இல்லை குறித்தான உரையாடல் 
தொடர்ந்தபடியே இருக்கிறது
இல்லை என்பதை 
இல்லை என்றுதானே சொல்லமுடியும் 
உமக்கேன் அத்தனைக் கோபமும் எரிச்சலும்?
காணாத ஒன்றை 
எப்படி நான் நம்புவது ?

உணரத்தான் முடியும் என்கிறீர் 
கரண்ட் என்கிறீர் 
காற்று என்கிறீர்

கரண்ட் விஞ்ஞானம் 
காற்று இயற்கை என்றால்
எல்லாம் அதுதான் என்கிறீர் 

நீ சொல்வதைத் தீண்டினால் 
செத்துப்போவோமா?
குறைந்தபட்சம் 
' ஷாக்'காவது அடிக்குமா?

காற்று 
குளிர்ச்சியை உணர்த்துகிறது 
வெப்பத்தை உணர்த்துகிறது 
புழுக்கத்தை உணர்த்துகிறது 
' இல்லை ' எதை உணர்த்துகிறது? 

எல்லாம் மாயை எனில் 
அதுவும் மாயைதானே ?
'அது வேறு இது வேறு ' என்கிறீர் 

பேரழிவு ஏனென்று கேட்டால் 
பாவத்தின் பலன் என்கிறீர் 
மடிந்தவரெல்லாம் பாவிகளோ?
பெரும் பாவம் செய்தவர்களெல்லாம் 
பெரும் பாதுகாப்போடு வாழ்கிறார்கள் என்றால் 
அரசியல் பேசுகிறேன் என்கிறீர் 

என்னிடம் பேசாதே !
போ ...
அவனிடம் போ .
குறைந்தபட்சம் அவனை எனக்கு 
உணர்த்தவாவது செய்யச் சொல் 
அதுவரை நான் 
சாத்தானாகவே இருந்துவிட்டுப் போகிறேன் .

- யாழினி முனுசாமி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.