தங்க அரைஞாண் கயிறு
அருணாச்சலசிவா
வெத்துடம்பா இருக்காதே
திருவிழாவிற்குப் போய்
திரும்பி வந்தபோத
கருப்பு அரைஞாண் கயிறு வாங்கி
கட்டிவிட்டு சொன்னால் அம்மா.
அம்மாவிடம் சொல்லாமல்
ஆத்துக்கு குளிக்கப் போனவனை
கொம்பெடுத்துவந்து
விரட்டிப்பிடிக்கத் தாவும்போது
அவள்
கைபற்றி இழுக்க
அந்த கயிறுதான் வந்தது.
வளர்ந்து வாலிபமானபோது
வளர்ந்து கொண்டே வந்த கயிறு
ஜெயிலுக்குப் போன போது
சுருக்கிட்டுக் கொள்வேன் என்று
கழற்றச் சொன்னார்கள்.
கழற்றிக் கொடுத்தக் கயிறை
காப்பாற்றி வைத்திருந்து
திரும்பி வந்தபோது
திரும்பவும் கட்டிவிட்டாள்.
என்ன இது இடைஞ்சல்
இப்பவும் சொல்வாள்
பொஞ்சாதி.
குளத்தில் குளிக்கப்போனால்
கோவணம் கட்டும் போதும்
இடுப்பு வேட்டியை
சுருட்டி விட்டுக் கொள்ளும்போதும்
எப்பவும் அம்மா நினைப்புதான்.
அம்மா போகும்போதும்
வெத்துடம்பா இருக்காதே
சொல்லிவிட்டு செத்தாள்.
தலைப் பிரசவம் ஆகி
திரும்பிவந்த மனைவி
கைக்குழந்தை இடுப்பிலுள்ள
தங்க அரைஞாண் கயிறை
தடவிக்காட்டினாள்,
எங்க அம்மா செய்தது.
இடுப்பை
தொட்டுப் பார்த்துக் கொள்ளும்போது
ரெண்டு சொட்டு
கண்ணீர்தான் வந்தது
கருப்புக் கயிறுபோல்
தங்கம் ஜொலிக்கவில்லை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|