Tamil people meeting for education rights

‘அனைவர்க்கும் கல்வி; அனைத்தும் தமிழில்’' என்ற பொருள் செறிந்த முழக்கத்துடன் தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவை ஒருங்கிணைத்த தமிழ் மக்கள் கல்வி உரிமை மாநாடு, ஈரோட்டில் 18.9.2005 அன்று, ஈரோடு அரசு இசைப் பள்ளி மாணவர்களின் தமிழ் இன்னிசையுடன் எழுச்சியோடு தொடங்கியது. மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் சிவ. காளிதாசன் வரவேற்க, தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் தமிழக அமைப்பாளர் வேலிறையன், பேரவையை அறிகப்படுத்தியும், மாநாட்டின் நோக்கங்களை விளக்கியும் பேசினார்.

குடந்தையில் எரிந்த பள்ளி கப்பிலிருந்து எரிந்த குழந்தைகளின் தாய் ஒருவர், செப்டம்பர் 16 அன்று காலை நினைவுச் சுடர்ப் பயணத்தைத் தொடங்கி வைக்க, கல்லூரி மாணவர்கள் தஞ்சை, திருச்சி, நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி ஆகிய நகரங்களின் வழியாக ஓடி வந்து, செப்டம்பர் 18 அன்று ஈரோட்டில் முகாமையான தெருக்களில் பயணித்து, காலை 9.30 மணி அளவில் மாநாட்டரங்கை வந்தடைந்தனர். கருத்துப் பரப்புரையுடன் கூடிய நினைவுச் சுடர்ப் பயணம், வழி நெடுக மக்களை ஈர்த்து வணிகக் கல்வியின் கொடும் விளைவைப் பற்றிச் சிந்திக்க வைத்தது.

முதல் தாய்த் தமிழ்ப் பள்ளியான அம்பத்தூர் பள்ளியின் முதல் மாணவியும், பள்ளிக் கல்வி முழுவதையும் தமிழிலேயே பயின்று உயர் மதிப்பெண்களுடன் நுழைவுத் தேர்வையும் கடந்து, இன்று கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் பயின்று வருபவரும், தியாகுவின் மகளுமான திலீபா, நினைவுச் சுடரை அளிக்க, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி சுடரைப் பெற்றுக் கொண்டார். மாநாட்டரங்கிற்குக் குடந்தை ‘குழந்தைகள் நினைவு அரங்கம்' எனப் பெயர் சூட்டியிருந்ததும், மேடையின் பின்புலத்தில் எரிந்துபோன 94 குழந்தைகளின் படங்கள் வைக்கப்பட்டிருந்ததும் அனைவரின் கண்களையும் பனிக்க வைத்தது.

கூட்டத்தின் இறுக்கத்தைத் தளர்த்துவதாய் அமைந்திருந்தது, பேராசிரியர் சரசுவதியின் மாநாட்டுத் திறப்புரை. பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட வரலாற்றை எடுத்துக் கூறி, மாநாட்டின் இன்றைய பொருத்தப்பாட்டை அவர் விளக்கினார். கண. குறிஞ்சி தலைமையில் தொடங்கிய பொது அரங்கத்தில், பேராசிரியர் ப. சிவக்குமார், ‘உலகமயமாக்கம், தமிழ்வழிக் கல்வியும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். பேராசிரியர் பிரபா கல்விமணி, ‘கல்வி உரிமைக்கான மக்கள் இயக்கம்' என்ற தலைப்பில், கல்வி உரிமைப் போராட்ட வரலாற்றை விரிவாகக் கூறி, தொடர்ந்து போராடுவதே உரிமையை மீட்டுத் தரும் என்றார்.

சமூக நீதி அரங்கத்திற்குத் தலைமையேற்று உரையாற்றிய முனைவர் அரங்க சுப்பையா, தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்து, அவர்களின் கல்விஉரிமை மீட்கப்படாதவரை, தமிழ் மொழிக்கானப் போராட்டம் பொருளற்றது என்றார். மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத், கல்வித் துறையில் சமூக நீதிக்கானப் போராட்டம் பற்றிப் பேச, கேப்டன் வ. துரை, பழங்குடி மக்களின் கல்வி உரிமை பறிக்கப்படுவதை உணர்ச்சியோடு எடுத்துரைத்தார். இருவருமே கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

பள்ளிக் கல்வி அரங்கிற்கு அம்பத்தூர் தாய்த் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் ரா. சங்கரேசுவரி தலைமை ஏற்றார். அவர், தாய்த் தமிழ்ப் பள்ளியின் கற்பித்தல் முறையையும், தாய்மொழிக் கல்வியின் பயன் குறித்தும் பார்வையாளர் மனதில் பதியத் தக்க வகையில் எடுத்துரைத்தார். முனைவர் வே. வசந்திதேவி, தற்பொழுது நிலவும் ஏற்றத் தாழ்வான கல்வி முறைகளை ஒழித்துவிட்டு, அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கக்கூடிய ‘பொதுப் பள்ளிக் கல்வி முறையை' நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டியதின் தேவையை விளக்கினார்.

மருத்துவர் செ. தெய்வநாயகம், ‘பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் தமிழ்' என்ற தலைப்பில் உரையாற்ற, காந்தி கிராமம் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் தி. கருணாகரன், மேடையிலேயே ஒரு சில நொடிகளில் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு பெண்மணியைப் படம் என்று எழுத வைத்ததுடன், படிக்க வைக்கவும் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவரது செயல்முறை விளக்கம் ‘எழுது தமிழ் ஏழு நாளில்' என்ற தலைப்பிற்குப் பொருத்தமாக அமைந்தது.

உயர் கல்வி அரங்கத்திற்கு மருத்துவர் வெ. ஜீவானந்தம் தலைமை தாங்க, மருத்துவர் சிவ. சுப்பிரமணிய ஜெயசேகர் ‘மருத்துவக் கல்வியில் தமிழ்' என்ற தலைப்பிலும், முனைவர் அ. இளங்கோவன், முனைவர் க. ஜெகதீசன் ஆகிய இருவரும் ‘பொறியியல் கல்வியில் தமிழ்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். அறிவியல் அரங்கிற்குத் தலைமையேற்ற முனைவர் ராம. சுந்தரம், தமிழை அறிவியல் மொழியாக்குவதிலுள்ள சிக்கலை விளக்கினார். மணவை முஸ்தபா, தம் கலைச் சொல்லாக்கப் பணிகள் குறித்து விரிவாக விளக்கி, தமிழே ஓர் அறிவியல் மொழிதான் என்பதையும், தமிழைப் போல் வேர்ச் சொற்கள் நிறைந்த மொழி எதுவுமில்லை என்பதையும், தமிழ் வேர்ச் சொற்கள் துணை கொண்டு எந்தப் புதிய அறிவியல் கலைச் சொல்லையும் எளிதில் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதையும் விளக்கினார்.