பூணூலை அறுத்ததாக குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தந்தைபெரியார் படத்தைக் கொளுத்தியும் ஆபாசமாக பேசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம், வீதி மன்றத்தை நாடும் திராவிடர் கழகம்!

சென்னையில் பூணூல் அறுத்ததாகக் கூறி திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ஆறு பேர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் அடைத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது வரவேற்கத்தக்கது; அதே நேரத்தில் மத்திய-மாநில அரசுகளால் கவுரவிக்கப்பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படத்தை எரித்தும், ஆபாசமாகப் பேசியும் செயல்பட்ட பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் மீதும், அவரைச் சார்ந்தவர் மீதும், புகார் செய்தும், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

உடனடியாக எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை யும், வீதி மன்றத்தையும் அணுகி திராவிடர் கழகம் செயல்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, 10.10.2015 அன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னையில் மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்து சென்றவர்களின் பூணூலை அறுத்ததாகக் கூறி 6 பேர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் 7.10.2015 ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி சாலையில் நடந்து சென்றவர்களின் பூணூலை அறுத்ததாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்குகளில் கைதான இராவணன், திவாகர், கோபிநாத், பிரதீப், நந்தகுமார் ஆகியவர்களான 6 பேரை குண்டர் - தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் மே 13ஆம் தேதி (2015) உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேற்கண்ட 6 பேர் சார்பில் வழக்குத் தொடரப் பட்டது.

குண்டர் சட்டம் செல்லாது - நீதிபதிகள் பிறப்பித்த நியாய தீர்ப்பு!

நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், சி.டி. செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு, விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:

1.            கைதுக்கான சம்மன், கைது குறித்த தகவல், சிறையில் அடைப்பதற்கான நகல்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதுமுறையற்றது.

2.            சட்ட, நடைமுறைகளைப் பின்பற்றாமலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான குற்றவாளிகள் என்பதற்கான ஆவணங்களும், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.

3.            குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப் பதற்கான உத்தரவு தாமதமாகவும் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

எனவே, மனுதாரர்கள் 6 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்திட சென்னை மாநகரக் காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து (ணுரயளா) செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது!

இது ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து முழுக்க முழுக்க சட்ட விதிகளின் அடிப்படையில் தரப்பட்ட நியாயத் தீர்ப்பு - நல்லதீர்ப்பு! வரவேற்கத்தக்கது.

வன்முறை மீது கழகத்திற்கு நம்பிக்கை இல்லை

ஏப்ரல் முதல் இத்தீர்ப்பு நாள் வரை இவர்கள்மீது இ.பி.கோ. பிரிவின் கீழும் மற்ற சட்ட விதிகளின் கீழும் போடப்பட்ட வழக்கு அப்படியே நிலுவையில்இருக்கும்.

அவர்கள் ஜாமீனில் வந்தோ, சிறையில் இருந்தோ வழக்குகளை நடத்தும் வாய்ப்பும், உரிமையும் பெற்றுள்ளனர்!

வன்முறை, தனிமனித தாக்குதல் - இவைகளை என்றும் நமது இயக்கம் ஆதரிக்காது என்பது உலகம் அறிந்த நடைமுறை. இவர்கள்தான் குற்றவாளிகளா என்பது இனி வழக்கு விசாரணையில் முடிவு ஆக வேண்டிய ஒன்று.

பூணூல் அறுப்பு நடந்தது ஏன்?

என்றாலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் - பூணூல்அறுப்புகள் - ஏற்படும் சூழ்நிலை ஏன் உருவாகியது என்பதை, நோய்நாடி நோய்முதல் நாடும் வகையில் நடுநிலையாளர்களும், நீதிக்குத் தலைவணங்குவோரும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறையினரும் உணர வேண்டாமா?

ஒரு தொலைக்காட்சியில் தாலி பற்றிய விவாதமே நடைபெறக் கூடாது என்று அவர்களை வன்முறை மூலம் மிரட்டியதும், மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று கூறுவதும் உண்ணும் (அடிப்படை) உரிமையைப் பறிப்பதாகாதா? மனித உரிமைகளைப் பறிக்கும் செயல் இது அல்லவா? அறவழியில் அரங்குக்குள் பெரியார் திடலில் நடத்தவிருந்த நிகழ்ச்சியை எதிர்த்து இந்துத்துவ பார்ப்பனீய அமைப்புகளும், அவர்களின் எடுபிடிகளும் நடத்திய வன்முறை வெறியாட்டம் ஒரு புறம்; பொறுப்பாளராக ஒரு பா.ஜ.க. பார்ப்பனப் பேர் வழியும், அவ்வமைப்பின் அகில இந்திய செயலாளரும்; அவரது ஆதரவாளர்களும் தந்தை பெரியார் படத்தை எரித்தனரே அசிங்கப்படுத்தினரே! தாலியை அகற்றிக் கொண்ட பெண்களைப்பற்றி பொதுமேடையில் வள்ளுவர் கோட்டம் அருகில் - காவல்துறையினர் முன் அனுமதியோடும், சாட்சியோடும் ஆபாசமாகப் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரம் திசைமாறிச் சென்றது grave and sudden Provocation என்பது சட்டச் சொல்லாகும்! இது தானே இது?

பெரியாரை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அவர்கள்மீது இன்றுவரை - சென்னை நகரக் காவல் ஆணையரிடம் புகார்களை பல அமைப்பு கள் கொடுத்தும் இதுவரை அந்தப் புகார்கள் ஊறுகாய் ஜாடியில் தானே கிடக்கின்றன!

அதன் எதிர்வினையாகத்தானே ஆத்திரப் பட்ட வர்கள் யாரோ பூணூலை அறுத்தனர்? அதை நாம் நியாயப்படுத்திக் கூறவில்லை. அதன் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட ஹிந்துத்துவ வாதிகள்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் இது நடக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காதே! இப்போது என்ன எமர்ஜென்சியா - நெருக்கடியா நடைபெறுகிறது?

சென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய விசுவாசியா? தன்னிச்சைபோல, தானடித்த மூப்பாக இப்படி சென்னை நகரக் காவல்துறை - ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக நடந்து - மேலே உள்ளவர்களைத் திருப்திப்படுத்தவோ என்னவோ சட்டவிரோதமாக (illegal detention) 6 இளைஞர்களை - பல மாதங்களாகக் குண்டர்கள் சட்டத்தின்கீழ் வைத்தது. அவர்களுக்கு எத்தகைய மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கும்? அவர்களின் பல்வேறு விதமான இழப்புகளுக்கு யார் பொறுப்பு?

மனித உரிமை ஆணையம் இதனை கவனித்து, தானே முன் வந்து நீதியைப் புறந்தள்ளியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனித உரிமை அமைப்புகள் வாய்மூடி மவுனம் சாதித்தால், நாளை இத்தகைய சட்ட துஷ்பிரயோகம் எல்லோரையும் பதம்பார்க்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்!

தந்தை பெரியார் யார்?

1.            தேசியத் தலைவர் என்பதால் ஆர்.எஸ்.எஸ். அங்கம் வகித்த மத்திய ஜனதா அரசினால் நூற்றாண்டு விழா சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டு பெரியார் கவுரவப்படுத்தப்பட்டார் அல்லவா?

2.            அதற்கு முன் அய்.நா.வின் யுனெஸ்கோ விருதினை மத்திய, மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டு அளித்துப் பெருமைபடுத்தப்பட்ட பெம்மான் அல்லவா பகுத்தறிவு பகலவன் தந்தைபெரியார்.

3.            அவரது 125ஆம் ஆண்டு பிறந்தநாளில் சிறப்பு அஞ்சல் உறை (ஊடிஎநச) வெளியிட்டதே வாஜ்பேயி தலைமையில் இருந்த அரசு - மறந்துவிட்டதா காவல்துறைக்கு?

4.            மாநில அரசு தந்த மரியாதையோடு தந்தைபெரியார் உடல், அடக்கம் நடைபெற்றதற்கான பொருள் என்ன?

5.            அவரது நூற்றாண்டை ஓராண்டு தமிழ்நாடு அரசு கொண்டாடியதே - அது நினைவில் இல்லையோ காவல்துறைக்கு?

6.            அண்மையில் சென்னை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வால் இவர் தமிழ்நாட்டின் மஹாத்மா என்றும் தமிழ்நாட்டின் தந்தை என்றும் நீதிபதி தீர்ப்பு எழுதியதை அறியவில்லையா காவல்துறை?

இன்னும் ஏராளம் உண்டு. இன்று தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகி, காவல்துறைக்கு மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் சட்டம், ஒழுங்கு, ஊரடங்கு உத்தரவு, மதக் கலவரம் இல்லாத பூமியானது யாரால்?

தந்தை பெரியாரால் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை அல்லவா?  இத்தனை மாதங்களாக ஏன் சம்பந்தப்பட்டவர்கள்மீது எந்த நடவடிக்கையையும் சென்னைக் காவல்துறை எடுக்கவில்லை? பூணூல் அறுப்பு குண்டர்சட்டம் போட்டு இப்படி அவமானத்தைச் சுமப்பதில் என்ன அவசரமோ அவசரம்? பெரியாரைக் கொச்சைப்படுத்திய கோணல் புத்தியாளர்கள் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க முன்வராவிட்டால், அடுத்தகட்டம்பற்றி யோசிப்போம்!

சட்டப்படி சந்திக்க வேண்டிய நடவடிக்கைகளை நீதிமன்றத்திலும் - மக்களிடம் எடுத்துச் செல்லும் வீதிமன்ற நடவடிக்கைகளிலும் திராவிடர் கழகம் ஈடுபடுவது உறுதி! உறுதி!

பார்ப்பனர் பூணூலுக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவமா? மண் புழுக்களாய்க் கிடந்த மக்களை, மனிதர்களாக்கி, முதுகெலும்பு வழங்கிய பெரியார் இவர்கள் கண்ணோட்டத்தில் நாதியற்றவரா?

நாதியற்றவர்களுக்கும் சேர்த்து நாப்பறை கொட்டிகாத்த நாயகர் அல்லவா அவர்? மறவாதீர்!