பிறந்தவுடன் தாலாட்டுப் பாடுவதில் இருந்து, செத்த பிறகு ஒப்பாரி வைப்பது வரை மனித உணர்வுகளோடு கலந்தது கவிதை. பாடல்வேறு, கவிதை வேறு என்றாலும் கவித்துவமில்லாமல் பாடல் இல்லை.

 பாமரர் பாடல்கள் படித்தவர்களையும் கவர்ந்ததில் ஹோமர், இளங்கோவடிகள், தாந்தே, கம்பன், ஷேக்ஸ்பியர், பாரத் போன்ற மகாகவிகளும் விலக்கல்ல. ஒரு வித்தியாசம் படித்தவர்கள் இலக்கணம் செய்து வைத்துக் கொண்டு மீறினார்கள்.

  வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர், உணரக் கூடியதை ‘அகழ்’ என்றும் உணர்த்தக் கூடிய ‘புறம்’ என்றும் அவர் கூறினார். இதை இவ்வாறு இப்படித்தான் பாட வேண்டும் என்றும் சொன்னார்.

கவிதை வடிவ மாற்றங்களின் பின்னணியில் சமூக மாற்றங்கள்

 யார் யார் படிப்பது, எதை எந்த அளவில் பாடுவது எனும் விவாதம் தமிழில் தொல்காப்பியத்தில் இருந்து தொடங்கியது. பரிபாடல் பன்னத்தி எனும் இசை வடிவில் இருந்து வெண்பா முதலிய பா வகைகள் தோன்றிய பிறகு அதற்கும் இலக்கண வரையறை செய்யப்பட்டது.

 ஆரம்ப காலக் கவிதை வடிவம், இனக்குழு மக்கள் காலத்திலும், சிறு மன்னர் ஆட்சி தோன்றிய போதும் சிறுசிறு செய்யுளாக(4-12 அடிகளில்) இருந்தது – (குறுந்தொகை நற்றிணை போல) – ஆசிரியப்பா வடிவத்தில்.

 குறுமன்னர்களை விழுங்கி பெருமன்னர்கள் எழுந்தபோது இந்த அடியளவு 40 அடி வரை போய் நெடுங்கவிதையானது) புறம் அகம் கலித்தொகை போல) ஆசிரியப்பாவும், வெண்பாவுமாக. பெருமன்னர்களின் உச்சக்காலத்தில் இந்த அடியளவும் உயர்ந்து பல்வேறு பா வகைகளையும் அடங்கிய காவிய நிலையை அடைந்தது. (சிலப்பதிகாரம், சிந்தாமணி, கம்பராமாயணம் போல).

 இதே காலங்களில் சிறு சிறு செய்யுள் பாவடிவமும் தொடர்ந்தது. குரங்கிலிருந்து மனிதப் பரிணாமம் நிகழ்ந்த பிறகும் குரங்குகள் தொடர்வது போல.

 பேரரசுகள் சிதைந்து ஆங்காங்கே குறுநில மன்னர், நிலக்கிழார்கள், மற்றும் படிப்படியாக ஜமீன்தாரர்கள், துரைசான்களின் ஆதிக்கம் வந்த பிறகு இவற்றை மையப்படுத்திய ஆங்கில அரசு கறையான் கோட்டையாய் நிமிர்ந்து உயர்ந்தது. அதுவரையும் காவிய நிலையில் இருந்த கவிதா வடிவமும், இந்த பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் பிறகு நெகிழ்ந்து சிறு பிரபந்தங்கள் சிந்து, ககல்லி முதலிய கிராமியம் கலந்த செய்யுள் வடிவமாய் பரவியது.

 இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதிய தொழில் உறவுகளோடும், மேலை நாடுகளின் கலாசாரப் பின்னணியிலும், உரைநடை வசன கவிதை, புதுக்கவிதையாகவும் பரிணமித்தது.

 அரசியல், சமூக மாற்றங்களாலும், கலாச்சாரம், பரிமாற்றங்களாலும் நால்வகைப் பாக்களும் - நால்வகை வருமை போலவே இறுகிய நிலையில் இருந்து நெகிழ்ந்தன.

 ‘எளியபதம், எளிய சொற்கள் பொதுமக்கள், விரும்பக்கூடிய மெட்டு’ இவற்றாலான எளிய பாவகைகளும், புதிய வடிவங்களும் தோன்றின. எனவே சமூகம் சார்ந்த உள்ளடக்கம் (பாடுபொருள்) மாற்றத்துடன், உருவ (பா வழவ) மீறல்களும் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்தன.

 இக்குழு மக்கள் காலத்தில் சாதி வேறுபாடுகள் இறுக்கம் பெற்றிருக்கவில்லை என்பதை “யாயும் ஞாயும் யாராகியரோ” எனும் குறுந்தொகை (40) பாடலில் காணலாம். ஆனால் இதற்குப்பின் வந்த குறுமன்னர்கள் காலத்தில் ‘சாதியும்’ தோன்றியதை தொல்காப்பியம் காட்டுகிறது. சங்க காலம் என்று தற்போது சொல்லப்படும் இக்காலத்திலும் யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இப்போதும் புகழ் பெற்ற தமிழ் வரிகளில் ஒன்று. இந்த முதல்வரி கொண்ட புறநானூறு உண்மையில் நாம் இப்போது நினைக்கும் கருத்தில் எழுதப்படவில்லை என்பது அச்செய்யுளின் ஏனைய பன்னிரண்டு வரிகளில் தெரிகிறது. சமண சமய விதிக்கொள்கைகளை வலியுறுத்திய முனிவர்களுக்கான பாடல் அது. சாதி மத உணர்வு கடந்த சமத்துவக் கருத்துக் கொண்டதாக அதன் முதல்வரியை மட்டும் கொள்வது அக்கால உணர்வுகளுக்கு பொருந்தாது.

 உண்மையில் குறு மன்னர் பெரு மன்னர் காலத்து சித்தர் பாடல்களில் தான் சாதிமுறை எதிர்ப்பும், மூட நம்பிக்கை எதிர்ப்பும், சம்பிரதாய மீறல்களும் வெகுசில வரிகளில் அழுத்தமாக காணப்படுகின்றது.

 “சாதியாவது ஏதடா?”

 “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” – திருமூலர்

 “சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ” சிவவாக்கியர்

 “சாதி வகையில்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்” – பத்திரக்கிரியார்

 என்பன போன்ற வரிகள் கவனத்திற்குரியன. இதற்கும் மேலே ‘உணர்ச்சிகளை அடக்கு’ – புலனடக்கம் எனும் சமய போதனைகளையும் ‘முனிவர்களுக்கே’ என ஒதுக்கிவிட்டு –

 “அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்
 அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை

(திருமூலர்) எனும் மனிதர்களுக்கான வரிகளும் சமய வாதத்தை மீறிய ஒரு சமய வாதியின் குரல்தான். எல்லாரும் முனிவராக வேண்டாம். மனிதனாக இருந்தால் போதுமே!

 அறியாத நிலையில் சூரியனையும், நெருப்பையும், மரத்தையும் வழிபட்டுக் கொண்டிருந்த போக்கு சமூக மாற்றத்தின் காரணமாக அரசர்களுக்கு ஆதரவான புரோகித யாக, சாஸ்திர வளர்ச்சியில் கொண்டு நிறுத்தியது. அரசர்களின் பேராசைகளுக்குத் துணையாக போர்க் களத்தில் வீரம் காட்டி மாண்டு போனவைகளைப் பாராட்டும் வீர வழிபாட்டில் கொண்டு செலுத்தியது. கல் பொறிப்பதும், வழிபடுவதும் தொல்காப்பியத்தில் தொடங்கியது – குறளில் தொடர்ந்தது (எண்.771) இன்றைய மதுரைவீரன் சுவாமி வரை தொடர்கிறது.

 இந்த வழிபாட்டு முறைகளையும் சித்தர்களின் சிலவரிகள் சாடுகின்றன. இதன்படி

 “நட்டகல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
 சுற்றிவந்து முணுமுணு என்று சொல்லும் மந்திரம் ஏதடா?
 நட்ட கல்லும் பேசுமோ நாதன் உன்னிருக்கையில்
 சுட்ட சட்டி சத்துவம் கறிச்சுவையும் அறியுமோ?” என்பதும்

 அதுதான். இது கடவுளை ஏற்றுக் கொண்டு சம்பிரதாயங்களை மறுதலித்த நிலை. சித்ததர்களின் இயற்கை அறிவியல் சார்ந்த மருத்துவத் தேர்ச்சி இப்படிப் பாட வைக்கிறது.

 ஆனாலும் கடவுளே இல்லை என்ற புத்தரையே உட்கார வைத்துக் கடவுளாக்கிய நாடல்லவா நம்முடையது. சித்தர்களை விடுவோமா? ஏராளமான கற்பனைக் கதைகளை புனைந்து அவர்கள் பாடலுக்கு நேர் எதிரான மிகையான வரலாறுகளையும் சேர்த்து எழுதிவிட்டோம்.

காலத்தை மீறிய குறலின் குரல்

சிறு மன்னர் காலத்தில் அரசியல் பொருளாதார சமய தத்துவங்களையே பாடிய வள்ளுவர் சில இடங்களில் அந்தக் கால ஓட்டத்தை மீறினார்.

 ‘கொஞ்சம் கள் கிடைத்தால் எனக்கே கொடுத்துவிடுவான்
 நிரம்பக் கிடைத்தாலோ எனக்கும் கொடுத்து நான் பாடத்
 தானும் குடித்து மகிழ்விப்பான்” (புறம் : 235) -- என்று பாடும் ஓளவையார் வழக்கத்தை வள்ளுவர் தனது “கள்ளுண்ணாமை” எனும் பத்துப் பாடல்களில் மீறுகிறார்.

 ஆண் ஒருவனுக்கு காதற்பரத்தை, காமப்பரத்தை, இன்பப்பரத்தை, சேரிப்பரத்தை முதலியோர் இருப்பது இயல்பே எனும் தொல் காப்பியர் கால வழக்கத்தையும் ‘வரைவின் மகளிர்’ எனும் அதிகாரத்தில் மீறுகிறார்.

 ‘கற்பு’ நிலையை பெண்களுக்காவே கட்டிக் காப்பாற்றிவரும் தமிழ்ச் சமூகத்தில் ‘பரத்தை’ எனும் சொல் உண்டு. பரத்தன் என அதற்கு ஆண்பால் இல்லை. பத்தினி, கன்னி, கைம்மனை யாட்டி (விதவை) முதலிய தமிழ்ச் சொற்களுக்கு ஆண் சோடி கிடையாது. ஏன் இல்லையெனில் அப்படி ஒரு வழக்கமில்லை.

 ஆனால், வள்ளுவர் தமது சிறப்பு மிகுந்த காமத்துப் பாலில் ‘பரத்தன்’ எனும் வார்த்தையைப் போட்டு (குறள் 1311) கற்புக்கேடு ஆண்களுக்கும் உரித்தானதே என்கிறார்.

இப்படி பிறரை மீறிய வள்ளுவர், பிச்சை எடுப்பது இருக்கத்தான் வேண்டும் எனும் தனது குறள் (1058) கருத்தையே பிச்சை எடுப்பது இருக்குமானால் உலகைப் படைத்த இறைவன் அழிந்து ஒழியட்டும் எனும் குறளை (1062) எழுதியதின் மூலம் தன்னைத்தானே மீறிக்கொள்கிறார்.

காலத்தை மீறிய கண்ணகியின் பரல்கள்:

 அனைவரையும் ஆண்டவனில் அடங்கி முனிவர்களும், ஆண்டவனுக்கு அடங்கி மனிதர்களும் செய்யுள் எழுதி வந்தனர். ஆண்டவனுக்கு மரியாதையைக் கொடுத்துவிட்டு அரசர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டனர். எனவே மக்கள் மனத்தில் பண்பாட்டு ரீதியான அச்சம் ஆண்டவனிடத்தும் தன் வாழ்வைப் பாதிக்கும் அரசியல் ரீதியான அச்சம் அரசர்களிடத்தும் வளர்ந்திருந்தது. இந்த நிலையில் சிலப்பதிகாரம் எழுதப்பட்டது.

  சிலப்பதிகாரம் காலம் பொருளாதார ரீதியாக அரசர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையேயான பெரும் போட்டி நிலவிய காலம்.

 சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகி, ஒரு பெண் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு முற்பகுதியிலும், எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பிற்பகுதியிலும் உதாரணமாகத் திகழ்ந்தவன். பெரு வணிககுலத்தின் பிரதிநிதி.

 பெண், ஆண்களின் போகப் பொருளில் ஒன்று தான் என அனைவரையும் இருந்த வழக்கத்திற்கு மாறாக அரசனை எதிர்த்து அரச சபைக்கே சென்று “தேராமன்னா” என்று ஒரு பெண் அழைத்தது. இலக்கியத்தில் மட்டுமல்ல அரசியலிலும் பெருத்த அதிர்ச்சி இன்று, ஒரு எம்.எல்.ஏ.விடம் கூட எதிர்த்து நின்று பேச முடியாத வார்த்ததையல்லவா இது.

 “விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன் வேந்தன்” என்ற நிலைமை மாறி, ‘யானோ அரசன் யானே கள்வன்’ என்று சுயவிமரிசனமும், ‘அறிவு அறைபோகிய பொறியனு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன்’ என பிறர் விமர்சனமும் எழுந்த நிலையில் அரசாட்சிக்கு விழுந்த ஜனநாயக அடிகள் தான் சிலம்பில் தெரிந்த பரல்கள்.

ஆண்டவன், அரசன், மக்கள் யார் முக்கியமானவர்?

  ‘மன்னன் உயரத்தே மலர்தலை உலகம்’ எனும் புறநானூறு (186) காலத்துக் கருத்தில் மன்னனே உயிர் போன்றவனாயிருந்தான். பின் வந்த கம்பர், தனது இராமாயணத்தில் ‘உயிரெலாம் உறைவதோர் உடம்பு’ என கருதி மக்களே உயிர் என மாற்றுகிறார்.

 மன்னன் - மக்கள் எனும் கருத்தில் இப்படி எழுதியவர் கம்பர்தான். தனது முதல் பாடலில் ‘அவர் தலைவர்;, அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று கடவுளின் முக்கியத்துவத்தை விடாமல் எழுதுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

 பெருமன்னர்களின் அதிகாரம் சரியத் தொடங்கி, ஜனநாயகக் குரல்கள் எழுவதற்கு முந்திய காலம் கம்பர் காலம். அந்தக் காலத்தின் எதிரொலிதான் கம்பரின் கருத்து மாற்றம் என்பது கவனத்திற்குரியது.

 அரசன் ஆண்டவனின் பிரதிநிதியே எனும் கருத்துடைய ‘திருவுடை மன்னனைக் காணின் திருமலைக்கண்டன் எனும் திருவாய் மொழி (4:8) வரிகளின் அர்த்தம். அரசன் தனது முக்கியத்துவத்தை இழந்து கொண்டிருந்த போது ஆண்டவனுக்கும் பொருந்துவதாயிற்று.

 சமய வாதத்தில் வென்று, எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினார் திருஞானசம்பந்தர். (பெரிய புராணம் ஞான : 835) பிறமதப் பெருமைகளும் அவ்வாறே.

 எனவே சமயத்தொண்டுதான் சமுதாயத் தொண்டு எனும் கருத்து நெதிழ்வடைந்து

 “படமாடக்கோயில் பகவற்கொன்றீயின்
 நடமாடக் கோயில் நம்பர்க்கங்காகா
 நடமாடக் கோயில் நம்பர்க்கொன்றீயின்
 படமாடக் கோயில் பகவற்கதாமே” – என
 முதலில் கடவுளையே பாடினர். பின்னர் கடவுளை மையப்படுத்தி மக்களை பாடினர். அதற்குப் பிற மக்களை மையப்படுத்தி கடவுளையும் பாடிய கருத்தோட்டங்களின் வளர்ச்சியே இன்றைய சமயச் சார்பற்ற சமூகத்திற்கு இட்டு வந்தது.

 இதே போலத்தான் -          முதலில் அரசனையே பாடினார்.         பின்னர் அரசனை மையப்படுத்தி மக்களைப் பாடினார்
 அதற்குப் பிறகு மக்களை மையப்படுத்தி அரசனையும் பாடிய கருத்தோட்டங்களின் வளர்ச்சியே இன்றை ஜனநாயக அரசியலுக்கு இட்டு வந்தது.

 பழம் பாடல்களிலும், இடைக்காலங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அதிருப்தி முனகல்கள் இருபதாம் நூற்றாண்டில்தான் எதிர்ப்பு முழக்கங்களாகவும் திசைகாட்டும் தத்துவங்களோடும் வளர முடிந்தது. அதன் வெளிப்பாடாகவே புதுக்கவிதை தோன்றிப் புதுவெள்ளமாகப் பொங்கிப் பெருகி வருகிறது.

- நா.முத்துநிலவன்

Pin It