உரைகவி
பாரதி இளவேனில்
ஏன் பேசுவதில்லை? என்னப் பேசுவது?
என்னத்தப் பேசுறது? எல்லாமும் பேசியாச்சி!
அதற்காகப் பேசாமல் இருந்துவிட முடியுமா?
பேசிப் பேசித்தான் இத்தனையும்; இன்னமும்
பேசணுமா...? பேசுனதையெல்லாம்
மறந்துட முடியுமா...? பேசித் தீர்க்கலாமே!
பேசினாலும் தீராது.பேசாமல் மிதக்கிறதொரு பனிப்பறை
தவிப்போடு; பேசினால் உருகலாம்;
பேசி செதுக்கலாம். பேசவியலாமல்
தொண்டைமுள்ளாய் சிக்கித்தவிக்குமுன்
கோபத்தை, துயரத்தை துப்பிவிடு வெளியே.
கடந்த காலம் கசந்த காலம்; நினை
வூட்டாதே எதையும். வாஸ்தவம் சூழ்நிலை
யின் கைதியாக நான். சந்தர்ப்பங்களே
அவ்வாறெனைப் பேசவைத்தன. காமப்பிதற்றல்
கள் எங்ஙனம் பொருளற்றவையோ
கோபக் குமுறல்களும் அப்படியே, பொருட்
படுத்த வேண்டாமே. பேச்சினால் குத்திக்
கிழித்த ரணமாற நாள் பிடிக்கும். தெரியுமெனக்கு
பேசியுனை ஏமாற்ற முடியாது. பேசத்துணை
யின்றி பெருநகரமொன்றில் தனிமையோடு
உறங்குவது பெரும்வஸ்தை பிரச்னைகளின்
மூலமே பேச்சின் குதர்க்கமும் குதறும்
வார்த்தை வன்முறைகளுந்தான், எல்லாவற்றையும்
மற்றது பேசவியலாது. பேசாத மவுனத்தால்
எதையும் சாதிக்கவும் முடியாது பேசாதிருக்க
வீடு நூலகமா....? பேசிக்கொண்டேயிருக்க
நீதிமன்றமா...? வார்த்தைகளாலான ஆழிப்பேரவையில்
சூறையாடப் படுகிறது வாழ்க்கைப் படகு
பேசி உன்னை வெல்லமுடியாது. பொய்யுரைகளுக்கு
இனியும் மயங்க மாட்டேன். எல்லாவற்றுக்குமே
தப்பாய்ப் புரிந்தால் உரையாடல் சாத்தியமா?
உன்னையாரு பேசக் சொல்லி ஓடியாந்தா... மூடிட்டு
போவியா... அப்போ பேசுறதாயுல்ல! இல்ல!
ஏன் பேசுவதேயில்லை ....?
ஏனிந்த சந்தோஷத்துள்ளலின்று. குரலில்
பொங்கும் அருவியின் தாபம்; தாளம்!
தொடர்புகள் அறுந்தபோதும் தொடர்
கிறதுன்ழைப்பு. சிணுங்கனும் கொஞ்சலுமாய்
ஒலிரும் உரையாடலில் சோன்
பட்டிச் சுவை. ரொம்ப நாளாச்சு! பாட்டொன்று
பாடடென்றால், ஏகப்பட்டப் பிகுவுக்குப்பின்
கள்ளக்குரலில் முனக, காதுகளிலோ கிறக்கம்
‘கவிதை கேட்கிறாய் அல்லது முத்தம்
கேட்கிறாய் மடையா மடையா' சலித்துக்
கொள்கிறாய். அடியேய்! ரெண்டுமே ஓண்ணு
தானே கண்ணுக்குட்டி ஒன்று மற்றொன்றின்
மொழிபெயர்ப்பு மற்றொன்றோ முதலாவதின்
ஒலிபெயர்ப்பு ஆனால் கண்மணி, சொல்லியே
ஆகவேண்டுமொன்றை ஆயுதங்கள் பலவுடன்
அமரிக்கையாய் வருபவனை பார்வையின்
துளி ஒன்றே பறித்து கொண்டுவிட கையறு நிலையில் நிற்பவனை வெல்கிறாய் நீ,
வழக்கம்போல தோற்றாலும் சுகிக்கிறதெனக்கு
தொடரட்டுமிந்த வெற்றியும் தோல்வியும், வீரத் தழும்புகளும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|