உலகின் மனச்சான்றை இன்று உலுக்கிக் கொண்டிருப்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமை எழுச்சிதான்! பெருநாடுகளுக்குள் அடைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு வதைபட்டுக் கொண்டிருக்கும் தேசிய இனங்களின் பட்டியல் மிக நீளமானது! 

தமிழினமும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தேசிய இனம்தான்! ஈழத்தில் இது கூட்டுக் கொடுங்கொலைத் தாக்குதல்கள் மூலம் வெட்ட வெளிச்சமாக அழிக்கப் படுகிறது. தமிழகத்தில், இது உயிர் அடிப் படைகள் பிடுங்கப்படுவதன்மூலம் மெல்ல மெல்லச் சாகடிக்கப்படுகிறது. 

நேரடியாக வதைபடும் இனங்களில் சில, விடுதலை வெளிச்சத்தைக் கண்டுள்ளன. கிழக்குத் தைமூர் இதற்குச் சான்று. எரித்திரீய விடுதலைப் போராட்டம், சைப்பிரஸ் துருக்கியர் போராட்டம் போன்றவற்றுக்கு வெளியிலிருந்து ஆதரவு நீட்டும் கைகள் உண்டு. பாலஸ்தீன விடுதலைப் போருக்கு அரேபிய நாடுகள் மட்டுமல்ல, உலகில் சரிபாதிக்கு மேற்பட்ட நாடுகள் ஆதரவுக் குரல் எழுப்புகின்றன. பலூச்சிகள், சிந்திகள் போன்றோரின் உரிமைக் குரல்கள் அதிகமாக வெளி உலகை எட்டவில்லை.

குர்துஸ்தான் விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டம் போன்றவை, சொந்த இனத்திற்கு அப்பால், பிற இனத்தவரின் ஆதரவைப் பெற முடியாதவையாக உள்ளன. கொடிய அழித்தொழிப்புக்கு ஆட்பட்டுள்ளது தமிழ் ஈழப் பேராட்டம், கொலைக் கழுகால் விரட்டப்படுவதாக உள்ளது குர்துகளின் உரிமைப்போர்! 

இந்தியத் துணைக் கண்டத்தில் வஞ்சகர்களின் நரித்தனத்தால் புரட்டி எடுக்கப்படும் காசுமீரிகளின் தன்னுரிமை போல், சீனாவிலும் ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமைக் குரல்வளை மிதிக்கப்பட்டுக் குற்றுயிராகிக் கொண்டிருக்கிறது. இந்திய எல்லையில், லடாக் பகுதியை ஒட்டி, 18 இலக்கம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடப்பது சிங்கியாங் பெருநிலம். இது ஒரு கோடி உய்கர் முசுலீம்களின் தாயகம். இங்கே 20 இலக்கம் பிற முசுலீம்களும், 15 இலக்கம் ஹன் எனும் சீன இனக்குழுவினரும் சிறுபான்மையினராக வாழ்ந்தனர்.

சிங்கியாங் வேளாண் வளம் நிறைந்த பகுதி. எண்ணெய், எரிவளி மிகுதியாகக் கிடைக்கிறது. இயற்கை வளம் நிறைந்தது. சீனாவுக்கு மிகுந்த பணப்பயனை வழங்கும் இப்பெருநிலம் உய்கர் முசுலீம்களின் தாயகம் என்பது சீனருக்கு உறுத்தல். உய்கர் முசுலீம்களுக்குச் சீன அரசுடன் இணக்கமான உறவு இருந்ததில்லை. தாம் இரண்டாம்தரக் குடிகளாக நடத்தப்படுவதாக அவர்கள் உணர்ந்தனர். எனவே உலக அளவில் தமக்கான விடுதலை இயக்கத்தை அவர்கள் கட்டி எழுப்பினர். ‘உலக உய்கர் பேராயம்’ என்பது அவர்தம் விடுதலை இயக்கத்தின் பெயர்.

இவர்களின் போராட்டம் அறவழிப் பாதையிலிருந்து படைக்கலப் பாதைக்கு மாறியது. ஹன்சீனர்கள் உய்கர்களை ஒடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஹன்சீனர்களுக்கும் உய்கர்களுக்கும் நடந்த மோதல்களில் பல நூற்றுக்கணக்கானவர்கள் மாண்டு போயிருக்கிறார்கள். சீன அரசு வல்லதிகாரிகளின் வழக்கமான மொழியில் கொக்கரித்தது. பிரிவினைத் திட்டம், தீவிரச் செயல்கள், வன் கொடுஞ்செயல்கள் ஆகிய மூன்றையும் எதிர்த்துப் போர்தொடுப்பதாக அறிவித்தது.

வெள்ளிக் கிழமைகளில் பள்ளி வாசல்களில் தொழுகை நடத்தக்கூடாது எனச் சீன அரசு தடைவிதித்தது. தொழ விரும்புவோர் தொழுகையை வீட்டில் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும் என அச்சுறுத்தியது. இப்படி உய்கர்களின் உரிமைப் போரும், சீன அரசின் அடக்குமுறையும் நீடித்துவரும் நிலையில், உய்கர்களை ஒடுக்குவதற்கும், போராட்டத்தை நீர்த்துவிடச் செய்வதற்கும் ஒரு புதிய வழிமுறையைச் சீன அரசு கண்டுபிடித்தது. இந்த வழிமுறை இசுரேலிய யூதர்களுக்கும், இலங்கைச் சிங்கள வன்கொடியன் மகிந்த இராசபக்சனுக்கும் வழிகாட்டியாய் அமைந்ததாகும்.

இது, ஓசையில்லாமல் மண்ணின் மக்களை வெறும் கூடுகளாக, நிலையான அடிமைகளாக, சொந்த மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்டவர்களாக மாற்றிவிடும் திட்டமாகும்.  

கரவும், சூழ்ச்சியும் நிறைந்த இந்த மோசடித் திட்டத்தின்படி, உய்கர்களின் சிங்கியாங் பெருநிலமெங்கும், அந்த மண்ணுக்குச் சொந்தமில்லாதவர்களான ஹன்சீனர்கள் கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் படுவேகமாகக் குடியமர்ததப்பட்டனர். பல்வேறு தொழில்களில் ஹன்சீனர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சொந்த மண்ணில், மண்ணுக்குரிய உய்கர்கள் வேலை வாய்ப்பற்றவர்களாயினர், அவர்கள், பிற தேசிய இனத்தவர்கள் வாழும் தொலைவிடங்களுக்குத் துரத்தப்பட்டனர். அவர்களின் சொந்தப் பண்பாடு இகழ்ச்சிக்குரியதானது. 

விளைவு, சிங்கியாங் பகுதியில் வெறும் 15 இலக்கம பேர் மட்டுமே வாழ்ந்த ஹன்சீனர்கள், 85 இலக்கம் பேராக உயர்ந்தனர். உய்கர்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவும், ஆள்வினை அதிகாரங்களில் தீர்மானிக்கும் ஒரு பேராற்றலாகவும் அவர்கள் வளர்ச்சி பெற்றனர். சொந்த வீட்டுக்குள், சொல்லாமல் வந்து குடிபுகுந்த அயலவன் எல்லா அதிகாரங்களையும் கையில் எடுத்துக்கொண்டதை உய்கர்கள் உணர்ந்து கொதிப்படைந்தனர். 

போராட்டங்களும் வன்முறைகளும் தவிர்க்க முடியாதவை ஆயின. 

உய்கர்களுக்கு மண் இழப்பும் வாழ்வு இழப்பும் கண்கூடான மெய்ம்மைகள் ஆயின. 

மகிந்த இராசபக்சன் இலங்கையில் இதைத்தான் செய்யத் துணிந்திருக்கிறான். தமிழர்களுக்குச் சொந்தத் தாயகம் என ஒன்று இருந்தால்தானே அவர்கள் சம உரிமை கேட்பார்கள்! போராடுவார்கள்! சொந்தத் தாயகம் என ஒன்று இல்லாமல் செய்து விட்டால்? சொந்த மண் என்பதே இல்லாமல் ஆக்கி விட்டால்? பிறகு போராட்டம் ஏது? உரிமைக்குரல் எப்படி எழும்? எனவே, இலங்கையில் வடக்கு, கிழக்கு மாநிலங்களில், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேகவேகமாகச் சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியேற்றிக் கொண்டிருக்கிறான்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்திலும் நிலங்களைச் சிங்கள மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதும் அவர்களுக்கு அங்கு வீடுகள் கட்டித்தருவதும் வேகமாக நடந்து வருகின்றன. தமிழர்களின் பண்பாட்டுச் சுவடுகள், வழிபாட்டு இடங்கள் அழிக்கப்பட்டு, சிங்கள பவுத்த வழிபாட்டுத் தளங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சிறிய தேசிய இனங்களை இப்படித்தான் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பெருந்தேசிய இன வெறியர்களுக்கு ‘உலகமய மேதைகள்’ அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நம் தமிழ்நாட்டில் சில உலகமய மேதைகள் உலகச் சிக்கல்களுக்கெல்லாம் அறிவுத்தீர்வு கூறுவோராக உள்ளனர். இந்துத்துவா பெற்றுப்போட்ட இந்த எருமைக் கன்றுகள் எப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானவை; தேசிய இன உரிமைக்கு எதிரானவை; மக்கள் மொழிகளுக்கு எதிரானவை; மக்கள் பண்பாட்டுக்கு எதிரானவை. அமெரிக்க முதலாளிய நலம், பார்ப்பனிய நலம், சமற்கிருத நலம் இவை மட்டுமே இந்த எருமைக் கன்றுகளுக்கு எப்போதும் தேவை.

குரூரமூர்த்தி ஒருவர் காசுமீரச் சிக்கலைத் தீர்ப்பதற்கான வழி முறைபற்றித் தின இதழ் ஒன்றில் மணி மணியாக எழுதியிருக்கிறார். 

சிங்கியால் நிலப் பரப்பைவிட மிகவும் சிறியது காசுமீர். சீனா சிங்கியால் மீது படையயடுத்துத் தன் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டது. ஆனால் சிங்கியாங்கை உலகச் சிக்கலாகச் சீனா மாற்றவில்லை. இந்தியா, காசுமீரச் சிக்கலை உலக நாடுகளவைக்கு எடுத்துச் சென்றதன் மூலம், உலகச் சிக்கலாக்கிவிட்டது என்று கண்ணீர் வடிக்கிறார்.

காசுமீர், தன்னுரிமை பெற்ற தனிநாடாக இருந்து வந்ததைப் பற்றியும், இந்தியாவோடு எந்தெந்த வகையில் இணைந்திருக்க முன்வந்தது என்பது பற்றியும் இந்தக் குருமகா மூர்த்திகள் அறிந்துள்ளார்களா? தெரியவில்லை. தனி அரசியல் சட்டம், தனித்தகுதி, தனிக்கொடி, தனி வானொலி என எல்லாத் தனித்தகுதிகளும் பெற்றிருந்த காசுமீர இனம் எப்படி இதை எல்லாம் இழந்தது, எப்படி ஏமாற்றப்பட்டது என்பதை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள்?

சொன்ன சொல் மாறியவர்கள் காசுமீரிகளா? இந்திய ஆளும் வகுப்பா? காசுமீரிகளின் விருப்பத்தை அறியும் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் போன தெப்படி? ஏன் குருமகாமூர்த்திகள் பேச மறுக்கிறார்கள்? காசுமீர் காசுமீரிகளுக்கு உரியது. இந்தியா பாகிசுத்தான் என்னும் குரங்குகளின் கையில் இது அப்பமாக மாறியது எப்படி?

இந்த வினாக்களுக்குள் புதைந்திருக்கும் கமுக்கங்களை எல்லாம் மூடிப் புதைத்து விட்டு, இப்போது குரூரமான ஒரு கருத்துரையை இந்திய அனைத்ததிகாரத் தலைமைக் களத்திற்கு முன்வைக்கிறார் இந்தக் குரூரமகாமூர்த்தி. 

“சீனா தனது ராணுவத்தை மாத்திரமே சிங்கியாங்கை நிர்வகிப்பதற்கு நம்பவில்லை. மாறாக, சீனா தனது மக்களை நம்பியது. ஹன்சீன மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியில் அதிகரிக்கும்படி சீனா பார்த்துக் கொண்டது..... சிங்கியாங்கில் பாதிக்கு மேல் ஹன்சீன மக்களால் நிரப்பப் பட்டபோது, இங்கே காஷ்மீரிலோ, ஹிந்துக்களே இல்லாத நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக, இந்திய மக்களை நம்பிக் காஷ்மீரைக் காக்க முடியாமல், இராணுவத்தை நம்ப வேண்டியிருக்கிறது... இந்தியா மட்டும் சீனா சிங்கியாங்கில் கையாண்ட அதே நடைமுறையைப் பின்பற்றியிருந்தால், காஷ்மீரை 370ஆவது ­ரத்தின் ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து அங்கு குடியேறு பவர்களைத் தடுக்காமல் இருந்திருந் தால் காஷ்மீர் இன்று இந்தியாவுடன் இரண்டற இணைந்துவிட்டிருக்கும்.” 

மகா மூர்த்தியின் குரூரச்சிந்தனை வெளிப்பாடுதான் இது.  

இவர்கள் என்ன நினைக்கிறார் களென்றால், இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களே இருக்கக் கூடாது. சமஸ்கிருதமயப் படுத்தப்பட்ட ஹிந்துத்துவ ஏக இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும். இதற்கு எதிரான சிந்தனை கொண்டதும், ஹிந்துத்துவத்தைச் செரித்துக் கொள்ளாததுமான தேசிய இனங்களின் தாயகத்தில் (மாநிலத்தில்) பிறமாநிலத் தவரைக் கொண்டுவந்து குடியேற்ற வேண்டும். ஒரு மாநிலத்தில், அம்மாநிலத்தவருக்கு, அம்மாநில மொழியினருக்கு இணையாக, பிறமாநிலத்தவர், பிறமொழியினர் குடி யேற்றப்பட வேண்டும். இது எமது நிலம் என்று உரிமை கொண்டாடும் தகுதியை எவருக்கும் வழங்கக்கூடாது. சொந்த மண், சொந்த நிலம் இல்லாத வெற்றுக் கூலிகளாக மண்ணின் மக்கள் மாற்றப்பட வேண்டும். 

இதுதான் காசுமீரச் சிக்கல் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இனங்களின் சிக்கல் களையும் தீர்ப்ப தற்குரிய ஒரே வழி. சொந்த மண் சொந்த நிலம் என ஒன்றும் இல்லாத, சமற்கிருதமே தம் சொந்த மொழி என நம்புகின்ற சனாதன பிராமண இந்துத்துவக் கொடியவர்களின் சிந்தனை இது. 

தேசிய இனங்கள் தன்னுரிமை பெற்றால் தமக்கு மண்ணும் இல்லை; வாழ்வும் இல்லை என்பது குரூரமூர்த்திகளின் கவலை. இவர்களின் திட்டங்கள் நடைமுறைப் பட்டால், தமிழினம் உட்பட்ட பல்வேறு தேசிய இனங்கள் தம் சொந்த மண்ணை, சொந்தப் பண்பாட்டை இழக்கும். சொந்த மண்ணில் சொந்த மக்கள் வாழ்வை இழப்பார்கள். அயலவர் ஆளுமை எங்கும் கொடி கட்டிப் பறக்கும்.

தமிழினம் தனது இன்றைய நிலையைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்துக் கொள்வது நல்லது. தமிழகம் முழுவதிலும், குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் வேளாண் நிலங்களைக் குஜராத்திகளும், மார்வாடிகளும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். நகர்ப்புறங்களும் அப்படியே. நகர்ப்புறங்களில் உணவுக் கடைகள் முதல், பல்வேறு வணிக நிறுவனங்களிலும் சிப்பந்திகள் வட மாநிலத்தவராக உள்ளனர். முதலாளிகளும் வட மாநிலத்தவர்களே. மருத்துவமனைகளிலும் மருத்துவர் பலர் வடமாநிலத்தவர்களாக வந்துவிட்டனர். கழிப்பறைகள் ஏலம் எடுப்பவரும் காசு வாங்குபவரும் வட நாட்டவர்களே!

கட்டட வேலைகள், மின்சார வேலைகள், குழிதோண்டுதல் எனப் பலதரப்பட்ட வேலைகளுக்கும் வட இந்தியக் கூலிகளே வந்து நிறைந்து கொண்டிருக்கிறார்கள். 

என்ன செய்யப் போகிறோம் நாம்? 

தமிழினம் சிறுபான்மை ஆகிக் கொண்டிருக்கிறது தமிழகத்தில், தமிழ்மொழி வற்றி வறண்டு கொண்டிருக்கிறது. தாய்மண்ணில் குருதியும், சதையும், எலும்பும், நரம்பும், உயிர்ப்பும் இல்லாத ஒரு மக்கள் கூட்டமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

தேசிய இனங்களின் குரல்வளையைக் கடித்துக் குருதியை உறிஞ்சக் குரூரமூர்த்திகள் ‘கவலை’யோடு வருகிறார்கள். வினைநிரம்பிய சிந்தனைகளுடன் வீதியயங்கும் அவர்கள் அலைகிறார்கள்; நிறைகிறார்கள். 

நாம் அழியப் போகிறோமா? இல்லை, ஆர்த்தெழுந்து நிமிரப் போகிறோமா?

- இரணியன்

Pin It