1) பழனி கோயிலில் பக்தர் தூக்கு போட்டு தற்கொலை; 2 ஊழியர்கள் பணி நீக்கம் - செய்தி

என்னுடைய சாவுக்கு பழனி முருகன் தான் முழு காரணம்னு அந்த பக்தர் கடிதம் எழுதி வச்சிருந்தாருன்னா, அப்ப யாரை பணி நீக்கம் செய்வீங்க...

2) சென்னை அயனாவரத்தில் உள்ள கோயிலுக்குள் வழிபட வந்த இந்து முன்னணி பிரமுகரின் தங்க சங்கிலி திருட்டு. - செய்தி

கோயிலுக்கு வரும் பக்தர்கள் எவரும் தங்க நகை அணியக் கூடாது; பாதுகாப்புக்காக கவரிங் நகைகள் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு தீர்ப்பை பெற்று விடலாமே! யோசிங்க....

3)  ‘இராமாயணம்’ ஒரு புனித நூல்; அந்தப் பெயரை வர்த்தகத்துக்குப் பயன்படுத்தக் கூடாது.  - உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆனால், அரசியல் மற்றும் தொலைக்காட்சி வர்த்தகங்களுக்கு இராமாயணத்தைப் பயன்படுத்தலாம். இது ‘பழக்க வழக்கம்’ என்பதால் நீதிமன்றம் தலையிடவே முடியாது.

4) இராமரின் தயவினால் ஆட்சிக்கு வந்த மோடி, உடனே இராமன் கோயில் கட்ட தேதி அறிவிக்க வேண்டும். - சிவசேனா அறிக்கை

ஏன், அந்தத் தேதியை அறிவிக்கச் சொல்லி இராமனிடமே, கேட்க வேண்டியது தானே?

5) கோயில்களில் தேவதாசி முறையை ஒழிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. - செய்தி

சுப்ரமணியசாமி, இதுக்கும் தடை வாங்காமே இருக்கணுமே!

6) சீனாவில் தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர்களாக ‘ரோபோக்கள்’ பயன்படுத்தப்படுகின்றன. - செய்தி

ப்பூ... இதென்ன பிரமாதம்! எங்க ஊர்ல விவாதங்களிலேயே ரோபோக்கள் வந்துடுச்சுங்க. கேமிராவை திருப்பினால் போதும். ‘அம்மா’, ‘அம்மாவின் ஆணைப்படி’ன்னு பேச ஆரம்பிச்சுடும்!

7) அய்யப்பன் கோயிலுக்குள்  போக வேண்டும் என்பதில் மட்டும் பெண்களின் உரிமை அடங்கி இருக்கவில்லை.  - தமிழிசை சவுந்தர் ராஜன்

அதேபோல கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பதால் மட்டும் உரிமை கிடைத்து விடுவதில்லைன்னு சேர்த்து சொல்லுங்க.