தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் கன்யா குமார்  மாணவர்களிடையே ஆற்றிய உரையின் தமிழாக்கம்:

எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸ். ஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களின் தேசபக்தியாகும்.

எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த அரசியலமைப்பின் மீது யாராவது விரல் நீட்டினால், அது சங்பரிவாரத்தின் விரலோ அல்லது வேறு எவருடைய விரலோ.  அந்த விரலை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம்.

ஆனால், ஜண்டேவாலாவிலும், நாக்பூரிலும் கற்பிக்கப் படும் சாசனத்தின் மீது எங்களுக்கு துளியளவும் நம்பிக்கை யில்லை. எங்களுக்கு மனுஸ்மிருதியின் மீது எவ்வித நம்பிக்கையுமில்லை. இந்த நாட்டிலுள்ள சாதியவாதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.

அண்ணல்  அம்பேத்கர்தான் அரசியல் சாசன உரிமைகளை நிலை நாட்ட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். அவர்தான் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அவர்தான் கருத்து உரிமையைப் பேசுகிறார்.

நாங்களும் எங்கள் அரசியல் சாசன உரிமைகளை எதன் பொருட்டும் விட்டு கொடுக்க மாட்டோம். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜிஹாதிகள் இருக்கிறார்கள். வன்முறையை பரப்புகிறார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்கிறார். துணிவிருந்தால் ஆர்.எஸ்.எஸ். அடிவருடிகளை அழையுங்கள். நாங்கள் சவால் விட்டு கேட்கிறோம். ஏபிவிபி தங்களது முழக்கங்களில், “இரத்தத்தால் திலகமிடுவோம் என்றும், குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்றும் கூறுகிறார்களே? இந்த வெட்கங்கெட்டவர்கள் யாருடைய இரத்தத்தை இந்த ஊரில் ஓட விடப் பார்க்கிறார்கள்?

ஆம். நீங்கள் குண்டுகளை பாய்ச்சியிருக்கிறீர்கள். ஆங்கிலேயர்களோடு இணைந்து கொண்டு, இந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் மீது குண்டுகளை பாய்ச்சியிருக்கிறீர்கள். இந்த ஊரில் ஏழைகள் தங்கள் பசியைக் குறித்து கவலைப்படுகிறார்கள். பட்டினியில் வாடும் மக்கள் தங்கள் உரிமையைப் பற்றி பேசுகிறார்கள்.

நீங்கள் அவர்கள் மேல்தான் உங்கள் குண்டுகளை பாய்ச்சுகிறீர்கள். இ°லாமியர்கள் மீதும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடினால், பெண்கள் சீதையைப் போல இருக்க வேண்டும் என்று அவர்கள் மீதும் அடக்குமுறை செலுத்துகிறீர்கள். இந்த நாடு ஜனநாயக நாடுதானே? அது, மாணவர்கள், ஊழியர்கள், ஏழைகள், கூலித் தொழிலாளி மற்றும் விவசாயிகள் ஆனாலும், அம்பானி அல்லது அதானி ஆனாலும் அனைவருக்கும் ஜனநாயக உரிமைகளை வழங்கியிருக்கிறதே?

பெண்களின் உரிமைகள் குறித்து பேசும்போது, நாங்கள் பாரதிய பண்பாட்டை அழிக்க நினைப்பதாக குற்றஞ் சுமத்து கிறார்கள். ஆம், நாங்கள் அழிக்க நினைக்கிறோம், சுரண்டல் பண்பாட்டை அழிக்க விரும்புகிறோம். சாதிய பண்பாட்டை அழிக்க நினைக்கிறோம். மனுவாத, பார்ப்பனிய பண்பாட்டை அழிக்க விரும்புகிறோம்.

இவர்களுக்கு (காவி பரிவாரங்களுக்கு) உண்மையில் எங்கே பிரச்சினை வருகிறது? மக்கள் ஜனநாயகத்தை குறித்துப் பேசும் போதும், செவ்வணக்கத்தோடு, நீல வணக்கத்தை இணைத்து சொல்லும்போதும், மார்க்ஸோடு, அண்ணல் அம்பேத்கரின் பெயரை இணைக்கும் போதும் வருகிறது. இதை உறுதியோடு செய்யும்போது இவர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.

இந்த காவிக் கும்பல் ஆங்கிலேயர்களின் அடிவருடிகள் ஆர்.எஸ்.எஸ்.சின் வரலாறு என்பதே ஆங்கிலேய ஏகாதிபத்தியத் தோடுதான் பிணைந்திருக்கிறது.

இந்த தேசத் துரோகிகள்தான் நம்மிடம் தேசபக்திக்கான சான்றிதழைக் கோருகிறார்கள். வேண்டுமென்றால், எனது மொபைலை பரிசோதித்துக் கொள்ளுங்கள் தோழர்களே. என் தாய், சகோதரிகளை பற்றி அசிங்கமான சொற்களில் திட்டி தீர்க்கிறார்கள். பாரத மாதாவை பற்றி பேசுகிறது இந்த கும்பல். உங்கள் பாரதமாதாவில் எனது தாய் இல்லை யென்றால், பாரத மாதா மீதே எனக்கு உடன்பாடு கிடையாது.

இந்த நாட்டின் வறுமையில் வாடும் பெண்களில் என் அம்மாவும் ஒருவர்; அவர் அங்கன்வாடியில் 3000 ரூபாய்க்கு கூலி வேலி செய்கிறார். அதில் எங்கள் குடும்பம் நடக்கிறது. இந்த கும்பல் அவருக்கு எதிராக கெட்ட வார்த்தை யில் பேசுகிறது.

இந்த நாட்டின் ஏழை, தலித், விவசாயிகளின் மாதாக்கள் யாரையும் இவர்கள் பாரதமாதாவாக ஏற்றுக் கொள்வதில்லை. உங்களுக்கு துணிவிருந்தால் புரட்சி வெல்லட்டும் என்றோ, பகத்சிங் புகழ் ஓங்குக என்றோ, சுகதேவின் புகழ் ஓங்குக, அம்பேத்கரின் புகழ் ஓங்குக என்றோ கூற முடியுமா? அப்பொழுது நம்புகிறோம், காவிக் கும்பலுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று...

ஆனால், அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாள் கொண்டாடு வதாக நாடகம் ஆடுகின்றீர்கள். சாதியம்தான் இந்த நாடு சந்திக்கும் முதன்மையான பிரச்சினை என்று அண்ணல் அம்பேத்கர் கூறினாரே... உண்மையாக அக்கறை இருக்குமானால், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துங்களேன். அப்பொழுது நம்புகிறோம். காவிக் கும்பலுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று...

பல்கலைக்கழக வளாகம் இருப்பதே எதற்காக? சமூகத்தில் நிலவும் சூழலை குறுக்கு விசாரணை செய்வதற்கு தானே...? பல்கலைக்கழகங்கள் இந்த பணியில் தோற்றால், நாடு, நாடாகவே இருக்காது.

இந்த தேசத்தோடும், அம்பேத்கரும், பகத்சிங்கும் இந் நாட்டின் நலனுக்காக கண்ட கனவுகளோடும் நாங்கள் ஒன்றிப் போனவர்கள். உணவு, உடை, இருப்பிடம் என அனைத்திலும் சமத்துவத்தை உறுதி செய்யும் கனவுதான் எங்களுடையது. இந்த கனவுக்காகத்தான் ரோஹித் தன்னுடைய உயிரை கொடுத்தான். மத்திய அரசுக்கு நாங்கள் சவால் விடுகிறோம். ஐதராபாத்தில் ரோஹித்துக்கு என்ன நடந்ததோ அதை கண்டிப்பாக வளாகத்தில் நடக்க விட மாட்டோம்.

நன்றி : ‘தீக்கதிர்’