ஏனாம் ரெஜென்சி ஆலைத் தொழிலாளர்களின் இயக்கம் காவல்துறையின் காட்டுத்தனமான தாக்குதலை எதிர்கொண்ட பின்னணியில் தொழிற்சங்க உரிமையைக் கட்டுப்படுத்தும் அரசு மற்றும் ஆளும்வர்க்க சக்திகளைக் கண்டித்து 26.02.2012 ஞாயிறு மாலை 6 மணி அளவில் மதுரை வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோவில் எதிரிலுள்ள மணியம்மையார் மழலையர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக அரங்கக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டு தோழர்.அ.ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார். போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தலைவர் சம்பத், பத்திரிக்கையாளர் தோழர்.கருப்பன் சித்தார்த்தன், உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி மாநில அமைப்பாளர் தோழர்.வி.வரதராஜ் ஆகியோரும் அக்கூட்டத்தில் உரையாற்றினர்.

உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை தடுக்கப்படும் போக்கைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரம் ஆயிரக் கணக்கில் மதுரை நகரின் உழைப்பாளி மக்களிடையே இதனையயாட்டி வினியோகிக்கப்பட்டது. உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் கேள்வி கேட்பாரின்றித் தொடர்ந்து கொண்டுள்ள இந்நாளில் ஏனாம் நிகழ்வையும், அதுகுறித்து ஆளும் வர்க்கப் பிரச்சார சாதனங்கள் மேற்கொள்ளும் துஷ்பிரச்சாரத்தையும், பொதுவாகவே தொழிற்சங்க உரிமை பல்வேறு பெயர்களில் தடுக்கப்படும் போக்கையும் அம்பலப்படுத்துவதாக சிறப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அரங்கக் கூட்டம் அமைந்தது.

சமயநல்லூரில் தியாகி பகத்சிங்கின் நினைவுதினக் கூட்டம்

25 மார்ச் 2012 ஞாயிறு அன்று சமயநல்லூர் தொலைத் தொடர்பு அலுவலகத்தை ஒட்டியுள்ள திடலில் பகத்சிங்கின் 81 வது நினைவு தினப் பொதுக்கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது. அத்தருணத்தில் சி.டபிள்யு.பியின் தென்னிந்தியப் பொதுச் செயலாளர் ஆனந்தன் பகத்சிங்கின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சமயநல்லூர்ப் பகுதி சி.டபிள்யு.பி. பொறுப்பாளர் தோழர்.ராமநாதன் தலைமையில் நடைபெற்ற நினைவுதினக் கூட்டத்தில் மற்ற பல தோழர்களோடு தோழர்கள் த.சிவக்குமார் (மாற்றுக்கருத்து ஆசிரியர்) மற்றும் வி.வரதராஜ் (உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி) ஆகியோரும் உரையாற்றினர். தோழர்.ஆனந்தன் இறுதியில் சிறப்புமிக்கதொரு உரையினை ஆற்றினார். இடதுசாரி மனநிலை கொண்ட பொதுமக்களும் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த சி.டபிள்யு.பி. தொண்டர்களும் திரளான எண்ணிக்கையில் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தத்தில் கம்யூனிஸக் கருத்துக்களை முதல்தரச் சிந்தனைத் தெளிவுடன் இந்திய மண்ணில் முன்வைத்த தியாகி.பகத்சிங்கின் கருத்துக்களை மக்கள் மனதில் பதிக்கும் சி.டபிள்யு.பி யின் அயராத முயற்சிக்கு உரிய பலன் கிட்டும் விதத்தில் அந்த நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தேறியது.

Pin It