நடம்மா நான் மழை
பாரி கபிலன்
கருகருன்னு இருட்டிக்கிட்டு வருது வானம்
காத்தும் மழையுமா
நொறுக்கப் போவுது
ஓட்டமா ஓடிடு வீட்டுக்குன்னு
அனுப்பி வைப்பாங்க
நடம்மா
போனேனா இல்லையான்னு
உசரமான வரப்புமேல
ஏறி நின்னுப் பார்க்கும் அந்த மனசு
மழையை விடவும் ஈரமானது
ஓடத்தொடங்கி
சில முள் வேலிகளைத் தாண்டியிருப்பேன்
அதற்குள் சடசடக்கும் மழை
மார்பில் குதித்து வழிந்து
வயிறு தொடுகையில்
சோ×ட்டித் தடவிப்பார்த்த
விரல்களின் ஞாபகம்
அடித்த விரல்
அரவணைத்த விரல்
மழையாகவும் இருக்கின்றது
ஆனாலும் ஓடிவருவேன்
குலுங்கி வலிக்கும் வயிற்றை
இறுக்கிப் பிடித்துக் கொண்டு
அம்மா சொன்னாங்கன்னு
பாதி தூரம்,
என் மீதித் தூர ஓட்டமெல்லாம்
எனக்கென்றிருக்கும்
ஒரேவொரு கால்சட்டையும்
நனைந்து விடக் கூடாது
என்பதற்காகத்தான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|