சாணி, சருகு,
வேப்பம்பிண்ணாக்கு
மக்கிப்போன தோல் தழை.
மழைபெஞ்சா
மண்ணுழப்பி ...
 
இத்தனையும் விட்டுபுட்டு
கை நிறைய அள்ள
கலப்புரம் போட்டு
மேல அள்ள
மேலுரம் போட்டு
 
பருத்தி வரும்னு
பதறி பாத்து
கத்திரிக்காய்க்கு
மரபணு மாத்திக்
காத்திருந்தா  
 
சாயாத் தண்ணியா
கருத்து வந்தது
சாயத் தண்ணி..
துவைச்ச நுரையாட்டம்..
பார்த்தீனியம் கூட பட்டுப் போக.,
 
குடிச்சுக் குடல் அழிஞ்சு
புண்ணாகிக் கிடக்கு
சுரப்புத் தட்டிப் போய்
வெடிச்ச முலைக் காம்பாட்டம்
எனக்கு பாலூட்டிய பூமி..
=================================
 
2. அதீதம்..
***************
 
சுயம் என்பது
வெங்காயத் தோலாய்
உள்ளே ஒன்றுமில்லாமல்..
 
சருகாய் தோல் சுற்றி
பளபளப்பாய்
உரிக்க உரிய கண்ணீர்..
 
ஏற்றமும் இறக்கமும்
பழக்கமற்று
எதுவாய் அதுவென்று
 
இனம் காண விழையாமல்
எதனுள்ளோ ஒளிந்து
அதாகி ..
 
===================================
 
 
3. வெறுங் குடுவை..
*****************************
 
நகராத எனக்கும்
எல்லாப் பக்கமும்
நிழல் தொடர்கிறது..
 
காலியாய் இருப்பதாலேயே
எல்லாவற்றையும்
ஏற்கும் தகுதி இருப்பதாய்..
 
ஏற்பவை என் உருவம் ஏற்று
கவிழ்த்த பின்
உருவமற்ற ஓவியமாய்..
 
எதை ஏற்பது என்பது
என்னால் தீர்மானிக்கப் படாமல்.,
 
இறைமையோ., கயமையோ.,
சமயத்தில் ஏதேதோவும் நிரம்பி..
 
உள்கிடப்பவற்றை உணர்கிறேன்..
கலப்பதில்லை அவற்றுள் இரண்டற..
எதாயிருந்தாலும்.. எப்போதும்..
 
==============================================
 
4. சிலந்தி..:-
**************
 
குடியிருப்பு வலை
யாருக்கோ குப்பையாய்..
 
இரண்டு தளங்களை இணைத்து
கயிற்றுக் கட்டில்..
 
எச்சில் நூலில்
கால் நெசவில் வீடு
 
தேடிவருவது தவிர
தின்பதில்லை எதையும்..
 
தேடிப் போவதில்லை
எதன் வாழ்வும் கெடுக்க..
 
வலை வனத்தில் சிக்கின
பூச்சிகளை வேட்டையாடுவதால்..
 
சீறும் சிங்கமாய் இல்லாமல்..
சிறிய சிலந்திப் பூச்சியாய்..
 
- தேனம்மை லெக்ஷ்மணன்
Pin It