாம்புக்கல் போன்றவை வேதிமாற்றங்களுக்கு உட்படுவதில்லை. உயர்ந்து நிற்கும் மலைகள், குன்றுகள் உருவாக இவை காரணமாகின்றன. இத்தகைய வடிவங்கள் மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் என மூன்று வகைப்படும்.
உருவாகும் சூழ்நிலையைப் பொறுத்து மடக்கு மலைகள், எரிமலையால் உருவான மலைகள், வெளிப்புறக் காரணங்களால் உருவாகும் மலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இமயமலை, ஐரோப்பாவில் ஆல்ப்ஸ், தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் போன்றவை மடக்கு மலைகளே.
நதி, காற்று, பனிக்கட்டிகள் போன்றவற்றின் வெப்ப தட்ப செயல்களால் நிலப்பகுதியில் இருப்பவை ஒன்றுசேர்ந்து அகற்றப்பட்டு ஒரு இடத்தில் குவிக்கப்படுவதால் நீலகிரிக் குன்றுகள், ராஜ்மஹல் குன்றுகள் போன்ற குன்றுகள் உண்டாகியுள்ளன. அருகில் உள்ள பகுதியைக் காட்டிலும் உயர்ந்து நிற்கும் தக்காணம் போன்ற பீடபூமிகள் உருவாகின்றன.
சூழ்நிலையைப் பொறுத்து கண்டத்திட்டுகளின் மாற்றத்தினால் உயர்த்தப்பட்டு உருவாகும் மலைகளும், பீடபூமிகளும் மண் அடிந்து சமதளப் பரப்பாக்கப்படுவதன் மூலம், இயற்கை மாற்றங்களால் தாழ்வான பள்ளங்கள் மண் மூடப்பட்டு சமவெளிப் பரப்புகள் உருவாகின்றன. நதிகள் சுமந்து வரும் மண் போன்றவற்றைக் கொண்டு சேர்ப்பதால் செழுமைமிக்க கங்கை சமவெளி போன்ற வண்டல் மண் சமவெளிகள் தோன்றுகின்றன.
அன்னை பூமியின் அதிசயிக்கத்தக்க படைப்புகளில் இந்த நில அமைப்புகள் ஒவ்வொன்றும் பல்வேறு தனிச்சிறப்புகள் கொண்டவை. அந்தந்தப் பிரதேசங்களுக்கு ஏற்றவாறு உயிரினங்கள் தோன்றி பரிணாமம் அடைந்து வாழ்ந்து வருகின்றன. மில்லியன்கணக்கான ஆண்டுகளில் உருமாற்றம் அடைந்து உருவான இவற்றைப் பாழாக்காமல் காக்க வேண்டியது மனித குலத்தின் பொறுப்பு.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
காலநிலையில் திடீரென்று மாற்றங்கள் ஏற்படுவதும், தொடர்ந்து புயல், பெருமழை பொழிவதும் இன்று அடிக்கடி நிகழும் சம்பவங்களாகி விட்டன. அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் பல சமயங்களில் காலநிலை மாற்றங்கள் ஏற்படக் காரணமாகின்றன. வானிலை முன்னறிவிப்புகளில் இதை அடிக்கடி நாம் கேட்பதுண்டு.
பூமியில் உருவாகும் அழுத்த வேறுபாடுகளே காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளுக்குக் காரணம். அழுத்தம் என்பது பூமியில் ஏற்படும் அதன் எடையையே குறிக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பரப்பில் வாயு மண்டலத்தில் காற்று உருவாக்கும் எடை. இதுவே அந்த இடத்தின் காற்றழுத்தம். பூமியின் ஈர்ப்புவிசை காரணமாக இந்த அழுத்தம் பூமியுடன் சேர்ந்து செயல்படுகிறது. வாயு மண்டலத்தில் ஏற்படும் அழுத்த வேறுபாடுகளுக்கு வெப்பநிலை ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
பூமத்திய ரேகைக்கு இரண்டு பக்கங்களிலும் நிலவும் வெப்ப மண்டலப் பகுதிகள் எப்போதும் உயர்ந்த வெப்பம் உள்ள பகுதிகள். இதனால் இந்த இடங்களில் காற்றின் அழுத்தம் குறைவாகக் காணப்படுகிறது. அதாவது காற்றின் எடை குறைவாக இருக்கிறது. இந்தப் பிரதேசம் பூமியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி. பூமத்திய ரேகையின் இரண்டு பக்கங்களிலும் 5 டிகிரி அட்சரேகை பரப்பில் உள்ள காற்றின் அழுத்தத்தை நிர்வகிக்கும் பகுதியாக இந்தப் பகுதி கருதப்படுகிறது.இப்பகுதி உட்பட பூமியில் ஏழு காற்றழுத்தப் பகுதிகள் உள்ளன. மூன்று லேசான காற்றழுத்தப் பகுதிகள், நான்கு உயர்ந்த அழுத்தம் உள்ள பகுதிகள் என்பவை அவை. 60 டிகிரிக்கும் 70 டிகிரிக்கும் இடையில் உள்ள பகுதியில் பூமியின் வட மற்றும் தென் கோளப் பகுதிகளில் காற்றழுத்தம் குறைவாகக் காணப்படும் பகுதிகள் உள்ளன. இவை துணைக் காற்றழுத்தக் குறைவுப் பகுதிகள் எனப்படுகின்றன. வட மற்றும் தென் கோளப் பகுதிகளில் 35 டிகிரி, 30 டிகிரி பரப்பளவில் இப்பகுதிகள் காணப்படுகின்றன. இவை துணை வெப்ப ஈர்ப்பு காற்றழுத்தப் பகுதிகள் எனப்படுகின்றன.
இந்தப் பகுதிகளில் இருந்தே பூமத்திய ரேகைப் பகுதிக்கு காற்றுகள் வீசிக் கொண்டிருக்கின்றன. இவையே வணிகக் காற்றுகள் என்று அழைக்கப்படுகின்றன. இங்கிருந்து துணை காற்றழுத்தக் குறைவுப் பிரதேசங்களுக்கும் காற்று வீசுகின்றது. இவை மேற்கத்தியக் காற்று என்று அழைக்கப்படுகின்றது.
துருவப் பிரதேசங்கள் வெப்பநிலை மிகக் குறைவாக உள்ள இடங்கள். இங்கு காற்றின் எடை அதிகம். இந்தப் பிரதேசத்தில் இருந்து காற்று, குறைந்த அழுத்தம் உள்ள 60 டிகிரி அட்சரேகைப் பகுதிகளை நோக்கி வீசுகிறது. நீரோட்டம் போல அழுத்தம் அதிகம் உள்ள இடத்தில் இருந்து குறைவாக உள்ள இடத்திற்கு காற்று வீசுகிறது. அழுத்தத்தை அளவிட அழுத்தமானி (பாரோமீட்டர்) பயன்படுத்தப்படுகிறது. மில்லிபார் என்ற அலகால் இது அளக்கப்படுகின்றது. ஆனால் 1986ம் ஆண்டிற்குப் பிறகு அழுத்தத்தை அளக்க ஹெக்டோ பாஸ்கல் என்ற அலகே பயன்படுத்தப்படுகிறது.
கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தம் 76 செ மீ. இது 1013.2 ஹெக்டோ பாஸ்கல். இத்தாலிய விஞ்ஞானி டாரிசெல்லி காற்றழுத்தமானியை உருவாக்கினார். கடலின் மேற்பரப்பில் காற்று ஏற்படுத்தும் அழுத்தம் ஒரு கண்ணாடிக்குழாயில் 76 சென்டி மீட்டர் உயரத்தில் பாதரசத்தை தாழ்வாக நிறுத்தப் போதுமானது என்று அவர் கண்டுபிடித்தார். வட மற்றும் தென் கோளப் பகுதிகளுக்கு இடையில் சூரியனின் பயணத்தின் காரணமாக பூமியின் மேற்பரப்பில் காற்றழுத்தப் பகுதிகள் லேசாக வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் வீசுகின்றன.
கடலோரப் பிரதேசங்களுக்கும், கடல்களுக்கும் இடையில் காணப்படும் இடமாற்றம் காற்றழுத்தப் பிரதேசங்கள் இடம் மாறக் காரணமாக அமைகிறது. ஜூலை மாதத்தில் வட கோளப் பகுதியிலும், ஜனவரி மாதத்தில் தென் கோளப் பகுதியிலும் கரையோரப் பகுதிகள் அதிக அளவில் வெப்பமடைகின்றன. இதற்கு ஜூன் 21 அன்று உத்தராயணக் கோட்டிற்கு மேல் பகுதியிலும், டிசம்பர் 22 அன்று தட்சனாயணப் பகுதிக்கு மேல் பகுதியிலும் சூரியன் இருப்பதே காரணம்.
அந்த சமயத்தில் இப்பகுதிகளுக்கு மேல் லேசான காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகின்றன. வட கோளப் பகுதியில் கரைப்பகுதிகள் லேசான காற்றழுத்தப் பிரதேசங்களாக ஆகும்போது தென் கோளத்தில் கரைப்பகுதிகள் ஈர்ப்பு விசையினால் ஏற்படும் அழுத்தப் பிரதேசங்களாக மாறுகின்றன. இந்நிகழ்வு எதிர்மாறாகவும் நிகழ்கின்றது. சுற்றிலும் உள்ள பிரதேசத்தைக் காட்டிலும் அழுத்தம் குறைவாக உள்ள பகுதிகளே காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள்.
இதனால் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியில் இருந்து அழுத்தம் குறைவாக உள்ள பகுதிக்கு காற்று வலிமையுடன் வீசுகிறது. இது மலைகளால் தடுக்கப்பட்டு கிழக்குப் பகுதியில் நல்ல மழைப் பொழிவு ஏற்படுகிறது. பூமியின் சுழற்சி, புவியின் மேற்பரப்பில் கானப்படும் இயற்கை அமைப்பு போன்றவை காற்றின் வலிமை மற்றும் அது வீசும் திசையில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. காற்றின் திசையைக் கட்டுப்படுத்தும் மறைமுக விசை ஒன்று பூமியில் செயல்படுகிறது. இது கோடியோலிஸ் விசை என்று அழைக்கப்படுகிறது.
பிரெஞ்சு கணித மேதை கஸ்டோ டிகோடியோலிஸ் என்பவரே இதைக் கண்டுபிடித்தார். பயணித்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு பொருளின் பயண திசையும் வட கோளப் பகுதியில் வலது திசையிலும், தென் கோளத்தில் இடது திசை நோக்கியும் இருக்கும் என்பது இக்கோட்பாட்டின் அடிப்படைக் கொள்கை. இதைப் பற்றி ஆராய்ந்து தீவிரமாக சிந்தித்த ஃபெரல் என்ற அமெரிக்க விஞ்ஞானி இக்கொள்கையை மேலும் விரிவுபடுத்தினார்.
பூமியின் சுழற்சியால் காற்றின் திசை, வட பகுதியில் வலது நோக்கி சாய்ந்தும், தென் பகுதியில் இடது நோக்கி சாய்ந்தும் வீசுகிறது என்று ஃபெரல் விதி கூறுகிறது. காற்று நிலையானது, நிலையற்றது, பிராந்திய ரீதியிலானது, அடிவானக் காற்று என்று பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வணிகக் காற்று, மேற்கத்தியக் காற்று போன்றவை எப்போதும் ஒரே திசையில் இருந்து மற்றொரு திசையை நோக்கி வீசும் நிலையான காற்றுகள். புயற்காற்றுகள் நிலையற்ற காற்றுகள்.
வாயு மண்டலத்தின் கீழ்பகுதியில் இருக்கும் டோப்போஸ்பியரில் உருவாகும் அதி தீவிரமான காற்றழுத்த நிலை அடிவானக் காற்றுக்கு எடுத்துக்காட்டு. வெப்ப மண்டலப் பகுதியில் உருவாகும் காற்றில் வங்காளக் கடலில் உருவாகும் காற்றுதான் மிகப் பெரியது. அக்டோபர் நவம்பர் மாதங்களிலும், ஏப்ரல் மே மாதங்களிலும் இவை தோன்றுகின்றன.
குறிப்பிட்டப் பருவங்களில் வீசும் இவை பருவக்காற்று என்றும் அழைக்கப்படுகின்றது. பகலில் வீசும் கடற்காற்றும், இரவில் வீசும் கரைக்காற்றும் குறைந்த நேரத்திற்கு வீசும் காற்றுக்கு உதாரணம். சராசரியாக நீண்ட நேரம் வீசும் காற்று, பருவமழைக் காற்று எனப்படுகின்றது. இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் முதல் பகுதி வரை தென்மேற்கில் இருந்து வீசும் காற்று மூலம் நல்ல மழை கிடைக்கிறது.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் வீசும் காற்று பிராந்தியரீதியில் வீசும் காற்று எனப்படுகின்றன. இவை மிகச் சிறிய நிலப்பகுதியில் மட்டுமே வீசும் இயல்புடையவை. இது அந்தக் குறிப்பிட்ட பகுதியின் அன்றாட வானிலை, காலநிலையைப் பாதிக்கிறது. லூ, ஃப்ப்ன்,சியூக், நார்வெஸ்ட்டர், மின்ஸ்ட்ரெல், டொனார்டு போன்றவை இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப் பகுதியில் வீசும் காற்றுக்கு எடுத்துக்காட்டு.
தென்றலாகவும், புயலாகவும் வீசும் காற்றின் கதை சுவாரசியமானது. இயற்கையின் படைப்பில் காற்றின் கதை வியப்பூட்டும் ஒரு விந்தையான நிகழ்வே!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- ஆக்சிஜன் இல்லாமல் அழியப் போகும் பூமி?
- மூழ்கும் தீவு – மூழ்கப் போகும் உலகம்
- மண்ணிற்கடியில் புதையும் நாட்டின் தலைநகரம்
- அய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா?
- ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்
- கொள்ளை நோய் தோன்றுவது இயற்கை தன்னை சமனப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வா?
- உலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்
- அதிக மழைப்பொழிவு தான் எரிமலைகள் வெடிக்க காரணமா?
- சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு
- மனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா?
- ஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்
- ஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்
- நிறையும் எடையும் ஒன்றா?
- ட்ரம்ப் குடும்பம் காலப்பயணம் செய்கிறார்களா?
- சீராகி விரும் ஓசோன் ஓட்டை
- உயிரின் தோற்றம் (அணு மரபணுவான கதை)
- ஐந்து பரிமாணங்கள் - முழு விளக்கம்
- வெள்ள பாதுகாப்பு
- முதலாளித்துவ சக்திகளின் கட்டுப்பாட்டில் அறிவியல்
- ஆறாவது பேரழிவு