Ambedkarசட்டத்தின் மூலமோ, பகுத்தறிவு ரீதியான உத்திகளாலோ தீண்டாமை மறைந்து விடாது என்பதற்கு மற்றொரு காரணம் உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்து சமூக அமைப்பு படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு, படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. முன்னது பலவீனமானது. பின்னது, தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டு நிலைக்கும் திறன் கொண்டது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பில் கீழ்நிலைப் பிரிவுகள் ஒன்று சேர்ந்து அமைப்பைக் கவிழ்த்துவிட முடியும். அவற்றில் எதற்கும் அந்த அமைப்பைப் பாதுகாப்பதிலும் விருப்பம் இல்லை.

ஆனால், படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை நிலவும் அமைப்பில், பாதிக்கப்பட்ட பிரிவுகள் ஒன்றிணைந்து பொதுவான தாக்குதல் நடத்தும் வாய்ப்புக்கு இடமேயில்லை. இத்தகைய அமைப்பில் பாதிக்கப்பட்ட பிரிவினர் பொதுவான நிலையில் இல்லை. உயர்ந்தது, தாழ்ந்தது என்ற நிலைகள் மட்டுமே உள்ள போதுதான் இவ்வாறு இருக்க முடியும். படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை முறையில் மிக உயர்ந்தவர்கள் (பார்ப்பனர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, சற்று அதிகம் உயர்ந்தவர்கள் (சத்திரியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே உயர்ந்தவர்கள் (வைசியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, தாழ்ந்தவர்கள் (சூத்திரர்கள்) உள்ளனர். அவர்களுக்கும் கீழே, அதிகம் தாழ்ந்தவர்கள் (தீண்டத்தகாதவர்கள்) உள்ளனர். இவர்கள் அனைவருமே மிக உயர்ந்தவர்களிடம் மனத்தாங்கல் கொண்டவர்கள்தாம்; அவர்களைக் கீழே வீழ்த்திவிட விருப்பம் உள்ளவர்கள்தான். ஆனால், இவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள்.

சற்று அதிகம் உயர்ந்தவன் மிக உயர்ந்தவனை ஒழித்துவிட ஆவலாயிருக்கிறான். ஆனால் அவன், உயர்ந்தவனுடனும் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் இணைய விரும்பவில்லை. அவர்கள், தன்னுடைய நிலையை அடைந்து தனக்கு சமமாகிவிடுவார்களோ என்று அவன் நினைக்கிறான். உயர்ந்தவன் தனக்கு மேலே உள்ளவனான சற்று அதிகம் உயர்ந்தவனை வீழ்த்திவிட விரும்புகிறான். ஆனால், அவன் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் சேர விரும்பவில்லை. அவர்கள் தனது சமூக நிலைக்கு உயர்ந்து தன்னுடன் சமநிலைப் பெற்று விடுவார்களோ என்று அவன் அஞ்சுகிறான். தாழ்ந்தவன், மிக உயர்ந்தவனையும், சற்று அதிகம் உயர்ந்தவனையும், உயர்ந்தவனையும் கீழே தள்ளி விட விரும்புகிறான். ஆனால் அவன் மிகத் தாழ்ந்த வனுடனும் கூட்டுச் சேரமாட்டான். மிகத் தாழ்ந்தவன் சமூக நிலையில் உயர்ந்து தனக்குச் சமமாகி விடுவான் என்று அவன் அஞ்சுகிறான்.

படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை நிலவும் அமைப்பில், சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள பிரிவைத் தவிர, முற்றிலும் உரிமைகள் இல்லாதவர்கள் என்று எந்த வகுப்பினரும் இல்லை. மற்ற வகுப்புக்குகூட, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்புடன் ஒப்பிடும்போது, ஓரளவு உரிமைகள் உள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் உரிமைகள் இருப்பதால், இந்த சமூக அமைப்பைப் பராமரிப்பதில் ஒவ்வொரு வகுப்புக்கும் அக்கறை இருக்கிறது.

தீண்டாமை, தீண்டத்தகாதவர்களுக்கு கெடுவாய்ப்பாக இருக்கலாம். ஆனால், இந்துக்களுக்கு அது ஒரு நல்வாய்ப்பே என்பதில் சந்தேகம் இல்லை. தங்களைவிட தாழ்ந்தவர்களாகக் கருதுவதற்கு ஒரு வகுப்பை, அது அவர்களுக்குக் கொடுக்கிறது. யாருமே முக்கியமானவர்களாயில்லாத ஓர் அமைப்பையும்; எல்லோருமே முக்கியமானவர்களாக உள்ள ஓர் அமைப்பையும் இந்துக்கள் விரும்பவில்லை. தாங்கள் முக்கியமானவர்களாகவும் மற்றவர்கள் முக்கியமில்லாதவர்களாகவும் உள்ள ஓர் அமைப்பையே அவர்கள் விரும்புகின்றனர். தீண்டத்தகாதவர்கள் முக்கியமில்லாதவர்கள். இது, இந்துக்களை முக்கியமானவர்களாக ஆக்குகிறது. தீண்டாமை முறை இந்துவின் இயல்பான பெருமை உணர்வுக்குத் தீனி போட்டு, அவர்கள் தங்களைப் பெரியவர்களாக நினைக்கவும், பெரியவர்களாகக் காட்டிக் கொள்ளவும் உதவுகிறது. இந்துக்கள், முக்கியமாக குறுகிய சிந்தனை உள்ளவர்களாக இருக்கும் இப்பெரும்பான்மை மக்கள், தீண்டாமை முறையைக் கைவிடும் வாய்ப்பு ஏன் இல்லை என்பதற்கு இது மற்றொரு காரணமாகும்.

இந்து சமூக அமைப்பு முழுவதும் குறிப்பாக, சாதி முறை ஒழிந்தால்தான் தீண்டாமை மறையும். இது சாத்தியமா? ஒவ்வொரு அமைப்பு முறையும் ஏதேனும் ஓர் அங்கீகாரத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது. ஓர் அமைப்பு முறைக்கு இவ்வாறு உயிர் ஆற்றல் அளிக்கும் அங்கீகாரங்கள் மூன்று வகைப்படும். அவை சட்ட, சமூக, மத அங்கீகாரங்கள் ஆகும். சாதி முறைக்குப் பின்னால் உள்ள அங்கீகாரத்தின் தன்மை என்ன? கெடுவாய்ப்பாக, சாதி முறையின் பின்னே உள்ள அங்கீகாரம் மத அங்கீகாரம் ஆகும். வர்ண முறையின் புதிய வடிவமான சாதி முறை, தனது அங்கீகாரத்தை இந்து மதத்தின் புனித நூலாகவும், தவறுதல் அற்றதாகவும் கருதப்படும் வேதங்களிலிருந்து பெறுகிறது. கெடுவாய்ப்பாக என்று நான் கூறுவதற்குக் காரணம், மத அங்கீகாரம் பெற்ற எதுவும், புனிதமானதாகவும் நிரந்தரமானதாகவும் ஆகிவிடுகிறது என்பதே. ஓர் இந்துவுக்கு சாதி புனிதமானது, நிரந்தரமானது. சாதி மறைந்து போக முடியாது என்றால், தீண்டாமை ஒழிந்து போகும் என்ற நம்பிக்கைக்கு இடம் ஏது?

முற்றும்

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 101)