கடந்த இதழில் வெளிவந்த பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா அவர்களின் பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது

உங்களுடைய God as political philosopher – Buddha’s challenges to Brahminism நூல் உருவானதன் பின்னணி என்ன?

அம்பேத்கரைத் தொடர்ந்து புலேவை தேடி வாசித்தேன். தொன்மையான விஷயங்களையும் தேடி வாசிக்கத் தொடங்கி இருந்தேன். இதற்கிடையில் என்னுடைய ஆசிரியர் ஒருவர், "இந்திய அரசியல் கோட்பாடுகள்' குறித்துப் பாடமெடுக்கும்போது வேதங்கள் குறித்து குறிப்பிட்டுச் சொல்லி, கவுடில்யர், மநு ஆகியோரை பண்டைய சிந்தனையாளர்களாகக் குறிப்பிட்டார். நான் அவற்றை வாசிக்கத் தொடங்கியபோது, அதில் சிந்தனைகள் என்று சொல்லும்படியான எதுவும் எனக்குத் தென்படவில்லை. சிந்தனைகளாகத் தெரிபவை எல்லாமே தேவையற்றவையாக இருந்தன. எல்லாமே மனித இனத்திற்கெதிரானவை. மக்களுக்கு ஒவ்வாதவையாக இருந்தன. அதிகாரத்தின் கைவேலையாக இருந்தன. இதைவிட சிறந்த சிந்தனைகள், பண்டைய இந்தியாவில் இல்லையா என்று என் ஆசிரியரிடம் கேள்வி எழுப்பினேன். இவையே சிறந்த கருத்துகள் என்றார் அவர். "நாம் புத்தர் குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும். புத்தர் ஒரு மிகப்பெரிய ஞானியென்றால், அவரிடம் அரசியல் சிந்தனைகளே இல்லையா என்ன?' என்றேன். ஆனால், புத்தர் குறித்து அவர் தெரிந்து வைத்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.

அதன் பிறகு நிலச்சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து, என்னுடைய எம்.பில். படிப்பை முடித்தேன். பிறகு என்னுடைய பிஎச்.டி. பட்டத்திற்காக புத்தரின் அரசியல் சிந்தனைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் என்னுடைய மேற்பார்வையாளர், "புத்தரை சிந்தனையாளர் என்று சொல்ல முடியாது' என்றார். அதனால் என் மேற்பார்வையாளரை நான் மாற்றிக் கொண்டேன். பிறகு ஒரு பெண் பேராசிரியர், இத்தலைப்பிற்கு ஒப்புக் கொண்டார்.

பாலி மொழியில் எழுதப்பட்ட ஆவணங்கள் படித்துப் பார்க்கப்படவேயில்லை. நான் அதைச் செய்ய விரும்பினேன். ஆனால், சில ஆசிரியர்களோ "இது முடியாத காரியம். பாலி மொழி உனக்கு தெரியாது. ஆகவே, அந்தப் பிரதிகளை விளங்கிக் கொள்ள முடியாது. அதனால் புத்தர் குறித்து நீ தெரிந்து கொள்ள முடியாது' என்றனர். ஆனால் நான் உறுதியாக அவர்களிடம் கூறினேன்: "கிரேக்க சிந்தனையாளர்கள் குறித்து ஆங்கிலத்தில் ஒருவரால் ஆய்வு செய்ய முடிகிறது. ஆங்கிலத்தில் பவுத்தம் குறித்த இலக்கியங்கள் போதுமான அளவு இருக்கும்போது, நான் ஏன் இதைச் செய்ய முடியாது?' என்றேன். பணியில் இறங்கினேன். புத்தரின் அரசியல் சிந்தனைகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன். அதன் விளைவாகத்தான் God as political philosopher – Buddha’s challenges to Brahminism என்ற நூல் உருவானது.

பார்ப்பனியத்திற்கெதிரான புத்தரின் போராட்டங்கள் குறித்து ஆய்வு செய்தேன். புத்தரின் விவாதங்களில் புத்தர் தன் வாழ்நாளில் ஒவ்வொரு விஷயத்திலும், தன் சமகால பார்ப்பனர்களை கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார் என்பதற்கான சான்றுகள் உள்ளன. மனித இனம், உளவியல், இயற்கை அரசின் தோற்றம், ஆண்-பெண் உறவுகள் இப்படி எல்லாவற்றையும் பார்ப்பனர்களே முடிவு செய்தனர். என் ஆய்வுக்கட்டுரையில் இவற்றையெல்லாம் சொல்லியிருந்தேன். ஆய்வுக்கட்டுரை வெளியானவுடனேயே அது புத்தகமாகவும் வெளிவந்தது.

மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில், உங்களுடைய பங்கு குறித்து சொல்லுங்கள்?

வியக்கத்தக்க வகையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அறிவுஜீவிகள் எவரும் - பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும், மண்டல் குழு பரிந்துரைக்காகவும் வாதாட முன்வராத சூழல் அப்போது நிலவியது. பிற்படுத்தப்பட்ட தலைவர்களான சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் தவிர, பெரிய அளவில் தலைவர்கள் இல்லை. அவர்களைக்கூட ஊடகங்கள் கோமாளிகளாகத்தான் சித்தரித்தன. அந்த நேரத்தில் அய்தராபாத்தைச் சேர்ந்த பெண்ணியவாதிகளான சுசிதாரு, ரமா மில்கோட்டே, லலிதா மற்றும் சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தோம். தேசிய அளவில் ஊடகங்களுக்காக கட்டுரைகள் எழுதினோம். Experience as framework of debate என்ற புகழ்பெற்ற என்னுடைய கட்டுரை, அந்த நேரத்தில்தான் "எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி'யில் வெளிவந்தது. மண்டல் போராட்டத்தில் பார்ப்பனியத்தை வெல்ல, நம் அனுபவங்களையே முக்கியமான கருத்தியலாக முன்னிறுத்த வேண்டும் என்று அக்கட்டுரையில் கூறினேன். அது ஒரு முக்கியமான கட்டுரையாகப் பேசப்பட்டது. ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் நிறைய பேரை அக்கட்டுரை மாற்றியது.

இதற்கு சிறிது காலத்திற்கு முன்புதான் நாங்கள் "நலுப்பு' (Black) என்ற இதழை நடத்தத் தொடங்கியிருந்தோம். அருண்ஷோரியை எதிர்த்தும், பார்ப்பனர்களை எதிர்த்தும், புலே, அம்பேத்கர் ஆகியோரை தெலுங்கு மக்களுக்கு அறிமுகப்படுத்தியும் கட்டுரைகளை எழுதினோம். "பேட்' என்ற புகழ்பெற்ற காவியத்தை எழுதிய கவிஞர், "பிளாக் பேட்'டை இந்து மதத்திற்கெதிரான போராட்டத்தின் குறியீடாக அதில் வைத்திருந்தார். அதிலிருந்து "நலுப்பு' என்ற பெயரை எடுத்துக் கொண்டோம். எங்கள் இதழ் மிகவும் பிரபலமடைந்தது. ஆந்திராவின் தெலுங்கு இலக்கிய வட்டத்தை உலுக்கியது எங்கள் இதழ். இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு மண்டல் ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இந்தப் பின்னணியில்தான் மண்டல் இயக்கம் உருப்பெற்றது. இந்துத்துவ பார்ப்பனர்கள் ஒரு புறம், பழைமைவாத காங்கிரஸ்காரர்கள் ஒருபுறம் என எதிர்ப்புகள் இரு முனைகளிலிருந்தும் மண்டல் பரிந்துரைகளுக்கு எதிராக வந்தன. முடிவில், இது மண்டல் து கமண்டலம் அரசியலானது. இதன் விளைவாக கமண்டல அரசியல், பாபர் மசூதியை இடித்தது. இந்துக்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் இருந்தபடியால், முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளைக் கோர முடியாது என்றானது. இந்து பெரும்பான்மைவாதம் என்றால் என்ன? யார் இந்த இந்துக்கள்? யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு அளிக்கக்கூடாதென வாதிடுகிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர்களையும் உள்ளடக்கித்தானே இந்து பெரும்பான்மையினர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்? தலித்துகள் வேறு மதத்திற்குச் செல்ல தயாராக இருக்கின்றனர். பிற்படுத்தப்பட்டவர்கள்தான் அடிப்படையில் இந்து கட்டமைப்புக்குள் வருகின்றனர். அதனால்தான், இந்த இந்து பெரும்பான்மைவாத மாயையை முதலில் தகர்க்க வேண்டுமென நினைத்தேன். இந்நிலையில்தான் "நான் ஏன் இந்து அல்ல' என்ற நூலை எழுதத் தொடங்கினேன்.

உங்கள் நூல்களை வெளியிடுவதில் எத்தகைய இடர்ப்பாடுகளை சந்திக்கிறீர்கள்?

நான் அம்பேத்கரின் இலக்கியங்கள் குறித்து திறனாய்வுகளை தேடத் தொடங்கினேன். அவருடைய நூல்களுக்கு விமர்சனங்களோ, திறனாய்வுகளோ இல்லை. அவர் தனது நூல்களை தானே பதிப்பித்துக் கொண்டார்; அல்லது நெருங்கிய தலித் நட்பு வட்டாரங்களில் அவருடைய நூல்களைப் பதிப்பித்தார்கள். 1956 இல் அம்பேத்கர் "புத்தரும் அவர் தம்மமும்' பதிப்பித்தபோது அவரிடம் பணமில்லை. அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. இதில் வருத்தத்திற்குரிய விஷயமென்னவென்றால், அம்பேத்கர் நேருவுக்கு பணம் கேட்டு கடிதம் எழுதினார். அப்போது முக்கியமான உலக பவுத்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். ஆதலால் புத்தகத்தை அச்சிடும் செலவுக்கான தொகை கிடைத்தால் உடனடியாக அச்சிட்டு, மாநாட்டுக்கு வரும் புத்தமத பெரியவர்களுக்கு அதை வழங்கலாம் என்கிற யோசனையில் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தார். ராதாகிருஷ்ணனோ அந்தத் தொகையை வழங்க மறுத்தார்.

இதை அறிந்தபோது நான் மிகவும் வருத்தமடைந்தேன். பெரும்பான்மை வாசகர்களுக்காக ஒரு நூலை பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. இந்நூலை எழுதுவதற்காக நான் கிராமங்களுக்கு செல்லத் தொடங்கினேன். குழந்தைப் பருவம் முதல் முதுமைப்பருவம் வரை, பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் பார்ப்பன - பனியாக்களுக்கும் மற்றவர்களுக்குமான வேறுபாட்டை ஆராயத் தொடங்கினேன். ஆய்வின் முடிவில் அந்த நூலை எழுதினேன். ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எவரும் அந்நூலை அந்தத் தலைப்பில் பதிப்பிக்க முன்வரவில்லை.

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, சுயசரிதை உள்ளிட்ட பல நூல்களை பதிப்பித்த "பாப்புலர் பிரகாஷன்' பதிப்பகம் என்னுடைய நூலை பதிப்பிக்க முன்வந்தது. ஆனாலும் அவர்களுக்கு மும்பையிலிருந்து இந்தப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது. ஏனெனில், மும்பையில் சிவசேனா - பா.ஜ.க. ஆட்சி நடந்தது. அப்போது மும்பை யிலிருந்த பதிப்பகத்தார் என்னை வந்து சந்தித்து “நாங்கள் பதிப்பிக்கிறோம். ஆனால் புதியதொரு பதிப்பகப் பெயரில், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பதிப்பிக்கிறோம்” என்றார். "சாம்யா' என்று புதிய பதிப்பகப் பெயரிடப்பட்டு கல்கத்தா முகவரியிலிருந்து அந்த நூல் பதிப்பிக்கப்பட்டது.

1996 இல் "நான் ஏன் இந்து அல்ல' வெளியானது. அதிலிருந்து ஒரு புதிய கருத்தியலை உருவாக்குவதில் நான் பங்காற்றத் தொடங்கினேன். இந்நூல் பிரான்சிஸ் பனானின் "ரெச்சர்ட் ஆப் தி எர்த்' நூலோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டது. உலகமறிந்த பெண்ணிய அறிஞர் சுசிதாருதான் அவ்வாறு என் நூலை ஒப்பிட்டவர். புதிய முறைகளில், சிந்தனை உருவாக்கங்களில் நான் நிறைய சோதனைகளை செய்து பார்க்க வேண்டியிருந்தது. நான் ஏன் இந்து அல்ல வெளியான பிறகு, நான் ஒரு நூலாசிரியராக கருத்தில் கொள்ளப்பட்டேன். ஆனால், கம்யூனிஸ்டுகள் இந்தப் புத்தகத்தோடு உடன்படவில்லை.

ஜனநாயகவாதிகளும், ஆதிக்க சாதியிலுள்ள ஜனநாயகவாதிகளும், தலித் வாசகர்களும், வெளிநாட்டவரும்தான் நூலை வாசிப்பவர்களாக இருந்தனர். "டெக்கான் கிரானிக்கிள்' ஆசிரியர் ஜெயந்தி, "தி இந்து' பத்திரிகையின் மாலினி பார்த்தசாரதி, (என். ராம் அல்லர். அவர் என் எழுத்துகளை வெளியிட விரும்புபவர் அல்லர்) ஆகியோர் என் எழுத்துகளைப் பதிவு செய்ய முன்வந்தனர். ஆகவே, ஆங்கிலத்தில் நான் பரவலாக எழுதத் தொடங்கினேன். பத்தி எழுத்துகளாக செய்தித்தாள்களில் என் கருத்துகளை எழுதினேன். அந்த நேரத்தில் வெகு சில அறிவுஜீவிகள் மட்டுமே பார்ப்பனியம் குறித்து ஆதிக்க சாதியினரோடு விவாதிக்கத் தயாராக இருந்தனர். பண்டைய காலம் முதல் நவீன காலம் வரை இதற்கு பெரிய வரலாறு உண்டு.

ஆகவே, தொன்மத்தை நாடிச்சென்று புத்தரின் அரசியல் கருத்துகளிலிருந்து என் வேர்களைத் தேடினேன். எனக்கு முன்மாதிரிகளாக அம்பேத்கரையும், புலேவை யும் மட்டும் நான் வைத்திருக்கவில்லை. மார்க்சும் என் முன்மாதிரியாய் இருந்தார். ஏனெனில், கம்யூனிச தத்துவங்களை வைத்து அவர் இலக்கிய விதிகளை வகுப்பதற்கு முன்னால், மார்க்ஸ் பண்டைய கிரேக்கத்தை முழுமையாக ஆய்வு செய்தார். அவருடைய பிஎச்.டி. ஆய்வின் தலைப்பே The Struggle between Epicurance and Democratus என்பதுதான். அதனால் அவரைப் போலவே பின்னோக்கிச் சென்று, பவுத்தர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான போராட்டத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.

புலேவும், பகுஜன் சமாஜ் கட்சியும் என் பின்புலம். புலே, சாகுமகாராஜ், பெரியார், அம்பேத்கர், சாவித்ரி பாய் ஆகியோரை உள்வாங்கிய அரசியல் அடையாளமாக கன்ஷிராம் இருந்தார். நான் என்னுடைய கருத்துகளை அறிவுத்தளத்தில், வெளிக்கொணர தலைப்பட்டேன். கோபால் குரு, தோராட் போன்ற மிகச் சில நண்பர்களே இப்பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றனர். ஆனாலும் அவர்கள் வேலை செய்வது அறிவுத்தளத்தில் மட்டுமே. அம்பேத்கர் குறித்து எழுதினால், அவரைப் பற்றி மட்டுமே எழுதுவது என்கிற நிலை தற்பொழுது இருக்கிறது. அவரை சமகாலத்தவர்களோடு பொருத்திப் பார்ப்பதில்லை. உலகில் மிகப் பெரும் தாக்கத்தை செலுத்தக்கூடிய பெண்ணியம் மற்றும் மார்க்சியத்தின் கருத்துகளை, அம்பேத்கரியலோடு இணைக்க வேண்டும். அப்படிச் செய்தால், அது ஒரு பரந்துபட்ட தளமாக இருக்கும். அம்பேத்கர் ஓர் அசாதாரணமான மனிதர். அதனால்தான் என்னுடைய அண்மைக்கால புத்தகமான Post Hindu Indiaவில் அவரை புத்தர், ஏசு, முகமது நபிகள், மார்க்ஸ் ஆகியோரோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். அவரை அய்ந்தாவது "இறைதூதர்' என்பேன்.

ஏனெனில், ஓர் இறைதூதருக்கõன வாழ்க்கையில்லாவிடில் - அந்தளவிற்கு எழுதியிருக்கவோ, அந்தளவிற்கு அரசியல் செய்திருக்கவோ, ஒரு தீண்டாமையில் அல்லலுறும் வாழ்க்கையை ஒரு தலைமுறைக்குள்ளாகவே நவயானா பவுத்தத்திற்கு உருமாற்றவோ முடியாது. நான் அம்பேத்கரில்லை. மிகச் சிறியவன். எனவே, நான் வேறு மாதிரி முடிவு செய்தேன். சமகாலத்தில் இந்து மதம், தலித்தியம் ஆகியவை குறித்த ஒரு முழுமையான கொள்கை சார்ந்த பார்வையை உருவாக்கவும், இன்றைய காலகட்டத்தில் பழங்குடியினர் முதல் பார்ப்பனர்கள் வரை, என்னென்ன வேறுபாடுகள் உள்ளன என்பதையெல்லாம் கண்டறிவதும், எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்கவும் முனைந்தேன்.

என்னுடைய "நான் ஏன் இந்து அல்ல' நூலில், பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்குமான பண்டைய கால போராட்டங்களைப் பின்புலமாக வைத்து, இன்றைய சமகாலத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அத்தனை விஷயங்களிலும் கடவுளர்களின் பெயரால் எத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன, பார்ப்பனியம் எத்தனை கொடுமையான பங்கு வகிக்கிறது, எப்படியெல்லாம் ஆண் - பெண் உறவுகள் பாதிக்கப்படுகின்றன என்பதை பிற்படுத்தப்பட்டவர்களின் பார்வையிலிருந்து விளக்கியிருக்கிறேன். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், பண்பாட்டு ரீதியாக, ஆன்மிக ரீதியாக, உடல் ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளா தார ரீதியாக எத்தனை வேறுபாடுகள்? பின் எப்படி இதை மாறிவிட்ட ஒரு ஜனநாயக நாடு என்று நாம் சொல்ல முடியும்?

நவீன உலகம் கல்வியின் உலகமாக இருக்கிறது. அம்பேத்கரின் வாழ்க்கையிலிருந்து நான் ஒன்றை கற்றுக் கொண்டேன். தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மத்தியிலிருந்து நிறைய இலக்கியங்கள் வருகின்றன. ஆனால், இந்திய அளவில் அவை கவனத்தைப் பெறுவதில்லை. ஆகவே, ஆங்கிலத்தில் எழுத வேண்டும். ஏனெனில், கருத்துருவாக்கத்திற்கு ஆங்கிலத்தில் தத்துவச் சொல்வளம் ஏராளம். அதனாலேயே அறிவுத்தளத்தில் நம் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய சீராக ஆங்கிலத்திலேயே எழுத வேண்டுமென்று நினைத்தேன். அப்போதுதான் அறிவுத்தளம், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மக்களிடையே கருத்துகளையும் போராட்டங்களையும் கொண்டு சேர்க்க முடியும்.

பிறகு சமஸ்கிருதத்தையும் பிராந்திய மொழிகளையும் ஒழிக்க வேண்டும் என்று கூறத் தொடங்கினேன். ஏனெனில், எல்லா பிராந்திய மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் வேர்கள் இருந்தன. ஆகவேதான் நான் ஆங்கிலத்தை ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கினேன். நான் இந்திய ஆங்கிலத்தைத்தான் சொல்கிறேன். என்னுடைய ஆங்கிலத்தைப் பார்த்தீர்களென்றால் - காலனியாதிக்க ஆங்கிலமாகவோ, அமெரிக்க, அய் ரோப்பிய ஆங்கிலமாகவோ இருக்காது.

"நான் ஏன் இந்த அல்ல' நூலை எழுதி முடித்து, அது உருவாக்கிய விவாதங்களுக்குப் பிறகு உற்பத்தி சமூகத்தின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் கவனம் செலுத்த தொடங்கினேன். ஆனால் இந்தத் திறமைகளுக்கெல்லாம் கூட, மதங்களில்தான் வேர்கள் இருக்கின்றன. எங்கள் தலைமுறை எதிர்கொண்ட சிரமம் எதுவெனில், தலித் இயக்கங்கள் எல்லாம் நூற்றுக்கணக்கான கல்வி புலம் சார்ந்த கருத்தரங்குகளில் அம்பேத்கரை முன்னிறுத்தின. அம்பேத்கரிய கல்வி மய்யங்கள் உருவாகின. புலேவையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தலித்துகளுக்கும் ஓர் இடைவெளி இருந்து கொண்டே இருந்தது. இந்த இடைவெளி களையப்பட வேண்டுமென விரும்பினேன். தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள், பெண்கள், சிறுபான்மையினர் என்று அனைவரும் ஒற்றுமையாக இல்லையெனில், நம் போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியாது. அதுதான் நம்முடைய முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும். இல்லையெனில், அரசியல் அதிகாரத்தைப் பெற முடியாது.

எனவே, நான் பண்டைய இந்தியாவிற்குச் சென்று அசோகர் காலத்திய நடைமுறைகளைப் பற்றி ஆய்வு செய்தேன். அசோகர் ஒரு சாதாரணமான மன்னராக இருந்திருந்தால், அவரால் வெற்றி பெற்றிருக்க முடியாது. அவர் பவுத்தத்தை தேர்ந்தெடுத்தார். உலகம் முழுவதும் பவுத்தத்தை பரவச் செய்ய வேண்டுமென நினைத்தார். ஒருபுறம் கிறித்துவ மத போதகர்கள் தாக்கப்படுகிறார்கள். பெண் துறவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். பாதிரியார்கள் கொல்லப்படுகிறார்கள். மறுபுறம் தலித் இயக்கங்கள் மதங்களை கேள்வி கேட்காமல், தலித் பொருளாதாரம், தலித்துகளுக்கான அதிகாரம், தலித் அரசியல் என்று மட்டுமே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தன. ஆகவே, இந்து மதத்திற்கு எதிர்ப்பு என்பது கிட்டத்தட்ட இல்லாமலேயே போனது. பிற்படுத்தப்பட்டவர்களின் முக்கியமான பிரச்சனையே இந்து மதம்தான்.

தலித்துகள் பவுத்தத்திற்கும், கிறித்துவத்திற்கும் மாறிவிடலாம். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் இதற்குள்ளேயே ஓர் இந்து கடவுளின் காலடியில் பார்ப்பன மேற்பார்வையிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் பிற்படுத்தப்பட்டவர்களின் பார்வையில் இந்து மதத்தை கேள்வி கேட்க வேண்டும் என்கிறேன். எனவேதான் "தலித் பகுஜன்' என்ற சொல்லை உருவாக்கினேன். இதற்குள் பெண்ணியத்தையும் அடக்கினேன். நீங்கள் என்னுடைய எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் சரி, பெண்ணியம் அதில் ஒரு பகுதியாக வந்து கொண்டேயிருக்கும்; அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை. நூல் முழுவதும் வரும். அதனால் தான் சாதி பண்பாட்டுப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக, அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றை இந்து மத எதிர்ப்புத் திட்டமாகப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான் Post Hindu India என்கிற என்னுடைய கனவு நூலை உருவாக்க முனைந்தேன்.

- அடுத்த இதழிலும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால்,

ஆர்.ஆர். சீனிவாசன்

தமிழில் : கவின் மலர்

Pin It