பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் மலாயா இருந்தபோது, ரப்பர் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தமிழர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும்; தங்களது தோட்டத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்கவும்; தொழிலாளர்களின் கேõரிக்கைகள் போராட்டங்களாக வளர்ந்து விடாமல் தடுக்கவும் – 1923ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர். இச்சட்டத்தின்படியே, தொழிலாளர் குழந்தைகளின் கல்வித் திட்டத்திற்கும் வழிவகை செய்யப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் இந்நடவடிக்கைக்கு, கிறித்துவ மத நிறுவனங்களின் முன்முயற்சிகளே தூண்டுகோலாக இருந்தன. தமிழகத்தின் கிராமப்புறங்களில் கல்வி நிலையங்களை உருவாக்கியதைப் போலவே, மலாய தோட்டத் தொழிலாளர் நடுவில் ஊழியம் செய்ய விழைந்த கிறித்துவ மத நிறுவனங்கள், இத்தகைய கல்விக் கூடங்களை ஆங்காங்கே உருவாக்கியிருந்தனர். 1850 இல் மலாக்காவில் ஒரு தமிழ்ப் பள்ளியும் 1859, 1862, 1895 என கால இடைவெளிகளில் சில தமிழ்ப் பள்ளிகளும் இந்நிறுவனங்களால் தொடங்கப்பட்டிருந்தன. 1816 இல் பினாங்கில், மழலையர் பள்ளி என்ற பெயரில் ‘ஹட்கிங்ஸ்' என்ற வெள்ளைப் பாதிரியாரால் தொடங்கப்பட்ட இலவசப் பள்ளிக்கூடமே, முதல் தமிழ்ப் பள்ளிக்கூடமென அறியப்படுகிறது.

Eelam

அடிப்படையில் கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப் பணி என்ற பெயர்களில் கிறித்துவ நிறுவனங்களும், தனிப்பட்ட வகையில் சில பாதிரியார்களும் மேற்கொண்டிருந்த இத்தகைய தொண்டூழியம், ஆங்கிலேய தோட்ட முதலாளிகளின் சுரண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டு, பாதிக்கப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளர்களின் மனப் புண்ணுக்கு புனுகு பூசும் செயலன்றி வேறொன்றுமில்லை.

இன்றைக்கும் ஏகாதிபத்திய அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மேற்கொள்ளும் உலகளாவிய சுரண்டலுக்கும் அதி கார அத்துமீறலுக்கும், கிறித்துவ மத நிறுவனங்களின் ‘கருணை வழியும்' தொண்டூழியத்திற்கும் இடையில் அறமற்ற வகையிலான அந்தரங்க அரசியல் உறவு பின்னப்படுகிறது என்ற உண்மை அம்பலத்திற்கு வந்தபோதும், அரசின் நேரடித் திட்டமாக, செயல்பாடாக எந்தவொரு சமூக நலப் பணியும் உருப்பெற – இத்தகைய தன்னார்வ நிறுவனங்களே பரிசோதனைக் களங்களாக, பயிற்சிக் கூடங்களாக அன்றைக்கும் இன்றைக்கும் செயல்பட்டு வருகின்றன.

அவ்வகையில் தோட்டத் தொழிலாளர் சட்டங்கள் முறைப்படுத்துதலுக்குப் பிறகு, 1930 இல் 330 பள்ளிக்கூடங்கள் தோட்டத் தொழிலாளர் குழந்தைகளுக்கென இயங்கத் தொடங்கின. 1938 இல் 547 ஆகவும், 1947 இல் 741 ஆகவும், மலாயா காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட 1957இல் 888 ஆகவும், 1970களில் ஆயிரத்தைக் கடந்தும் வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை – இன்றைக்கு 523 பள்ளிகள் என்பதாகச் சுருங்கிப் போனது. இப்பள்ளிகளில் 1 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகள் போதிய மாணவர் எண்ணிக்கையின்றியே மூடப்படுவதாக மலாயா அரசு கூறி வந்தாலும், இயங்கி வந்த பள்ளிகளுக்குத் தேவையான அளவில் கட்டடங்கள், பிற வசதிகள், நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்படாததே காரணமென, தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் நலனுக்காகப் போராடி வருபவர்கள் கூறுகின்றனர். மய்ய அரசின் கல்வி நிதியில் 95 சதவிகிதம் மலாய் மொழிவழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளுக்கும், 1.5 சதவிகிதம் மட்டுமே தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஒதுக்கப்படுவதாக இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எஞ்சியிருக்கும் 523 தமிழ்ப் பள்ளிகளும்கூட, தேவையான அளவு வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கும் போதிய ஆதாரங்கள் உள்ளன.

கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக, மலாயா அரசாங்கத்தில் பங்கு பெற்றிருந்த ம.இ.கா.வும், அதன் தலைவர்களும் குறிப்பாக டத்தோ சாமிவேலுவும் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவாதது மட்டுமல்ல, சரிபாதியாக மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தனர். இவர்கள் மீது குற்றம் சுமத்த கீழ்வரும் எடுத்துக்காட்டு ஒன்றே போதுமானது. முன்னாள் மலாயா பிரதமர் மகாதீர் முகமது, அனைத்துப் பள்ளிகளிலும் கணிதம், அறிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஆங்கிலத்திலேயே கற்பிக்க வேண்டுமென கல்வித் துறைக்கு ஆணையிட்ட போது, சீன சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் தங்கள் தாய்மொழியில்தான் இப்பாடங்களைக் கற்றுத்தர வேண்டுமெனப் பல்வேறு தளங்களில் இருந்து கோரிக்கை விடுத்து, அதில் வெற்றியும் பெற்றனர்.

ஆனால் ம.இ.கா. தலைவர்கள், அனைத்து தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களையும் அழைத்துக் கூட்டம் நடத்தி, இப்பாடங்களை ஆங்கில வழியிலேயே பயிற்றுவிப்பதை வரவேற்பதாகத் தீர்மானம் இயற்றி, பிரதமருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை அனுப்பினர். ஆக, தாய்மொழி வழிக் கல்வியை ம.இ.கா. தலைவர்களும், மலாயா வாழ் படித்த நடுத்தர வர்க்கத்தினரும் புறக்கணிப்பதன் விளைவாகவே – தமிழ்ப் பள்ளிகள் மூடப்படுவதும் தமிழரின் குடியேற்ற உரிமைகள் நாளுக்கு நாள் கேள்விக்குள்ளாக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாகியுள்ளன.

தமிழர்களில் செல்வந்தர்களும் போதிய வாய்ப்புகள் பெற்ற நடுத்தர வர்க்கத்தினரும் மலாயா தேசியப் பள்ளிகளில் தம் குழந்தைகளுக்கு இடம் தேடிக் கொள்வதால், வசதி வாய்ப்பற்ற பிற தமிழர்கள் குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமே தமிழ்ப் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். மேல்தட்டு வர்க்கத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரின் அரசியல் கட்சிகள் இந்தியாவைப் போலவே, தேர்தல் காலங்களில் மட்டும் ஓட்டு வேட்டையாடிவிட்டு, உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை நடுத்தெருவில் வீசிவிடுகின்றன.

1983 ஆம் ஆண்டில் மலாயா, பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்த போது, அரசு அதிலிருந்து மீள பல்வேறு திட்டங்களைத் தீட்டியது. இச்சூழலைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த டத்தோ சாமிவேலு, தமிழர்களின் பொருளாதார தற்சார்பை உறுதிப்படுத்துவோம் என்ற முழக்கத்தோடு, ‘மைக்கா ஹோல்டிங்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனத்திற்கான பங்குத் தொகையாக தமிழர்களிடமிருந்து 10 கோடி வெள்ளி (மலாயா பணம்) திரட்டப்பட்டது. தொடக்கக் காலத்தில் லாபத் தொகையில் பங்குதாரர்களுக்கு உரிய தொகையை அளித்த இந்நிறுவனம், காலப்போக்கில் ஏமாற்றத் தொடங்கியது. கையிலிருந்த சொற்பப் பணத்திலும், வீடு மற்றும் நகைகளை விற்றும் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய சாமானிய தமிழர்களுக்குக் கிடைத்ததோ அடி உதைதான். ம.இ.கா. விலுள்ள குண்டர்களின் பாதுகாப்பில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக செயல்படுபவர் சாமிவேலுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, சுரங்கத் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் முன்னாள் மலாயா பிரதமர் துன் அப்துல் ரசாக், 1974ஆம் ஆண்டில் ‘தோட்டத் தொழிலாளர் வீட்டுடைமைத் திட்டம்' ஒன்றைத் தொடங்கி, அரசின் பங்காக 1 கோடி வெள்ளிப் பணத்தையும் இத்திட்டத்திற்கென ஒதுக்கினார். ஆனால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ம.இ.கா.வும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மேலும், காலனிய ஆட்சிக்குப் பிறகு ஆங்கிலேய முதலாளிகளிடமிருந்து பெருந் தோட்டங்களை வாங்கிய மலாய – சீன – இந்திய முதலாளிகள் காலப்போக்கில் இத்தோட்டங்களை பலநூறு துண்டு நிலங்களாக்கியதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

‘சிவப்பு அடையாள அட்டை' எனும் வேலை அனுமதிச் சான்று வாங்கி, அன்றாடக் கூலிகளாகத் தோட்டங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழர்கள் தள்ளப்பட்டனர். அடையாள அட்டை பெற இயலாத தொழிலாளர்கள் பலருக்கு, இந்தியாவிற்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ம.இ.கா.வின் தேசியத் தலைவராக இருந்த துன் சம்பந்தன் முன் முயற்சியில், ‘தேசிய நலநிதிக் கூட்டுறவுச் சங்கம்' தொடங்கப்பட்டது.இச்சங்கத்திற்கென திரட்டப்பட்ட பல லட்சம் வெள்ளிப் பணத்தில் சில தோட்டங்கள் விலைக்கு வாங்கப்பட்டன. ஆனால், தேசிய நலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்தைக் கையில் வைத்திருக்கும் ம.இ.கா. அரசியல்வாதிகள், தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்கு இச்சங்கம் வழிகோலுவதை சீரழித்து விட்டனர்.

இது மட்டுமல்ல, நீண்ட காலமாக தோட்டங்களில் கொத்தடிமைகளாக உழன்று உடல் நலிவுற்றவர்கள், வயோதிக நிலையிலும் பணியின்போது ஊனமுற்றும் வேலை செய்ய இயலாதவர்கள் என, உழைப்பில் ஈடுபடுத்த ‘தகுதியற்ற'வர்களை இந்தியாவிற்கே திருப்பி அனுப்ப எண்ணிய பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள், 1907ஆம் ஆண்டு இவர்களுக்கென ‘தமிழர் குடியேற்ற நிதியம்' என்ற திட்டத்தைத் தொடங்கினர். 1958இல் இது ‘தென்னிந்திய தொழிலாளர் நிதி வாரியம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் 1999இல் இவ்வாரியத்தைக் கலைத்துவிட அரசு முடிவெடுத்தது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த போதும், அதே ஆண்டு சூலை 13இல் பெரும்பான்மையினர் ஆதரவோடு இவ்வாரியத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது.

மலாயா அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு ம.இ.காவும் சாமிவேலுவும் துணை போயினர் என்பதும் வரலாறு. இவ்வாரியத்தின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டன. மலாயாவின் தோட்டத் தொழிலாளர்களாக மட்டுமல்ல,

இன்றைக்கு வானுயர்ந்த கட்டடங்களோடும், விரிவடைந்த கட்டமைப்புகளோடும் செழித்து வளர்ந்து நிற்கும், மலாயாவின் வளர்ச்சிப் பணிகள் அனைத்திலும் கடும் உடல் உழைப்பாளர்களாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, வாழ்வாதாரங்கள் நசுக்கப்பட்டு, எதிர்காலம் இழந்து நிற்பவர்கள் தமிழர்களில் அடித்தள, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே. இவர்களின் வாழ்வாதாரங்கள், தொழிற்சங்க உரிமைகள், குடியேற்ற நலன்கள் ஆகியவற்றைப் புதைகுழிக்கு அனுப்ப, மலாய அரசாங்கத்திற்குத் துணை நிற்பவர்கள் மலாய் மண்ணின் மக்களோ, சீனர்களோ அல்ல – பிழைப்பு வாதத் தமிழர்களே!

மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ, பிற தெற்காசிய நாடுகளிலோ குடியேறியிருக்கும் சீன மக்கள், எந்தவொரு நாட்டிலும் தம் இனத்தின் அடிப்படை நலன்களைக் காவு கொடுக்கும் விதத்தில் சிந்திப்பதும் செயல்படுவதும் இல்லை. சீன சமூகத்தின் இன ஓர்மையும் போர்க் குணமும்தான், இன்றைக்கு ஆசியக் கண்டத்தின் ஏகாதிபத்தியமாகவும், அமெரிக்காவின் உலகளாவிய அத்துமீறலுக்கு அச்சுறுத்தலாகவும் சீன நாட்டை வளர்த்தெடுத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டின் அரசியல் பலமாக ‘செஞ்சீனம்' பாதை வகுத்திருந்தாலும், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியப் பண்புகளில் சீன இனத்தின் ஓர்மை பொதிந்துள்ளது. செம்படையணி உருவாக்கப்பட்டதும், மக்கள் சீனம் மலர்ந்ததும் இப்பாரம்பரியப் பண்புகளின் விழுமியங்களிலிருந்துதான். மா சே துங் ஒரு தனிநபரோ அல்லது ஒரு பெயர்ச் சொல்லோ அல்ல. மாறாக, மரபார்ந்த சீன சமூகத்தின் பண்பாட்டு அடையாளம்; வரலாற்றுச் செழுமையில் முகிழ்த்த அச்சமூகத்தின் அரசியல் குறியீடு; வரலாற்றைக் கடக்க விழைந்த ஓர் இனத்தின் தலைமைத்துவம் அவர் என்பது மிகையல்ல.

உலகெங்கிலும் வாழும் 130 கோடி சீன மக்களின் ஒரு குறியீட்டு அடையாளமாக மாவோவைக் குறிப்பிட இயலுமெனில், ஏறத்தாழ 10 கோடி அளவேயான உலகத் தமிழினத்தின் குறியீட்டு அடையாளம் யார்? என்ன? எது? ராவணன், திருவள்ளுவர், ராஜராஜ சோழன், கலைஞர் கருணாநிதி, கற்பு, பனைமரம், எட்டுமுழ வேட்டி, நெல்லுச்சோறு, துரோகம், நக்கித் தின்னும் பிழைப்புவாதம் என யாதாகிலுமொன்றா?

நூறு கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான மக்களினம் உலகில் முக்கியத்துவம் பெறுவது, வியப்புக்குரிய ஒன்றல்ல என எளிமைப்படுத்திவிட முடியாது. எண்ணிக்கை என்பது வரலாற்றைத் தீர்மானிப்பது அன்று. உலகில் எந்த மூலையில் வாழ நேர்ந்தாலும் நூறு கோடி சீனர்களும் தங்கள் தாய்மொழியிலேயே சிந்திக்கவும், பயிலவும், பரிமாறிக் கொள்ளவும், செயல்படவும் விழைகிறார்கள். பவுத்தம், கிறித்துவம், இஸ்லாம் என சீனர்கள் தழுவியிருக்கும் மார்க்கங்கள் அவர்களின் அரசியல் பாதைகளில் தடையணிகளாக நிற்பதில்லை. ஆனால் சீனர்களின் எண்ணிக்கையில் பத்து சதவிகிதம் கூட இல்லாத தமிழ்ச் சமூகம், வாழ நேர்ந்த இடங்களிலெல்லாம் வதைபட்டுச் சாகிறதே என நாம் புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

இன ஓர்மைக்கான முன் நிபந்தனைகளை, இன வீழ்ச்சிக்கான காரணிகளை ஆய்வதிலிருந்தே உருவாக்கிக் கொள்ள வேண்டும். இக்கட்டுரையிலேயே ஓரிடத்தில் குறிப்பிடுவது போல, தமிழர்கள் தம் முதன்மையான அடையாளமாக மதங்களையே உயர்த்திப் பிடிக்கிறார்கள். அதிலும் பவுத்தம் உட்பட பார்ப்பனியச் சாரம் பிழியப்படாத தனித் தன்மையுடன் எந்தவொரு மார்க்கமும் இங்கு இல்லை. இந்து மதம் கற்பிக்கும் ஏற்றத் தாழ்வுகளை, சாதிய மன உணர்வை இஸ்லாமியர்கள் கூட, அறிந்தும் அறியாமலும் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதே நடைமுறை உண்மை. தாய்த் தமிழகத்திலோ, இலங்கையிலோ, முஸிலிம்கள் ‘தமிழர்' எனும் அடையாளத்துள் இணைய மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டுபவர்கள், பெரும்பான்மைத் தமிழர்கள் இன அடையாளத்தை விட, ‘இந்து' மத அடையாளத்தின் வழியாகவே அறியப்படுகிறார்கள் என்பதை மறுக்க இயலுமா? மலாயாவில் கூட ‘இந்துத் தமிழர்கள்' என்றே தமிழர்கள் தம்மை அறியப்படுத்துகிறார்கள்.

மொழி வழியிலான இன அடையாளம் கூர்மையடையாமலிருக்க, முனை முறிக்கும் வேலையை இந்து மதமும் பார்ப்பனியமும் சூழ்ச்சி செய்து வருகின்றன. இவையே தமிழர்களை நெறிப்படுத்தும் ஆன்மீகமாகவும், வழிநடத்தும் அரசியலாகவும் இருக்கின்றன. பன்னெடுங்காலமாக தமிழர்களின் வாழ்வியல் பண்புக் கூறாக பிழைப்புவாதத்தை ஊட்டி வளர்த்து வருவதையே பார்ப்பனியம் செய்து வருகிறது. சங்ககாலப் புறநானூற்று வீரம் பிற்காலச் சோழர்களின் அந்தப்புரங்களில் நிர்மூலமாக்கப்பட்டதற்கும், கடையேழு வள்ளல்களின் அகநானூற்று எச்சங்கள் ஆயிரமாண்டுக்கால சூழ்ச்சிகளில் திரிந்து நச்சாக்கப்பட்டதற்கும் – தமிழரின் உதிரத்துள் ஊறித் ததும்பும் பார்ப்பனியக் கூறுகளே காரணமென்பதை யாவரும் அறிவர். Anna

இலங்கையிலோ, மலாயாவிலோ அல்லது குடியேறிய பிற தேசங்களிலோ மாறுபட்ட இட – காலச் சூழல்களில் வாழ்வதனாலேயே, பன்முகப்பட்ட பண்புக் கூறுகளைத் தாங்கி நிற்கும் தமிழினம் என தற்பெருமை கொள்வதற்கு ஏதேனும் மிச்சமிருக்கிறதா? தாய்த் தமிழகத்தின் மிச்ச சொச்சங்களாகத் தான் உலகத் தமிழினத்தின் பன்முகங்களையும் காண முடியும். அனைத்து முகங்களிலும் அதனதற்கே உரித்தான நயவஞ்சகமும் துரோகமும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. உலகத் தமிழினத்தை இணைக்கும் உறவுப் பாலம் பிழைப்புவாதமெனும் பார்ப்பனியக் கண்ணிகளால் கட்டியெழுப்பப்பட்டதே. ஈழத் தமிழரின் அறுபதாண்டுகாலப் போராட்டங்களில் பிடுங்கிய வரை தனக்கான லாபமென்ன என கணக்குப் பார்ப்பவர்களே இங்கு ஏராளம். ஒரு மகத்தான விடுதலைப் போராட்டம் இப்படிப்பட்டவர்களின் ஊழலிலும் காட்டித் தருதலிலும்தான் ரத்தச் சேற்றில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

உ.வே.சாமிநாதய்யரில் தொடங்கி ‘மைக்ரோசாப்ட்' அல்லது ‘நாசா'வில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நபர்கள் வரை, தமிழர்களின் உச்ச அடையாளம் என அறியப்படுபவர்களில் சரிபாதிப்பேர் பார்ப்பனராகவே இருக்கின்றனர். தமிழர்களாக மட்டுமல்ல, எந்தவொரு மொழிவழி இன அடையாளத்துள்ளும் பார்ப்பனர்கள் தம்மைக் குறுக்கிக் கொள்வதில்லை. ஆக, பார்ப்பனர்கள் தவிர்த்த ஏனைய தமிழர்களின் உச்ச அடையாளங்கள் யாவரும் பார்ப்பனர்கள் வகுத்துத் தந்த பாதைகளில் பயணித்தவர்களே. பார்ப்பனியக் கறைபடியாத தனித்தவொரு தமிழின அடையாளமாக இருப்பவர்கள் மிகச் சிலரே. அவர்களையும் தமிழர்கள் புறந்தள்ளியே வைத்திருக்கின்றனர். உயர்திணையோ அக்றிணையோ, ஒட்டுமொத்தத் தமிழினமும் இவ்விடயத்தில் ஒருமுகப்பட்டிருக்கின்றனர்.

ராமன் வழிபடப்படுகிறான்; ராவணன் தூற்றப்படுகிறான். கம்பன் கொண்டாடப்படுகிறான்; வள்ளுவன் பிழைத்தால் போதும் என்றிருக்கிறான். மரபார்ந்த அறநெறிகள் வீழ்த்தப்படுகின்றன; மநுதர்மப் போதனைகள் நடைமுறையிலிருக்கின்றன. உழவு தரிசாக்கப்படுகிறது; சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அரண்கள் எழுப்பப்படுகின்றன. உடல் உழைப்புக்கு பட்டினியே மீந்தது; மூளை தந்திரங்களுக்கோ இம்மை – மறுமை பித்தலாட்டங்களின் வழியே முழு நிறைவான வாழ்வு கொழுத்தது. சென்னை, நவநாகரிக மனிதர்களுக்காகப் புனரமைக்கப்படுகிறது; சேரிகள் நண்பகலில்கூட தீக்கிரையாக்கப்படுகின்றன. மலாயாவில் தமிழ்ப் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன எனில், இங்கு மட்டும் என்ன வாழ்கிறது? இந்தியாவில் ஆங்கில வழியில் கல்வி பயில்பவர்களில் மும்பை (மகாராட்டிரம்), டெல்லி, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களே 60 சதவிகிதம் என்ற அளவைக் கடந்து முன்னணியில் இருக்கின்றன. அதிலும் தமிழகம் 2010 ஆம் ஆண்டில் முதலிடம் பெறப் போவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கிராமப்புற பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் தலித் மாணவர்களும் மட்டுமே, இன்றைக்கு அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

சாதி இந்துக்களில் பெரும்பான்மையினர், ஆங்கில மோகத்திலும் இறக்குமதியாக்கப்பட்ட பண்பாட்டு நுகர்வுகளிலும் வெறி கொண்டு அலைகின்றனர். பார்ப்பனர்களைப் பின்தொடர்ந்து அதிகார மய்யங்களையும் ஆளும் வர்க்க லாபங்களையும் தமக்குள் பங்கிட்டுக் கொள்கின்றனர். தேவைப்படின், பார்ப்பனர்களிடம் ஆலோசனைகளும் பெற்றுக் கொண்டு எதிர் வரும் தலைமுறைகளுக்கும் செல்வம் சேர்க்க, ஏய்த்துப் பிழைக்கும் புதிய உத்திகளை உருவாக்கி வருகின்றனர். டக்ளஸ் தேவானந்தா, டத்தோ சாமிவேலு, கலைஞர் கருணாநிதி இவர்களைப் போன்றவர்கள் சாதி இந்துக்களின் குறியீட்டு அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்கள். அதனாலேயே இப்போதெல்லாம் ‘தாழ்ந்த தமிழகமே!' என விசனப்படுவதும் பொருளற்றதாகிப் போனது.

கும்பகோணம் கூரைக் கொட்டகையில் பள்ளிக் குழந்தைகள் எரிந்து சாம்பலானது, தமிழனைப் பொருத்தவரையில் ஒரு விபத்து மட்டுமே. திட்டமிடப்படும் படுகொலை களை, எதிர்பாராத விபத்துகளாக தமிழர்கள் கடந்து செல்வதால்தான், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகளும், தன்னாட்சி பல்கலைக் கழகங்களும், மென்பொருள் பூங்காக்களும் தமிழ்த் திருநாட்டின் பெருமைகளாக வளர்ந்து நிற்கின்றன. சுரண்டிக் கொழுப்பவனும் ஏமாற்றிப் பிழைப்பவனும் சொந்த சாதிக்காரனாக இருந்தால் போதும், அவனவன் சாதிக்கூட்டம் அணி திரண்டு பின்னால் நிற்கும். ஏமாற்றப்பட்டவன் இன்னொரு சாதிக்காரனாக இருக்க வேண்டுமென்பது கூட அவசியமல்ல; வலுத்தவன் பிழைத்து விட்டான். சாதிக் கொடி பறக்கிறதா? அது போதும்.

தமிழ்ச் சமூகம் கடைந்தெடுத்த கழிசடைத்தனத்தை உயர்தொழில் நுட்பமாக வளர்த்தெடுத்துள்ளது. படிநிலை அடுக்குகளில் எவன் சாதிக்கு எந்த இடம் என்பதில்தான் சாதி இந்துக்களுக்குள் போட்டியே நிலவுகிறது. ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்ற பூச்சாண்டிக்கெல்லாம் சாதித் தமிழன் அச்சம் கொள்வதாக இல்லை. ‘எவன் செத்தால் எனக்கென்ன?' என்பதே ஒவ்வொரு தமிழனின் தன்னல தம்பட்டமாக ஒலிக்கிறது. ரத்தமும் சதையுமாகக் கண்முன் நிகழ்ந்து முடிந்த இந்நூற்றாண்டின் மாபெரும் துயரமாக, தம் இனத்தின் அழிவுப்படலம் இருந்தது என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரூபாய் அய்நூறுக்கும் ஆயிரத்திற்கும் தம் அடிப்படை உரிமைகளை, அவமானகரமான முறையில் விற்றுக் கொண்டிருந்தது தாய்த் தமிழினம்.

இன வீழ்ச்சிக்கான, அவலங்களுக்கான, இழிவுகளுக்கான மூல காரணிகளைத் தேடிப் புறப்பட்டால், அது ஆயிரமாண்டுக் கால நெடும்பயணமாக நீள்கிறது. பொன் (பெண்ணாகவும் இருக்கலாம்)னுக்கும் பொருளுக்கும் காட்டித் தந்த முதல் காலம் எதுவென்று அறுதியிட முடியாதுதான். ஒருவனையொருவன் அடிமை கொள்ள எத்தனித்து, சூழ்ச்சி செய்து, போர் தொடுத்து, இன்ன பிறவற்றிற்குப் பின், அடிமை வாழ்வின் சுக துக்கங்களில் தோய்ந்து தேர்ந்து, அதுவே வரலாற்றின் ஓர் நாள் அற்புதமான கோட்பாடென்று தமிழன் கண்டடைந்திருப்பானோ? பார்ப்பனனுக்கு சாதித் தமிழனும், சாதித் தமிழனுக்கு ஆதித் தமிழனும் என்று ‘எழுதப்பட்ட' ஒப்பந்தமாக இந்த அதியற்புதக் கோட்பாடு உயிரோடிருக்க, ‘உணர்ச்சி கெட்ட தமிழனே' என உசுப்பேற்றும் மேடைக் கச்சேரி இன்னும் முடிந்த பாடில்லை.

கச்சேரி என்றவுடன் பார்ப்பன இசைக் கச்சேரியா, தமிழின தலைவரிசைகளின் லாவணிக் கச்சேரியா? என்ற குழப்பத்தின் நடுவில் ஒளிவீசும் கீற்றென ‘பேரறிஞர்' அண்ணா நம் ஞாபகங்களில் எழுகிறார். தமிழ்த் தேசிய உணர்ச்சிக் காவியத்தின் தலைமகன் இவரன்றோ எனும் விழிப்பில் காலம் நம்மை நிலைநிறுத்துகிறது. சொற்கள் எனும் லாவகம் பேச்சாகப் பரிணமித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நவதமிழர் காலத்தில் ‘வாய்ச் சொல் வீர'மென கதிர் முற்றி சாய்ந்து கிடக்கிறது. களத்தில் அடித்துப் பார்த்தால், விதை நெல்லுக்கும் தேறாத விளைச்சலாகத்தான் இருக்குமென உறுதிபடக் கூறலாம்.

பெரியாருக்கு துரோகமிழைத்து கருஞ்சட்டை இயக்கத்திலிருந்து அண்ணா வெளியேறிய போது, தமிழர்களுக்கு அதிர்ச்சி ஏதுமில்லை. தம் ஆடைக்கு ஏற்ற அணிகலன் என சூடிக் கொண்டனர். வாராது வந்த மாமணியென, தாம் தேடிக் கொண்டிருந்த தலைவனாக முடிசூட்டி மகிழ்ந்தனர். தமிழர்தம் பார்ப்பனிய சமரசங்களின் மேதாவிலாசம் அறிஞர் அண்ணா என நாம் குற்றம் சாட்டுவதை, சாதித் தமிழர்கள் ஒருவேளை பெருமிதமாகவும் கொள்ளக்கூடும்! ஏனெனில், அண்ணா வகுத்துத் தந்த பாதையில் பயணித்துதான் ஆதிக்க சாதித் தமிழர்கள் ஊழலிலும் லஞ்ச லாவண்யத்திலும் ஊறித் திளைக்கிறார்கள்.

‘அண்ணாயிசம்' வெற்றிகரமான சூத்திரமாக திராவிடக் கட்சிகளுக்கு இருப்பதை, ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி, கோட்டையில் கொடி நாட்டலாம் என்ற நப்பாசையை – சாதி ஒழிப்பிற்கும் சமூக விடுதலைக்கும் அணி திரண்ட ஆதித் தமிழர்களிடம் விதைத்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர். இது போக முடியாத மட்டுமல்ல, போகக் கூடாத ஊருக்கும் வழிகாட்டும் பரப்புரை என்பதை – ஆதிக்க சாதித் தமிழர்களால் ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் உழலும் மூத்தகுடித் தமிழர்கள் உணர வேண்டும். மேடையிலிருந்து நாற்சந்தி வரை வாய்ச்சவடாலுக்கு சீழ்கையடித்தும் போக்கிரித்தனத்திற்குப் புறமுதுகு காட்டியும் பிழைத்துக் கிடக்கிறது கனகவிஜயனைக் கல் சுமக்க வைத்த வீரப்பரம்பரை (!) கல்வியில் சிறந்தோங்கும் தமிழினம், அறிவை காலனிய காலத்திற்கு முன்பே வந்தேறிகளிடம் அடகு வைத்து விட்டு, அடிமைத் தனத்தை புத்திசாலித்தனம் என தன்னைத்தானே உச்சிமோந்து கொள்கிறது. கல்லாதவனின் முரட்டுத்தனத்தைவிட, கற்றவனின் கயமைத்தனமும் ஒதுங்கிப் போதலும் ஆபத்தானவை. அய்யோவென்று போகிறானோ? இல்லையோ? சூதும் வாதும் செய்வது, படித்தவனின் முதல் தகுதியாகிவிட்டது. படித்த தமிழனுக்கோ இதுவே முதன்மைத் தகுதியாகவுமிருக்கிறது.

மக்களைக் குற்றம் கூறுவதாக முற்போக்காளர் கருதுவர். இனத்தைப் பழிப்பதாக இனவாதிகள் குமுறுவர். பக்கச் சாய்வென சார்புநிலை கொண்டோர் தூற்றுவர். ஆனால் வலியையும் வேதனையையும் அடிபட்டவனே உணர முடியும் என்பதே யாவருக்குமான நம் பதிலாக இருக்கும். பன்னெடுங்கால தலைமுறை வரலாற்றில், ஒரே இனத்துள் ஆதிக்குடி மக்களை ஆதிக்க சாதிக் குடிகள் என்றென்றைக்கும் தம்மை அண்டிப் பிழைக்க வேண்டுமென்ற, மனப்பிரயாசைதானே இத்தனை அவலத்திற்கும் வழி கோலுகிறது. இலங்கையிலாயிலும், மலாயாவிலாயிலும், தாய்த் தமிழகத்திலும் கூட அடிப்பøடக் கல்வி பெற அடித்தள மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருப்பதற்கும், ஆரிய – திராவிட இனப்பகையே காரணமெனும் அரதப் பழசான பரப்புரையில் தப்பித்துக் கொள்கிறது சாதித் தமிழினம்.

ஒடுக்கப்பட்டவனிடம் மிச்சம் மீதியிருக்கும் குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் ‘சந்தை விலை' ஒன்றை தானே நிர்ணயித்து வாங்கி, ‘ரியல் எஸ்டேட்' வணிகம் செய்கிறது, இனத்திற்குள் ஓர் உளுத்தர் கூட்டம். நிலம் இழந்த அல்லது நிலமற்ற ஏழைத் தமிழனுக்கு, அபகரித்த சாதிகளின் ஆட்சி அதிகாரம் தரிசுக் காடுகளைக்கூட தாரை வார்க்கப் போவதில்லை. ஏனெனில் ஊழலில் திரட்டிய பணத்திற்கு நிலம் வாங்க, ஊரெல்லாம் – தமிழ் நாடெல்லாம் அலைகிறது இனத்துள் ஓர் வர்க்கம். மண்ணெல்லாம் இன்றைக்குப் பொன். சென்னை மட்டுமல்ல, அழகுபடுத்த முடிவெடுத்தால் எல்லா நகரங்களுமே அழுக்குகளைக் கழுவ வேண்டும்; அழுக்கானவர்களைக் களைய வேண்டும். இந்திய நகரங்களின் அழுக்குகள் சேரிகள். இந்து நாட்டின் – சமயத்தின் – பண்பாட்டின் அழுக்குகள் ஒடுக்கப்பட்ட மக்கள். இது தானே வழமை.

தமிழர்கள் இந்துக்கள் எனில், அம்பேத்கர் அறிவுறுத்தியவாறு ஒடுக்கப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்லர். இந்துக்களாக தமிழர்கள் சீரும் சிறப்புமாகப் பிழைக்கும் வரை, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதித் தமிழர்களாக அறியப்படினும் ‘தமிழினம்' என உறவு கொள்வது எங்ஙனம்? ஊருக்கு இளைத்தவன் எந்தக் கோயிலிலும் ஆண்டியாகத்தான் இருக்க முடியும்; எந்த இனத்திலும் ஒடுக்கப்பட்டவனாகத்தான் இருக்க நேரிடும்; எந்த நாட்டிலும் வாழத் ‘தகுதி'யற்றவனாகத்தான் உழலக்கூடும் என்பது பார்ப்பனிய – முதலாளித்துவ நீதி. எனில், இந்துவாகப் பிறக்க நேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதி மனிதன் தன்னை இழிவுபடுத்தும் மதத்திற்கும், சாதிப் பிணக்குகளிலும் வர்க்கச் சுரண்டலிலும் தன்னைக் கீழ்மைப்படுத்தும் இனத்திற்கும், அதன் மூலதனக் குவிமய்யத்திற்கும் எதிராகப் போராடுவதென்பது வரலாற்றின் இயங்கியல் விதி.

இலங்கையின் வவுனியா நிலப்பரப்பில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்களப் பேரினவாத ராணுவ பயங்கரவாதத்தின் கீழ் முள்வேலிக்குள் அகதிகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தளை ஓர்மைப்படாத தமிழினத்தின் மீதான புறநிலைக் குறியீடு. அகநிலையில் தமிழரைப் பிணைக்கும் முள்வேலியாக, சாதியம் கால எல்லைகளைக் கடந்து நிறுவனப்பட்டுள்ளது. உலகத் தமிழினத்தை இணைக்கும் இக்குறியீட்டின் தத்துவப் பின்புலமாக உரமிடப்பட்டிருப்பது பார்ப்பனியம். தமிழினத்தின் பிழைப்புவாதத்திற்கு, சோரம் போதலுக்கு, ஆதிக்கசாதி அதிகாரத்திற்கு அரணாகியிருக்கும் சாதியம் அடிமைத் தளையே என உணர வேண்டிய கடப்பாடு சாதித் தமிழர்களுக்கானது.

இந்த முள்வேலியை தங்கக்கூண்டு என பார்ப்பனியம் பசப்பும். ஈழத்தின் அகதி முகாம்கள் நாம் கவலை கொள்வதற்கு ஏதுமின்றி சிறப்பாகவே இருக்கின்றன என ‘இந்து' ராம் சாட்சியம் தரவில்லையா? விடுதலை என்பது, ஒருவன் இன்னொரு மனிதனை ஒடுக்காமல் இருப்பதே. ஒடுக்குகிறவனுக்கு இந்த உண்மையை ‘உணர்த்தும்' கடமை, சாதி – இன – வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு ஆளான ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. செயற்கரிய செய்யப்படும் இக்கடமையின் வழியேதான் பார்ப்பனிய ‘தங்கக் கூண்டு' உடைபடும். தமிழகத் தாயகத்திலோ, இலங்கையிலோ, மலாயாவிலோ, இன்ன பிற தேசங்களிலோ பரவி வாழும் தமிழின மக்களைப் பிணைக்கக் கூடாத, இம்முள்வேலி அறுபடும்போது தான், வன்னியில் மட்டுமல்ல, ஈழ நிலத்தையே தளைப்படுத்தியிருக்கும் பருண்மையான முள்வேலியும் வெடித்துச் சிதறும்.

- கா.இளம்பரிதி