“முஸ்லீம் மக்களை மிக இழிவாகவும், இந்து மத வெறியைத் தூண்டும் வகையிலும் வெறியூட்டும் படியாக முழக்கங்களை எழுப்பியபடியே ஒரு கும்பல் லாரியில் வர, அதன் பின்னால் வரிசை, வரிசையாக லாரிகள் வந்த வண்ணமிருந்தன. அந்த லாரிகளிலிருந்து காக்கி டவுசரும், நெற்றியில் காவித் துணியும் கட்டிய இந்துமத வெறியர்கள் கும்பல், கும்பலாக இறங்கினர். அவர்கள் கைகளில் திரிசூலம், கோடாரி, வெடிப் பொருட்கள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர். தாங்கள் நடத்தப் போகும் கொலை வெறியாட்டத்தில் களைப்பு ஏற்பட்டால் அதைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும் கைகளில் வைத்திருந்தனர்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் கைப்பேசியிருந்தது. அந்த கைப்பேசிக்கு எங்கிருந்தோ உத்தரவுகள் வந்தவண்ணமிருந்தன. முஸ்லீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரங்கள் அடங்கிய கம்யூட்டர் காகிதங்களும் அந்த தலைவர்களின் கைகளில் இருந்தன. இந்து - முஸ்லீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் பட்டியல், யார், யாரைத் தாக்க வேண்டும் என்ற துல்லியமான விவரங்களைக் கைகளில் வைத்திருந்தனர் - இக்கும்பல்கள் மிக துல்லியமான திட்டத்துடன் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு படையைப்போல் முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்ட இனப்படுகொலையை அரங்கேற்றத் தொடங்கின.

முதலில் வசதியான முஸ்லீம்களின் வீடுகள், கடைகளை சூறையாடினர், பிறகு லாரிகளில் கொண்டு வந்திருந்த எரிவாயு சிலிண்டர்களை அக்கட்டிடத்திற்குள் வைத்து திறந்து விட்டனர். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒருவன் நெருப்பை கொளுத்திப் போட அக்கட்டிடங்கள் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தன. ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்தபடி மசூதிகளும், தர்காக்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அதன்மீது அனுமார் சிலைகளும், காவி கொடிகளும் நட்டு வெறி ஆட்டம் போட்டது இந்து மதவெறிக் கூட்டம்.

இந்துமதவெறி தலைக்கேற கொலை வெறியுடன் ஓடிவந்த ஒரு கும்பல் குழந்தை, குட்டிகளுடன் 19பேர் குடும்பமாக இருந்த வீட்டைப் பூட்டி அந்த வீட்டிற்குள் லாரியில் கொண்டு வந்திருந்த தண்ணீரைப் பீய்ச்சியடித்தது. மனிதத் தன்மையற்ற முறையில் உயர் மின் அழுத்தக் கம்பியை அந்த வீட்டின் உள்ளே தூக்கிப் போட்டு 19-பேரையும் கொன்று கும்மாளம் போட்டது.

மதவெறி பிடித்த, மனிதத் தன்மையற்றக் கூட்டம் குடும்ப உறுப்பினர்கள், சிறுவர், சிறுமிகளின் கண்முன்னேயே முஸ்லீம் பெண்களை கும்பல். கும்பலாக பாலியியல் வன்கொடுமைக்குள்ளாக்கினர். அதன் பின்பும் அதன் மதவெறி அடங்காமல் அப்பெண்களை எரித்துக் கொன்றனர், சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றனர். நினைத்துப் பார்க்கவே நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் ஒரு பெண்ணை ஸ்குரு டிரைவரால் குத்தியே கொன்றனர்.

மதவெறி பிடித்த மிருகக்கூட்டம் முஸ்லீம் பெண்களின் கண் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக ஆட்டம் போட்டு பெண்களை குலை நடுங்க வைக்கச் செய்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினர். இந்த கொலைவெறிக் கூட்டத்தில் சிக்கிய எட்டு மாத கர்ப்பிணி பெண் தன்னை விட்டுவிடுமாறு கதற, கதற அவளுடைய வயிற்றைக் கிழித்து அவள் குழந்தையை வெளியிலெடுத்து அவள் கண்ணெதிரிலேயே கண்ட துண்டமாக வெட்டிக் கொன்றனர்.”

இப்படிப்பட்ட கொடூரமான சம்பவங்களைச் சொல்லிமாளாது. மேலே கூறியவை ஒரு சில மட்டுமே. இந்துமத வெறியைத் தூண்டி நடத்தப்பட்ட இத்தகைய மனிதத் தன்மையற்ற இனப்படுகொலை எங்கு நடந்தது தெரியுமா? இச்சம்பவத்திற்கு தலைமை தாங்கியவர் யார் தெரியுமா?

இந்தியாவின் விடிவெள்ளியென்றும், இந்திய மக்களை, இந்திய நாட்டை முன்னேற்ற வந்த இரட்சகன் என்றும், முதலாளித்துவ பத்திரிக்கைகளாலும், ஊடகங்களாலும் ஊதிப்பெருக்கப்பட்டுள்ள பா.ஜ.கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடி தான் மேற்கூறிய காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றிய இந்துமத வெறிக் கூட்டத்தை 2002-ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக இருந்து தலைமை தாங்கியவர். மேற்கூறிய கொடூர முஸ்லீம் இனப்படுகொலை நடந்த இடம் குஜராத் மாநிலம் தான்.
குஜராத்தின் தலைநகரமான அகமதாபாத்தின் பத்திரிக்கையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் என அனைவரும் கூறுவது “குஜராத்தில் நடந்தது கலவரமல்ல ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப்படுகொலை, ஒரு இராணுவத் தாக்குதல் போல் எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டது” என்பது தான்.

குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீது இந்துமத வெறியர்கள் நடத்திய கொடூரத் தாக்குதல் ஆனது இந்திய வரலாற்றில் நீங்காத ரத்தக் கரையாகும். அந்த ரத்த சாட்சியத்தை வருடங்கள் உருண்டோடிவிட்டதால் பூசி, மெழுகி மறைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், மன்னிக்க முடியாத வரலாற்றுக் குற்றமிழைத்த, ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் இனப்படுகொலைக்கு நிகரான இனப்படுகொலை செய்த நரேந்திர மோடியைத்தான் இன்று இந்தியாவின் விடிவெள்ளியாக முன்னிறுத்துகிறார்கள்.

இந்துக்களை முன்னேற்ற அல்ல, முதலாளிகள் சுரண்டலை பாதுகாக்கவே இந்துத்துவா பயங்கரவாதம்

ஆரியர்கள் ஆளபிறந்தவர்கள் என இனவெறியைத் தூண்டி யூதமக்களை கொன்று குவித்தும், உலகத்தையே ஜெர்மன் முதலாளிகள்வசம் அடிமைப்படுத்தவும், துடித்த பாசிசிஸ்ட் இட்லரின் வாரிசுகள்தான் இந்துத்துவா பயங்கரவாதிகள். முதலாளித்துவம் தங்களது சுரண்டலைப் பாதுகாக்கவும் நெருக்கடியைத் தீர்த்துக்கொள்ளவும், மக்கள் எதிர்ப்பை கொடூரமாக அடக்கி ஒடுக்கவும் கையில் எடுத்த ஆயுதம்தான் பாசிசம்.

1985-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி புதிய பொருளாதாரக் கொள்கை என்று அறிவித்த பொருளியியல் கொள்கைதான் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்று மாறி நரசிம்மராவ் காலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து வாஜ்பாயால் மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று மன்மோகன் சிங் ஆட்சியில் முழுக்க, முழுக்க நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

உலகமயக் கொள்கையால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசிடம் உள்ள அனைத்து துறைகளும், இந்திய பிராந்திய பெருமுதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் தாரைவார்க்கப்படுகிறது. மேலும் உழவர்கள் அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள். பழங்குடிகள் காடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர், மீனவர்கள் கடலிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். நகர்ப்புறத்தில் உள்ள ஏழைகள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள். மொத்தத்தில் தங்கள் சொந்த நாட்டிலேயே உழைக்கும் மக்கள் அகதிகளாக்கப்படுகின்றனர்.

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமை, போராடும் உரிமை, குறைந்தபட்ச கூலி நிர்ணயம், 8-மணி நேர வேலை என அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதோடு, வேலை உத்தரவாதம் இல்லாததால், தொழிலாளர் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு அளித்து வந்த அனைத்து மானியங்களும் படிப்படியாக நிறுத்தப்பட்டு, குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. விலைவாசி உயர்வோ என்றுமில்லாத அளவு உச்சத்தை எட்டிவருகிறது.

ஒரு பக்கம் உழைக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் இந்நிலையில் அரசானது இந்திய பெருமுதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் சலுகைகளை வாரி, வாரி வழங்குகிறது. உழவர்களிடம் விவசாய நிலங்களைப் பிடுங்கி சிறப்பு பொருளாதார மண்டலங்களாக்கி முதலாளிகளுக்கு மிக, மிக குறைந்த விலையில் கொடுக்கிறது. உதாரணமாக நரேந்திர மோடி குஜராத்தில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைக்க சதுரடி 10,000 ரூபாய் மதிப்பு உள்ள நிலத்தை, சதுரடி 900 ரூபாய்க்கு என்று 1,100 ஏக்கரை வாரி வழங்கியுள்ளார். இதோடு மட்டுமில்லாமல் பத்திரப் பதிவு இலவசம், ஸ்டாம்ப் டியூட்டி கூட கிடையாது. இதுபோல் மன்மோகன் சிங்கின் மத்திய அரசும், தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை முதலாளிகளுக்கு வாரி வழங்கியுள்ளனர்.

மக்களுக்கான மானியங்களை குறைத்துவிட்டு முதலாளிகளுக்கு மானியங்களை வாரி, வாரி வழங்குகின்றனர். உதாரணமாக குஜராத்தில் நரேந்திரமோடி டாடா-வின் நானோ கார் கம்பெனிக்கு 9,570 - கோடி ரூபாயை கடனாகக் கொடுத்துள்ளார். இப்பணத்தை 20-ஆண்டுகள் கழித்து திருப்பி கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார். இதற்கு வட்டி வெறும் 0.1% மட்டும்தான். அதாவது ஒரு வருடத்திற்கு 100-ரூபாய்க்கு 10-காசு மட்டுமே. மன்மோகன்சிங்கின் மத்திய அரசு ஆண்டு தோறும் 5 லட்சம் கோடியை முதலாளிகளுக்கு வரிவிலக்காக (சுங்கவரி குறைத்த கணக்கு இதில் இல்லை) வாரி வழங்கியுள்ளது.

இந்தியப் பெருமுதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய முதலாளிகள் கனிம வளங்களை வெட்டியடிக்க பழங்குடி மக்கள் அவர்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்துகின்றனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையை முதலாளிகளின் வேட்டைக்காடாக்கி விவசாயிகளை வெளியேற்றுவதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. பெரிய, பெரிய மீன்பிடி கப்பல்களை இறக்கி, மீன்பிடித் தொழிலை பெருமுதலாளிகளின் ஏகபோகமாக்கி மீனவர்களை விரட்டியடிப்பதற்கான வேலைகள் வேக, வேகமாக நடந்து வருகிறது.

கேட்டால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்கின்றனர். தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒவ்வொரு பகுதியிலும் 1000-கணக்கான, 10,000-கணக்கான விவசாயிகளை, பழங்குடிகளை, மீனவர்களை அவர்கள் வாழ்வாதரங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு சில நூறு பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதுதான் இவர்களின் இலட்சணம். இதன் விலைவாய் நாளுக்கு நாள் வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெருக்கடியின் விளைவால் மக்கள் போராட்டங்களும் அதிகரிக்கின்றன. மக்களை அப்போராட்டங்களிலிருந்து திசை திருப்பவும், முதலாளிகள் நலனுக்கான சட்டங்களைத் தொடர்ந்து கொண்டு வரவும், மக்கள் போராட்டங்களை அடக்கி - ஒடுக்கவும், உழைக்கும் மக்களை மதவெறி ஊட்டி பிரிக்கவும்தான் இந்துத்துவா பயங்கரவாதம் திட்டமிட்டு வளாக்கப்படுகிறது.

இந்தியாவின் (உழைக்கும் மக்களின்) விடிவெள்ளியல்ல; முதலாளிகளின் விடிவெள்ளியே மோடி

இந்தியப் பிராந்திய பெருமுதலாளிகளுக்கும், இவர்கள் கூட்டாளியான ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் எடுபிடி சேவை செய்ய, சென்ற தேர்தலில் மன்மோகன் சிங் தேவைப்பட்டார். அதனால் அன்று முதலாளித்துவப் பத்திரிகைகள், ஊடகங்கள் அனைத்தும் மன்மோகன்சிங்கை பெரிய பொருளாதார வல்லுனர், பலமுறை நிதியமைச்சராக இருந்தவர், வருங்கால இந்தியாவை தூக்கி நிறுத்துபவர் என்று ஊதிப் பெருக்கின. ஆனால், இன்று மன்மோகன்சிங்கின் மக்கள் விரோத ஆட்சியால் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் மன்மோகன் சிங் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இம்முறை தங்களது எடுபிடி மன்மோகன்சிங்கை (காங்கிரஸ் கட்சியை) ஆட்சிக் கட்டிலில் அமர்த்த முடியாது என்று தெரிந்தவுடன், உலகமயமாக்கலை தைரியமாக செயல்படுத்தக்கூடிய, மக்கள் போராட்டங்களை கடுமையான அடக்குமுறையின் மூலம் காலில் போட்டு மிதிக்கக்கூடிய விசுவாசமான எடுபிடியாக முதலாளிகள் மோடியைக் கருதுகிறார்கள். தனது விசுவாசத்தை மோடி ஏற்கனவே குஜராத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளார். எனவேதான் மோடியை முதலாளித்துவப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இந்தியாவின் விடிவெள்ளியாக, குஜராத்தை முன்மாதிரியாக உயர்த்திப் பிடிக்கின்றனர். முதலாளிகளுக்கு குஜராத் முன்மாதிரிதான் அதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.

நவீன பார்ப்பனியம் - இந்து - இந்தியா - இந்தி

இந்திய துணைக் கண்ட வரலாற்றில் ஆளும் வர்க்கங்களின் சுரண்டலைப் பாதுகாக்கும் வகையில் பார்ப்பனியமானது பல்வேறு கருத்தியல்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

கி.மு. 1000-600-களில் தொழில் அடிப்படையில் இருந்த வர்ண வேலைப் பிரிவினையை பார்ப்பனியமானது பரம்பரை அடிப்படையில் மாற்ற முயற்சிகளை மேற்கொண்டது. கி.மு. 185-ல் மௌரிய அரசனான பிரிஹத்ரதன் என்பவரின் தளபதியாக இருந்த புஷ்யமித்திரசுங்கன் என்ற பார்ப்பனன் பிரிஹத்ரத அரசனை பகிரங்கமாக படுகொலை செய்து ஆட்சியை கைப்பற்றினான். பார்ப்பனியம் ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு வர்ணம்மானது பரம்பரையாக்கப்பட்டது.

குப்த பேரரசு (கி.பி. 335-455) காலகட்டத்தில் சாதிய நிலவுடமை சமூகம் கட்டியமைக்கப்பட்ட போது பார்ப்பனியமானது பரம்பரை அடிப்படையிலான சாதிய வேலை முறையை கட்டியமைப்பதற்கான கருத்தியலை வேரூன்றியது. இக்கருத்தியல் சாதி நிலவுடமை சமூகத்தை அதாவது வர்ணாசிரம - சாதி அடிப்படையிலான கிராம ராஜ்ஜியத்தை கட்டியமைக்க அடிப்படையாக அமைந்தது.

படிப்படியாக பார்ப்பனியமானது பல்வேறு சமயப் பிரிவுகளை (குறிப்பாக சைவம்-வைணவம்) ஒன்றிணைத்து இந்து மதம் என்ற ஒற்றை சமயப் பிரிவினையை உருவாக்குகிறது. சாதியம்- வர்ணாசிரமத்தை நிலைநிறுத்துவதற்கு இந்துத்துவா கருத்தியலை நிலைநாட்டுகிறது. இந்த இந்துத்துவா கருத்தியல் சாதி நிலைவுடமை சமூகமான (கி.பி. 335-ல்) குப்த பேரரசில் தொடங்கி, முஸ்லீம்கள் ஆட்சிக்கு வந்த காலத்திலும், இன்று வரையும் தொடர்கிறது. இந்த சாதிய-வர்ணாசிரம கருத்தியல் சாதிய நிலவுடமை மன்னர்களை, சாதிய நிலவுடமையாளர்களை கட்டிக் காத்தது.

காந்தி முன்மொழிந்த “கிராம ராஜ்ஜியம்” கூட மேற்கூறிய வர்ணம் - சாதிய பிரிவினையை அடிப்படையாகக் கெண்ட ‘இந்து தர்ம’ கருத்தியலை முன்வைத்து, சாதிய வேலைப்பிரிவினையை அடித்தளமாகக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட சுய தேவை கிராம சமூகத்தைத்தான்.

தமிழகத்தில் சுரண்டும் வர்க்கமாக இருந்த வெள்ளாளிய சமூகம் பல்லவர்கள் இறுதிக்காலத்தில் (கி.பி. 600க்கு மேல்) பார்ப்பனியத்துடன் இணைந்து தமிழகத்தில் சாதிய நிலவுடமை சமூகத்தை கட்டியமைக்கத் தொடங்கியது. சோழர் காலத்தில் முழுமையாக சாதிய நிலவுடமை சமூகம் கட்டியமைக்கப்பட்டு, விஜய நகரப் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் சாதிய சமூகம் இறுக்கமடைந்தது. தமிழகத்தில் சாதிய சமூகத்தை கட்டியமைத்து நிலைநிறுத்தியுள்ள கருத்தியலானது, வெள்ளாளியமாகும்.

வெள்ளாளியமும் இந்துத்துவாவின் பிரதி பிம்பமே. நமது தமிழகத்தில் இந்துத்துவாவானது இந்துமத கட்டமைப்பிற்கு உட்படாமல் காலம் காலமாக மக்களிடம் உள்ள குல தெய்வ வழிபாட்டை ஒழித்து, பெருந்தெய்வ வழிபாட்டை நிலை நிறுத்துவதன் மூலம் இந்துதமதத்தை கட்டமைக்க முயற்சிக்கின்றது. ஆனால் இன்றுவரை அது இயலாத ஒன்றாகவே உள்ளது. நவீன வெள்ளாளியம்மானது சாதிய நிலவுடமை, சைவசித்தாந்தம், பார்ப்பனர் எதிர்ப்பு (பகுதி அளவில் முழுமையாக அல்ல) ஆதிக்க சாதி நலனைப் பாதுகாக்கும் தமிழ்த் தேசியம் ஆகிய கூறுகளை கொண்டுள்ளது.

தன்னை எதிர்த்த சாதிய நிலவுடமை மன்னர்களை எல்லாம் ஒழித்து, தனக்கு அடிபணிந்த சாதிய நிலவுடமை மன்னர்களை கூட்டு சேர்த்து, இந்திய துணைக்கண்டம் முழுவதையும் தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் (கிட்டதட்ட 1600-லிருந்து 1800-களில்).

தொழிற்புரட்சிக்குப் பின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமானது. இந்திய துணைக்கண்டம் முழுவதையும் தனது சந்தைக்காகவும், சுரண்டலுக்காகவும் ஒருங்கிணைக்க முயற்சித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் கூட்டு (அ) சார்பு என்ற உறவில் வளர்ந்துவந்த இந்தியப் பிராந்திய பெருமுதலாளிகளுக்கும் தங்கள் சந்தை மற்றும் சுரண்டலுக்காக இந்தியா என்ற கட்டமைப்பு தேவைப்பட்டது.

இந்தியா என்ற கட்டமைப்பை உருவாக்கி, நிலைநிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட நவீன பார்ப்பனியத்தின் இந்துத்துத்துவா கருத்தியியலே இந்து-இந்தியா - இந்தி ஆகும்.

பல்வேறு தேசிய இனங்களையும், பழங்குடி தேசங்களையும் கொண்டது தான் இந்திய துணைக்கண்டமாகும். ஒவ்வொரு தேசமும் தனக்கேயான எல்லை, மொழி மற்றும் பண்பாட்டை கொண்டிருக்கிறது. வரலாற்றின் இயல்பான வளர்ச்சிப் போக்கில் உருவாகியிருக்க வேண்டிய தேசிய குடியரசுகளை (தமிழ் தேசியக் குடியரசு, தெலுங்கு தேசக் குடியரசு, கேரள தேசியக் குடியரசு...) உருவாகாமல் தடுத்து நிறுத்தியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.

1947 ஆகஸ்டு 15- ‘சுதந்திரத்திற்குப்’ பிறகாவது சனநாயகப் பூர்வமாக ஒவ்வொரு தேசமும் தனக்கான குடியரசை அமைத்துக் கொண்டு, ஒவ்வொரு தேச மக்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்தி விருப்பப்பூர்வமான சுதந்திர தேசங்களின் கூட்டரசை அமைத்திருக்க வேண்டும்.

ஆனால் நடந்தது என்ன? 1947-ஆகஸ்டு 15-ல் பிரிட்டிஷிடமிருந்த அரசியல் அதிகாரம், இந்தியப் பிராந்திய பெருமுதலாளிகள் கைக்கு மாறியது. இந்தியப் பிராந்திய பெருமுதலாளிகள் துவக்கத்திலிருந்தே இந்தியப் பிராந்திய சந்தை, சுரண்டலை அடித்தளமாகக் கொண்டு வளர்ந்தவர்கள் ஆதலால் அவர்கள் இந்திய பிராந்திய சந்தையை கட்டி காப்பதற்காக தேசங்களின் குடியரசு அமைவதை சர்வாதிகாரமாக புறக்கணித்து மொழிவழி தேசிய இனங்களின், பழங்குடி தேசங்களின் சிறைக்கூடமாக இந்திய அரசைக் கட்டியமைத்தனர்.

இந்தியப் பிராந்திய பெருமுதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் பரந்த இந்திய சந்தை தேவையாயிருப்பதால், அத்தேவையைப் பூர்த்தி செய்ய கருத்தியல் ரீதியாக இந்திய கட்டமைப்பை நியாயப்படுத்த நவீன பார்ப்பனியத்தால் முன் வைக்கப்பட்டதுதான் இந்து - இந்தியா - இந்தி ஆகும். இந்தியா ஒரே தேசம், இந்தியாவின் மொழி இந்தி, இந்தியாவின் பண்பாடு இந்துப் பண்பாடு என்ற கருத்தியலை கட்டியமைத்து, இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பல்வேறு தேசங்களின் அடையாளமாகவுள்ள தேச எல்லை, தேசிய மொழி, தேசியப் பண்பாட்டை கருத்தியல் தளத்தில் இல்லாமல் செய்வதை நோக்கமாகக் கொண்டதே நவீன பார்ப்பனியமாகும்.

நவீன பார்ப்பனியத்தின் இந்துத்துவா வடிவமே பாரதிய ஜனதா கட்சியாகும். பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஒரே நாடு - ஒரே மக்கள் - ஒரே தேசம் என்ற முழக்கத்தை முன்வைக்கிறது .

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள 370-வது சட்டப்பிரிவு உரிமையை வாதத்திற்கு உள்ளாக்க வேண்டுமென்கிறது. இந்திய கட்டமைப்பை கட்டிக்காக்க பாரதிய ஜனதா கட்சியானது இந்துப் பண்பாடு என்ற கருத்தியலை பாசிசத் தன்மையில் பரப்பி வருகிறது.

மேற்கூறிய அடிப்படை உண்மைகளிலிருந்துதான் பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவா கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்துத்துவா பயங்கரவாதம் முஸ்லீம் மக்களுக்கு மட்டும் எதிரானதல்ல; ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் - ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரானதே

பார்ப்பனியமானது இந்துத்துவாவைக் கட்டியமைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பார்ப்பனியமானது வரலாற்று ரீதியாக உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஆளும் வர்க்கங்களின் நலனை கட்டி காப்பதற்காக முதலில் வர்ணாசிரம கருத்தியலை கட்டியமைத்து வர்ணத்தை பரம்பரையாக்கியது. பிறகு சாதியம் - வர்ணாசிரம கருத்தியலைக் கட்டியமைத்து சாதிய நிலவுடமை சமூகத்தை உருவாக்கியது. இன்றைய நவீன பார்ப்பனியமானது இந்து - இந்தியா - இந்தி என்ற கருத்தியலை கட்டமைத்துள்ளது.

நவீன பார்ப்பனியத்தின் இந்து என்ற கூறானது: நாற்றமெடுத்த வர்ணாசிரம- சாதிய சமூக கட்டமைப்பை, மூத்தோன் வழி ஆணாதிக்கத்தை (பெண்ணடிமைத்தனத்தை), பகுத்தறிவற்ற மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சிந்தனா முறையையும் கட்டிக் காக்கின்றது.

நவீன பார்ப்பனியத்தின் இந்தியா என்ற கூறானது: இந்தியப் பெருமுதலாளிகள், ஏகாதிபத்திய முதலாலிகளின் இந்திய பிராந்திய அளவிலான சந்தை மற்றும் சுரண்டலுக்காக மொழி வழி தேசிய இனங்களை, பழங்குடி தேசங்களை இந்திய சிறையில் அடிமைப்படுத்தி சர்வாதிகாரமாக போலியான இந்திய பெருந் தேசியத்தை உருவாக்கி (கட்டமைப்பை) கட்டிக்காக்கின்றது.

நவீன பார்ப்பனியத்தின் இந்தி என்ற கூறானது: இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின், பழங்குடி தேசங்களின் மொழியை படிப்படியாக ஒழித்து இந்தி மொழியை இந்தியப் பெரும் தேசத்தின் மொழியாக சர்வதிகாரமாக கட்டியமைக்க முயற்சிக்கின்றது.

மொத்ததில் (இந்துத்துவாவின்) நவீன பார்ப்பனியத்தின் இந்து - இந்தியா- இந்தி என்ற கூறுகளைக் கொண்ட கருத்தியல் கட்டமைப்பானது,

* சாதிய சமுகத்தைப் பாதுகாத்து ஒடுக்கப்பட்ட சாதியாக உள்ள தலித்துகளுக்கு எதிரானதாக உள்ளது.

* மூத்தோன் வழி ஆணாதிக்கத்தைப் பாதுகாத்து பெண்களை இரண்டாம்தர குடிமக்களாக்கி பெண்களுக்கு எதிராக உள்ளது.

* முதலாளிகளின் சுரண்டலைப் பாதுகாத்து, உலகமயமாக்கலை தீவிரமாக செயல்படுத்துவதன் மூலமும், சாதியப் பிற்போக்கு சமூக கட்டமைப்பைப் பாதுகாத்தல் மூலமும், தொழிலாளர்களுக்கு, உழவர்களுக்கு, பழங்குடிகளுக்கு, மீனவர்களுக்கு எதிராக உள்ளது.

* பகுத்தறிவற்ற மூட நம்பிக்கையைப் பாதுகாத்து சமூக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதோடு, பகுத்தறிவு சிந்தான முறைக்கு எதிராக உள்ளது.

* இந்தியா என்ற கட்டமைப்பைப் பாதுகாத்து மொழிவழி தேசிய இனங்களுக்கும், பழங்குடி தேசங்களுக்கும் எதிராக உள்ளது.

* இந்தியை இந்தியப் பெரும் தேசத்தின் மொழியாக கட்டியமைப்பதின் மூலம் தேசிய இனங்களின், பழங்குடிகளின் மொழி வளர்ச்சிக்கு எதிராக உள்ளது.

* இந்து மதவெறி ஊட்டி உழைக்கும் மக்களை இந்துக்கள் - முஸ்லீம்கள் என்று மோத விட்டும். சாதி வெறியை ஊட்டி உழைக்கும் மக்களை சாதிரீதியாகப் பிரித்து மோதவிட்டும் உழைக்கும் மக்களுக்கு எதிராக உள்ளது.

மேற்கூறிய அடிப்படையில் இந்துத்துவா பயங்கரவாதமானது முஸ்லீம் மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல மாறாக அது தொழிலாளர்கள், உழவர்கள், நடுத்தர மக்கள், தேசிய முதலாளிகள், பெண்கள், தலித்துகள், மீனவர்கள், பழங்குடிகள், கிறிஸ்துவர்கள் என அனைத்து மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மொழி வழி தேசங்களுக்கும், பழங்குடி தேசங்களுக்கும் எதிரானது மட்டுமல்ல அபாயகரமானதுமாகும் என்ற அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதே வேளை இந்துத்துவாவானது இந்திய பிராந்திய பெருமுதலாளிகளுக்கும் இவர்களின் கூட்டாளிகளான ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும், மூலதன - சாதி நிலக்கிழார்களுக்கும், ஆதிக்க சாதிவெறி சக்திகளுக்கும், அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் சேவை செய்யக்கூடியது. இவர்களின் சுரண்டலைப் பாதுகாக்கும் கருத்தியலை இந்துத்துவாவானது மேலும் மேலும் மக்களிடம் வேரூன்றச் செய்கிறது.

இத்தகைய அபாயத்தை உணர்ந்து உழைக்கும் மக்கள் அனைவரும் இந்துத்துவாவின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், மோடியின் மோடி வித்தைகளுக்கு பலியாகாமல் விழிப்புணர்வைப் பெறுவதோடு இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக ஓரணியில் திரளவேண்டும்.

தமிழகத்தில் சாதிய சமூகக் கட்டமைப்பை கட்டியமைத்த வெள்ளாளிய கருத்தியலின் நவீன வடிவமான நவீன வெள்ளாளியத்தின் கருத்தியலானது சாதி நிலவுடமை, சைவ சித்தாந்தம், பார்ப்பனர் எதிர்ப்பு (பகுதியளவில் முழுவதுமாக அல்ல) ஆதிக்கச் சாதி நலனைப் பாதுகாக்கும் தமிழ்த் தேசியமாகும்.

நவீன வெள்ளாளிய கருத்தியலே பெரும்பான்மையான தமிழ்த் தேசிய இயக்கங்களிடம் உள்ளது. திராவிடக் கட்சிகளும் அவ்வப்போது நவீன வெள்ளாளிய கருத்தை வெளிப்படுத்துகின்றன. பா.ம.க.வானது ஒரு பக்கம் சாதிய சமூகத்தின் மிகப் பிற்போக்கான சாதியத்தை கட்டிக் காக்கும் நோக்குடன் (தலித் மீதான சாதி ஒழுக்குமுறையை நிலைநிறுத்தும் மூர்க்கத்தனத்துடன்) ஆதிக்க சாதி அமைப்புகளை ஒருங்கிணைத்துக் கொண்டு மறுபக்கம் ஈழ ஆதரவு, தமிழ்த் தேசியம் என்று பேசி ஆதிக்க சாதி நலனை பாதுகாக்கும் தமிழ்த் தேசியக் கருத்தை முன்வைக்கிறது.

நடிகை குஷ்பு, (குஷ்பு கருத்தில் நமக்கு வேறுபட்ட கருத்து இருக்கின்றது) சிக்கலை ஒட்டி முன்னுக்கு வந்த 'கற்பு' குறித்த கருத்தியலில் விடுதலை சிறுத்தைக் கட்சி உட்பட வெள்ளாளியக் கருத்தை உயர்த்திப் பிடிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு கற்பை உயர்த்திப் பிடித்து மூத்தோன் ஆணாதிக்க கருத்தை (பெண்ணடிமையை) தக்கவைக்க பாசிசத்தன்மையில் (சனநாயகப் பூர்வமாக கருத்தை எதிர்கொள்ளாமல்) வீதியில் இறங்கின. கண்ணகி சிலை சிக்கலிலும் கற்பு, மூத்தோன் ஆணாதிக்க கருத்தியலை இக்கும்பல் வெளிப்படுத்தியது. தருமபுரி நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர், தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறித் தாக்குதலிலும் இவர்களின் சாதிய சமூகத்தை கட்டிகாக்கும் பாசிசத் தன்மை வெளிப்பட்டது.

எனவே தமிழக உழைக்கும் மக்கள் அனைவரும் இந்துத்துவா பயங்கரவாதத்திற்கு எதிராக அணிதிரள்வதோடு, நவீன பார்ப்பனியத்தில் இன்னொரு முகமாக தமிழகத்தில் இருக்கும் நவீன வெள்ளாளிய பயங்கரவாதத்திற்கு பலியாகாமல் நவீன வெள்ளாளியத்தை வீழ்த்துவதற்கும் ஒரணியில் அணிதிரள மக்கள் சனநாயக குடியரசு கட்சி அறைகூவி அழைக்கிறது.

- பழனி, பொதுச்செயலாளர், மக்கள் சனநாயக குடியரசு கட்சி (9176264717, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It