2006 செப்டம்பர் 29 அன்று கயர்லாஞ்சில் நிகழ்த்தப்பட்ட தலித் படு கொலைகள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டி, அதன் அடிப்படையிலான ஒரு சமூகவியல் ஆய்விற்கு தற்போதைய நிலைமைகளை உட்படுத்தும் வகையில்,நாட்டின் முக்கிய தலித் செயல் பாட்டாளர்களில் ஒருவரான ஆனந்த் டெல்டும்டே எழுதிய புத்தகம் கயர்லாஞ்சி: எ ஸ்டிரேஞ் அண்ட் பிட்டர் கிராப். (khairlanji: A Strange and Bitter Crop, Anand Teltumde, navayana publising, NewDelhi. 2008).

மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டம், மொஹாடி தாலுகாவிலுள்ள குக்கிராமம் கயர்லாஞ்சி.  பையாலால் போட்மாங்கே என்ற தலித் குடும்பத்தினர் மீது அக்கிராமமே வன்மம் கொண்டு பலி தீர்த்த வரலாற்றுப் போக்குகளையும், சமூகப்படிநிலைகளின் வன்மங்களை யும், முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமல் லாமல், அரசு (காவல்துறை), சட்டம் (நீதி மன்றம்),  ஊடகம் ஆகிய அரசமைப்புக ளும் அதற்கு எவ்வாறு துணை போயின, இதுகுறித்த தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் இருட்டடிப்பு செய்தன, நீதியைத் தாமதப்படுத்தி வருகின்றன என்பதையும் இப்புத்தகம் புள்ளிவிவரப் படுத்துகிறது. கயர்லாஞ்சி வன்கொடுமை மீது தலித் அமைப்புகள் தொடுத்த எதிர்வினைகள், தாக்குதல்கள் மூலம் அரசு எந்திரம் அதை எதிர்கொண்ட விதம் குறித்தும், தலித் மீதான வன்முறைகள் குறித்த செய்திகளை வெகுமக்கள் ஊடகங்கள் ஏன் பாகுபாட்டுடன் அணுகுகின்றன என்பதையும் ஆய்வு செய்கிறார்.

தலித்துகளின் துயரங்களைக் குறைப்பது தொடர்பான அரசமைப்புச் சட்ட நிவாரணங்கள் எவ்வாறு போதுமானவையாக இல்லை; சமூகப் பாகுபாடுகளில் இருந்து அம்மக்களைப் பாதுகாக்க ஏன் இயலவில்லை ஆகியவற்றுடன் கயர்லாஞ்சி படுகொலைகளின் அரசியல் பொருளாதாரப் பின்னணியையும் ஆராய்கிறார். முக்கியமாக விடு தலைக்குப் பிந்தைய இந்தியாவில் தலித்துகள்மீதான வன்கொடுமை களில் புதிய பரிமாணமாக உருவாகியுள்ள அபாயக்கூறுகள், சாதியப் படிநிலைகளில் தலித்துகளுக்கு எதிராக வளர்ந்துள்ள புதிய ஆதிக்க சக்திகள் குறித்தும் டெல்டும்டே புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

முன்னர் குறிப்பிட்ட நாளில் கயர்லாஞ்சி கிராமத்தில் பையாலால் போட்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த அவரது மனைவி சுரேகா(40), அவர்களது மகன்கள் ரோஷன்(21), சுதிர் (19) மற்றும் மகள் பிரியங்கா (17) ஆகியோர் சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகள் பொதுவெளியில் அறியப்பட ஒரு மாதமாகியது. இப்படுகொலைகளில் ஈடுபட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும்  காவல்துறை அதிகாரி களும், அரசு வழக்கறிஞரும் முழுமூச்சுடன் இந்த இருட்டடிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவை வெறும்(!) படுகொலைகள் மட்டு மல்ல.  ஒரு ஒட்டுமொத்த கிராமமே பல காலமாக வன்மத்தால் பகை வளர்த்துத் தீர்த்துக்கொண்ட பலி.

குடும்பத்தின் மூத்த உறுப்பினரான பையா லால் போட்மாங்கே இல்லாத நேரத்தில் பெண்கள் உட்பட கிராமத்தினர் திரண்டு ஊரின் ஒதுக்குப்புறமான போட்மாங்கே வீட்டைச் சுற்றி வளைத்துத் தாக்கியுள்ள னர். அவரது மனைவி, மகள் ஆகியோரை வெளியே இழுத்து வந்து நிர்வாணப் படுத்தி, மகன்கள், சகோதரர்கள் எதிரே கும்பல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ள னர்.17வயதுச் சிறுமி பிரியங்கா சித்ரவதை தாங்காமல் உயிரிழந்த பின்னரும் சடலத்தைக்கூட விட்டுவைக்காமல் வன் புணர்ச்சியில் ஈடுபட்டனர். வீட்டுக்கு தீ வைத்து நிர்மூலமாக்கினர். அவர்களை கிராமத்தின் களத்துமேடு போன்ற இடத் துக்கு இழுத்து வந்து அடித்து சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். பின்னர், சடலங் களை ஒரு டிராக்டரில் போட்டு, வெற்றி ஊர் வலம் நடத்தி ஊருக்குச் சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆற்றங்கரையில் வீசி விட்டு நிம்மதியாக வீடு திரும்பியுள்ளனர். இவ்வளவு கொடுமைகளையும் பையா லால் போட்மாங்கே புதர்மறைவில் பதுங்கி, கையறுநிலையில் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

ஒட்டுமொத்தக் கிராமமும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு எதிராக இத்தகைய கொடூர பகைவெறி கொண்டது எதனால்? அவர்களின் ஆதிக்கசாதி அகங்காரத்துக்கு எதிராக போட் மாங்கே குடும்பம் நடத்திய தொடர்போராட்டம்தான். குறிப்பாக,  போட் மாங்கேயின் மனைவி சுரேகா நடத்திய போராட்டங்கள் ஆதிக்க சாதி யின் ஆண் மமதையை நிர்மூலமாக்கியுள்ளது. இதற்காக அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் 'ஒழுக்க நீதி'. போட்மாங்கே நடத்திய போராட்டங்களில் தார்மிக ஆதரவாக இருந்துவந்த பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த்த காஜ்பியேவுக்கும் சுரேகாவுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக நீண்டகாலமாகவே ஒரு கதையை இட்டுக்கட்டி வந்துள்ளனர். இதற்காக அந்தத் தாய் மட்டுமல்லாமல் அவளது மகன்களும், மகளும் உயிரிழக்கவேண்டியிருந்தது.

ஒழுக்கக்கேட்டுக்கு எதிராக சமூகமே தன்னெழுச்சியாக வெகுண்டெ ழுந்ததால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடந்த எழுச்சியாக புனிதப் படுத்தும் வாதம் மூலம் நீதியைத் தாங்களே கையிலெடுத்துக் கொள் வது நியாயப்படுத்தப்படுகிறது. நீண்டகாலப் பகையைப்  பலி தீர்க்க இதுபோன்ற ஒழுக்க நியதிகளை இட்டுக்கட்டும் போக்கு புராணங்கள் புனையப்பட்டதில் இருந்தே தொடர்கிறது. இதற்கு உச்சாடனமாக, மநு முன்னிறுத்திய நான்கு வர்ணம் எனும் இந்து அறம் முன்னிற்கிறது. இந்த அறத்தைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், கொண்டு செலுத்த வும் கீழ்சாதியினருக்கு என்னவிதமான தண்டனை அளிக்கவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மநு வழி வகுத்துத் தந்துள்ளார். ஆனால், சில தலித் செயல் பாட்டாளர்களின் முன் முயற்சிகள் இல்லையென் றால் அங்கு நடந்த இக்கொடுஞ் செயல்கள் அனைத்தும் இத்தகைய 'புதிய' மநுவாதிகளால் எவ்வாறு மூடிமறைக்கப்பட்டிருக்கும் என்பதை யும், இதில் பெரு ஊடகங்களின் வெட்கக்கேடான செயல்களையும் டெல்டும்டே அம்பலப்படுத்துகிறார். ஒரு பொதுப்பிரச்சனை குறித்து சிந்திக்கவும், தீர்வுகூறவும் கீழ்சாதி யினருக்கு அருகதையில்லை என்னும் மநுநீதி காலம்காலமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. மீறுபவர்களுக்கு என்னவிதமான தண்டனை அளிக்கவும் ஆதிக்க சக்திகளுக்கு மநு உரிமை அளித் துள்ளார். இதுவே சமூக ஒழுங்காகவும் அறமாகவும் பயிற்றுவிக்கப் பட்டு வந்துள்ளது. அனைவருக்கும் சமத் துவ உரிமை, சுதந்தரம், நீதியுடன் கூடிய இறையாண்மை கொண்ட, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக இந்தியா திகழும் என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்கள் அமலாக்கப்பட்டு வரும் காலத்திலும் மநுகால அறம் தொடர்வதும், அதை நிலைநிறுத்தவும், தண்டனை அளிக்கவுமான அதிகாரங் களை ஆதிக்கசக்திகள் கையில் எடுத்துக் கொள்வதும் எவ்வாறு என்ற கேள்வியை டெல்டும்டே எழுப்புகிறார்.

குறிப்பாக  சில சூத்திரர்கள் தாமும் பார்ப் பனியத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் என் பதை மறந்து புதிய ஆதிக்க சக்திகளாக வும், அதிகார மையங்களாகவும் உருக் கொண்டுள்ளனர். விடுதலை இந்தியா வில் அவர்களே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடு பட்டு வருகின்றனர் என்பதை பட்டியலிடுகிறார். கீழ்வெண்மணி (தமிழ் நாடு) முதல் பெல்ச்சி(பீகார்), கரம்சேடு (ஆந்திரா),  மேலவளவு (தமிழ் நாடு), ஜஜ்ஜார் (ஹரியானா) வரை கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளைப் பட்டியலிட்டு, இவற்றில் ஈடுபட்டவர்கள் பார்ப்பனரல்லாத சாதி இந்துகள், குறிப்பாக சூத்திரர்  என்று ஒதுக்கப்பட்டுள்ள பிரிவினர் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். (இதில் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த தாக்குதல் என்பது சாதிய ஒடுக்கு முறை மட்டுமல்ல. கீழ்தஞ்சை மாவட்டத்தில் நூற்றாண்டுகளாக நீடித்துவந்த நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராக வர்க்கரீதி யாக அணிதிரண்ட விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங் களுக்கு எதிரான தாக்குதல்களின் உச்சக்கட்டமே  என்ற  இன்னொரு பரிமாணம் இருப்பதை  டெல்டும்டே கவனிக்கத் தவறியுள்ளார்.) சகிப்புத்தன்மை, அகிம்சை, சமாதான விரும்பிகளாக இந்திய மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர் என்ற கருத்து நிலவுகிறது.  இக்கருத்து, கிராமங்களில் மநு கூறும் சமூக ஒழுங்கு, காலம் காலமாக கட்டிக்காக்கப்படுவதை நிரூபணமாக்குவதாக விளங்குகிறது. இந்தச் சமூக ஒழுங்கு குலையும்போது, அங்கு சமூக ஒழுங்குகளையும், அமைதியையும் நிலைநாட்ட கயர்லாஞ்சி வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. எனவே, இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் எப்போது வேண்டுமானாலும் கயர்லாஞ்சியாகும் வாய்ப்புள்ளது என்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் எந்தளவுக்குச் சமரசம் செய்து கொள்கிறார் களோ அந்த அளவுக்கே அமைதியாக வாழமுடியும்; நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைகளில் மட்டுமல்லாது, முதலாளித்துவ உற்பத்திநிலை களிலும், தற்போதைய உலகமயமாக்கல் நிலைகளிலும்கூட இச் சமூகப்படிநிலை தொடர்கிறது; நிலப்பிரபுத்துவத்துடன் முதலாளிய சக்திகள் செய்துகொண்ட சமரசத்தால்தான் 60 ஆண்டுகால விடு தலை வரலாற்றிலும்கூட சாதியப்படிநிலைகளை நீக்கமுடியவில்லை. சிறுநகரங்கள், பெருநகரங்களிலும் அண்மைக்காலமாக தொடரும் சாதீய (தலித்துகள் மீதான) வன்முறைகளை இதற்கு நிரூபணமாகச் சுட்டிக்காட்டுகி றார்.

கிராமங்களில் மட்டுமல்லாது, இச்சாதியசக்திகள் நகர்ப்புறங்களிலும் இதே சமூக அமைதியை விரும்புகின்றன, அது குலைக்கப்படும் போது அங்கும் வன்மம் உருவாகிறது. இது சித்ரவதைகளாக, படுகொலைகளாக, வன்புணர்ச்சிகளாக, கயர்லாஞ்சிகளாக வெடிக்காமல் இருக் கலாம். ஆனால் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தலித்துகளுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும்போது  மவுன ஒதுக்கல் மூலம் தலித்துகளின் ஆசா பாசங்கள் நசுக்கப்படுகின்றன. தனியார் குழும நிறுவனங்கள் தலித்துகளை அனுமதிப்பதே இல்லை. அவர்கள் பாரம்பரியமாகவே தகுதிக் குறைவான வர்கள் என்று கூறி தனியார் நிறுவனங் கள் ஒதுக்கி வருகின்றன. இது, கயர் லாஞ்சிகளில் நடப்பதைவிட மோசமான அநீதி என்று சுட்டுகிறார் டெல்டும்டே. மேலும், கயர்லாஞ்சியில் நிகழ்ந்த வற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் சாதியப்படிநிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானித்து, சாதியப்படிநிலைகள் அதன் கட்டமைப்பு மற்றும் பருண்மை நிலைகளில் மாற்றமின்றி தொடர்ந்தாலும், அதன் உள்ளமைப்பு மற்றும் குணங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கவனப்படுத்துகிறார்.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து நிகழ்ந்து வந்த ஊடுருவல்கள், 11ஆம் நூற்றாண்டிலிருந்து செல்வாக்கு செலுத்திய ஆளும்வர்க்கக் கொள்கைகளால் ஏற்பட்ட மாற்றங்களைவிட, பிரிட்டிஷ் காலனியாக் கத்தின் போது ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார். காலனியாக்கத்தின் தொடக்கத்தில் தொடங்கிய மாற்றங்கள் கடந்த நூற்றாண்டுவரை நீடித்தன. புனிதமாகக் கருதப்பட்ட நால்வருண முறை முழுமையாக இல்லாவிட்டாலும், குறிப்பிடத் தக்க அளவுக்குப் பலவீனமடைந்தது. சாதிகளின் சடங்கு அடிப்படைகள் ஒரு விதிவிலக் காகவே எதிர்கொள்ளப்பட்டன.

ஆனால், இன்றைய சாதி முறைகளை மதம் அல்லது மரபு ஆகிய வற்றின் அடிப்படையில் மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. நம் காலத்தின் குணங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகிய அரசியல் பொருளாதாரத்தின் செல்வாக்கால் தற்கால சாதிமுறைகள் மேலும் குழப்பங்களுக்கு ஆட்பட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகால 'மதச்சார் பற்ற ஜனநாயக' அரசியல், 'சோசலிச' பொருளாதாரக் கொள்கை களால் சாதிய அமைப்புமுறை புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளது. கடந்தகாலத்தின் சமூக- பண்பாட்டு - உளவியல் மிச்சசொச்சங் களுக்கு இடையேயான உள்ளீடுகளின் இடைக்கால வெளிப்பாடாக வும், சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கு சலுகைகள் அளிக்கும் வகையில் அரசு பின்பற்றிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளாலும் ஏற்பட்ட வெளிப்பாடாகவும் தற்காலச் சாதிஅமைப்புகள் பிரதிபலிக்கப் படுகின்றன என்று விளக்கமளிக்கிறார் டெல்டும்டே. "பாரம்பரியமாக உரிமை பெற்ற சாதிகள்தாம் (பார்ப்பனர் மற்றும் இரு பிறப்பாளர்) சாதியப்படிநிலைகளுக்குப் பொறுப்பாவார்கள் என்று இன்றும் அறிவிஜீவிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். (நீதிமன்றம், நாடாளுமன்ற- சட்டமன்றப் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் என) அரசு மற்றும் குடிமைச் சமுதாயங்களில் அவர்களின் மேலாதிக்கம் இன்றும் நீடிக்கிறது என்றபோதிலும், கிராம சமூகப் படிநிலைகளில் அவர்களின் பிடிமானம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

உண்மையில், தங்கள் பங்கை அதிகரிப்பதில் இதர சமூகக் குழுக்கள் முன்னேறியே வருகின்றன. மேலாக, தமது  தொடக்ககாலப் பண்பாட்டு மேலாண்மையுடன்,  பொருளாதாரத்தின் புதிய கூறுகளான முதலாளித்துவம் மற்றும் உலக மயமாக்கல் ஆகிய வளர்ச்சிகளின் பலன்களையும் அனுபவிக்கும் வகையில் அப்பிரிவுகளுடன் இந்தப் பாரம்பரிய மேல்சாதிகள் (பார்ப்பனியர் மற்றும் இருபிறப்பினர்) தம்மைத் தகவமைத்துக் கொண்டனர். இதனால், முன்னர் சாதியப் பாகுபாடு மற்றும் உயர் சாதித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்டவர்களும், இதர பிறபடுத்தப்பட்டவர்களும் இப்போது முன்னேறி வருகிறார்கள். கயர்லாஞ்சி போன்ற தாக்குதல்களில் இரு பிறப்பாளர் போன்ற உயர் சாதியினர் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் கீழ்வெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை நடந்த தாக்குதல்களிலும் பார்ப்பனர்கள் நேரிடையாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை. 1960 களுக்குப் பின்னர் நிகழ்ந்துள்ள இத்தாக்குதல்களில் சமூகத்தில் உயர் நிலை பெற்ற பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர்களே ஈடுபட்டுள்ளனர்' என்று அம்பலப்படுத்துகிறார் டெல்டும்டே. இந்தியாவை இங்கிலாந்து தனது நேரடியான காலனியாக்கத்தின் கீழ் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ராணுவ பலத்தாலும், தந்திரங்களாலும் தனது ஆதிக்கத்தின் கீழ் நாட்டைக் கொண்டுவந்தபின் நிர்வாகத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஜமீன்தாரி முறை, ராயத்வாரி முறை போன்றவை அவை. இத்தகைய ஜமீந்தாரர்களாகவும், மிராசுகளாகவும் இருபிறப்பாளர் அல்லாத சூத்திர சாதியினரை நியமித்தது. அதேநேரத்தில் உயர் நிர்வாக மட்டத்தில் பார்ப்பனர்களையும், இரு பிறப்பாளர்களையும் நியமித்தது. இதனால் பார்ப்பனர் காலனியாக்கத்தின் நேரடியான பலன்களை உடனுக்குடன் அனுபவித்து வந்தனர். என்னதான் பண்ணைகளாக இருந்தாலும் பார்ப்பனர்களின் அந்தஸ்தை புதிய ஜமீந்தார்களால் அடையமுடியவில்லை. எனேவே அதிகாரத்தில் பங்கு கோரும் கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கிடையே மராட்டியம் போன்ற பகுதிகளில் தலித் விழிப்புணர்வு ஏற்பட்டது. ஜோதிராவ் புலேவைத் தொடர்ந்து தலித் கண்ணோட்டம் நாடு முழுவதும் உருவானது. தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,  20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மராட்டியம், தமிழகம் போன்ற பகுதிகளில் பிராமணல்லாதோர் இயக்கம் உருவா னது. இதன்மூலம் காலனிவாதிகளிடம் பெரும்சலுகைகளைப் பெற முடிந்தது. புதிய பதவிகள் பெற்றதுடன் புதிய தொழில்துறைகளிலும் ஈடுபட்டனர். இந்திய தொழில்மயமாக்கத்தில் இவர்கள் பங்கு உறுதிப் படுத்தப்பட்டது. அத்துடன் தொடர்ந்த சீர்திருத்த இயக்கங்கள் மூலம் பெற்ற செல்வாக்கைக் கொண்டு அவர்கள் விடுதலை இந்தியாவிலும் அரசியல் பொருளாதாரச் செல்வாக்கு பெற்ற புதிய சக்திகளாக உயர்ந்தனர் என்கிறார். அதேசமயம், ஏற்கனவே கொழுத்த நிலை யில் இருந்த நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொள்வதையே இந்திய முதலாளித்துவம் விரும்பியதையும், நவீனமயமாக்கலால் தங்களுக்கும் மேலும் லாபம்தான் என்பதால் நிலப்பிரபுத்துவ பிற் போக்காளர்கள் அந்த சமரசத்தை (இன்றுவரை) ஏற்றுக் கொண்டுள் ளதையும் அவர் சரியாகச்  சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலை பெற்ற இந்தியாவில் நவீனப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. நெசவு, தோல், கயிறு, கள் இறக்குதல் போன்ற பாரம்பரியத் தொழில்கள் நசிவடைந்தன. ஒதுக்கப்பட்ட பல சாதிகளைச் சார்ந்த கோடிக்கணக்கானோர்  இதனால் நலிவடைந்தனர். அதேநேரத்தில் பசுமைப்புரட்சி போன்ற திட்டங்கள் நிலவுடமைச் சாதிகளின் அதிகாரத்தை உயர்த்துவதில் முடிவடைந்தது. இதனால் ஏராளமானவர்கள் நிலமிழந்தவர்களாக வும், பாரம்பரிய வாழ்வுரிமைகளை இழந்தவர்களாகவும் ஆயினர். அதேநேரத்தில் நிலவுடமையாளர்களிடம் உபரி குவிந்ததுடன், பாரம்பரிய கிராமத் தன்னிறைவுப் பொருளாதாரத் தன்மைகளை அழித்து, கிராமப் பொருளாதாரத்தை வணிகக் கலாச்சாரமாக்கியது.

இக்காலகட்டத்திற்குள் பார்ப்பனர்களும், இரு பிறப்பினரும் நகரங் களுக்குக் குடிபெயர்ந்தனர். கிராமங்கள் முற்றிலும்  புதிய ஆதிக்க சாதிகளின் (பிற்படுத்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள்) கீழ் வந்தன. அரசின் வளர்ச்சித் திட்டங்களில் எந்தவிதமான (சமூகப்) பாதுகாப்புக்கூறுகளும் பின்பற்றப்படாததால் அவற்றால் தலித்தல் லாத சாதிகள் மட்டுமே பாரம்பரிய தன்னிறைவுக் கிராம முறைகளின் அனைத்துப் பலன்களையும் அடைந்து வளர்ந்தன என்கிறார். பொருளாதார பலம் பெற்ற நிலஉடமைச் சூத்திரசாதிகள் அரசியல் ரீதி யாகவும் தம் சாதி மக்களை அணிதிரட்டும் வல்லமை பெற்றன. சிறிய சாதிகள்கூட தமது விகிதாச்சாரத்துக்கு அதிகமான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறும் நிலை உருவாகியதையும் சுட்டிக்காட்டுகிறார். பலநிலைகளில் அவர்கள் தலித்துகளின் பொரு ளாதார நிலையுடன் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் உள்ள னர்.எனினும் அவர்கள் நில உடமைச் சாதிகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளதால், அவர்களை சமூகரீதியாக நலிவடைந்த தலித் மக்களின் பொருளாதார நிலைக்குள் இணைக்க முடியாது என்கிறார். தலித்துகள், பிற்பட்ட, இதர பிற்பட்ட மக்கள்திரள் ஒன்றிணைய வேண் டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அது சாதி அடிப்படையில் இல்லாமல் வர்க்க அடிப்படையில் அமைய வேண்டும் என்கிறார். (இதற்கு உதாரணமாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் வர்க்கரீதியாக அணி திரண்டதைச் சுட்டிக் காட்டமுடியும். ஆனால், அவர் அவ்வாறு சுட்டிக்காட்டவில்லை.)  சமூகங்கள் சாதியுணர்வுடன் நீடிக்கும்வரை இதுபோன்ற இணைப்புப் போராட்டங்களால் சமூக சமத்துவம் ஏற்பட வாய்ப்பில்லை.

தலித் அல்லாத, பார்ப்பனரல்லாத சாதிகளுக்குள் சாதிக் கலப்புத் திருமணங்கள் இக்காலத்தில் பரவலாகக் காணப்பட்ட போதும், இன்னமும் தலித் சமூகங்கள், தலித்தல்லாத, பார்ப்பனரல்லாத சாதிகள் இடையேயான திருமணங்கள் அரிதாக இருக்கிறது. அவர்கள் இன்னமும் சமூகரீதியாக விலக்கப்பட்டுள்ளனர். நிலப்பிரபுத்துவ பிற்போக்காளர்களுடன் இந்திய அரசு செய்து கொண்ட சமரசத்தின் விளைவாகவே இச்சமூகப்படிநிலை நீக்கப்படவில்லை. இதனால் புதிய பொருளாதார வலிமையும், அரசியல் செல்வாக்கும் பெற்று வளர்ந்து வரும் தலித்தல்லாத, பார்ப்பனரல்லாத நில உடமைச் சாதி கள் சமூக ஒதுக்கலைத் தொடர எந்த எல்லைகளையும் மீறத் தயாரா கும் துணிச்சலோடு உள்ளனர். இதுவே கீழ்வெண்மணி முதல் கயர் லாஞ்சி வரை தலித் படுகொலைகள் தொடரத் தைரியமளித்துள்ளது. இருந்தபோதிலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் எப்படி காட்டுமிராண்டிகளாக நடந்துகொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. கயர்லாஞ்சி படுகொலையில் ஈடுபட்ட ஆதிக்கசாதிகள் பெரிய அளவிலான மிராசுதார்கள் கூட இல்லை. சிறிய அளவிலான விவசாயிகள் தாம். அதுவும் இந்த பண்டாரா மாவட்டம் விவசாயிகள் தற்கொலைக்குப் புகழ்பெற்ற விதர்பா பகுதியில் உள்ளது. கடன்சுமை தாளாது தற்கொலை செய்தோரில் அனைத்து சாதிகளும் உள்ளனர். ஆனால், போட்மாங்கேயின் 17 வயது மகள் பிரியங்காவின் பெண்குறியில் வண்டியில் மாட்டைப் பூட்டப் பயன்படுத் தும் கம்பினை நுழைத்து சித்ரவதை செய்ததாக உண்மை அறியும்குழு கூறியுள்ளது. உள்ளூர் பாரதிய சனதா கட்சித் தலைவர் ஒருவர் பிரியங்கா உயிரிழந்த பின்னரும் பொதுமக்கள் முன்னிலையில் வன்புணர்ச்சியில் ஈடு பட்டுள்ளார். இதேபோன்று தமிழ்நாட் டில் திண்ணியம் கிராமத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்டது.

இக்கொடுமைகளைச் செய்யும் துணிச் சல் ஆதிக்க சக்திகளுக்கு எவ்வாறு ஏற் பட்டது என்ற கேள்வியை எழுப்பும் டெல்டும்டே, தான் செய்வது அனைத் தும் சரி என்ற எண்ணமும், அதற்குப் பக்கபலமாக மதரீதியாகவும் (மநுவின் வர்ணாசிரம தர்மம்), பண்பாடு, மரபுரீதியாகவும் தாம் மேலானவர்கள் என்ற மமதையும் இவர்களிடம் உள்ளது. அத்துடன் தற்கால அரசியல் மேலாதிக்கம் ஆகியவையும் இவற்றுக்கு ஊற்றுக்கண்ணாகக் உள்ளன என்கிறார். தலித்துகள் கீழானவர்கள், அவர்களுக்கு என்ன தண்டனையும் கொடுக்க தமக்கு உரிமை உள்ளது. தாம் தண்டிக்கா விட்டால் அவர்கள் தம்மைத் தண்டித்துவிடுவர் என்ற கண்ணோட் டத்தை இவர்கள் வெகுஇயல்பாகவே கொண்டுள்ளனர் என்கிறார். இதனை தலித்துகளும் தம்மை அறியாமல் ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். இதனாலேயே தம் மீது திணிக்கப்படும் வன்முறைகள் குறித்து புகார் அளிக்க தலித் மக்கள் அஞ்சுகின்றனர் என்கிறார். இவை அனைத்தையும்விட நீதி அளிக்கும் முறை தலித்துகளுக்கு எதிராகவே செயல்படுவதையும் தெளிவுபடுத்துகிறார். தலித்துகள் தம் மீதான தாக்குதல்கள் குறித்து காவல்நிலையங்களில் புகார் அளிக் கும் நிலைமைகூட சுதந்திரமாக்கப்படவில்லை. புகார் ஏற்கப்பட்டாலும் அதன் பிந்தைய விசாரணைகள் தலித்துகளை மிரட்டுவதாக உள்ளது. வழக்குகளில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்கள்கூட தலித் மக்கள் ஆதரவாளராகவோ, தலித் கண்ணோட்டம் கொண்டவரா கவோ இருப்பதில்லை. இறுதியாக வழக்கு  இழுத்தடிக்கப்பட்டு நீதி தாமதமாக்கப்படுகிறது. இது ஆதிக்க சக்திகளுக்கு சாதகமாகவே முடிகிறது என்று கூறும் டெல்டும்டே தேசிய குற்றப்புள்ளிவிவரங்க ளில் இருந்து ஏராளமான தகவல்களை வழங்குகிறார். எனவே இந்திய சமூகம் முழுவதும் புரையோடியுள்ள சமூகப் படிநிலை ஆதிக்க மனோபாவம் அகலாமல் இது அகலாது. ஏனெனில், இதை எதிர்த்து பலாத்காரரீதியில் போராடும் வலிமை தலித்துகளிடம் இல்லை.

சமூக, பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் எண்ணிக்கை அளவிலும் குறைவானவர்களாக உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நிலத்தினைத் தேசியமயமாக்குவதில் இப்பிரச்சனைக்குத் தீர்வு இணைந்துள்ளது. அதை உணர்ந்ததால்தான் ஒப்புக்கு நிலச்சீர்திருத் தம் என்பதைவிட, நில தேசியமயமாக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந் தது என அம்பேத்கர் வலியுறுத்தினார். இதனை மேற்கொள்ள ஆட்சியில் நிபந்தனையற்ற புரட்சி  ஏற்படவேண்டும். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமைகள் சென்றுசேர வேண்டு மானால், உண்மையான ஜனநாயக நிறுவனங்கள் அமைத்து  அவற்றை ஆளும் வர்க்கம் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இப்படியான நிலை உருவாகியிருக்காது. ஆனால், உண்மையில் எந்தவிதமான நிர்வாகப் புரட்சியையும் மேற்கொள்ளும் நிலையில் அரசு இல்லை. இந்திய அரசு நிர்வாகிகள் அதாவது மத்திய தர வர்க்க அதிகாரிகள் முதலாளித்துவ அமைப்பைவிட பிற்போக்கு விசுவாசிகளாக உள்ளனர். இன்று  தலித் உரிமைகளைப் பாதுகாக்கப் பல சட்டங்களும், அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ள போதும் அவர்கள் அதைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதில்லை. விடுதலையால் தலித்துகள் எதையும் அடையவில்லை என்றும் சொல்ல முடியாது. வழங்கப்பட்ட பாதுகாப்பு ஒருசில தலித்துகளுக்கு சென்றுசேர்ந்துள்ளது. ஆனால், சாதியப் படிநிலை மாறவில்லை. மாறாக சாதிகள் பெருகிவருகின்றன.

விடுதலை இந்தியாவின் தொடக்க ஆண்டுகள் சாதிய சமத்துவத்தில் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்தபோதும், குறிப்பிட்ட தனிநபர்கள் மட்டுமே வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்கும் நிலைமைகள் மேலும், மேலும் உருவா னதைத் தொடர்ந்து அதில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலைமை கள் பழையபடி உள்சாதிகளை உருவாக்குவதிலும், உள் சாதிப் புனிதங்களிலும் சிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களுக்குள்ளேயே உள்சாதி பெருமை பேசும் அவல நிலைக்கு சமூகம் தாழ்ந்துள்ளது. புதிய சமுதாய நிலைகளில் பார்ப்பனியத்துக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் என்ற அம்பேத் கரிய கண்ணோட்டம் அகன்ற நிலையில், முக்கியமான மகர் சாதியில் கூட உள்சாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு தங்களுக்குள் உயர்வு- தாழ்வு பார்க்கும் நிலை தோன்றியுள்ளது. இச்சூழ்நிலையில் கயர்லாஞ்சிகள் முக்கியத்துவம் வாய்ந்த அபாய எச்சரிக்கைகள் என்று டெல்டும்டே வருத்தத்துடன் முன்னறிவித்திருக்கிறார்.

- அப்பணசாமி

Pin It