தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கோட்டை அருகிலுள்ள நத்தம், அண்ணாநகர், கொண்டாம் பட்டி கிராமங்களின் தலித் மக்கள் மீது, சாதிவெறிக் கும்பல் 7-11-2012 அன்று நடத்திய படுமோசமான வன்முறைத் தாக்குதல் குறித்து 11-12-2012 அன்று இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மாநிலச்செயலாளர் தலைமையில் ஆய்வுக்குழு தாக்குதலுக்கு ஆளான கிராமங்களுக்கு சென்று வந்தது. ஆய்வுக்குழுவில் கட்சியின் மாநிலக்கமிட்டி உறுப்பினரும் எஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவருமான அ.சந்திரமோகன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத்தலைவர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் ரமேஷ்வர் பிரசாத், புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்பாளர் வெங்கடாசலம், தருமபுரி மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், கட்சியின் சேலம் மாவட்ட கமிட்டி உறுப்பினர் வேல்முருகன், டாக்டர் அம்பேத்கர் பொறியாளர், பணியாளர் சங்க தருமபுரி மாவட்டச் செயலாளர் முருகன், போக்குவரத்துக்கழக சங்க தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் பி. பழனி, எஸ் கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள், ஊர் கவுண்டர்கள், பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோரை விரிவாக சந்தித்தது.

ஆய்வுக்குழு கண்டறிந்த விவரங்களும் பரிந்துரைகளும்:

நவம்பர் 7ம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 வரை நாலரை மணி நேரத்துக்கு நூற்றுக்கணக்கான வன்முறைக் கும்பல் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களின் தலித் குடியிருப்புகளை தாக்கி தரைமட்டமாக்கியுள்ளனர். இம்மூன்று கிராமங்களிலும் 300க்கு மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக சேதமாக்கப்பட்டுள்ளன. மொத்த சேதத்தின் மதிப்பு 3.5 கோடி என்று குறைவாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. ஆனால் 25 கோடிக்கு மேலிருக்கும் என்பது தெரிய வருகிறது.

தாக்கப்பட்ட அனைத்து வீடுகளும் பெட்ரோல் குண்டுகள் வீசி சாம்பலாக்கப்பட்டுள்ளன. மூன்று குழுவாக பிரிந்து சென்று ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அனைத்து வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து உடமைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. பீரோக்கள் உடைக்கப்பட்டு பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நவீன வீட்டு உபயோக சாதனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பள்ளி செல்லும் பிள்ளைகளின் மிதிவண்டிகள் முழுவதுமாக நொறுக்கப்பட்டுள்ளன. பள்ளி சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் தீ வைத்து பொசுக்கப்பட்டுள்ளன. இருபது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து சம்பாதித்த அனைத்து வாழ்வாதாரங்களும் வசதிகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. முந்தைய ஜெயலலிதா ஆட்சியின்போது, திருநெல்வேலி மாவட்டம் கொடியங்குளம் தாக்கப்பட்டது போல தலித்துகளின் பொருளாதார முன்னேற்றங்கள் அனைத்தும் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன. பாமக, திமுக, அதிமுக. தேமுக கட்சிகளின் முன்னாள், இந்நாள் ஊராட்சித்தலைவர்கள், தவறான வழியில் சொத்து சேர்த்தவர்கள், ரவுடித்தனம் கட்டைப் பஞ்சாயத்து செய்யும் அடாவடிப்பேர்வழிகள் தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியுள்ளனர்.

நடந்த தாக்குதல்கள் அரசாங்க இயந்திரத்தின் வருவாய்துறை, காவல் துறையின் ஆதரவு இல்லாமல் இந்த அளவு பெரிய, விரிவான, மோசமான தாக்குதல்கள் நடந்திருக்கமுடியாது. நான்கு மணி நேரத்துக்கு மேலாக தாக்குதல் நடைபெற்று முடிந்த பிறகே காவல்துறை வந்துள்ளது. தாக்குதல் நடக்கும் வரை காத்துக்கொண்டிருந்ததாகவே தெரிகிறது. வன்முறையாளர்கள் சாலைதடுப்பு ஏற்படுத்தியதால் தாக்குதல், தீவைப்புகளை தடுத்து நிறுத்த உரிய நேரத்தில் போலீஸ், தீயணைப்பு வண்டி வர முடியவில்லை என்ற காரணம் சொல்லப்படுகிறது. தாக்குதலை தடுத்து நிறுத்த நினைத்திருந்தால் மாற்றுவழிகளில் ஊருக்குள் வந்திருக்க முடியும். அதுபற்றி போலீஸ் எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. நாற்பது நாட்களுக்கு மேலாக நடந்து வரும் திவ்யா-இளவரசன் காதல் திருமணப் பிரச்சனை டிஅய்ஜி, மாவட்ட கண்காணிப்பாளர் ஆகிய காவல் துறை உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அனவருக்கும் தெரிந்திருக்கிறது. ஊர்மக்கள் தரப்பிலிருந்து காவல் துறைக்கு தாக்குதல் நடக்கலாம் என்பது பற்றி புகார் அனுப்பியிருக்கிறார்கள். இருந்தும் காவல் துறை செயல் படவில்லை. ஊரில் இளைஞர் யாரும் இல்லாத சமயத்தில் பெண்கள் வேலைக்கு சென்றுள்ள நிலையில் வெகு சிலர் மட்டுமே இருந்த நேரம் பார்த்து வன்முறையாளர்கள் தாக்குதலில் இறங்கியுள்ளனர். இக்கிராமங்களில் 24 மணி நேரமும் கண்காணித்து கொண்டிருக்கும் க்யூ பிரிவு உளவுப் போலீசார் அப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. மாறாக ஊரின் நிலமை பற்றி இவர்களே சாதி வன்முறையாளர்களுக்கு தகவல் அளித்திருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுகிறது. இவைகள் அனைத்தும் வன்முறையாளர்களும் காவல்துறை-மாவட்டநிர்வாகத்தின் கூட்டு சேர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகிறது.

வன்னியர் சங்க, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் காடுவெட்டி குரு இந்த தாக்குதலுக்கு காரணம் என்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள், குறிப்பாக எம்மிடம் பகிரங்கமாக புகார் தெரிவித்தனர். அவர்களது புகாரில் உண்மை இல்லாமலில்லை. வன்னியப் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் தலித் இளைஞர்களை வெட்ட வேண்டும் என்று வன்னியர் விழாவில் பேசிய காடுவெட்டி குருவின் பேச்சு சாதிவெறி லும்பன்களை உசுப்பி விட்டுள்ளது. புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக 25 வன்னியர்-தலித் திருமணங்கள் நடைபெற்றதை மனதில் வைத்து கூட பேசியிருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. இப்பகுதி தலித்-வன்னியர் மக்களிடையே நீண்டகால கடும் பகையோ, காழ்ப்புணர்வோ மோதல்களோ இல்லை. காடுவெட்டி குருவின் வெளிப்புற உசுப்பலும் காவல் துறைநிர்வாகத்தின் கூட்டுமே இந்த தாக்குதலுக்கு காரணமாக அமைந்துள்ளது. காடுவெட்டிக் குருவின் மகாபலிபுரத்து பேச்சை பாமக நிறுவனர் ராமதாசோ, திமுக கட்சித் தலைவர் கருணாநிதியோ, சமூகநீதி பேசும் வேறெந்த கட்சிகளோ முதலமைச்சர் ஜெயலலிதாவோ கண்டிக்கவில்லை. இது போன்ற சூழ்நிலை காரணமாகவே முற்போக்கான கலாச்சார மாற்றங்களை விரும்பாத சாதிவெறி பிற்போக்கு வன்முறை கும்பல்கள் வெறியாட்டம் போடுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. தலித்-பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமை பற்றி வாய்கிழிய பேசிய பாமக ராமதாஸ், இக்கொடுமையான சம்பவம் பற்றி இதுவரை கண்டிக்காதது தாக்குதலுக்கு அவரது அரசியல் ஆதரவு இருக்கிறது என்பது தெளிவாகிறது.

முதலமைச்சர், இக் காட்டுமிராண்டி சம்பவத்தைக் வன்மையாக கண்டித்திருக்கவேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைக்கு பகிரங்கமாக உத்தரவிட்டிருக்க வேண்டும். வெறும் வருத்தம் தெரிவித்திருப்பது போதுமானதல்ல. தாக்குதல் நடந்து இத்தனை நாட்களான பின்னரும் அமைச்சர் கேபி முனுசாமி தாக்குதல் பற்றி கண்டிக்கவில்லை. பகுதிக்கு வந்து மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் இல்லை. பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலிருந்து அமைச்சராகியுள்ள அமைச்சர், அரசாங்க நிவாரணம் ரூ50000அய் தர வந்தாரே தவிர அதிமுக சார்பாக சம்பவத்தையும் குற்றவாளிகளையும் கண்டிக்க முன்வரவில்லை. இவை அனைத்தும் முதலமைச்சருக்கோ தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அமைச்சர்களுக்கோ தலித்துகளின் பாதுகாப்பு, கவுரவத்தை விடவும் வன்னியர்களின் வாக்குகளே முக்கியமாக கருதுவதுபோல் தெரிகிறது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தலித் கட்சிகள் தவிர அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்கு தலித்துகளின் வாழ்வு, பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதாக இல்லை. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வரத் தயாராக இல்லை.

பரிந்துரைகள், கோரிக்கைகள்:

1. மாவட்ட நிர்வாகம், போலீஸ்துறை அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் பாத்திரம் சந்தேகத்துக்குரியவையாக இருப்பதாலும் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஊர் பஞ்சாயத்தின் நெருக்குதலால் தற்கொலைக்கு தள்ளப்பட்டாரா? நாகராஜனது பிணத்தை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், இது போன்ற தாக்குதலை நடத்துவதற்காகவே திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்ட மரணமா என்ற சந்தேகங்களும் எழுகின்றன. எனவே இவை குறித்தும் தாக்குதலுக்கு பின்னுள்ள அரசியல் காரணங்களை பாரபட்சமின்றி விசாரித்து சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கடுமையாக தண்டிக்க ஏதுவாகவும் பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக்கொண்டு விசாரணைக்கமிஷன் அமைக்க தமிழக அரசு உத்திரவிட வேண்டும்.

2. வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு தாக்குதலின் பின்னணியில் இருப்பது மக்களின் ஏகோபித்த கருத்துக்களிலிருந்து தெரியவருவதால் காடுவெட்டிக்குருவை கைது செய்து விசாரிக்கவேண்டும்.

3. தாக்குதலில் தொடர்புடைய அனைவர் மீதும், தாக்குதலைத் தடுக்கத்தவறிய காவல் துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. காவல் துறை டிஅய்ஜி, மாவட்டகண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோரை இந்த வன்கொடுமை சம்பவத்துக்கு பொறுப்பாக்கி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. தங்கள் வாழ்வாதரத்தை முற்றிலுமாக இழந்த மூன்று கிராமங்களின் மக்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப அனைத்து மீட்பு நடவடிக்கைளையும் சிறப்பு நிதி ஒதுக்கீட்டு திட்டத்தின் மூலம் நிறைவேற்ற வேண்டும். வன்முறையிலீடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றையும் மீட்பு நடவடிக்கைக்கு பயன்படுத்திட வேண்டும்.

6. பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண நடவடிக்கைகள் மிக தாமதமாவே நடைபெறுகிறது. எனவே ஆதிதிராவிட நலத்துறை உயர் அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்பட வேண்டும்.

7. கடந்த அய்ந்து நாட்களாக குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் என அனைவரும் வெட்டவெளியில் படுத்துறங்கும் அபாய நிலமைக்கு உடனடித்தீர்வாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் பாதுகாப்பான தங்குமிடங்களை கட்டித்தர வேண்டும். அனைவரது வீடுகளையும் வாழ்வதற்கு உகந்த வகையில் கட்டித்தர வேண்டும். குடும்ப அட்டை, படிப்பு ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், தேசிய ஊரக வேலை அட்டை உள்ளிட்ட மக்களின் அனைத்து குடியுரிமை ஆவணங்களையும் உடனடியாக புதிதாக வழங்க வேண்டும்.

8. இப்பகுதிகளில் உள்ள க்யூ பிரிவு உளவுப் போலீசாரை நிரந்தமாக வெளியேற்றவேண்டும்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்: இந்த வன்கொடுமை தாக்குதலைக் கண்டித்தும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் நவம்பர் _ அன்று தருமபுரியிலும் மாநிலம் முழுவதும் உடனடியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட-லெனினிஸ்ட்), அகில இந்திய மாணவர்கழகம், அகில இந்தி முற்போக்கு பெண்கள் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் ஆகிய அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
 
- பாலசுந்தரம் (மாநிலச் செயலாளர் CPI ML) இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It