Periyarr 450எனது 95ஆம் ஆண்டு பிறந்த நாள் துவக்கத்துக்கு வழமைபோல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுதவேண்டியிருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன், அப்படி எழுதப்படும் இக் கட்டுரை என்னால் ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும் கட்டுரைகளில் இதுவே கடைசியான கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம்.

ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், அடுத்த ஆண்டு மலர் எழுதப்பட வேண்டிய காலத்தில் நான் இருப்பேனோ, இல்லையோ என்கிற பிரச்னை மாத்திரமல்லாமல், எழுதும்படியான வாய்ப்பு இருக்குமோ, இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும்.

ஏனெனில், இன்னும் நாம் இருப்பது போலவே அதாவது, இந்திய ஆட்சி என்பதற்குள் பிரஜையாகவும், சமுதாயத்தில் நாலாஞ் சாதி (சூத்திர மக்களாகவும்) சட்டப்படி, சாஸ்திரப்படி பார்ப்பானின் தாசி மகன் என்னும் பெயருடன் நமது தாய்மார்கள் பார்ப்பானின் தாசிகளாகவும் இருக்கும் தன்மையாலேயே இருப்போமா என்கின்ற கருத்தைக் கொண்டே இப்படி எழுதுகிறேன். !

நம்மில் பலர் சிறையில் இருக்க நேரிடலாம்

இந்திய அரசியல் சட்டப்படி நாம் இந்திய ஆட்சியில் பிரஜையாய் இருக்கும்வரை இந்துவாய் அதாவது, கிறிஸ்துவனாகவோ, முஸ்லீமாகவோ நாம் மதம் மாற்றிக் கொள்ளாதவரை நாம் நமது பண்டார சன்னதிகள் உட்பட பவுத்தனுக்கும், ஜெயினனுக்கும் சமானமாக இருக்கும் படியாக இருந்தாலும், பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், வேறு எந்தப் பெயரில் வாழ்ந்து வருபவனாக இருந்தாலும் சூத்திரனாகத்தான், பார்ப்பானின், தாசி மகனாகத்தான் இருந்தாக வேண்டும். இது தான் இன்றைய இந்திய அரசியல் சட்டமாகும். இந்த சட்டத்தைத் திருத்தவோ மாற்றவோ நம் மக்களுக்கு ஒருநாளும் சக்தியோ, உரிமையோ ஏற்படும் என்று கருதவே முடியாத நிலையில் இருக்கிறோம். அது மாத்திரமல்லாமல் இந்திய ஆட்சியில் இருந்து தமிழ் நாட்டை விலக்கிக் கொள்ள முயற்சி செய்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயமான - நிர்பந்தமான நிலையில் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியிலிருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பது பற்றி நமக்கு முடிவு செய்து கொள்ள முடியாமல் இருந்தாலும் இம் முயற்சியில்

நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயேதான் இந்தப்படி எழுதுகிறேன்.  உடனடியாக விடுதலை முயற்சியில் ஈடுபட வேண்டும் நமக்கு இன்றைய இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்னை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்னையில் நாம் இன்று இருக்கும் இழி தன்மையில் இருந்து, அதாவது சூத்திரனாக, தாசி மகனாக நம் தாய்மார்கள் தாசிகளாக சட்டப்படி, சாத்திரப்படி இருக்கும் நிலைமையை மாற்றிக்கொள்ள முயற்சிக்காமல் நாம் இருக்க முடியுமா? இந்தியாவில் நாம் இருக்கும்வரை இந்துவாகத்தானே இருந்து ஆகவேண்டும். இந்து என்றாலே, முஸ்லீம், கிறிஸ் துவம் தவிர மற்ற யாவருமே சூத்திரர் தாசி மக்கள் தான் என்று இருப்பதால், ஏதாவது முயற்சி செய்து தான் ஆகவேண்டும். நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட் டார்கள். மதம் மாறுவதை இழிவாய்க் கருதுபவர்களாவார்கள். ஆதலால் நாம் உடனடியாக விடுதலை அதாவது இந்திய கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்திரத் தமிழ் நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டிய வர்களாக இருக்கிறோம். இம் முயற்சிக்கு இன்றைய நம் தி.மு.க. ஆட்சி இணங்கும் என்று கருதமுடியாது.

ஏனெனில், தி.மு.க. ஆட்சி விரும்புவதெல்லாம் இந்திய கூட்டாட்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சிதான் அது விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில் தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும் செய்ய முடியாது. 'இந்து' என்றால் சட்டப்படியான விளக்கம் இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப் பற்றி பழைய மனுதர்ம நிலையை மிகமிகப் பலப்படுத்திக்கொண்டபடியிருக்கிறது. உதாரண மாக சொல்ல வேண்டுமானால், கர்ப்பகிரகத்திற்குள் சூத்திரன், அதாவது பண்டார சன்னதி உட்பட இந்து என்ற தலைப்பில் வரும் எவருமே, பார்ப்பான் தவிர்த்து எவருமே செல்ல முடியாதென்று உயர்நீதி (சுப்ரீம்) மன்ற தீர்ப்பு இருப்பதினாலும், இன்னும் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கென்று போகும் யாருமே தீண்டத் தகாதவர்கள்போல் வாயில்படிக்கு வெளியில் தான் எட்டி நிற்கவேண்டும் என்றால், மற்றப்படி எதில் நாம் மாறுதலைக் காணமுடியும் ?

இன்று அமுலில் இருக்கும் இந்து லா என்னும் சட்டத்திலும், பல உயர் நீதி மன்றங் களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர் களை மிகமிக இழிவாகக் கூறி, நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து என்னும் சொல்லுக்கு சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால், "கிறிஸ்துவர்கள்- முஸ்லீம் கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்.'' இதன்படி நாத்திகன், பகுத்தறிவு வாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று  ஆகிவிடுகிறார்கள்.

சுயமரியாதை இயக்கத்தின் 50 வருட சாதனை

நான் முதலில், நான் இந்து அல்ல என்று சொல்லி விட்டால் இழிவு நீங்கிவிடும் என்று தான் கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்து வர்கள், முஸ்லீம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள் - இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இன்று நம் நாட்டில் இந்துக்கள் எல்லோருக்குமே அரசியலில் தான் முக்கிய கவனம் இருக்கிறது. அன்றியும் நாட்டுப் பிரிவினை என்றால், எல்லா மக்களுமே பயப்படு கிறார்கள். காரணம் பதவி கிடைக்காதே என்கின்ற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல வேண்டுமே என்றும் பயப்படுகிறார்கள்.

50 வருஷ காலமாக சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு - பல பதவி உத்தியோகம் பெற நேர்ந்ததோடு அரசியலில் பார்ப்பனர் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்லாமல் சமுதாயத் துறையில் உள்ள அடிப்படை இழிவு நல்ல அளவுக்கு பலம் பெற்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.  எனவே, நாம் சட்டத்தைப் பற்றி பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப் படாமலும், சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன்வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதை பணிவோடு தெரி வித்துக் கொள்கிறேன். 

"சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்'' என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக்கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்து தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல் (கூப்பாடாக) லாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொது மக்களே! இளைஞர்களே! பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்!! உறுதி கொள்ளுங்கள்!!!