தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்பட வைக்க பல ஆண்டுகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு ஒரு வழியாக தற்பொழுது தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது அத்திட்டத்தை செயல்படுத்தினால் இராமர் பல லட்ச வருடங்களுக்கு முன்பு கட்டியதாக மதவாதிகளால் சொல்லும் இராமர் பாலம் இடிபடும் என்று கூறி மதவாத சக்திகள் பூச்சாண்டிகள் காட்டி வருகின்றன.

Adam Bridgeகடந்த 2002ம் ஆண்டு, இலங்கைக்கும் தமிழகத்திற்கும் நடுவே இயற்கையாகவே உருவான சில தொடர்ச்சியானதும் விட்டுவிட்டுமாய் இருக்கக்கூடிய மணல் திட்டுகளை அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் புகைப்படமெடுத்து வெளியிட்டது. பழைமைவாத கருத்துக்களில் ஊறிய மத கும்பல்கள் 'அது நிச்சயம் இராமர் கட்டிய பாலம் தான்.. அதே தான்..' என புல்லரித்து கிளம்பின. வைஷ்ணவா நெட்வொர்க் மற்றும் இந்தோ லிங்க் ஆகிய இணையங்கள் தாம் முதன் முதலில் அதனை இராமர் பாலம் என நாசா ஒத்துக்கொண்டுவிட்டதாக கூறி பொய்களை அவிழ்த்துவிட்டது. (வைஷ்ணவ நெட்வொர்க் தளத்தின் செய்தி: http://www.vnn.org/world/WD0210/WD07-7592.php ).

தற்பொழுது சேது சமுத்திரதிட்டத்தை செயல்படுத்தப்படும் பொழுது இச்சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. சங்கராச்சாரியார்கள் நால்வர் பெங்களூரில் இராமர் பாலம் குறித்து விவாதித்தனர். இது குறித்த துவாரகா பீட சங்கராச்சாரியார் வரூபானந்த ஜி மகராஜ் கூறியுள்ள கருத்து ‘தினமணி'யில் வெளிவந்தது (சென்னை, 24.5.2007, பக்கம் 5) அச்செய்தி வருமாறு:

“இக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ராமர் கட்டிய பாலத்தை காக்கக் கோரி மத்திய அரசிடம் மனு அளிக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதுபற்றி விசாரிக்கும்படி டி.ஆர். பாலுவுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பாலு அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக பாலத்தை இடித்து சேது கால்வாய் அமைக்கவே அவர் தீவிரம் காட்டி வருகிறார். இப்பிரச்சினையில் அரசியல் கலப்படமில்லை.

பாலத்தை இடிப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும். அப்படியிருந்தும் பாலத்தை இடிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை எதிர்த்து, வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக உள்ளோம் என்று எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். இதுபோல் நான்கு சங்கர மடத்தின் சார்பிலும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் தீர்மானித்துள்ளோம். பாலத்தை இடிக்காமல், வேறு பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆட்சேபணை இல்லை. இது தொடர்பாக மத்திய அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம்.

இந்தப் பாலத்தை அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புகைப்படம் எடுத்துள்ளது. ராமர் பாலம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது இயற்கையாக அமைந்த பாலம் அல்ல. மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாகும். விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது.

இந்திய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களிலும் இந்தப் பாலம் இன்னும் வலுவுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது. கடலுக்கு அடியில் 6 அடி கீழே இது கட்டப்பட்டுள்ளது. அதிக குளிர்ச்சி நீரையும், அதிக வெப்ப நீரையும் தாங்கக் கூடியது இந்தப் பாலம்.

இந்தப் பாலத்தை இடித்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட விசையைத் தூண்டிவிட்டதுபோல் ஆகிவிடும். இதனால் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்குப் பெரும் அழிவு ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்தப் பாலத்தை இடிக்கும் நடவடிக்கை எடுப்பதன்மூலம் நாட்டுக்குத் தீங்கு ஏற்படுத்துகிறார் மத்திய அமைச்சர் பாலு.” இவ்வாறு கூறியிருக்கிறார் துவாரகா பீடாதிபதி. (பார்க்க:
http://viduthalai.com/20070525/news04.htm)

மேலுள்ள காரணங்களுக்காகத் தான் சேது சமுத்திரத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக ஆராய்வோம்.

ராமர் பாலம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

முதலில் அறிவியல் படித்தவர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு எத்தனை வருடங்களாக மனிதன் இருக்கிறான் என்பதற்கு விடை தெரிந்தால் இந்த கூற்று பொய்யென சுளீரென மண்டையில் உரைக்கும். அதையும் மறுத்து 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இருந்தார்கள் என்று இன்னும் நம்புபவர்கள், இதற்கு எதையேனும் ஆதாரமாக காட்டினால் உலகத்திற்கே அது பெரும் பரிசாக அமையும். உலகமே அவர்களை பாராட்டும். எவரேனும் செய்வார்களா என தெரியவில்லை... வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு நல்ல திட்டத்தை எதிர்க்கும் மதவாதிகளுக்கு அறிவியல் தெரிந்திருந்தும் இவ்வாறு கற்பனைகளைக் கூறுவது மத உணர்வுகளை தூண்டி ஆதாயமடைவதுவே அன்றி வேறில்லை...

இது இயற்கையாக அமைந்த பாலம் அல்ல. மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாகும். விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது.

இதற்கு நான் விளக்கமளிப்பதை விட அந்த புகைப்படத்தை எடுத்த நாசா விண்வெளி நிலைய அதிகாரி ஹெஸ் சொல்வதைக் கேட்போம்.

NASA said the mysterious bridge was nothing more than a 30 km long, naturally-occuring chain of sandbanks called Adam's bridge. Hess said his agency had been taking pictures of these shoals for years.
(ஆதாரம்: http://www.laputanlogic.com/articles/2002/11/03-83975630.php )

அவை வெறும் இயற்கையாகவே உருவான மணல்திட்டுகள் தாம் என நாசாவே சொன்ன பிறகும் அதை நம்பிக் கொண்டிருப்பது, “தான் பிடித்த முயலுக்கு மூணே கால்” என்று வாதிடும் சிறுபிள்ளைத்தனவாதமாகும். ஒருவேளை இதனையும் மறுப்போர் எனது முதல் கேள்விக்கான பதிலை பூர்த்தி செய்துவிட்டு இவற்றை திரும்ப படிக்கவும்.

There is no evidence of a human presence in the subcontinent, he says, before roughly 250,000 to 300,000 years ago. It is generally believed man's hominid ancestors did not leave their African home until about two million years ago
Communication experts say that false, suspect news finds much greater circulation than normal because of the internet.

அந்த தகவல் எப்படி வெளியானது எப்படி அதனை வைஷ்ணவ நெட்வொர்க் - இந்தோ லிங்க் போன்ற பார்ப்பன பாசிச சக்திகள் வேண்டுமென்றே தவறான நோக்கத்தில் வெளியிட்டனர் என்பது குறித்தும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்தி பணம் சம்பாதிக்க உதவியது என்பதையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்க. அந்த புகைப்படத்தை எடுத்த நாசாவே அதனை இயற்கையாகவே உருவான பாலம் என்று சொல்கிறது. ஆனால், அதனை நம்ப மறுத்து அதனை சாட்சாத் ” விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது” என்று சிலர் சொல்லும் பொழுது, நாசாவில் உள்ளவர்களின் கருத்துக்களை விட அறிவியல் தெரிந்த “அதிமேதாவிகள்” இந்தியாவில் உள்ளதை காண முடிகிறது.

இந்தப் பாலத்தை இடித்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட விசையைத் தூண்டிவிட்டதுபோல் ஆகிவிடும். இதனால் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்குப் பெரும் அழிவு ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

“ஒழுங்கா சாமியை கும்பிடு.. இல்லைனா சாமி கண்ணை குத்திடும்” என்று சிறுபிள்ளைகளை மிரட்டும் பூச்சாண்டி வகை சார்ந்த இந்த வாதத்தை எந்த வகையில், எந்த அடிப்படையில் அவர் குறிப்பிட்டார் என்பது அவருக்கே வெளிச்சம். கடலோரம் வசிக்கும் பாமர மக்கள் பயங்கொள்ளும் வகையில் இக்கருத்தை தெரிவித்து அதன் மூலம் மக்கள் மனதில் மத உணர்வுகளை தூண்டிவிட்டு, பாபர் மசூதி, குஜராத் போல மதவெறிக் கலவரத்தை நடத்த திட்டமிடும் இந்து மத வெறியர்களை என்ன சொல்லி திருத்துவது?

மேலும் இது குறித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் புகைப்படத்தை கீழே காண்க. அதில் தொடர்ச்சியாகவா மணல் திட்டுகள் உள்ளன? என்று தங்கள் கண்களை உற்று நோக்கிக் கண்டு தெளிவு பெறுக.

http://www.isro.org/pressrelease/ph2.jpg

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஜெயலலிதாவின் அறிக்கை இது.

Jaya ridicules MDMK leader's claim on Sethusamudram project
Chennai, Sep 8 (UNI) Dismissing as “pathetic, comical and absurd”
Minister J Jayalalithaa today asserted that if anyone could claim credit for bringing the project to fruition it was only her and no one else
ஆதாரம்: http://www.my-tamil.com/n/a/2004/9.shtml

இத்திட்டத்தை கொண்டு வந்தது “நான் தான்! நான் தான்! நானே தான்” என்று மார்தட்டி அறிக்கை விட்டு வைகோ, டி.ஆர் பாலு என அனைவரிடமும் சண்டை போட்ட ஜெயலலிதாவின் இன்றைய காலகட்ட அறிக்கை இதோ உங்கள் பார்வைக்கு...

ஜெயலலிதா அறிக்கை பார்க்க: http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=6608

அவரது அறிக்கையிலிருந்து....

ராமர் பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் நாசா கூறி உள்ளது. நாம் இந்த பாலத்தை ராமர்பாலம் என்று அழைக்கின்றோம். ஆங்கிலேயர்கள் இதை ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அழைக்கின்றார்கள். ஆக இதன் உண்மையை நாசாவே துல்லியமான புகைப்படங்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது.

இந்த எந்த அளவிற்கு பொய் என்பதனை மேலேயே விரிவாக் கண்டு விட்டோம்..

இது போன்ற பொய்களையும் புரட்டுகளையும் அறிக்கையாக வெளியிடும் ஜெயலலிதாவிற்கு அன்று சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வந்தது நான் தான் என்று சொல்லும் பொழுது ”ராமர் பாலம்” கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது சேது சமுத்திரத் திட்டம் பற்றி எதுவுமே தெரியாத தமிழக முதல்வராக அவர் இருந்துள்ளாரா? என்பவற்றுக்கான பதிலை தங்களிடமே விட்டுவிடுகிறோம்...

'ஆரிய மாயை' எழுதி ஆரியர்களைப் பற்றி புட்டுபுட்டு வைத்த அறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அம்மையார், அண்ணா வழியில் தான் நடந்ததாக உதாரணம் சொல்ல ஒரு நிகழ்வு கூட காட்டமுடியாது என்பது அவருக்கே தெரியும். தான் ஒரு பாப்பாத்தி தான் என்று ஆரியத் திமிரோடு தனது சாதியை சட்டப்பேரவையிலேயே பேசிய இந்த திராவிடக் கட்சித் தலைவர், இராமர் பெயரால் இத்திட்டத்தை தடுப்பது ஒன்றும் வியப்பில்லை. பா.ச.க, விஷ்வ ஹிந்து பரிசித், சிவசேனை, சங்பர்வார் போன்ற மதவாத பாசிச கும்பல்களுடன் தானும் உண்டு என்பதை இது போன்ற நிகழ்வுகளின் மூலம் ஜெயலலிதா அடிக்கடி நினைவுபடுத்துகிறார்.

பெரியாரின் சமூகநீதி பகுத்தறிவு சிந்தனையால் சிவந்த நம் தமிழ் மண்ணில் மதவாத கும்பல்களின் ஒப்பாரியை அடக்கி வைக்க வேண்டியது நம் கடமையாகும். 

-
க.அருணபாரதி

Pin It