பெண்ணியம் தொடர்பான சித்தாந்தங்கள் பேசும் இக்காலச்சூழலில் உருப்பெறும் தமிழிலக்கிய வரலாற்றில் பெண்கவிஞர்கள் இன்னும் சரியாகப் பதிவாகாத நிலையில், எந்தச் சித்தாந்தங்களும் தோன்றாத அக்காலகட்டங்களில்  உருப்பெற்ற தமிழ் இலக்கியங்களிலுள்ள பெண்பாற்புலவர்கள் நிலை கண்டிப்பாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட ஒன்றாகத்தான் இருந்திருக்கும் என்பது கண்கூடு. தமிழிலக்கியங்களில் சங்க இலக்கியத்தில் மட்டும்தான் சில பெண்கவிஞர்கள் உள்ளனர். இந்நிலையில் சங்ககால அறிவுபாரம்பரியம் பெண்ணிற்கும் முன்னுரிமை வழங்கியுள்ளது என்றும் சங்ககால மகளிர்நிலை அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்கியுள்ளது என்றும் தமிழ் இலக்கிய வரலாறுகள் பதிவுசெய்துள்ளன. சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருப்பதால் பிற்கால இலக்கியங்கள் எவற்றிலும் இந்தளவிற்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று கூறி, சங்க இலக்கிய மேன்மைகளில் இதுவும் ஒன்றாகப் பறைசாற்றுவது நகைப்புக்குரியது. இனக்குழு சமூகத்தின் தாய்வழிச்சமூக மரபு மேலோங்கிய காலக்கட்டத்தில் ஏறத்தாழ 30 பெண்பாற்புலவர்கள் புலமை பாரம்பரியத்தில் இயங்கினர் என்பதை மகளிர்நிலையில் மேன்மை என்று அறைக்கூவல் விடுவதை எவ்வாறு புரிந்துகொள்வது. சங்க இலக்கியத்தில் தாய்வழிச்சமூகத்தின் எச்சங்கள்தான் மிஞ்சியுள்ளன. இந்தப் பின்புலத்தில் நின்று சங்க இலக்கியத்தை வாசிக்கும் போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெண்கவிஞர்கள் இருந்தபோதிலும் மகளிர்நிலை பல்வேறு கூறுகளில் கேள்விக்குரிய விடயங்களைத் தனக்குள் கொண்டுள்ளன என்பது விளங்கும்.

சங்ககால மகளிர்நிலை என்பது பெண்பாற்புலவர்கள், பெண்மாந்தர்கள் என்ற இரு தன்மைகளில் வெளிப்படுகின்றது. சங்க இலக்கியத்திலுள்ள பெண்பாற்புலவர்கள் எண்ணிக்கையில் உள்ள முரண்கள், பெண்பாற்புலவர்களாக அடையாளப்படுத்தப்படுவதில் உள்ள சிக்கல்கள் முதலியன இந்த நூற்றாண்டிலும் நீடித்துக் கொண்டுதான் வருகின்றன. சங்ககாலப் பெண்பாற்புலவர்கள் குறித்த எண்ணிக்கையில் பல கருத்து  வேறுபாடுகள் நிலவுகின்றன என்பதை ஆராய்ந்த ந. முருகேசப் பாண்டியன்,

பெண்கவிஞர்களின் எண்ணிக்கைக் குறித்துத் தமிழறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெண்கவிஞர்களின் எண்ணிக்கையினை உ.வே.சா 38 எனவும், எஸ்.வையாபுரிப்பிள்ளை 30 எனவும், ஔவைதுரைச்சாமிப்பிள்ளை 34 எனவும், புலவர் க.கோவிந்தன் 27 எனவும், அவ்வை நடராசன் 41 எனவும் ந.சஞ்சீவி 25 எனவும் தாயம்மாள் அறவாணன் 45 எனவும் குறிப்பிடுகின்றனர் (2008:8).

என்று கூறுகிறார். இதில் ந.சஞ்சீவி 25 என்று இவர் கூறியுள்ள கருத்து 30 என்று சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணையில் பதிவாகியுள்ளது. சிக்கலுக்குரிய விடயங்களை எடுத்துரைக்கும் போது அதை மேலும் சிக்கலுக்குரியதாக மாற்றும் அலட்சியம் பெண் என்பதனால் வெளிப்படுகிறதா? என்பது விளங்கவில்லை.

செவ்வியல் தன்மை கொண்ட சங்கஇலக்கியத்தில் பெண்பாற்புலவர்களின் பாடல்களில் இடம்பெறும் பெண்மாந்தர்களின் தன்மை என்பது ஆண்பாற்புலவர்களின் பாடல்களில் இடம்பெறும் தன்மையிலிருந்து வேறுபட்டு விளங்குகிறது. குறிப்பாகப் பெண்ணைக் குறித்த பதிவுகளில் உணர்வுநிலையிலும் சமூகமதிப்பு நிலையிலும் பெண்ணுக்கான தனித்த அடையாளத்தைக் கோரும் விதமாகப் பெண்பாற்புலவர் பாடல்கள் பெரும்பாலும் உள்ளன. சங்க இலக்கியத்தை இந்தப் பின்புலத்திலிருந்து ஆராய்வோமேயானால் சங்ககாலப் பெண்மையச் சமூகத்தை ஒருவாறு அடையாளப்படுத்த முடியும். சங்ககாலச் சமூகத்தில் மகளிரின் நிலை பலகூறுகளில் சிறந்து விளங்கினாலும் சமூக அமைப்பில் மேட்டுக்குடிப் பெண்கள், சிறுகுடிப் பெண்கள் என்ற நிலையில் பிரித்துப் பார்க்க சங்க இலக்கியம் களம் அமைத்துத்தருகிறது. சங்க இலக்கியங்களில் சிறுகுடிப் பெண்களாகவும் கலைஞர்களாகவும் அடையாளப்படுத்தப்படும் விறலியர் அகம், புறம் என்னும் இருநிலைகளிலும் இடம்பெற்றுள்ளனர். இவற்றை ஆராய்ந்து சங்ககாலச் சமூகத்தில் விறலியருக்கான இடம் குறித்து எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது. மேலும் சங்க இலக்கிய நீட்சியாக விறலியர் பிற்கால இலக்கியங்களில் பயின்ற முறைமையையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

தமிழிலக்கியச் சமூகத்தில் பல பெண் மாந்தர்கள் இருந்த போதிலும் விறலியர் குறித்த பதிவுகள் என்பதும் அவர்களைக் குறித்த உரையாடல் என்பதும் பல்வேறு சிக்கல்களுக்குரிய ஒன்றாகவே உள்ளது. சங்ககால இனக்குழுச் சமூகத்தில் விறலியர் பெற்ற சிறப்பு, சங்ககால உடைமை சமூகத்தில் கேள்விக்குரியதாக மாறுவதும் சங்ககால விறலியரின் நீட்சியாக சிலப்பதிகாரத்தின் மாதவி அடையாளப்படுத்தப்படுவதும் (2010:154) எண்ணத்தக்கது.  மேலும் பிற்காலச் சிற்றிலக்கியங்களில் (விறலிவிடுதூது, பாதாதிகேசம், கேசாதிபாதம்) இடம்பெறும் விறலியர் பற்றிய வருணனைகள் விறலியர் கேலிக்குரியவராக மாற்றமடைய காரணமாக விளங்குகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு விறலியரின் நீட்சிப் பிற்காலச் சூழலில் அடைந்த மாறுதல்களை ஒருவாறு அடையாளப்படுத்தலாம்.

விறலியர்

உள்ள குறிப்பினைத் தம் உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படுத்தும்முறை நாடகத்தின் பாற்பட்டதாகும். இம்முறையினை ‘விறல்’ என்ற சொல்லால் குறிப்பிடுவர். விறல்பட ஆடுந்திறம் மகளிர்க்கே உரியதாகும். ‘விறல்பட ஆட வல்லவள் விறலி’ என வழங்கப் பெற்றாள் என்று பொதுவாக விறலியை வரையறைப்படுத்துவர்.  சங்க இலக்கியங்களில் விறலியர் என்று பொதுப்படையில் பதிவுகள் இருந்த போதிலும் தனிப்பட்ட பெண் ஆளுமைகள் விறலியராக நேரடி பதிவினைச் செய்துள்ளனரா என்று ஆராய்வோமேயானால் ஔவையார், ஆதிமந்தி இருவர் பாடல்களிலும் விறலியராகத் தங்களைப் பதிவு செய்துள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

  • · ஔவையார் அதியமானின் புகழ்பாடும் பாட்டொன்றில் அவர் தன்னை ஒரு விறலியாக இனம் காட்டிக் கொள்கிறார் (க.கைலாசபதி, 2006:155).
  • · ஆதிமந்தியின் பாடல் (குறுந்.30) தன்னை ஆடுமகள் என்று கூறுவதால் அவள் விறலி என்பது வெளிப்படையாகின்றது (அம்மன்கிளி முருகதாஸ், 2006:235-236).

இவ்வாறு விறலியர் பொதுநிலையில் அடையாளப்படுத்தப்பட்ட சூழலில் ஔவையாரும் ஆதிமந்தியும் விறலியர் என்ற ஆளுமையாக ஆய்வாளர்களால் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஔவையார் தன்னை விறலியராக எண்ணி மகிழும் சூழலில் ஆதிமந்தி விறலியராகத் தன்னை அடையாளப்படுத்திய சூழலை எண்ணி துயரப்படுகிறாள். இவ்விரு வேறுபட்ட மனநிலைக்குக் காரணத்தை ஆராய்வோமேயானால், ஔவையார் கலைக்குழுவில் இயல்பாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். ஆதிமந்தி அரசியாக வாழ்ந்தவள் ஆட்டனத்தியை மணந்துகொண்ட காரணத்தால் ஆடுமகளாக வேண்டிய அவலநிலையை எண்ணி வருந்துகிறாள். சமூகத்தின் உயர்குடி பெண்களாக அடையாளப்படுத்தப்படுபவர்கள் ஆடுகளத்தில் ஆடுவதை இழிவாகக் கருதினர் என்பதை இதன்மூலம் உள்வாங்க முடிகிறது.

விறலியர் வருணணை

விறலியரின் உடல் வருணனைகள் இலக்கியங்களில் இடம்பெறுவதைக் குறித்து வி.இரா.சிவராசு,

“வறுமை விறலியரின் கலை நாட்டத்தைக் குறைக்காதது போலவே உடலின் இயற்கை அழகையும் குறைக்கவில்லை என்பதனையே இவ்வுறுப்பு வருணனை உணர்த்துகின்றது” (1972:57-62).

என்று கூறுவது அபத்தமானது. பெண்களை வருணிக்கும் மரபு அக இலக்கியங்களில் உண்டெனினும் புறப்பாடலான பொருநாராற்றுப்படையில் உள்ளது போல நீண்ட வருணனை இல்லை. பொருநராற்றுப்படையை எழுதிய முடத்தாமகண்ணியார் பெண்பாற்புலவரா? ஆண்பாற்புலவரா? என்பது விளங்காத நிலையில் அவர் பொருநராற்றுப்படையில் விறலியைப் பாதாதிகேசமாக வருணித்துள்ள விதம் குறித்து ஆராய்வோமேயானால் அவர் ஒரு பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை என்று பெண்ணிய ஆய்வின் மூலம் நிறுவலாம். அவர் ஒரு பெண்ணாக இருந்து பாதாதிகேசம் பாடியிருந்தால் ஆண் மைய சமூகம் அதனை ஏற்றுயிருக்குமா? மேலும் விறலியாற்றுப்படை என்ற பெயர்தான் தலைப்பாகியிருக்கும். இது போன்ற சில வினாக்கள் எழும் சூழலில் அவர் ஆண்பாற்புலவர் என்று நிறுவ வாய்ப்பிருக்கிறது.

ஆண் - பெண்மொழி: விறலியர்

சங்ககாலப் பெண்களைப் பெரும்பான்மை நாம் ஆண்மொழி வாயிலாகத் தான் உணரமுடிகின்றது. சங்ககாலப் பெண்களைக் கட்டமைத்தல் என்பது ஆண் - பெண் மொழிகள் கொண்டு விளக்க முடியும். எடுத்துக்காட்டாகப் பதிற்றுப்பத்திலுள்ள காக்கைபாடினியார், குமட்டூர் கண்ணனார் பாடல்களின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். விறலியை அழைக்க வேண்டும் அவளைப் பரிசுபெற ஆற்றுப்படுத்த வேண்டும் அவ்வகையில் காக்கைபாடினியார் ‘ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்’ (பதிற்.ப.58:1) என்றழைக்கிறார். குமட்டூர் கண்ணனார் பதிற்றுப்பத்தில் விறலியரை அழைக்கும் வகை பின்வருமாறு:

ஏந்துகோட் அல்குல் முகிழ்நகை மடவரல்

கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே         (பதிற்.ப.18: 4-5)

விறலியின் இயல்பு ஆடுதல். எனவே அவளை ஆடுக விறலியர் என்று இயல்பாய் எவ்வித அதிகார தோரணையும் இல்லாமல் காக்கைபாடினியார் அழைக்கிறார்.  குமட்டூர் கண்ணனாரின் பாடல் ஆடும் அவளைத் தன்வீட்டு சமையல் காரியாய் சித்தரிக்கிறது. இவ்வாறு விறலியைக் கட்டமைக்கும் போது வேறுபடும் இடங்களை ஆண் - பெண் மொழிகளினால் அவதானிக்கமுடிகிறது.

புறப்பாடல்களில் விறலியர்

சங்க இலக்கியமான பாட்டும்தொகையில் விறலியர் புறப்பாடல்களில் எவ்விதமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பதை புறநானூறு, பதிற்றுப்பத்து, என்ற இரண்டு தொகை நூல்களின் வாயிலாகவும், பத்துப்பாட்டில் இடம்பெறும் புறப்பாடல்கள் வாயிலாகவும் அறிந்துகொள்ளலாம்.

  • · புறத்திணை மரபில் பாடாண் திணையின் துறைகளுள் ஒன்று விறலியாற்றுப்படை. புறநானூற்றில் 64,103,105,133 ஆகிய நான்கு பாடல்களும் பதிற்றுப்பத்தில் 40,49,57,60,78,87 ஆகிய ஆறு பாடல்களும் விறலியாற்றுப்படை துறை சார்ந்த பாடல்கள்.
  • · விறலியாற்றுப்படைத் துறையில் புறநானூற்றில் இடம்பெறும் பாடல்களுக்கும் பதிற்றுப்பத்தில் இடம்பெறும் பாடல்களுக்கும் நுண்ணிய வேறுபாடு ஒன்று உண்டு. புறநானூற்றில் விறலியரின் சுற்றம் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை; ஆனால் பதிற்றுப்பத்தில் விறலியருடன் பாணன் சென்றதாகக் (பதிற்.ப.40,57,78) குறிப்புகள் உள்ளன.
  • · விறலியை ஆற்றுப்படுத்தும்போது இருநிலைகளில் புலவர்கள் ஆற்றுப்படுத்தியுள்ளனர். நெடும்பல்லியத்தனார் பாடல் (புறம்.64) விறலியிடம் 'நாம் சென்று வருவோமா' என்று தன்னையும் உட்படுத்திக்கொள்ளும் முறையில் அமைந்துள்ளது. இதுபோலவே பரணருடைய பாடலும் (பதிற்.ப.49) விறலியிடம் 'நாம் கண்டு வருவோம்' என முடிவு பெறுகிறது இது ஒரு நிலை. பிறிதொரு நிலையில் புறநானூற்றின் கபிலர், ஔவையார், முடமோசியார் இவர்களுடைய பாடல்களில் ‘நீ செல்வாயாக’ என்று விறலி ஆற்றுப்படுத்தப்படுகிறாள்.
  • · எட்டுத்தொகையில் விறலியாற்றுப்படை துறை சாராத புறப்பாடல்களில் தான் விறலியரின் அழகும் கவர்ச்சியும் அழுத்திச் சொல்லப்படுகிறது (புறம் 133,140,316. பதிற்.ப.49,51,54). ஆனால் பத்துப்பாட்டிலுள்ள ஆற்றப்படை நூல்களில் விறலியரின் அழகு வருணனைகள் முக்கிய இடம்பெறுகின்றன.
  • · விறலியர் ஆடல் கலையில் மட்டுமின்றி பாடும் திறத்திலும் சிறந்து விளங்கியதை புறநானூறு (152,242), பதிற்றுப்பத்து (14,17,43) ஆகிய புறப்பாடல்களின் வாயிலாகவும் பத்துப்பாட்டின் மலைபடுகடாம் (532-544) வாயிலாகவும் அறியமுடிகிறது.

இவ்வாறு புறப்பாடல்களில் விறலியர் குறித்த பதிவுகள் என்பவை ஆடல், ஆழகியல், என்ற நிலையிலேயே நின்றுவிடுகிறது. அகப்பாடல்களைவிட புறப்பாடல்களில் தான் விறலியரின் வருணனைகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. பத்துப்பாட்டிலுள்ள ஆற்றுப்படை நூல்கள் இதற்குச் சான்று. ஆனால் ஆற்றுப்படை நூல்கள் என்பவை கூத்தர், பொருநர், பாணர் முதலிய கலைஞர்களின் வறுமையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன என்று பொதுவாகக் கூறுவர். ஆனால் விறலி, பாடினி குறித்த வருணனைகள் இன்பம் துய்க்கும் காட்சிப் பொருளாக்கப்பட்டுள்ளன.

கா.சிவத்தம்பி விறலியர் பரத்தையராக மாறினர் என்பதற்கான பதிவுகள் சங்க இலக்கியத்தில் உள்ளது என்பதை எட்டுத்தொகையில் அமைந்துள்ள புறப்பாடல்களைக் கொண்டு நிறுவுகிறார்.

புறநானூறு: 32 ஒரு முக்கியமான மரபினைப் பற்றிக் கூறுகிறது. அதில் அவளை அனுபவிப்பதற்கு அடையாளச் சின்னமாக ஒரு பூவை வாங்குகிறான். இது விறலி பரத்தையாக மாறும் கட்டத்தின் முதற்படியாகலாம். பதிற்றுப்பத்து: 44, இன்னொரு உதாரணம் தருகிறது. அதில் உனது உடலை நோயோ, சாவோ அணுகாது விறலியே அணைந்திருப்பாள் என்று கூறப்படும். மன்னர்கள் விறலியுடன் திளைத்திருந்தமை இதிலிருந்து தெரியவருகிறது (2005: 227-228).

என்று எடுத்துரைக்கிறார். இவ்வாறு மன்னனின் ஆசைநாயகியாக விறலியர் மாறியதாக சங்க இலக்கியப் பாடல்களின் வழிநின்று விளக்குகிறார்.  பத்துப்பாட்டுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை (30,31) விறலியர் கற்புநிலை தவறாது ஆடியும் பாடியும் பரிசில் பெற்றனர் என்பதைப் பதிவுசெய்கிறது. விறலியர் குறித்த தவறான புரிதல்கள் அன்றைய சமூகத்தில் நிலவியிருந்ததற்கு விடைகூறுவதாகச் சிறுபாணாற்றுப்படை அமைந்துள்ளது.

விறலியாற்றுப்படை இல்லாமை

தொல்காப்பியப் புறத்திணையியல் ஆற்றுப்படை இலக்கியத்திற்கு இலக்கணம் கூறும் போது விறலியருக்கும் ஆற்றுப்படை வகுக்கிறது. பத்துப்பாட்டிலுள்ள ஆற்றுப்படை இலக்கியங்களில் விறலியாற்றுப்படை இடம்பெறவில்லை. திருமுருகாற்றுப்படை பன்னிரு திருமுறைகளில் ஒன்றான பதினோராம் திருமுறையிலும் பத்துப்பாட்டிலும் ஒருசேர இடம்பெற்றுள்ளது. ஒரே நூல் இரண்டு தொகுப்பிலும் இடம்பெற காரணம் என்ன? விறலியாற்றுப்படை என்ற ஒன்று இருந்து தொகுப்பில் இடம்பெறாமல் போனதா? என்பதும் விளங்காமல் உள்ளது. இது குறித்து அறிஞர்களின் கருத்து முரண்களும் கவனிக்கத்தக்கது.

பத்துப்பாட்டில் பொருநன் முதலானோருடன் விறலி சென்றமை சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளதால் தனியாக விறலியாற்றுப்படை பாடப்பெறவில்லை என்ற லெப. கரு. இராமநாதன் கருத்தை, கா.சுப்பிரமணியன் மறுத்துரைக்கும் போக்கு குறிப்பிடத்தக்கது.

ஆணாதிக்கம் மேலோங்கியது. பெண்கள் ஆடவர் பாதுகாப்பில் வாழவேண்டியதேற்பட்டது. ஆகவே, பெண்கள் தம் இச்சைபோல எங்கும் செல்ல முடியவில்லை. தகுந்த ஆடவருடைய பாதுகாப்பிலே செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. இவ்வுண்மையை விளக்குவது போல மலைபடுகடாம் கூத்தர் தலைவனைச் சூழ விறலியர் நிற்பதனை எடுத்துக்காட்டுகிறது. அதனாலேயே பத்துப்பாட்டில் விறலியாற்றுப்படை இடம்பெறவில்லை எனலாம் (1993:100).

பொருநராற்றுப்படைக்கு வேறுபெயர் விறலியாற்றுப்படை என்று இலக்கிய வரலாறுகள் பதிவுசெய்கின்றன. பத்துப்பாட்டுள் இரண்டாம் பாட்டாக அமைந்த இப்பொருநராற்றுப்படை விறலியாற்றுப்படை எனவும் குறிப்பிடப்படும் (2002:51). இதில் விறலியின் உடலே பிரதானப்படுத்தப்பட்டு உள்ளது. இத்தன்மையில் நோக்குகையில் பிற ஆற்றுப்படை நூல்களில் இடம்பெறும் பாணர், பொருநர் முதலியவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ஆடவரின் உடல் உறுப்புகளையா வருணிக்கின்றனர்? ஆண் மையமான சமூகத்தின் உச்சமாகப் பெண் உடல் ஒடுக்கப்படுதல் இன்பம் துய்க்கும் போக பொருளாகக் காட்சிப்படுத்துதலைக் இதன்மூலம் உணரமுடிகிறது.

விறலி, பாடினி, பாண்மகள் எனும்சொற்கள் ஒரே பொருளை உணர்த்துவன என்ற கருத்தில்தான் விறலியாற்றுப்படைத் துறை வகுக்கப்பட்டுள்ளது. இதனைப் பதிற்றுப்பத்தின் இரண்டு பாடல்களில் பயின்று வரும் பாண்மகள், பாடினி சொற்கள் (செல்லா மோதில் பாண்மகள் 60, சென்மோ பாடினி 87,) விறலியாற்றுப்படை துறைக்கு உரியதாகக் கட்டமைத்துள்ளதன் வாயிலாக அறிந்துகொள்ளலாம். கி.பி.எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய சேந்தன் திவாகர நிகண்டில் பாடினி, விறலி முதலானவர்களைப் பாண்மகள் என்றே குறிப்பிடப்படுவதும் நோக்கற்பாலது.

பாடினி விறலி பாட்டி மதங்கி

பாடல் மகடூஉ பாண்மக ளாகும் (திவா.மக்கட்.தொகுதி.5)

அகப்பாடல்களில் விறலியர்

விறலி, விறலியர் என்னும் சொற்கள் அகப்பாடல்களில் நான்கு இடங்களில் (நற்.328, அகம்.82, 352, பரி.17,) பயின்றுவருகின்றன. மேலும் நற்றிணையில் இரண்டு பாடல்களின் துறைகள் (நற்.216, 310) விறலியைக் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில் பாடல்களில் பயின்ற முறைமையில் விறலியர் உள்ளுறை பொருளிலும் உவமை நிலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். துறை குறிப்புகள்தான் விறலியரை வாயில்களாகச் செயல்பட்டதிறம் குறித்து நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும் சில பாடல்களில் நேரடி சொல்லாடற்களின் வழி விறலியர் சுட்டப்படாமல் விழவுமகளிர் (நற்.170), மடங்கெழு பெண்டே (நற்.310) முதலிய சொற்பிரயோகங்களின் வாயிலாக விறலியரை அடையாளங்கண்டுள்ளனர்.

அகப்பாடல்களில் விறலியர் பயின்றமுறைமையைக் குறித்து கா.சிவத்தம்பி, அகத்திணை மரபில் வாயிலாக விறலியர் இருந்ததாகத் தொல்காப்பியம் கூறுகிறது (தொல்.கற்.52). ஆனால் சங்க காலத்தில் விறலியரைக் காணின் தம் கொழுநரைக் கவர்ந்து செல்வரோ எனக் குலமகளிர் அஞ்சும் நிலைக்குத் தாழ்ந்தனர் (நற்.170). நகர சமூகத்தில் தலைவர்களின் வாழ்க்கையில் தலைவனின் வாயில்களுள் ஒன்றாக, தலைவனின் அந்தரங்க வாழ்க்கையில் முக்கிய இடம்பெறுவாள் (அகம். 106) என்றும் தலைவனின் மனைவியர் பலருக்கும், விறலி தலைவனைத் தன் கைக்குள் வைத்திருப்பவளாக ஆகிறாள் நற்.170 (2005:227). மேலும் பி.டி.சீனிவாச ஐயங்கார்,  பரத்தை பால் தலைவனை உய்க்க வல்ல ஒரு விறலியிடமிருந்து கொழுநனைக் காப்போம் என ஒரு தோழி நற்.170-ல் கூறுகிறாள் (2007:185). இவ்விருவர் எடுத்துரைக்கும் நற்றிணைப் பாடலில் ஒரு பெண் என்ற நிலையில் தான் புரிந்துகொள்ள இடமுள்ளது தவிர விறலியாகக் கருத வாய்ப்பில்லை. தலைவன், தலைவிக்கிடையே வாயில்களாகச் செயல்பட்டதால் அவர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டிருக்ககூடும்.

அகப் பாடல்களில் பதிவாகியுள்ள விறலியர் நிலைக்குறித்து கா.சிவத்தம்பி இவர்கள் வேந்தர் காலங்களில், தலைவனுக்கும் தலைவிக்குமிடையே மற்றும் தலைவனுக்கும் பரத்தையருக்குமிடையே தொடர்பைப் பாதுகாக்கும் இழிதொழிலுக்கு ஆளாகினர். விறலியர் பரத்தையர்களாக மாறினர் (2003: 116). சங்ககால அகப்பாடல்களில் விறலியருக்கான இடம் என்பது உவமை நிலையிலும் வாயில் கேட்போர் என்ற நிலையிலும் பதிவாகியுள்ளது. மேலும் விறலியர் பரத்தையராக மாறிய சூழலையும் அகப்பாடல்கள் எடுத்துரைப்பதாகக் கருதுவது முற்றிலும் பொருந்தாது. இனக்குழுச் சமூகத்தில் விறலியர், பாணர்களுக்கு இருந்த சமூகமதிப்பு என்பது நிலவுடைமையாகிய வேந்தர் ஆட்சியில் புலவர் பாரம்பரியத்தில் உருவாகிய பாடல்களில் தான் கீழானநிலையில் வைத்து சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று எண்ணத்தோன்றுகிறது.

உரையாசிரியர்களின் பார்வையில் விறலியர்

பதிற்றுப்பத்தின் பெயரறியாத பழைய உரையாசிரியர் ‘சில்வளை விறலி’ என்பதற்கு உரை எழுதும்போது அது அவளது வயதைக் குறித்தது என்பர். அவரின் கூற்றுப்படி சில வளையல்கள் என்பது அவளது இளம்பருவத்தைக் குறித்தது. விறலி என்பதற்குப் பதினாறு வயது உடையவள் என்று தமிழ் பேரகராதியில் பிங்கல நிகண்டு கூறுவதாக அமைவதும் இணைத்தெண்ணத்தக்கது. இதனால் விறலியரின் வயதை அறிந்துகொள்ள முடிகிறது.

புறப்பாடலில் (புறம்.111) கிணைமகள் என்ற சொல்லிற்கு பழைய உரையாசிரியர் விறலியர் என்று பொருள் கூறியுள்ளார். கா.சிவத்தம்பி பொருநர் குழுவில் விறலி இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்று கூறி கிணைமகள் என்பது விறலியைக் குறிப்பதாக எடுத்துக்கொள்வதிலுள்ள சிக்கலைக் கூறிகிறார் (2005:255). ஆனால் பத்துப்பாட்டில் பொருநராற்றுப்படையில் தான் விறலியரின் வருணனை விரிவாக இடம்பெற்றுள்ளது. சிறுபாணாற்றுப்படை (135-140) அடிகளில் கிணைமகளின் வறுமை நிலையினைப் பதிவுசெய்துள்ளது. எனவே கிணைமகளை பழைய உரையாசிரியர் விறலியர் என்று கொள்வது பொருத்தமானதே.  மேலும் கிணைமகள் பற்றிப் புறநானூறு 399ஆம் பாடல் ஒன்றில் அவர்களின் இல்லற வாழ்வைக் குறித்தும் மீன்பிடிக்கும் தொழிலைச் செய்தனர் என்ற குறிப்பும் உள்ளது. இவ்வாறு விறலியர் குறித்து பிற பெயர்களில் உரையாசிரியர் வாயிலாக அறிய நேரும்போது புதிய தகவல்களை பெறமுடிகிறது.

தொல்காப்பியத்திற்கு உரையெழுதும் நச்சினார்க்கினியர் விறலி பற்றி விவரிக்கையில் ''கூத்தர் சாதி வரையறை இலராதலின் முன் கூறப்பட்டாள். பாணரும், பொருநரும் தத்தம் சாதியின் திரியாது வருதலின் சேர வைக்கப்பட்டனர். விறலிக்குச் சாதி வரையறை இன்மையின் அவள் பின் வைக்கப்பட்டாள். விறலிக்கு அன்னதொரு தொழில் வேறுபாடின்றித் தொழிலொன்றாதலின் விறலி என ஒருமையான் குறிக்கப்பட்டாள்'' (தொல்.பொரு.91நச்) என்று கூறுவதன் வாயிலாக ஆற்றுப்படை இலக்கணத்தில் தொல்காப்பியர் வைத்தமுறைமைக்கான காரணத்தை நச்சினார்க்கினியர் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் விறலியர் வேறு எந்தத் தொழிலையும் மேற்கொள்ளாமல் கலைஞர்களாக மட்டும் விளங்கியதாகவும் கூறுகிறார். இளம்பூரணர் பரத்தையர் குறித்து எழுதும் குறிப்பில் ஆடல் பாடல்களில் வல்லவர்களைப் பரத்தையராக எண்ணும் சூழல் நிலவியிருந்தததை அறியமுடிகிறது (தொல்.பொரு.கற்149.இளம்). அக்காலச் சூழலில் ஆடல்மகளிரிக்கான சமூக அங்கீகாரம் என்னவாக இருந்தது என்பதை ஊகிக்க முடிகிறது.

இவ்வாறு இலக்கிய இலக்கண உரையாசிரியர்களின் வாயிலாக விறலியர் குறித்த சில பதிவுகளை ஆராய்ந்தால் உரையெழுந்த காலநிலையில் விறலியருக்கான சமூக மதிப்பு எவ்வாறு இருந்தது என்பதை அறியமுடிகிறது.

பிற்கால இலக்கண நூல்களில் விறலியர்

தொல்காப்பியம் அகத்திணை மரபில் விறலியரை வாயிலாகவும் (தொல்.பொரு.491) புறத்திணை மரபில் பாடாண் திணையின் துறைகளுள் ஒன்றாக விறலியாற்றுப்படையை அமைத்து விறலியர் குறித்த பதிவை இலக்கண நிலையில் செய்துள்ளது. புறப்பொருள் வெண்பாமாலையில் விறலியாற்றுப்படைத்துறையோடு (பு.வெ.மா.219) இருபாற் பெருந்திணையில் மூன்று துறைகளாக (பு.வெ.மா. 337,338,340)  விறலியர் குறித்த பதிவுகள் இடம்பெறுகின்றன.

பிற்காலப் பாட்டியல் நூல்களில் விறலியரை விறலியாற்றுப்படை என்ற நிலையிலும், விறலியரின் வருணனைகளை அடிப்படையாகக் கொண்டெழுத்த புதிய இலக்கிய வகைகள் என்ற நிலையிலும் அடையாளங்காணலாம். தொல்காப்பியத்தின் நீட்சியாக விறலியாற்றுப்படை இலக்கணத்தைப் பாட்டியல் நூல்களும் பிற்காலப் புறப்பொருள் இலக்கணம் கூறும் நூல்களும் விடுத்தும் (வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், தொன்னூல்விளக்கம், செய்யுளிலக்கணம்) இணைத்தும் (பன்னிருப் பாட்டியல், பிரபந்த மரபியல், பிரபந்த தீபம், இலக்கண விளக்கம், முத்துவீரியம், பிரபந்த தீபிகை) பதிவுசெய்துள்ளன. இவ்வாறு இலக்கண நிலையில் விறலியாற்றுப்படையைத்துறையைத்  தொல்காப்பிய நெறியில் நின்று இலக்கணம் கூறுவதும், விறலியாற்றுப்படை இலக்கியமாகப் பயிலபடாத நிலையில் அதற்கு இலக்கணம் கூறுவது 'இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்பல்' என்ற விதிக்கு முரணாக அமையும் என்பதைக் கருத்தில் கொண்டு அவற்றை விடுத்தும் இலக்கணம் கூறியுள்ளனர். மேலும் கூத்தர், பொருநர், பாணர், விறலியர் என்ற வைப்பு முறையில் தொல்காப்பியத்தில் உள்ளது போல இறுதியாகவும் சிலவற்றில் முதலாவதாகவும் சிலவற்றில் விறலியருக்கு அடுத்த நிலையில் புலவர்கள் என்றும் மூன்று நிலைகளில் வைப்புமுறை அமைந்துள்ளன.

சங்க இலக்கியத்திலுள்ள ஆற்றுப்படை நூல்களில் இடம்பெறும் விறலியரின் வருணனைகள் பாட்டியல் நூல்களில் அங்கமாலை, பாதாதிகேசம், கேசாதிபாதம் நயனப்பத்து, பயோதரப்பத்து முதலிய இலக்கிய வகைகளாகப் உருப்பெற அடிப்படையாக அமைந்துள்ளன.

பிற்கால இலக்கண நூல்களான உவமானசங்கிரகம், இரத்தினச்சுருக்கம் ஆகியவை பெண்களின் உடல் உறுப்புகளை உவமைகளுடன் பொருத்திக்காட்டி இலக்கணம் கூறும் நூல்களாக எழுந்துள்ளன. எந்த உறுப்புகளுக்கு எதனை உவமையாகச் சுட்ட வேண்டும் என்று இலக்கண நிலையில் விதி அமைத்துள்ளன. பாதாதிகேசம், கேசாதிபாதம் முதலிய பெண்களின் உறுப்புகளை வருணிக்கும் இலக்கியங்களுக்குத் தனித்த நிலையில் இலக்கணம் கூறும் நூல்களாக இவை தோன்றியுள்ளதாகக் கருதலாம். இந்நூல்களில் குறிப்பிடப்படும் உறுப்புகளுக்கான உவமைகள் என்பவை பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் பதிவாகியுள்ள  விறலியரின் வருணனைகளோடு தொடர்புபடுத்தலாம். பொருநராற்றுப்படை  விறலியரின் இருபது உறுப்புகளைப் பாதாதிகேசமாகவும் சிறுபாணாற்றுப்படை விறலியரின் ஏழு உறுப்புகளைக் கேசாதிபாதமாகவும் வருணித்துள்ளன. இந்த வருணனைகளில் இடம்பெறும் உவமைகளே பிற்கால உவமானசங்கிரகம், இரத்தினச்சுருக்கம் ஆகிய நூல்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

இரும்பிடித் தடக்கையின் செறிந்துதிரள் குறங்கின் (பொரு.40)

இரும்பிடித்தடக்கையின்

சேர்ந்து உடன் செறிந்தத குறங்கின் (சிறு.20)

பேணுங்கதலி பிடிக்களிற்றின் கைகுறங்காம் (உவ.சங்.12)

இவ்வாறு பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகியவற்றில் இடம்பெறும் விறலியரின் தொடைகளுக்கான உவமைகள் உவமானசங்கிரகத்திலும் இடம்பெறுவதன் மூலம் அறியலாம்.

பிற்கால இலக்கியங்களில் விறலியர்

பிற்கால அகஇலக்கியமான தூது இலக்கியத்தில் விறலியர் தூது விடும் பொருண்மையில் அமைந்து தூது இலக்கியங்கள் பல தோற்றம் பெற்றுள்ளன. (தெய்வசிலையார் விறலிவிடுதூது, கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது,சேதுபதி விறலிவிடுதூது, சங்கரமூர்த்தி ஐயரவர்கள் பேரில் விறலிவிடுதூது, சிதம்பரேசர் விறலிவிடுதூது, செண்டலங்காரர் விறலிவிடுதூது, மூவரையன் விறலிவிடுதூது, சிவகாமி சேதுபதியவர்கள் பேரில் விறலிவிடுதூது). இதனைச் சங்க அக இலக்கியத்தின் நீட்சியாக அடையாளம் காணலாம். சேதுபதி விறலிவிடுதூதில் விறலியின் பாதாதிகேச வருணனை (1-27) இடம்பெற்றுள்ளது. மேலும் செண்டலங்காரர் விறலிவிடுதூது விறலி வருணனை பாதாதிகேசமாகவும் விலைமகள் வருணணை கேசாதிபாதமாகவும் அமைய வேண்டும் என்று எடுத்துரைக்கிறது. பாதாதிகேசமாக அமைந்த பொருநராற்றுப்படையின் நீட்சியை இங்கு இணைத்து நோக்கலாம்.

சங்க அகப்புறப் பாடல்களில் பயின்றுவரும் விடயங்களில் சில பிற்கால சிற்றிலக்கிய மரபில் இடம்பெற்றுள்ளதை இலக்கிய வரலாறுகள் பதிவுசெய்துள்ளன. தொல்காப்பியர் கூறிய வாயில்களுள் ஒருவராக விளங்கிய விறலியர், தலைவன், தலைவியரிடையே தூது செல்வோராக விறலிவிடுதூது இலக்கியங்கள் தோற்றம்பெற்றுள்ளன. இருப்பினும் தொல்காப்பியத்தின் நீட்சி இலக்கண நிலையில் தொடர்ந்தாலும் சங்ககால இனக்குழுச் சமூகத்தின் கலைஞர்களான விறலியரை இந்த விறலிவிடுதூது இலக்கியங்களில் நாம் இனங்காண முடியவில்லை.  சங்ககால ஆற்றுப்படை நூல்களில் இடம்பெறும் விறலியர் வருணனை என்பதும் மேலும் விரிவாகி தனித்தனி இலக்கியங்களாக உருபெற்றுள்ளன. அவை அங்கமாலை, கேசாதிபாதம், பாதாதிகேசம் முதலியன. விறலியர் முதன்மைபடாத கேலிக்குரியோராகச் சித்திரிக்கப்படும் விடயங்களின் நீட்சி என்பது எந்தத் தடையுமின்றி பிற்கால இலக்கியச் சூழலுக்கேற்ப அதனை இன்னும் சிங்காரத்தோடு அமைத்து கொண்ட இலக்கியங்களாக இவை வெளிவந்துள்ளன.

தொகுப்பாக

விழாக்காலங்களில் மக்களிடமும் போர் வெற்றி காலங்களில் அரசர்களிடமும் பாடி, ஆடி பரிசில் பெற்று வந்த விறலியர் காலப்போக்கில் செய்யுள்களை இயற்றுவதில் திறன்வாய்ந்த சில புலவர்கள் பாணர்களையும் விறலியர்களையும் உடன் இணைத்துக்கொண்டு ஒரு கலைக்குழுவை உருவாக்கி, கலைக்குழுவோடு மன்னர்களைச் சந்திப்பது என்ற மரபு உருவானது என்பதற்குப் புறநானூற்றின் (152, 378) பாடல்கள் சான்று பகர்கின்றன.  இவ்வாறு பாணர், விறலியர் முதலிய கலைக்குழு புலவர்களின் கீழ் இயங்கிய நிலையை இனங்காண முடிகிறது.

சங்ககாலச் சமூகம் விறலியைக் கட்டமைத்த விதம் தொகை நூல்களில் ஒருவிதமாகவும் பத்துப்பாட்டில் வேறுவிதமாகவும் அமைந்திருக்கிறது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இவ்விரண்டின் காலவெளி, சமூகச்சூழல் முதலியவற்றைப் புரிந்துகொள்ள விறலியர் பற்றிய பதிவுகளிலுள்ள முரண்களும் சாட்சிப்பகர்கின்றன. எட்டுத்தொகையில் ஆற்றுப்படை என்பது துறையாக விளங்கியபோது அதில் விறலியருக்கும் ஆற்றுப்படைகள் பாடப்பட்டுள்ளன. ஆனால் பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கிய வகையாக உருப்பெறும்போது விறலியாற்றுப்படை புலவர்களால் பாடபெறவில்லை. இதனால் அந்தச் சமூக அமைப்பு பெண்களுக்கு முக்கியத்துவம் தராத நிலையைக் கொண்டு விளங்கியது என்பது புலனாகிறது.

சங்ககால இனக்குழு சமூகத்தின் எச்சங்களோடு நிலவுடைமை சமூகத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்ததைச் சங்க இலக்கியத் தொகுப்பு மரபின் பாடல்கள் வழி அறியமுடிகிறது. எனவே கலை என்பது மன்னர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் கட்டமைக்கப்பட்ட சூழலில் விறலியரின் தன்மை கேள்விக்குரிய ஒன்றாக மாறியிருக்கும் என்று கூறலாம்.

சமூகப் பின்புலத்தோடு நோக்குகையில் பிற்காலச் சிற்றிலக்கியங்களில் விறலியர் குறித்த பதிவுகள் இருப்பினும் அதனைச் சங்ககால இனக்குழு சமூகத்தில் வாழ்ந்த கலைஞர்களான விறலியோடு தொடர்புபடுத்தவோ, சங்ககால விறலியரின் நீட்சியாக அடையாளப்படுத்தவோ முடியாது. விறலியாற்றுப்படை என்பதன் தொடர்ச்சியோ நீட்சியோ எந்தக் காலத்திலும் பதிவாகாத நிலையை இங்கு இணைத்தெண்ணும் போது இலக்கியங்களில் சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் பெண்களுக்கு இலக்கிய நிலையில் இரண்டாம் தரமான பதிவுகளில் மட்டும் தான் இடமளிந்துள்ளனர்.

  • ·

துணைநூற்பட்டியல் :

1.         அம்மன்கிளி முருகதாஸ், சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை, 2006.

2.         கனகசபைப்பிள்ளை, கே., The Tamil eighteen hundred years ago, இரண்டாம் பதிப்பு, சென்னை, 1956.

3.         கைலாசபதி, க., தமிழில் வீரநிலைக் கவிதை, (மொழிபெயர்ப்பு - கு.வெ.பாலசுப்பிரமணியம்), குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை,  2006.

4.         சதீஷ், அ., சங்க இலக்கியம்: விறலியர், (குறிஞ்சி, சென்னைப் பல்கலைக்கழகக் கருத்தரங்க கட்டுரை தொகுப்பு, பரிசல், சென்னை, 2007.

5.         சிவத்தம்பி, கா., திணைக்கோட்பாட்டின் சமூக அமைப்புகள் (மொழிபெயர்ப்பு - சிவசுப்பிரமணியம்) ஆராய்ச்சி இதழ், 1977.

6.         சிவத்தம்பி, கா., பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம், (மொழிபெயர்ப்பு - அம்மன்கிளி முருகதாஸ்), குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை, 2005.

7.         சிவராசு, வி.இரா., பத்துப்பாட்டு ஆற்றுப்படை பாடல்களில் விறலி வருணனை - பகுப்பாய்வியல் அடிப்படை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரிய மன்றம், நான்காவது ஆய்வுக்கோவை, 1972.

8.         சீனிவாச ஐயங்கார், பி.டி., தமிழர் வரலாறு (கி.பி.600 வரை), (மொழிபெயர்ப்பு - பி.இராமநாதன்), தமிழ்மண் பதிப்பகம், 2007.

9.         சுந்தரபாண்டியன், க., தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி, அய்யனார் பதிப்பகம், சென்னை, 2010.

10.        சுந்தரேஸ்வரன்,எம்., சிறுபாணாற்றுப்படையில் விறலியர் பங்கு, இந்தியப் பல்கலை தமிழாசிரிய மன்றம் பதினாறாவது ஆய்வுக்கோவை தொகுதி - 1.

11.        சுப்பிரமணியம், ந., Sangam polity, 1966.

12.        நவநீவதகீருஷ்ணன், மா., தமிழ் இலக்கியத்தில் ஆற்றுப்படை, 1988.

13.        மாணிக்கவாசகன், ஞா., பத்துப்பாட்டு மூலம் - விளக்கவுரையுடன், உமா பதிப்பகம், சென்னை, 2002.

14.        முருகேசபாண்டியன், ந., (தொ.ஆ.), சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் மூலமும் உரையும், மருதா பதிப்பகம், 2005.

15.        ஷாஜகான்கனி, வெ.மு., தமிழ் நாடகக் (குறுங்) கலைக்களஞ்சியம் (சங்ககாலம் வரை), 2010.

Pin It