1946 தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டே அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. அதை தொடக்கம் முதலே கண்டனத் துக்கு உட்படுத்தியவர் பெரியார்.

1947இல் இந்தியா சுதந்தரமடைந்ததாக நாடே கொண் டாடிய போது அது திராவிடருக்கு (தமிழருக்கு) துக்க நாள். வெளி நாட்டானுக்கு அடிமைப்பட்டது போய் இனி வடநாட் டானுக்கு நாம் அடிமையாக இருக்க நேரிடும் என்று எச்சரித் தார், பெரியார்.

இதுகுறித்த பெரியாரின் அறிக்கையைப் பார்ப்போம்.

பிரிட்டிஷ்-பனியா-பார்ப்பனர் ஒப்பந்த நாள் - பெரியார் அறிக்கை:

ஆகஸ்ட் 15-ந் தேதி சுயராஜ்யத்தைப் பற்றி ஏதேதோ கூறப்படுகிறது. பூரண சுயராஜ்யம் என்றும், அதற்காகக் கொண்டாட்டமென்றும் திட்டம் வகுக்கப்படுகிறது. இதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை; வேண்டுமானால் தன்மானமுள்ள காங்கிரஸ் திராவிடர்கள் அன்று வெட்கித் தலைகுனிய வேண்டும்; ஏன்? 1929ஆம் ஆண்டிலே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் எந்த அர்த்தத்தில் தீர்மானிக் கப்பட்டதோ அந்த சுயராஜ்ந்தானா நாளை வரப்போவது? வெள்ளையர் உறவு சிறிதுகூட இல்லாத பூரண இந்தியா முழுவதையும் கொண்ட சுயராஜ்யம் - அதாவது, பூரண சுயேச்சை கேட்கப்பட்டது. அதற்காக அன்றுமுதல் இன்று வரை நமது மக்கள் எவ்வளவு தியாகங்கள் செய்தனர்? குறிப்பாகக் கூறவேண்டுமானால் காங்கிரஸ் திராவிடர் எவ்விதக் கஷ்டநஷ்டங்களுக்கு ஆளானோம்? என்னையும் சேர்த்து நம் இனத்துக்குள்ளாகவே எவ்வளவு போராட்டம்; எவ்வளவு பொருளை வாரிக்கொட்டி இருப்போம்! சுயராஜ் யத்தின் பேரால் அவ்விதமெல்லாம் செய்தும் கடைசியாகக் குடியேற்ற நாட்டு அந்தஸ்துதான் கிடைத்தது.

இந்தக் குடியேற்ற நாட்டு அந்தஸ்தை அன்று மிதவாதி கள் என்று கூறப்பட்டவர்களால் கேட்கப்பட்ட போது - அவர்களைப் பிற்போக்காளர், வெள்ளையர் தாசர்கள் என்று கூறி ஒத்துழையாமை செய்து, நாட்டில் பெரிய கலவரங்களி லிருந்து பல எதிர்ப்புகளை உண்டாக்கி, கடைசியாக அதே குடியேற்ற நாட்டு அந்தஸ்தை-அதுவும் முழு இந்தியாவுக்கு மின்றி இந்திய உபகண்டத்தின் மூன்றிலொரு பாகமான இந்துஸ்தான் என்ற பகுதிக்கு மட்டும் பெற்று, அதை சுயராஜ்யம் என்று கொண்டாடுவது என்றால் இதைவிட வெட்கக் கேடான முறை வேறு இருக்க முடியுமா?

இந்துஸ்தான் சுயராஜ்யம் என்று நாளை கொண்டாடப் போகும் வட நாட்டு ஏகாதிபத்திய ஆட்சி, பிரிட்டி ஷாருக்கு ஏஜெண்டாக-கையாளாக யிருந்து வெள்ளையருடன் வடநாட்டு பிர்லா, பஜாஜ் கோஷ்டியினர் செய் துள்ள ஒப்பந்த ஆட்சியேயன்றி, சுய ஆட்சி என்று எந்தக் காங்கிரஸ் அரசியல் நிபுணராகிலும் கூற முடியுமா?

வேண்டுமானால், வடநாட்டுக்காரர்களுக்கு இன்னும் அதிகமாக நம் மாகாணத்தின் பொருளாதாரத்தைச் சுரண்ட அதிகாரம் இந்த சுயராஜ்யத்தின் மூலம் ஏற்பட்டிருக்கிறதற்கு அவர்களுக்குக் கொண்டாட்டம் ஏற்படலாமே தவிர, மான முள்ள திராவிடன் இனி திண்டாட வேண்டித்தானே இருக்கப் போகிறது? ஆகஸ்ட் சுயராஜ்யம் அநீதிக்கு அடிப்படையானதே தவிர, நம் நாட்டு மக்களின் நேர்மையான உண்மைச் சுதந்திர வாழ்வுக்கு ஏற்றதல்ல.

இந்த இந்திய உபகண்டத்தின் மற்ற மாகாணங்களை விட நம் மாகாணமே எல்லா வளப்பத்திலும், அறிவிலும் முதன்மையானதென்பது உலகறிந்த சரித்திரச் சான்றாக யிருக்கும். நமக்குள் இன ஒற்றுமையில்லாததாலேயே மற்றமாகாணத்தவர்களுக்கு, குறிப்பாக வடநாட்டுக்காரர் களுக்கு நாம் தாசானுதாசனாய் இருந்து வருகிறோம்.

இந்துஸ்தான் சுயராஜ்ய மாகாணங்களில் இனி கவர்ன ராக இருப்பவர்கள் சாதாரண கலெக்டர்களுக்குள்ள அதிகாரங் கள்கூட இன்றி, வடநாட்டுத் தாக்கீதுக்கு அடிபணிந்து இருக்க வேண்டுவதோடல்லாமல், வேறு ஏதாவது உண்டா என்று கேட்கிறேன். கவர்னர்களின் கதியே இவ்வாறென்றால், மந்திரிகளைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை. ‘அட்வைசரி’ சர்க்காரிலாவது மந்திரிகளுக்குச் சிறிது அதிகாரம் இருந்தது. ஆகஸ்டு சுயராஜ்யத்தில்-பஞ்சாயத்து போர்ட்டு மெம்பர்களுக் கிருக்கும் அந்தஸ்தைவிடக் குறைவானதென்றே கூறலாம்- மாகாண மந்திரிகளுக்குக் கொடுத்துள்ள அந்தஸ்து.

இந்த இலட்சணத்தில் கொண்டாட்டமாம்! காங்கிரஸ் ஆரியன்தான் கொண்டாடுகிறான் என்றால் காங்கிரஸ் திராவிடனுக்கு ரோஷம் இருக்க வேண்டாமா? ஏன், நமது தோழர்கள் அவினாசியோ, பக்தவத்சலமோ, சிவசண்முகமோ, ஆகஸ்டு சுயராஜ்ய ஜனாதிபதியாக, பிரதமராக இருக்க இலாயக்கில்லையா? வடநாட்டான் தேசபக்திதான் அசல் தேசபக்தி; மற்றவர்களுடையது போலியா? இவ்விதப் பித்த லாடடங்களையெல்லாம் தகர்த்தெறியாமல் வெத்துவேட்டு சுயராஜ்யத்தில் எத்தனை நாளைக்கு மானத்துடன் வாழ முடியும்?

எனவே, தோழர்களே! வடநாட்டுப் பாசிச ஆட்சியை அறவே அழித்த, நம் மாகாணத்துக்கு - திராவிட நாட்டுக்குப் பூரண சுதந்தரம் கொண்ட விடுதலையையடைய வேண்டுமென்ற போராட்டம் எளிதில் கைகூடுமென்று நாம் நம்ப முடிய வில்லை. காங்கிரசின் போக்கே குண்டாந்தடி ஆட்சியாக இருந்து வருகிறது. மக்களைத்துன்புறுத்துவதே அகிம்சா மூர்த்தியின் அருளைப் பெற்ற சீடர்களின் சுயராஜ்யத்தின் அடிப்படையாக இருந்து வருகிறது. தொழிலாளர்களைத் துன்புறுத்துவதே இன்றைய பட்டேலின் பாசிச வெறியாகக் காட்சியளிக்கிறது. நம் நாட்டை நாம் ஆள வேண்டும். மற்ற நாட்டினரின் பொதுவான விவகாரங்களில் நட்புக் கொண்டு வாழ்வதே மானமுள்ள வாழ்வு என்றால், அதை எதிர்க்கும் துரோகிகளின்-பட்டம், பதவிக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்கும், வடநாட்டவர்களின் ஆதிக்கச் சுரண்டலுக்குத் துதிபாடும் நமது விபீஷணர்களின் போக்கு ஆகியவற்றிற் கிடையே நாம் போராட வேண்டியிருக்கிறது.

எதிர்காலத்தில் இந்துஸ்தானத்தில், குறிப்பாக நம் நாட்டில் ‘நவகாளி’கள் தோன்றுவதில் ஆச்சரியப்படுவதற் கில்லை. நம்மை அவ்வளவு நாசப்படுத்தவே வடநாட்டு ஏகாதி பத்தியம் தயார் செய்து கொண்டிருக்கிறது, சுயராஜ்யம் என்ற பேரால்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இவ்வளவு எதிர்ப்பு களையும் அநீதிகளையும் சகித்து வென்று, நம் திராவிடத்தின் சுதந்தரத்தை நிலைநாட்டியே தீருவோம். எனவே, அதற் கேற்ப, இளைஞர்களே! திராவிட இனத்தவர்களான தொழி லாளர்களே! விவசாயிகளே! மாணவர்களே! அறிஞர்களே! உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். திராவிடத்திலும் ‘நவகாளி’கள் தோன்றினால் அதற்கு நாம் அல்ல பொறுப்பு; இந்நாட்டு ஆரியர்கள்தாம் என்பதை எதிர்காலம் கூறும். அந்த நிலையிலிருந்து பழிச்சொல் ஏற்படாவண்ணம், இனி யாவது, ஆரியம் வடநாட்டு ஆதிக்கத்துக்குத் தரகராயிருந்து நமது திராவிடத்திற்குத் துரோகம் செய்ய வேண்டாமென்று எச்சரிக்கை செய்கிறேன்.

நாட்டை ஆண்டதாக சரித்திரச் சான்றுகளில் தனது இனத்தைப் பற்றி இதுவரை பொறிக்கப்படும்படியான நிலை யில்லாதிருந்து வரும் ஆரியம் - நாட்டைப் பிறர்க்குக் காட்டிக் கொடுக்கும் இனம் என்பதையாவது திராவிட நாடு பிரிவினை விஷயத்திலாகிலும், பிற்காலத்தில் எழுதும்படியான நிலை யைத் தேடிக் கொள்ள வேண்டாமென்று எச்சரிக்கை செய் கிறேன். இதனால் - திராவிடத்தால் ஆரியத்துக்குத்தான் முழுதும் அழிவு ஏற்படும் என்பதை ஆரியம் உணரட்டும்.

எனவே, காந்தியாரல்லர், அவர்தம் சீட கோடிகளல்லர், அல்லது அந்தராத்மா அல்ல, யார் எதிர்த்தாலும், திராவிட நாட்டை அடைந்தே தீருவோம் நாம்! அதற்குப் பல தொல்லைகளைத் தாண்ட வேண்டியிருக்கும் - சலிப்படை யாதீர்! மானமில்லாது வாழ்வது வாழ்வல்ல. திராவிடன் மானமுள்ளவன் என்பது சரித்திரச் சான்று. அதற்கேற்ப அவன் இனி எந்த நாட்டவனுக்கும், எக்காரணத்தை முன்னிட்டும் அடிமையாயிரான் என்பது உறுதி. (விடுதலை, 27.7.1947: ஈ,வெ.ரா.சிந்தனைகள், 684-686, முதல் பதிப்பு 1974)

ஏமாற்றும் திருவிழாவை திராவிர்கள் கொண்டாட வேண்டாம் - பெரியார் அறிக்கை வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட வில்லை. இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டு அந்தஸ்து அளித்திருப்பதாய்ச் சொல்லுவதன் மூலம், இந்தியாவின் நிர்வாக அதிகாரத்தை இந்தியருக்கு மாற்றியிருக்கிறார்கள்.

இந்தியர்களில் எல்லாக் கட்சி மக்களிடையேயும் அதி காரத்தை ஒப்புவிக்காமலும், எல்லோருடைய குறைகளைக் கேட்காமலும், எல்லாக் கட்சியாரையும் சமரசப்படுத்தாமலும், தங்களுக்குப் பல வழிகளிலும் வியாபாரத்திற்கும் பிரிட்டன் நலத்திற்கும் சில இரகசிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு காங்கிரஸ்காரரிடம் மாத்திரம் அதாவது, பார்ப்பன ஆதிக்க மும் வடநாட்டார் சுரண்டல்வாதியும் கொண்ட - ஒரு சுயநல தந்திர சூழ்ச்சி கொண்ட கோஷ்டியார் கைக்கு அதிகாரத்தை மாற்றிவிட்டு, அவர்களுக்குப் பாதுகாப்புத் தரும் நிபந்தனை யோடு அதிகாரத்தை மாற்றி இருக்கிறார்கள்.

எனவே, குடியேற்ற நாட்டு அந்தஸ்து என்பது அதிகார மாற்றமே தவிர, நாடு ஒப்படைப்பு அல்ல.

உதாரணமாக, இந்தியாவுக்கு அரசர் ஜார்ஜ் மன்னர் ஆவார். மேற்பார்வையாளர், கவர்னர் - ஜெனரல் மேன்மை தங்கிய மவுண்ட்பேட்டன் ஆவார்.

ஆதலால், வெள்ளையருக்கும் காங்கிரசுக்கும் ஏற்பட்ட ஓர் ஒப்பந்த ஆட்சிதானே ஒழிய, இந்திய மக்களுக்கு ஏற்பட்ட சுதந்தர ஆட்சியல்ல. இதன் பயனாய் இந்த நாட்டிலுள்ள காங்கிரசல்லாத  மக்களுக்கு நன்மை இல்லை; பிரதிநிதித் துவம் இல்லை. வருணாசிரம தர்மக் கொடுமை ஒழிவதில்லை.

ஏற்படப் போகும் மாகாண ஆட்சி என்பது வெள்ளையர் அதிகார ஆட்சிக்காலத்திலிருந்த உரிமையைவிட மோசமான ஆட்சியேயாகும். அதிகாரங்கள் யாவும் மத்திய அரசாங்கத் திற்குத்தான் உண்டு.

சில அதிகாரங்கள்தாம் மாகாணங்களுக்கு என்றாலும், அவைகளும் கவர்னருக்கே ஒழிய, மந்திரிகளுக்கல்ல.

கவர்னர், தெரிந்தெடுக்கப்பட்ட மந்திரிகளுக்குட்பட்ட வரல்லர்; மந்திரிகள் வெறும் பொம்மைகள் - அதாவது ஆலோசனை சொல்லுபவர்கள் ஆவார்கள்.

சென்னை மாகாணத்துக்கு 2000 மைல் தூரமான தில்லியில் இருக்கும் பிரஸிடெண்ட் கையில், சென்னை மாகாண மக்களை நடத்தும் ஆட்சி இருக்கிறது.

பிரஸிடெண்டும் மத்திய அரசாங்க மந்திரிகளும் அசெம்பிளி மெம்பர்களும் சேர்ந்த மொத்த கணக்கில் 10இல் ஒரு பாக எண்ணிக்கைக்குக் குறைவான எண்ணிக்கை யாளர்தாம், அங்கு சென்னை மாகாணப் பிரதிநிதிகளாய் இருப்பார்கள். அவர்களும் பெரிதும் ஆரிய அடிமைகளாகத் தாம் இருப்பார்கள்.

வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் சமுதாயத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் ஏராளமான பேதம் உண்டு.

வியாபாரத்தில் வடநாட்டார் கொள்ளை இனியும் அதிகப் படுமே ஒழிய, சிறிதும் குறையாது.

ஆத்மார்த்தத்துறை என்னும் மதக்கொடுமையால் சமுதாயக் கொடுமை வடநாட்டார் இஷ்டப்படிதான் பெருகுமே தவிர, சமுதாய சமத்துவம் ஏற்பட வழி இல்லை.

நாம் இன்று திராவிட நாடு கேட்பது முக்கியமாய் வட நாட்டான் பொருளாதாரச் சுரண்டலும், ஆரியன் விளைந்த சமுதாய இழிவும் நீங்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

அதாவது - இன்று, நைஜாம், திருவாங்கூர், மைசூர் நாடுகள் விரும்புவது போல் சென்னை மாகாண நாலே முக்கால் கோடி திராவிட மக்கள் தங்களது கலாச்சாரம், பொருளாதாரம் முதலியவைகளுக்கு ஏற்ற சுயேச்சை நாடாக இருக்க வேண்டும் என்பதே.

ஆதலால், வெள்ளையர் நம்மை மோசடி செய்ததை வெறுக்கவும் அதாவது, வடநாட்டு பனியாக்களுடையவும், ஆரியப் பார்ப்பனர்களுடையவும் சூழ்ச்சிக்கும், ஏமாற்றத் துக்கும் உள்ள தந்திரத்திற்கும் நாம் ஏமாந்துவிடவில்லை என்பதைக் காட்டவும்; பூரண சுயேச்சையுள்ள திராவிட நாடுதான் நமது இலட்சியமே தவிர, அதற்குக் குறைந்த எதைக் கொண்டும் நாம் திருப்தியடையமாட்டோம், ஓயமாட்டோம், கிளர்ச்சி செய்தே தீருவோம் என்பதைக் காட்டவும் இம்மாதம் 15-ந் தேதிநடக்கும் சுதந்தரத் திருநாள் என்னும் ‘ஆரியர்-பனியா’ ஏமாற்றுத் திருவிழாவில் நாம் கலந்து கொள்வதில்லை என்கிறோம்.

இதைக் காங்கிரஸ்காரரும், ஆரியர்-பனியாக்கள்-அடிமைகளும் திரித்துக் கூறி ‘வெள்ளையனை வெளியேற்றுவது, திராவிடர் கழகத்தாருக்கு இஷ்டமில்லை’ என்று விஷமப் பிரச்சாரம் செய்வார்களாகில், அது காங்கிரசாரின் மற்றொரு பித்தலாட்டப் பிரச்சாரம் என்று திராவிட மக்கள் கருத வேண்டுமேயொழிய ஏமாந்து போகக் கூடாதென்று வேண்டிக் கொள்கிறேன்.

(விடுதலை, 6.8.47: ஈ.வெ.ரா.சிந்தனைகள், 686-688, முதல் பதிப்பு, 1974).

தொடரும்

Pin It