சோதனைத் தீயில் விளைந்த சாதனைக் கதிர் அம்பேத்கர்
விலை ரூ.50

“அம்பேத்கரை அறியாத, படியாத யாரெவரும் இந்திய மண்ணில் சமூக மாற்றத்தையோ, சமூகச் சமத்துவத்தையோ கொண்டுவர இயலாது. ஆனாலோ, இந்த நாட்டில் அண்ணலின் நூற்றாண்டுவரை அவர் வாழ்க்கையையும், வரலாற்றையும், படைப்புகளையும் இருட்டடிப்பு செய்த சதிக் கொடுமைதான் அரங்கேறிற்று. பள்ளிப்பாடங்களிலோ, கல்லூரி நூல்களிலோ, நூலகங்களிலோ அம்பேத்கர் சிந்தனைகளும், வற்றாமல் ஊற்றெடுக்கும் படைப்புகளும் காட்டாறாக வந்து கொண்டிருக்கின்றன என்பது, சமூக விடிவை விரைவுபடுத்தும் எக்காளமாக இருக்கிறது.''

ஆசிரியர் : அ. ஜெய்சன்
அன்னை ராமாபாய் அம்பேத்கர் பதிப்பகம், 43/214, கிருஷ்ணா நகர், பெரியகுப்பம், திருவள்ளூர் 602 001
பக்கங்கள் : 104



சமயங்களின் அரசியல்
விலை ரூ.25

“இயற்கை நிகழ்வுகளின் மீது மனிதனுக்கு ஏற்படும் பயம், பல நம்பிக்கைகளைக் கைக்கொள்ள வேண்டிய தேவையை உருவாக்குகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு சமயம் என்பது உருவாகியது. இதனை நிறுவனமாக்கியுள்ளார்கள். இந்நிறுவனம் பெரும் அதிகாரச் சக்தியாகியுள்ளது. சுரண்டுபவர்களின் கருவியாகவும், சுரண்டப்படுபவர்களின் நம்பிக்கையாகவும் சமயம் செயல்படுகிறது. இந்த அரசியலைப் புரிந்துகொள்வது அவசியம். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி, இன்றும் தொடர்கிறது இந்த அரசியல்.''

ஆசிரியர் : தொ. பரமசிவன்
வெளியீடு : பரிசல், வள்ளலார் தெரு, பத்மநாபா நகர், சூளைமேடு, சென்னை 94 பக்கங்கள் : 64



பெரியார் களஞ்சியம் - தொகுதி : 13 சாதி - தீண்டாமை
விலை ரூ.110

“எங்களுடைய வேலை கீழே இருந்து மலை மேலே பாறாங்கல் குண்டுக் கல்லை ஏற்றும்படியான பணியாகும். நாம், நமது கடவுள், மதம், சாதி, சாத்திரங்கள் ஆகியவைகளை ஒழிப்பதுடன், நமது கலைகள், இலக்கியங்கள், பாட்டுகள், கச்சேரிகள், நாடகங்கள், சினிமாக்கள் அனைத்தையும் ஒழித்தாக வேண்டும். இவை நம்மை மடையர்களாகவும், இழி மக்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் வைத்திருக்கப் பயன்டுகின்றனவே அல்லாமல் நம் அறிவு வளரவோ, நமது இழிவு நீங்கவோ, நமது வளர்ச்சிக்கு வழிவகை செய்யவோ உதவவில்லை.''

தொகுப்பாசிரியர் : கி. வீரமணி
வெளியீடு : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, பெரியார் திடல், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7, பக்கங்கள் : 320



பொது விசாரணை அறிக்கை
விலை ரூ.90

“மாவட்ட நிர்வாகம் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டாததின் விளைவாக, ஊராட்சிகளில் தலித்துகளுக்கு எதிராக, ஆதிக்க சாதியினர், சமூகப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைத் தவிர, வேறு எந்த அரசியல் கட்சியும் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண முன்வரவில்லை. தனது குடிமக்களைப் பாதுகாத்து, அரசியல் சட்ட உரிமைகளான சமத்துவத்தையும், தேர்தலில் போட்டியிடும் உரிமையையும் வழங்க தமிழக அரசு தவறிவிட்டது. நாட்டில் பெருமளவில் வசிக்கும் தலித் சமூகத்தினரை அரசின் பல்வேறு கட்டமைப்புகளில் பங்கேற்க அனுமதி மறுப்பதன் மூலம், இந்தியாவும், பங்கேற்பு சனநாயகக் கோட்பாட்டை மீறி வருகிறது."

வெளியீடு : தலித் மனித உரிமைகளுக்கான தேசியப் பிரச்சாரம், 56/52, விவேகானந்தா நகர், மரக்காணம் சாலை, திண்டிவனம் - 604 002, பக்கங்கள் : 40


திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்
விலை ரூ.40

“நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற சாதாரண பாஷைகளை எல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்.'' - பாரதி

ஆசிரியர் : வாலாசா வல்லவன்
தமிழ்க் குடியரசுப் பதிப்பகம், 14/12, மியான் முதல் தெரு, சென்னை 5
பக்கங்கள் : 112


தமிழர் கண்ணோட்டம் - பொங்கல் மலர் விலை ரூ.15

“சிலர், தமிழர் இனப் பெருமை பேசும் அதே நாக்கால், சாதிப் பெருமை பேசிக் கொண்டிருப்பர். கடந்த காலத்தில் தமிழ்ச் சாதிகளில் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் சாதனை செய்திருந்தாலும், அதைத் தமிழர் இனச் சாதனையாக அடையாளம் காட்ட வேண்டிய தேவையை இவர்கள் புறக்கணிக்கின்றனர். இவர்களின் இந்த அணுகுமுறை, தமிழர் ஒற்றுமையை கெடுக்கிறது. தேர்தல் கட்சிகளுக்கு, சாதி என்பது வாக்கு வங்கியாக இருக்கிறது. எனவே, அக்கட்சிகள் சாதியை பலவகையிலும் பயன்படுத்தும். ஆனால், தமிழ்த் தேசியப் புரட்சியாளர்களுக்கு தமிழர் ஒற்றுமைதான் முதன்மையாக இருக்க வேண்டும்."

ஆசிரியர் : பெ. மணியரசன்
வெளியீடு : தமிழர் கண்ணோட்டம், 2ஆம் தளம், 20/7, முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை 17 பக்கங்கள் : 224