சாதிமறுப்பு காதல் இணையர்களுக்கு சட்ட, சமூக, பொருளியல் பாதுகாப்புக் கோரி, தமிழகம் தழுவிய மாபெரும் சாதி மறுப்புத் திருமணப் பாதுகாப்பு மாநாடு ஆகஸ்ட் 18, 2013 அன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஈரோட்டில் உள்ள வ.உ.சி. பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில், தியாகு, பொ. ரத்தினம், புனித பாண்டியன், செந்தில், திருமுருகன் காந்தி, கதிரவன், தமிழ்வாணன், பெ.மணியரசன், கு. இராமகிருட்டிணன், த.செ. மணி, நீலவேந்தன், மதிவண்ணன், ஓவியா, தமிழேந்தி, கண குறிஞ்சி, அரங்க. குணசேகரன் உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தோழர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர். சமர்ப்பா கலைக்குழுவினரின் சாதி ஒழிப்பு எழுச்சிப் பாடல்கள் அரங்கில் ஒலித்துக் கொண்டே இருந்தன. "சாதிமறுப்பு மக்கள் கூட்டியக்க'த்தின் சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

தருமபுரி இளவரசன் கொலை செய்யப்பட்டிருந்தாலும் அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டிருந்தாலும் இந்த மாநாடு அதை வன்மையாகக் கண்டிக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்துக் கடுமையாகத் தண்டிக்கவேண்டுமென்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

சாதிப் பெயரில் இயங்கும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களின் சாதி அடையாளங்களையும் அகற்ற உடனடியாக உத்தரவிடுமாறு தமிழக அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழகத்தின் முதன்மையான அரசியல் கட்சிகள், சாதிக் கட்சிகளோடும் சாதிச் சங்கங்களோடும் தேர்தல் கூட்டணி வைப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்தகைய கூட்டணிகளைத் தவிர்க்குமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

குறுகிய சுயநல அரசியல் லாபத்திற்காகக் காதல் சாதிமறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட சாதி அரசியல் கட்சிகளையும் சாதிச் சங்கங்களையும் புறக்கணிக்குமாறு தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சாதி வெறியர்களின் அச்சுறுத்தல்களிலிருந்தும் கவுரவக் கொலைகளிலிருந்தும் சாதிமறுப்பு இணையர்களைப் பாதுகாக்க, குடும்ப வன்முறைச்சட்டம் போன்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களுக்கு இணையான சிறப்புச் சட்டம் இயற்றி, அவர்களுக்கு முழுப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு சட்ட, சமூக, பொருளியல் பாதுகாப்புக்கு வகை செய்யும் தனி ஆணையம் அமைக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

சாதிமறுப்பு இணையர்களை "சாதிமறுப்பாளர்கள்' என்றும், அவர்களுடைய குழந்தைகளை ஏதாவது ஒரு சாதியில் தள்ளி இழிவுபடுத்தாமல் "சாதியற்றவர்' என்றும் பதிவு செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சாதியற்ற குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை அரசின் முழுப்பொறுப்பில் தரமான இலவசக் கல்வியை வழங்குமாறு தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சாதிமறுப்புத் திருமண இணையர்க்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் கூடுதல் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

சாதிமறுப்புத் திருமணம் புரிந்த ஏழைகளுக்குப் பொருளாதாரப் பாதுகாப்புக் கருதி இலவசமாக ஒரு வீடும், கிராமப்புறங்களில் இரண்டு ஏக்கர் நிலமும் வழங்க வேண்டும்.

சாதிமறுப்புத் திருமணம் புரிந்தோர் சமூக அங்கீகாரம் பெறும் வகையில் அவர்களை நாட்டின் "சிறப்புரிமை பெற்ற குடிமக்கள்'என்று அறிவித்துச் சிறப்பிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.