குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். பல்வேறு முயற்சிகளை எடுத்தது (2)

1949 நவம்பர் 15ஆம் தேதி தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது. அம்பாலா பொதுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் தூக்கிலிடப்படும் நாளன்று அதிகாலையில் இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே, மதன்லால், கார்கரே மூவரும் நேரில் சந்திக்க வந்தனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ‘பகவத் கீதை’யைப் படித்தார்கள்.

கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும்,  அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் - இந்துத்துவம் என்ற வலைப் பின்னலிலிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா?

காந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப்பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங்களும் இந்துத்துவா சக்திகளும் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றன. அது குறித்த வரலாற்று உண்மைகளை ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்குகிறது.  (சென்ற இதழ்த் தொடர்ச்சி)

இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் மூலம் சுதந்திரத் திற்கான போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற காந்தியாரின் கொள்கையை இந்தக் கூட்டம் - ஆரம்ப காலத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வந்தது!

gandhi 306காந்தியார் இந்துக்களை கோழையாக்கிவிட்டார் என்று அவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். காங்கிரசுக்குள்ளே காந்தியார் எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் இடைவிடாது ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கூடாரம் காந்தியார் மீது எப்படிப் பகைமை கொண்டிருந்தது என்பதை காந்தியார் உதவியாளர் பியாரிலால் தனது நூலில் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:

“இந்து இராஷ்டிரம் அமைய வேண்டும் என்று சொன்ன முரட்டுத்தனமான கூட்டம், மராட்டிய மாநிலத்தில் இருந்தது. அவர்கள் பார்ப்பன பிற்போக்காளர்கள். அவர்களின் அரசியல் கருத்து காந்தியாருக்கு நேர் எதிரானதாகும். காந்தியாரின் அரசியல் கொள்கை, மராட்டியத் தலைவர் லோகமான்ய திலகருக்கு எதிரானதாகும் என்று அவர்கள் கருதினர். திலகரின் கொள்கை மறைந்து போய்விடுமோ என்று அஞ்சினர். அதன் காரணமாக காந்தியாருக்கு எதிராக 25 ஆண்டு காலம் இடை விடாது பிரச்சாரத்தை - அவர்கள் செய்து வந்தனர். காந்திஜியின் செல்வாக்கு வளருவது - அவர்களுக்கு விரக்தியை உண்டாக்கியது. இந்தக் கூட்டம் தான் 1934இல் புனேயில் காந்திஜி மீது வெடிகுண்டு வீச முயற்சி செய்தது. அப்போது காந்திஜி தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

இப்போது அவர்கள் காந்திஜியை கொலை செய்திருக்கிற திட்டம் அவர்களால் மிகவும் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.

அதற்கு சரியான இளைஞரைத் தேடிப் பிடித்து அதற்கான பயிற்சிகளை கொடுத்து திட்டமிட்டு இதைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் காலில் போட்டிருக்கும் ஷூக்களுக்குள் காந்தி, நேரு உள்பட பல காங்கிரஸ் தலைவர்களின் படம் இருக்கும். அந்தப் படத்தை வைத்து, துப்பாக்கியால் சுட்டு, பயிற்சி பெறுவது அவர்கள் வழக்கம்” என்று பியாரிலால் தனது நூலில் எழுதியிருக்கிறார். (பக்கம் 751)

கபூர் ஆணையம் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நற்சான்றிதழ் வழங்கியதா?

காந்தி கொலை பற்றி ஆராய 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எல். கபூர் தலைமையில் அரசு ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தது. அதே ஆணையம் 1969இல் அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில் காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி விட்டதாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்கிறது!

உண்மை என்ன? இந்த ஆணையத்தின் விசாரணை வரம்புகளை நிர்ணயித்த உள்துறை அமைச்சகம், காந்தியார் கொலையில் ஆர்.எஸ்.எஸ். நேரடி பங்கு குறித்து குறிப்பிடவே இல்லை. ஆர்.எஸ்.எஸ். தொடர்பு விசாரணை வரம்புக்கு உட்படாத பிரச்சினையாகவே உள்துறை அமைச்சகத்தால் மாற்றப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல, உள்துறை செயலாளராக இருந்த அய்.சி.எஸ். பார்ப்பன அதிகாரி, ஆணையம் முன் அளித்த சாட்சியத்தில் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பில்லை என்று கூறினார்.

இதை ஆர்.எஸ்.எஸ். தனக்கு சாதகமாகக் கூறுகிறது. ஆனால், பி.பி.எஸ். ஜெட்லே என்ற மூத்த புலனாய்வுத் துறை அதிகாரி (55ஆவது சாட்சி), காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். இரகசிய திட்டமிட்டது தனக்கு தெரிய வந்தபோது, அந்த அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்று, உ.பி. முதல்வர் ஜி.பி. பந்த், உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியிடம் தாம் பரிந்துரைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஜே.என்.சகானி, ஹீஜா உள்ளிட்ட பல சாட்சியங்கள் காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பை உறுதி செய்ததை கபூர் ஆணையத்தின் அறிக்கை பதிவு செய்துள்ளது.

வழக்கு விசாரணை : நடந்தது என்ன?

1) காந்தியார் கொலை வழக்கு 1948 மே மாதம் இறுதி யில் டெல்லி செங்கோட்டையில் தொடங்கி 7 மாதங்கள் நடந்தன. டிசம்பர் 30ஆம் தேதி நிறை வடைந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச் ஆத்ம சரண்.

2) வழக்கு விசாரணை வெளிப்படையாக நடந்தது. உரிய அனுமதி பெற்று வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

3) வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சித்பவன் பார்ப்பனர் சாவர்க்கருக்கு 8 வழக்கறிஞர்கள் வாதிட்டனர். கோட்சே உட்பட ஏனையோருக்கு தலா ஒரு வழக்கறிஞர் மட்டுமே வாதிட்டார்.

4) வழக்கின் முதன்மைக் குற்றவாளியான கோட்சே, நாராயண் ஆப்தே இருவரும் சாவர்க்காரின் சீடர்கள். இவர்களின் செயல்பாடுகள் அனைத்துக்கும் சாவர்க்கர் ஆதரவு இருந்ததை காவல்துறை தரப்பு நிரூபித்தது. ஆனால், சதித் திட்டத்தை சாவர்க்கார் தான் உருவாக்கித் தந்தார் என்பதை மட்டும் அரசு தரப்பால் நிரூபிக்க முடியாததால் அவர் வழக்கிலிருந்து விடுதலை ஆனார். வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களோடு சாவர்க்கார் நடுநாயகமாக அமர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு படம் முக்கிய சாட்சியாக முன் வைக்கப்பட்டது. (இப்போது நாடாளுமன்ற வளாகத்திலேயே சாவர்க்கர் படம் மாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது)

5) தன்னுடைய தரப்பு வாதங்களை 90 பக்கங்களில் ஒரு அறிக்கையாக தயாரித்து, கோட்சே நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் தான் படித்தான். காந்தியை கொலை செய்தது நான்தான் என்பதை கோட்சே ஒப்புக் கொண்டான். வழக்கையும் தாண்டி ஒரு இந்துத்துவப் பிரச்சார மேடையாக கோட்சே நீதிமன்றத்தைப் பயன்படுத்தினான். இந்து புராணங்களிலிருந்து மேற்கோள் காட்டியதோடு, பகவத் கீதையில் தர்மத்தைக் காக்க கொலை செய்வது பாவம் இல்லை என்ற ‘கிருஷ்ணன் உபதேச’த்தையும் தனது கொலைக்கு நியாயம் கற்பிக்க கோட்சே பயன்படுத்தினான். “அகண்ட பாரதம் வாழ்க; வந்தே மாதரம்” என்ற முழக்கங்களோடு தனது வாக்குமூலத்தை நிறைவு செய்தான். (கோட்சே கூறும் அகண்ட பாரதம் என்பது இந்திய எல்லைகளைக் கடந்து பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கான், பர்மா, இலங்கையையும் உள்ளடக்கியது)

6) கோட்சேயின் இந்த பேச்சு பிறகு சிறு வெளி யீடாக வெளி வந்தது. இந்த உரையை தயாரித்துக் கொடுத்தது அவனின் குருவான சாவர்க்கார் தான் என்று சொல்லப்படுகிறது.

7) செங்கோட்டை நீதிமன்றம் - கோட்சே, நாராயண் ஆப்தே இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. இருவரும் பார்ப்பனர்கள் சதியில் பங்கேற்ற கோபால் கோட்சே (கோட்சே சகோதரர்) தார்கரே, மதன்லால், ஷங்கர், பார்ச்சூர் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.

8) கொலை சதியில் இடம் பெற்று பிறகு அப்ரூவராக மாறி உண்மைகளைக் கூறிய திகம்பர் பாட்ஜே வுக்கு மன்னிப்பு வழங்கி நீதிமன்றம் விடுதலை செய்தது. நீதிபதி தீர்ப்பை வாசிக்கும்போது குற்றவாளிகள் “ஹிந்து தர்ம கி ஜெய்; ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான்” என்று முழக்கமிட்ட படியே இருந்தார்கள்.

9) தண்டனை பெற்ற நான்கு நாட்களில் குற்றவாளிகள் வழக்கை மேல் முறையீடு செய்தனர். வழக்கு விசாரணை சிம்லாவில் இருந்த பஞ்சாப் உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. 1949 மே 2 ஆம் தேதி மேல்முறையீட்டு விசாரணைகள் தொடங்கின. நீதிபதிகள் ஏ.என்.பண்டாரி, அச்ரூராம், ஜி.டி. கோரல்லா ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

10) மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது குற்றவாளிகளுக்கு ஆதரவாக அனுதாபங்களை உருவாக்கும் முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.

11) கோட்சேவாவது திருமணமாகாதவர்; ஆனால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நாராயண் ஆப்தேவுக்கு ஒரு மனைவியும், ஒரு காதலியும் இருக்கிறார்களே, அவரை தூக்கில் போட்டால், குடும்பம் என்னாவது என்ற கருத்தை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வட்டாரங்கள் திட்டமிட்டு பரப்பின. சில ஏடுகளும் எழுதின.

12) சிம்லா உயர்நீதிமன்ற விசாரணையிலும் கோட்சே தனது வாக்குமூலத்தை நீண்ட உரையாக கைதேர்ந்த பேச்சாளனாக முன் வைத்தான். நீதிமன்றத்தில் திரட்டப்பட்டிருந்த பெண்கள், கோட்சே வாக்குமூலத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதார்கள். இதன் பின்னணியைப் புரிந்து கொண்ட நீதிபதி ஜி.டி. கோஸ்லா “இந்தப் பெண்களை தீர்ப்பு எழுதச் சொல்லியிருந்தால் கோட்சேயை விடுதலை செய்திருப்பார்கள்” என்று கூறினார்.

13) ஒன்றரை மாத விசாரணைக்குப் பிறகு 1949 ஜூன் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், கோட்சே, ஆப்தே தூக்குத் தண்டiயை உறுதி செய்தது. கார்கரே, மதன்லால், கோபால் கோட்சே ஆகியோர் ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, டாக்டர் பார்ச்சூர், ஷங்கர் கிஸ்தய்யா இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

14) இதற்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள், காந்தி உயிருடன் இருந்திருப்பாரேயானால் இந்த தூக்குத் தண்டனை விதிப்பை ஏற்க மாட்டார் என்ற கருத்துகளைப் பரப்பி வந்தன. காந்தியின் மகன்கள்கூட தூக்குத் தண்டனை வேண்டாம் என்று அறிக்கை விடுத்தனர்.

15) 1949 நவம்பர் 15ஆம் தேதி தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது. அம்பாலா பொதுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் தூக்கிலிடப் படும் நாளன்று அதிகாலையில் இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே, மதன்லால், கார்கரே மூவரும் நேரில் சந்திக்க வந்தனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ‘பகவத் கீதை’யைப் படித்தார்கள்.

16) அந்த நேரத்திலும் தனது ஜோதிடப் பலன் மீது ஆப்தே அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான். தனது ஜோதிட பலன்படி தனக்கு நீண்ட ஆயுள் உறுதி செய்யப்பட்டிருப்பதால் தூக்குத் தண்டனை எப்படியும் நின்றுவிடும் என்று மதன்லால் கூறியதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஜோதிடம் மதன்லாலையும் காப்பாற்ற வில்லை. கடைசி நேரத்தில் தூக்கு மேடைக்கு வருவதற்கு ஆப்தே முரண்டு பிடித்தான். மிகவும் போராடி சிரமப்பட்டே அவரை தூக்கிலிட வேண்டியிருந்தது என்று சிலர் நூல்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால், கோட்சேவிடம் கடைசி நேரத்தில் பயமும் தடுமாற்றமும் இருந்தது என்றும், ஆப்தே தான் உறுதியாக இருந்தார் என்றும் தண்டனை நிறைவேற்றத்தை நேரில் பார்த்த நீதிபதி ஜி.டி.கோஸ்லா எழுதி இருக்கிறார்.

17) “நான் இறந்த பிறகு என்னுடைய சாம்பலை இந்தியாவிலுள்ள எந்த நதிகளிலும் கரைக்கக் கூடாது; இந்த நதிகளில் காந்தி சாம்பல் கரைக்கப்பட்டு அசுத்தமாகி விட்டது; காந்தி சாம்பல் கரைக்கப்படாத, பாகிஸ்தானில் உள்ள சிந்து நதியில் தான் கரைக்க வேண்டும்” என்று கோட்சே தன்னிடம் நேரில் கூறியதாக அவரது தம்பி கோபால் கோட்சே கூறினார். தூக்கிலிடப்பட்ட இருவரின் உடலும் அம்பாலா சிறைச்சாலையில் எரியூட்டப்பட்டன.

18) காந்தியார் கொலையில் அரசு, அரசியல்வாதிகள் பங்களிப்பு மற்றும் விசாரணையில் நீண்ட தாமதம் குறித்த அய்யங்கள் எழும்பியதால் மத்திய அரசு 1965இல் கோபால் ஸ்வரூப் பதக் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தது. 1966இல் பதக் மத்திய அமைச்சரானார்; ஆணையம் செயலிழந்தது.

அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் நடந்ததால் 1966இல் நீதிபதி ஜே.எல். கபூர் தலைமையில் மற்றொரு ஆணையம் அமைக்கப்பட்டது. டெல்லி மற்றும் பூனா காவல்துறை விசாரணையில் அலட்சியம் காட்டியுள்ளதாக ஆணையம் இடித்துரைத்து விசாரணையை முடித்துக் கொண்டது.  

(தொடரும்)