தருமபுரி - நத்தம் தலித் கிராமம் ஆதிக்க சாதி வெறியர்களால் சூறையாடல்
தலித் மக்கள் சனநாயக முன்னணி
மக்கள் சனநாயக குடியரசுக் கட்சியின் கண்டனம்

நத்தம் தலித் மக்கள் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான நீண்ட போராட்ட பாரம்பரியம் மிக்கவர்கள், மிக சிறிய கிராமமாக இருந்தபோதும், சுற்றிலும் வன்னியர் கிராமங்கள் இருந்த நிலையிலும், சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே சாதி இழி தொழிலை நிறுத்தியவர்கள். அதற்கு எதிரான சாதி வெறி சக்திகளின் தாக்குதல் முயற்சியை முறியடித்தவர்கள். பக்கத்து கிராமமான கோணயம்பட்டியை சேர்ந்த மணி என்பவன் தலித் மக்களை இழிவுபடுத்திய போது வன்னிய உழைக்கும் மக்களுடன் சேர்ந்து அவனுக்கு தக்க பதிலடி கொடுத்தவர்கள். நத்தம் கிராமத்திலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் பல்வேறு மக்கள் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர்கள். இப்போராட்டங்களை புரட்சிகர இயக்கங்களுடன் இணைந்து நடத்தினார்கள்.

இத்தகைய செயல்பாடுகளில் அடங்கி கிடந்த சாதி வெறி சக்திகள் தற்போது தலைதூக்கி உள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் காடுவெட்டி குரு வன்னியர் பெண்ண வேற்று சாதிக்காரன் காதலித்து மணந்தால் அவனை வெட்டுங்கள் என்று வன்னியர்களிடம் - சாதி வெறியை தூண்டி பேசியதும், தற்போது பா.ம.க. தனது அரசியல் லாபத்திற்காக வன்னிய சாதி வெறியை தூண்டி வருவதும், நத்தம் தலித் கிராமத்தை தாக்குவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆதிக்க சாதிவெறி சக்திகள் திட்டம் தீட்டி வந்த நிலையில் இதை அறிந்திருந்தும் காவல்துறை வேடிக்கை பார்த்ததும் தான். தலித் மக்கள் மீதான இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உண்மை காரணமாகும்.

எங்கள் தலித் மக்கள் சனநாயக முன்னணி, மக்கள் சனநாயக குடியரசுக்கட்சி கீழ்வரும் கோரிக்கையை முன் வைக்கிறது.

· நத்தம் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்திய அனைத்து சாதி வெறி சக்திகளையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்!

· தலித் இளைஞனை மணந்த பெண்ணின் தந்தையை தற்கொலைக்கு தூண்டிய வன்னியர் சாதிவெறி சக்திகளையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்!

· இழப்பீடுகளுக்கு சாதிவெறி தாக்குதல் நடத்திய நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து வழங்க போராடுவோம்!

· சாதிவெறிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திய பாரம்பரியம் மிக்க நாய்க்கன் கொட்டாய் சுற்றியுள்ள வன்னியர் உழைக்கும் மக்களே, சாதி வெறிக்கு பலியாகாமல் தலித் மக்களுடன் சேர்ந்து சாதி வெறியர்களை தனிமைப்படுத்தி முறியடிப்போம்!

· வீரமிக்க போராட்டம் பாரம்பரியம் மிக்க நத்தம் தலித் மக்களே! புரட்சிகர இயக்கங்களுடன் இணைந்து ஆதிக்க சாதி வெறியர்களை தனிமைப்படுத்தி முறியடிப்போம்.

இவண்,
தலித் மக்கள் சனநாயக முன்னணி
மக்கள் சனநாயக குடியரசுக்கட்சி
தமிழ்நாடு 

தலைவர்
தோழர் துரைசிங்கவேல்
90034 90422

பொது செயலாளர்
தோழர். பழனி
9176264717

து. பொது செயலாளர்
தோழர். மா.செந்தில்
98420 66359

Pin It