தேர்தல் நடத்தி விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு வருகிறது மோடி ஆட்சி.

‘தூர்தர்ஷன்’ என்ற அரசு தொலைக்காட்சி சேவையும் அகில இந்திய வானொலியும் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார மேடைகளாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நடத்தை விதிகள் அமுலுக்கு வந்த பிறகு விதிகளுக்கு மாறாக ‘நமோ டிவி’ என்ற தொலைக்காட்சி சேவையை பா.ஜ.க. தொடங்கியிருக்கிறது.

ஒரு தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட வேண்டுமானால் அதற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த ஒப்புதல் ஏதும் பெறாமலே இந்த ‘நமோ டிவி’ தொடங்கப்பட்டு விட்டது. மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் தம்பட்டமடிக்கப்படுகின்றன. மார்ச் 31ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ‘டி.வி.’, ‘டிடிஎச்’ (Directo to Home) அலைவரிசையைப் பயன்படுத்தி வருகிறது. எதிர்கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

‘இது தனியார் விளம்பர சேவை; தொலைக்காட்சியல்ல’ என்று விளக்கம் கூறுகிறது பா.ஜ.க. இந்தத் தொலைக்காட்சி உரிமையாளர் யார்? எந்த அமைப்பின் பெயரால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதில் இல்லை. அனைத்தும் மோடியால் இரகசியமாக செய்யப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி சேவை திருத்த சட்டத்துக்கு இது முரணானது.

‘டி.டி.எச்.’ சேவையைப் பயன்படுத்தும் தொலைக்காட்சிகள் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும். அதையும் ‘நமோ டிவி’ கட்டவில்லை.

‘நமோ டி.வி.’ பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார சேவை, அது ‘டிவி’ என்ற வரம்புக்குள் வராது என்று பா.ஜ.க. வாதாடுவது உண்மை என்றால் இந்தப் பிரச்சார சேவையை பா.ஜ.க.வின் தேர்தல் செலவு கணக்குக்குள் கொண்டு வரப்படுமா என்று எதிர்க்கட்சிகள் நியாயமான கேள்வியை எழுப்புகின்றன.

நெல்ப்முறையை மாற்றி ஹெல்ப்முறையைக் கொண்டு வந்தது யார்?

மீத்தேன், ஷேல்கேஸ் போன்ற பூமிக்கடியில் உள்ள இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்கு தனித்தனியாக அனுமதி பெறும் ‘நெல்ப்’ முறையை மாற்றி ‘ஹெல்ப்’ எனப்படும் ஒற்றை உரிமத்தை பெற்றால் போதும்; ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு பூமிக்கடியில் உள்ள எந்த இயற்கை வளங்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

பன்னாட்டு முதலாளிகள் இந்திய இயற்கை எரிவாயு வளங்களை கொள்ளையடிப்பதற்காக, ‘தளர்த்தப்பட்ட திறந்தவெளி அனுமதி திட்டம்’ என்ற புதிய கொள்கையின்படி எண்ணெய் வயல்களை மத்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அடையாளம் கண்டு அதை ஏலம் விட்டுக் கொண்டுள்ளது. இதில் பெயரளவிற்கு ஒரு சில இடங்களை மட்டும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டு பெரும்பாலான இடங்களை தனியார், பன்னாட்டு கம்பெனிகளுக்கு வழங்கியுள்ளது.

உதாரணத்திற்கு 28.8.2018இல் நாடு முழுவதும் 55 இடங்களை ஏலத்திற்கு விட்டதில் வேதாந்தா நிறுவனம் 41 இடங்களைப் பெற்றுள்ளது. எச்.ஓ.இ.சி. ஒரு இடம் பெற்றுள்ளது. மீதியுள்ள 13 இடங்கள்தான் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட் டுள்ளது.

ஆக மொத்தமுள்ள 55 இடங்களில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு 42 இடங்களும், பொதுத் துறைக்கு 13 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மோடியின் அப்பட்டமான கார்ப்பரேட் பாசம் இதிலிருந்து வெளிச்சமாகிறது.

மேலும் நூற்றுக்கணக்கான இடங்களில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஒதுக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.