சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம் - கழகம் ஆதரவு

116 ஆண்டுகள் புகழ் பெற்ற சென்னை சட்டக் கல்லூரியை சென்னைக்கு வெளியே கொண்டு செல்லும் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.பிப்.7ஆம் தேதி இரவு 7 மணியளவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்தித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.

“ஈழத் தமிழர் மீது இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டபோது இந்தப் பகுதியை போராட்டக்களமாக மாற்றிக்காட்டியவர்கள் நீங்கள். அவ்வப்போது எழும் சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து போராடுகிறீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஆட்சியாளர்கள் கல்லூரியையே சென்னையை விட்டு அப்புறப்படுத்த முடிவு செய்துவிட்டார்கள். இந்தக் கல்லூரி வளாகம், சென்னை ‘மெட்ரோ’ இரயில்பாதை அமைப்புக்கு தடை என்றால் அருகே இருக்கும் குறளகத்தை மாற்றுவார்களா?

ஒரு காலத்தில் சட்டம் படித்தவர்கள், வழக்கறிஞர்கள் எல்லாமுமே பார்ப்பனர்கள்தான் என்றிருந்த நிலை மாறி, இன்று தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த சமூக நீதி சக்திகள் சட்டம் படிக்க வந்து விட்டார்கள். நீதிமன்ற வளாகத்துக்குள் இந்த சட்டக் கல்லூரி இருப்பதால் நீதிமன்ற நடவடிக்கைளோடு நீங்கள் பெறக்கூடிய அனுபவங்களை இந்த இடமாற்றத்தின் வழியாக ஆட்சியாளர்கள் பறிக்கிறார்கள்.

பெருமை மிக்க இராணிமேரிக் கல்லூரியை இப்படித்தான் மாற்ற நினைத்தார்கள். அதிலே தோற்றுப் போன ஆட்சி, இந்தப் பிரச்சினையிலும் தோற்றுப் போகும். உங்களின் நேர்மையான போராட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம் ஆதரிப்பதோடு, கண்மூடித்தனமாக உங்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று பொதுச் செயலாளர் குறிப்பிட்டார். மாவட்ட செயலாளர் உமாபதி, வழக்கறிஞர் திருமூர்த்தி, முழக்கம் உமாபதி, செந்தில் உள்ளிட்ட தோழர்கள் உடன் வந்திருந்தனர்.

எழுத்தாளர்கள் குணா-கண்ணன் மீது பாய்ந்த ஜாதி வெறி

பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலை திருச்செங்கோடு ஜாதிவெறி சக்திகள் அச்சுறுத்தி முடக்கியதுபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இரண்டு தலித் இளைஞர்கள் ஜாதி வெறிக்கு எதிராக எழுதிய நூலுக்கு ஜாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை ஊரைவிட்டே ஓட வைத்து விட்டனர். அவர்களின் வீடுகள் தாக்கப்பட்டன; உடைமைகளும் ஜாதி வெறியர்களால் அழிக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி வட்டம் குளந்திரான்பட்டு கிராமத்தைச் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இளைஞர் துரை. குணா, ‘ஊர் கூடி தேர் இழுப்பவர்கள்’ என்று எழுதிய நாவலுக்கு ஊர் ஜாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஊரில் குடியிருக்க விடாமல் அச்சுறுத்தி வெளியேற்றி விட்டனர். அதே மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சார்ந்த தலித் தோழர் ம.மு. கண்ணன் எழுதிய ‘கானாயீனாவின் கணினி’ என்ற நாவல், ஜாதி வெறி குறித்துப் பதிவுகளை செய்திருந்ததால், அவரது குடிசை வீட்டைக் கொளுத்தி, அவர் சேமித்து வைத்திருந்த அரிய நூல்களையும் ஜாதி வெறியர்கள் எரித்துவிட்டனர். 3 ஆண்டுகளாக ஊருக்கும் செல்லமுடியாமல் ஊரை விட்டு வெளியேறி விட்டார் கண்ணன்.

துரை. குணா, கண்ணனின் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று, 8.2.2015 மாலை 4 மணியளவில் எழும்பூர் இக்ஷா அரங்கில் நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது. நிகழ்வில் இருவரும் பங்கேற்று. ஜாதி வெறியர்களால் சந்தித்த அடக்குமுறைகளையும் காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்காததையும் விவரித்துக் கூறினர். துரை. குணாவின் தந்தை, அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வரக்கூடிய தோழர். அவரது நூலுக்கு முன்னுரை வழங்கியதும், நூலை நிகழ்ச்சியில் வெளியிட்டதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்தான் என்று கூறிய குணா, தனக்கு ஜாதி வெறியர்களால் மிரட்டல், தாக்குதல் நடந்தபோது தனக்கு உதவிட, கட்சித் தோழர்கள் முன்வரவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

நிகழ்வில், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அமுதன், பேராசிரியர் அரசு, எழுத்தாளர் பீர் முகம்மது, அ. மார்க்ஸ், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மதவாத சக்திகள், ஜாதி வெறி சக்திகளை இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் ஆபத்தைகளையும் ஜாதி எதிர்ப்புக்கான முனைப்பான போராட்டங்களை எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், மனித உரிமையாளர்கள், முற்போக்கு இயக்கங்கள், தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் கூட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.