பரிபாலனத்தின் உயரத்திலிருந்து
ஓங்கி ஒலிக்கிறது
ஆணையின் உரத்த குரல்
நிவாரணம்... நிவாரணம்

உயிர்களைப் பிடித்துக் கொண்டிருந்த
கைகளை வித்து வாங்குகின்றனர்
நிவாரணங்களை மக்கள்

மிதிப்பட்டுச் செத்த
மக்களின் மீது சுமத்தப்படுகின்றன
குற்றச்சாட்டுகள்
‘பொறுமையற்றவர்கள்'
‘பணத்திற்கு அலைபவர்கள்'
‘வதந்திகளை நம்புகிறவர்கள்'

மவுனத்தின் மூடிகளை
அணிந்து கொண்டு தலைகுனிகின்றது
மக்களின் கோபம்

வீட்டுக்குள் நுழைந்த தண்ணீரை
இறைக்கின்றன செத்தவர்களின்
நைந்த உடல்கள்

அரசின் கைகள்
அணைத்துக் கொள்கின்றன - ஆதரவோடு
அடுத்த தேர்தலுக்காய்
உயிரோடிருக்கும் வாக்குகளை