சேலம் கோட்டம் - தமிழர் உரிமை
செ. கண்ணன்
கடந்த ஆகஸ்ட் 25ஆம் நாள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் எழுச்சிமிக்கதோர் போராட்டத்தைக் கண்டன. தமிழக அமைச்சர் வீரபாண்டியார் தலைமையில் சேலத்திலும், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் கோவையிலும், வேறுபல ஊர்களிலும் தொடர்வண்டி மறியல் போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்தன. கோவை சட்டக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பல்லாண்டு காலமாகப் பாலக்காட்டுப் பிரிவின் கீழ் இருக்கும் தமிழ்நாட்டுத் தொடர்வண்டிப் பாதைகளைப் பிரித்து சேலத்தில் தனியாக ஒரு கோட்டம் அமைக்கவேண்டும் என்பது நம் நெடுநாள் கோரிக்கை. அதனை ஏற்றுப் பாலக்காட்டிலிருந்து 623 கிலோ மீட்டர் பாதை, திருச்சியிலிருந்து 135 கிலோமீட்டர் பாதை மற்றும் புதிதாக 85 கிலோ மீட்டர் பாதை ஆகியவற்றை இணைத்து சேலத்தில் ஒரு புதிய கோட்டம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனைக் கட்சி வேறுபாடின்றிக் கேரளத்தில் உள்ள அனைவரும் கடுமையாக எதிர்க்கின்றனர். நாடாளுமன்றத்தையே நடக்கவிடாமல் தடுக்கின்றனர். மத்திய அமைச்சர் லாலு பிரசாத்தை நேரில் சந்தித்துக் கேரள முதல்வர் தனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறார். எதற்காக இவ்வளவு பெரிய எதிர்ப்பு? சேலத்தில் கோட்டம் அமைவதால் கேரளத்திற்கு அப்படி என்ன நட்டம்? -என்பன போன்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன.
தொடர்வண்டியில் பயணம் செய்கின்றவர்கள் நன்றாக அறிவர் சோலையார்ப்பேட்டையில் இருந்தே மலையாள மணம் கமழத் தொடங்கி விடும். தொடர்வண்டி நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பலரும் மலையாளிகளாகவே இருப்பர். அங்கு உள்ள உணவகங்கள், புத்தகக் கடைகள் எல்லாவற்றிலும் கேரள மக்களையே நாம் பார்க்க முடியும். ஏனெனில், நியமனங்கள் அனைத்தும் அங்குள்ள தலைமை நிலையத்திலேயே செய்யப்படுகின்றன என்பதுதான்.
இவ்வாறு பலகாலம் தமிழ்நாட்டைச் சுரண்டியவர்களுக்கு இப்போது அதை இழக்க மனம் வரவில்லை. அதன் காரணமாகவே பல்வேறு போராட்டங்களில் இன்று அவர்கள் இறங்குகின்றனர்.
நாடாளுமன்றத்தில் தமிழக, கேரள உறுப்பினர்கள் கடும் விவாதத்தில் இறங்கி மோதிக் கொண்டபோது, அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, ‘ஏன் இப்படிச் சண்டை போட்டுக் கொள்கிறீர்கள், எல்லோரும் இந்தியர்கள் என்பதை உணருங்கள்’ என்று கூறியுள்ளார்.
இந்தியா என்பது வெள்ளைக்காரர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டதேசம். மொழியால், இனத்தால். பண்பாட்டினால் முற்று முழுக்க வேறுபட்டு நிற்கும் பல்வேறு தேசிய இனங்களை இந்தியா என்னும் ஒரே கூண்டிற்குள் அடைத்து வைக்கும் முயற்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்விதான் இது. இந்தியாவில் வாழும், தமிழர்கள், பஞ்சாபியர்கள், வங்காளிகள் என்று பலரும் இங்கு உண்டே தவிர, இந்தியர்கள் என்று இங்கு எவரும் இல்லை, இருக்கவும் முடியாது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு இந்தியக் கூட்டாட்சி (Federal india) ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க உதவும்.
அதை விட்டு விட்டு, ‘இந்தியனாய் இரு’ என்று போலி அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பது எதற்கும் பயன்படாது. சர்வதேசியம் பேசும் பொதுவுடைமைக்கட்சித் தோழர் களுக்கே இப்போது தேசியம் பற்றி சொல்லிக் கொடுக்கும் நிலைமை சோம்நாத் சார்ட்டர்ஜிக்கு ஏற்பட்டுள்ளது. கேரள கம்யூனிஸ்ட்டுகள் தங்களை முதலிலும், கடைசியிலுமாக மலையாளிகள் என்றே உணர்கின்றனர் என்பதையே அவர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நமக்குக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும்தான் சி.பி.எம் கட்சியினர் கேரள நலன் பற்றிக் கவலைப்படுகின்றனர்.
தங்கள் உரிமையை மீட்டெடுக்கத் தமிழ் மக்கள் திரண்டுள்ள இவ்வேளையில், ‘போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு விட்டதே’ என்று ஆதங்கப்படுகிறது ஜெயா தொலைக்காட்சி.
தமிழகத்தில் வாழும் பிற மாநில மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கிறோம். தமிழ் மொழியைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக அறிவிக்கின்ற போதும், இங்கு வாழும் மொழிச் சிறுபான்மையினர் தங்கள் மொழியை ஒரு பாடமாகக் கற்றுக் கொள்வதற்குத் தடை எதுவும் இங்கு விதிக்கப்படவில்லை.
கேரள மக்களின் விழாவான ஓணத்திற்குக் கூட நம் முதலமைச்சர் விடுமுறை அறிவித்தி ருக்கிறார். இந்தப் பெருந்தன்மையை வேறு எந்த மாநிலத்திலாவது நாம் பார்க்க முடிகிறதா? தமிழகத்தை ஒட்டியுள்ள அண்டை மாநிலங் களில்கூட பொங்கல் விழாவிற்கு யாரும் விடுமுறை அறிவிக்கவில்லை.
கர்நாடகம் காவிரி நீரைத் தடுத்தாலும், கேரளம் முல்லைப் பெரியாறு நீரை மறுத்தாலும் இன்று வரை நெய்வேலி மின்சாரத்தை எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்க நாம் இசையத் தான் செய்கின்றோம். இந்தப் பெருந்தன்மைகளெல்லாம் ஏமாளித் தனங்களாகத்தான் இன்று ஆகிவிட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டுக்குள் உள்ள தொடர் வண்டி இருப்புப் பாதைகளின் தலைமையகம் தமிழகத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கோருவது நம் உரிமை அல்லவா? அந்த உரிமையை ஒரு நாளும் நாம் விட்டுத் தரமுடியாது.
மத்திய அமைச்சர் லாலு பிரசாத் நம் முதலமைச்சரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சேலம் கோட்டம் அமைவது உறுதி என்று கூறியிருக்கிறார். அவருடைய வாக்குறுதியை நம்பி, தற்காலிகமாகப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டம் அமைவதில் மேலும் தாமதம் ஏற்படுமானால், மேற்கு மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகமே திரண்டெழும் என்பது உறுதி.
பாராட்டுவோம்!
சேலத்தில், தொடர்வண்டி மறியல் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று அதனை நடத்திய அமைச்சர் வீரபாண்டியாரைப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளார் ஜெயலலிதா.
தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்குத் தமிழக அமைச்சர் அல்லாமல் வேறு யார் தலைமை ஏற்பது? அவர் களத்தில் இறங்கியதால்தான் அன்று சேலத்தில் போராட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. அதற்காக அவரைப் பாராட்டாமல், பதவி விலக்கச் சொல்லும் ஜெயலலிதா அரசியல் நடத்துவது சென்னையிலா, திருவனந்தபுரத்திலா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|