நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பகுத்தறிவு சிந்தனையற்றவர்களுக்கு எதிராகவும், சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் ரீதியாக, மக்களைத் துண்டாட நினைப்பவர்களுக்கு எதிராகவும் வாக்களிப்போம் என்று நாடு முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அறிவியலாளர்களின் கூட்டமைப்பான இந்தியக் கலாச்சாரக் கழகம், இந்தியக் கல்வி அ றிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்தியப் புள்ளியல் நிறுவனம், தேசிய உயிரியல் அறிவியல் மையம், இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் 154 விஞ்ஞானிகள் இணைந்து இந்த அறைகூவலை விடுத் துள்ளனர்.

அமித் ஆப்தே, சோரப் தலால், ரமா கோவிந்த ராஜன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

“மக்களை மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், மொழியின் பெயராலும், வாழும் பகுதியின் பெயராலும், பாலினத்தின் பெயராலும் மக்களுக்கு எதிராக பாகுபாட்டை ஏற்படுத்தி அவர்களைக் கொலை செய்பவர்களை நாம் நிராகரிக்க வேண்டும். மேலும் இத்தகைய நடை முறைகளை ஊக்குவித்து வருபவர்களையும் நாம் நிராகரித்தாக வேண்டும்.

விஞ்ஞானிகள், சமூக செயற்பாட் டாளர்கள், பகுத்தறிவாளர்கள் வேட்டை யாடப்பட்டனர். கொடுமைக்கு ஆளாகினர். தணிக்கைக்கு உட்படுத்தப் பட்டனர். சிறையில் தள்ளப்பட்டனர். எல்லா வற்றுக்கும் மேலாக படுகொலை செய்யப்பட்டனர். இது நம் நாட்டின் எதிர்காலமாக இருக்கக் கூடாது. இவற்றை ஆதரிக்கும் செயல்களையும் நபர்களையும் நாம் நிராகரிக்க வேண்டும்.

மோடி அரசானது, முற்போக்குச் சிந்தனை யாளர்கள், பகுத்தறிவாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளை தண்டிக்க நினைக்கிறது. அதை நாம் அனுமதிக்கக் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது குடியரசின் பலம். அந்த அடிப்படையையே அழிக்க நினைப்பவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது.

எனவே, இந்தியாவின் அனைத்துக் குடி மக்களுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறோம். தயவு செய்து புத்திசாலித்தனத்துடன் வாக்களியுங்கள். ஆதாரத்துடனான சொற் பொழிவுகளைக் களங்கப்படுத்துவதற்கும், பகுத்தறிவுச் சிந்தனையை அவமதிக்கும் போக்கிற்கும் முற்றுப்புள்ளி வையுங்கள்.

மக்களிடையே அறிவியல் மனோபாவத்தை உயர்த்திப் பிடிப்பதற்கு உறுதி பூண்டுள்ள நம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.”

இவ்வாறு விஞ்ஞானிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அறிக்கையின் முடிவில், “எங்கே நமது மனம் பயமின்றி தலைநிமிர்ந்து நிற்கிறதோ, எங்கே அறிவு சுதந்திரமாக உள்ளதோ, எங்கே உலகம் உடைந்து துண்டாடப்பட வில்லையோ, அங்கு குறுகிய எண்ணங்கள் இருக்காது” என்ற மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வரிகளையும் விஞ்ஞானிகள் நினைவுபடுத்தியுள்ளனர்.

ஐஐஎஸ்இஆர்-ஐ சேர்ந்த பேராசிரியர் சத்யஜித் ராத் மற்றும் ஐஎஸ்ஐயைச் சேர்ந்த ராகுல் ராய் ஆகியோர் இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட வேண்டும் என்று, இந்தியாவின் புகழ்பெற்ற 100க்கும் மேற்பட்ட திரைப்படப் படைப்பாளிகளும், “வெறுப்பு அரசியலுக்கு எதிராக வாக்களிப்போம்; பன்முகக் கலாச்சார மனிதர்களின் சமத்துவத்தை நிலை நிறுத்துவோம்” என்று எழுத்தாளர்கள் 210 பேரும் ஏற்கெனவே தனித்தனியாக அறிக்கை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It