“பலவீனம் அதிசயங்களை நம்புவதில் அடைக்கலம் பெற்றுவிடுகிறது” என்றார் மார்க்ஸ். மார்க்சின் கூற்று ஓர் அறிவியல் உண்மை. இதற்கான உதாரணத்தை நாம் தமிழகத்திலேயே காண்போம். வடிவேல் ஒரு படத்தில் காலை எழுந்ததும் தன் தாயையும், தந்தையையும் வணங்கி உலகில் அவர்களை விட சிறந்த கடவுள் யாரும் இல்லை என்கிற பயபக்தியுடனும், அளவிலா அன்புடனும் பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிக்கொண்டு வேலைக்குச் செல்வார். மாலை வேலை முடிந்த பிறகு புல் மப்பை ஏற்றிக்கொண்டு வீட்டிற்குள் நுழையும் போதே கடவுள்களான தன் தாயையும், தந்தையையும் கெட்ட கெட்ட வார்த்தைகளைப் போட்டு அர்ச்சனை செய்து கொண்டே நுழைவார். இவருக்கு பயந்து கொண்டே அவருடைய அப்பா ஆறு மணிக்கெல்லாம் முழுக்க போர்த்திக்கொண்டு படுத்துவிடுவார். திட்டிக்கொண்டே அப்பாவை எழுப்பி நல்லா சாத்து சாத்தென்று சாத்துவார். அம்மாவையும் அப்பாவையும் நன்றாக பந்தாடிவிட்டு கடைசியாக தான் ஏன் அவ்வாறு அடித்தேன் என்பதை அழுதுகொண்டே விளக்குவார். ஆனால் அடியும் அரவணைப்பும் அன்றோடு முடியாது. அடுத்த நாள் காலை அளவிலா அன்பும், மாலை அளவிலா அடியும் கிடைக்கும். இது தினமும் தொடரும். 

அதே போலத்தான் சில சமயங்களில் தமிழர்கள் தான் உலகிலேயே சிறந்தவர்கள் என்றும், அறிவாளிகள் என்றும், மூத்தகுடிகள் என்றும் புகழ்ந்துவிட்டு பிறிதொரு சமயத்தில் தமிழர்கள் தான் உலகிலேயே அடி முட்டாள்கள், சொரணையற்றவர்கள், ஏமாளிக்கூட்டம் என்று தமிழ் மக்களை கண்டபடி புகழ்வதும் கண்டபடி ஏசுவதுமாக இருக்கும் ஒரு கூட்டம் ’தமிழ் தேசியம்’ என்கிற அதிசயத்தை நிகழ்த்திக்காட்டுவதற்காக அந்த சூடு, சொரணையற்ற மக்களைத் திட்டித்திட்டி திரட்டும் பகீரத முயற்சியில் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது. முதிர்ச்சியின் கிழட்டுத்தன்மையும் அதன் விளைவாக பலவீனமும் அடைந்துவிட்ட ’தமிழ்தேசியம்’ பல அதிசயங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. சாதி உணர்வுள்ள தமிழன் இன உணர்வுள்ளவனாக மாறி விடுவான் என்றும், பிரபாகரன் மார்க்சியவாதி என்று ’மார்க்சியவாதிகள்’ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், “பிரபாகரன் மீண்டும் உயிர்த்தெழுவார்” என்றும் காத்துக்கொண்டிருக்கிறது. அதிசயங்கள் நிகழுமா? நிகழும் ஆனால் நிகழாது! சாதி உணர்வுள்ள தமிழனுக்கு வர்க்க உணர்வை ஊட்டலாம் ஆனால் உயிரோடிருந்தாலும் பிரபாகரனை மார்க்சியவாதியாக்க முடியாது.

இன்று தமிழ்நாட்டிலுள்ள பல வண்ண தமிழ் தேசிய கற்பனாவாத அரசியலின் மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ள சில இளைஞர்கள் கற்பனாவாத தத்துவத்திற்கேற்பவே ஈழமும், தனித் தமிழ்நாடும் தானாகவே அமைந்து விடும் என்கிற கற்பனை மயக்கத்திலிருக்கும் இந்த சூழலில், தத்துவ அடித்தளமே இல்லாத தமிழ் தேசியத்தின் ’வீரம்’ என்ன என்பதை இங்கு பார்ப்போம். தமிழகத்தில் பல பல வண்ணங்களில் ஆவிகளாக மட்டுமே உலா வரும் தமிழ் இனவாதிகள் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கும் புரட்சிகர அமைப்புகளான எம் மீது சில நேர்மையற்ற ’விமர்சனங்களை’ வைக்கிறார்கள். தோழர் மருதையன் பார்ப்பனர், பார்ப்பனத் தலைமை, புலிகளை எதிர்ப்பவர்கள், தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் என்கிற சில ’நேர்மையான’ விமர்சனங்களை வைக்கிறார்கள். இந்த அக்கப்போர்களுக்கு ஆயிரம் முறை பதிலளித்த பிறகும் ‘இல்ல, இல்ல மொதல்ல இருந்து வா’ என்கிற ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

எனினும் இந்த மொக்கை விமர்சனங்களுக்கு மீண்டும் ஒரு முறை ஒரு சில வரிகளில் மட்டும் பதிலளித்துவிட்டு மேலே செல்வோம்.

எங்களைப் பொறுத்தவரை தோழர் மருதையன் பார்ப்பனர் இல்லை, அவர் ஒரு கம்யூனிஸ்ட் அவ்வளவே. மற்றபடி ஒரு நபரின் சாதியை கொண்டு அவருடைய நடவடிக்கைகளை அளக்கும் கண்ணோட்டம் தான் பார்ப்பனீய கண்ணோட்டம். ஒருவரின் குணாதிசயங்கள், நடவடிக்கைகள் எல்லாம் பிறப்பின் அடிப்படையில் தான் அமையும் என்று பார்ப்பனீயம் தான் வரையறுத்து வைத்துள்ளது. இப்போது பார்ப்பனீயத்தின் இளைய பங்காளிகளாகி விட்ட தமிழ்பார்ப்பனியவாதிகளும் அதையே சொல்லி வருகிறார்கள். உங்கள் பார்வையில் மருதையன் பார்ப்பனர் எனில் தலித் மக்களின் பார்வையில் தமிழ்தேசியம் பேசும் நீங்கள் எல்லோரும் ஆதிக்க சாதி வெறியர்கள் தான் ! இதை ஒத்துக்கொள்வீர்களா ?

இரண்டாவதாக புலிகளை ம.க.இ.க ஏன் ஆதரிக்கவில்லை என்கிறார்கள். ஏன் ஆதரிக்க வேண்டும்? ஈழத்தின் விடுதலைக்காக நின்ற மார்க்சிய லெனினிய தோழர்களையே கொன்றொழித்தார்களே அதற்காக ஆதரிக்க வேண்டுமா? இல்லை ராஜீவ் கொலையை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்த எங்கள் மீதே அந்த கொலைப் பழியை போட்டு துரோகம் செய்யப் பார்த்தார்களே அதற்காக ஆதரிக்க வேண்டுமா? அல்லது மக்களையே கேடயமாக்கி கொன்றார்களே அதற்காகவா அல்லது இறுதி நாட்களில் தப்பித்து ஓட நினைத்தார்களே அதற்காகவா? எதற்காக ம.க.இ.க புலியை ஆதரிக்க வேண்டும்?

ம.க.இ.க இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது என்கிறார்கள். உண்மை தான், ஆனால் யாருக்கு? தமிழ்தேசியவாதிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு தான் இடஒதுக்கீட்டை கொடுக்கவே கூடாது என்று ம.க.இ.க தீவிரமாகவும், வன்மையுடனும் எதிர்க்கிறது. ஆனால் ’ஒடுக்கப்பட்ட மக்களுக்கு’ இடஒதுக்கீடு கிடைப்பதை நாம் என்றைக்கும் எதிர்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இடஒதுக்கீடு ஒரு முழுமையான தீர்வு இல்லை என்றும் சொல்கிறோம். ஆனால் தமிழ் தேசியப் பித்தலாட்டக்காரர்கள் ம.க.இ.க வின் இடஒதுக்கீடு பற்றிய இந்த நிலைப்பாடு தமக்கும் தமது சாதிக்கும் எதிராக இருப்பதால் அதை திரித்து, வெட்டி, சுருக்கி ம.க.இ.க இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்று சொல்லி தலித் மக்களையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். ஆனால் பாவம் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றும் தம்மை தமிழராய் எண்ணியதுமில்லை. இந்த தமிழ்த்தேசிய கனவான்களும் அவர்களைத் தன் உறவாய் ஏற்பதுமில்லை. எம்மை பற்றிய இந்த அவதூறுகளுக்கு நாம் பல முறை பதிலளித்து விட்டோம். இருந்தும் பாசிச ஜெயலலிதாவிடம் கூட நேர்மையான சந்தர்ப்பவாதத்தைக் காணும் இந்த நேர்மையற்ற சந்தர்ப்பவாதிகள் மீண்டும் மீண்டும் அதே அவதூறுகளை கொஞ்சமும் வெட்கமின்றி கக்கி வருகிறார்கள்.

தமிழ் தேசியம் என்பதன் ஆன்மாவே பார்ப்பனியம் தான். ஒரு இனம் என்கிற வரையறையின்படி முழுமை அடையாத தமிழர்களை, சாதிப் பெருமை பாராட்டும் நிலப்பிரபுத்துவ அடையாளத்தை மகிழ்ச்சியுடன் சுமக்கும் தமிழர்களை, அவர்களின் மனம் கோணாதபடி அணி திரட்டி இவர்கள் தமிழ் தேசியம் அமைப்பார்களாம். தமிழனுடைய சாதிப்பற்றை ஒழிக்க விரும்பினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் ஆதிக்க சாதி தமிழனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு இவர்கள் இடஒதுக்கீடு கேட்பார்களா? ஒடுக்கும் ஆதிக்க சாதிக்காரனுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்று சொல்கிற ம.க.இ.க வை எதிர்ப்பார்களா? ஆதிக்க சாதிக்காரனுக்கு இடஒதுக்கீடு கேட்பது மட்டுமல்ல பார்ப்பன இந்து மதத்தை ஒழிக்காமலேயே தமிழனுடைய விடுதலையைப் பற்றி பேசுகிற யோக்கியர்களும் கூட இந்த தமிழினவாத கூட்டத்தில் உண்டு.

மேலும் கற்பிலிருந்து பூ, பொட்டு, தாலி என்று அனைத்திலும பார்ப்பனிய பண்பாடே தமிழ் பண்பாடு. கண்ணகியின் கற்பு உயர்ந்தது, பூ, பொட்டு தமிழர்களின் அடையாளம், தாலி (சிலர் மாறுபடலாம்) தமிழ் பெண்ணின் அடையாளம் என்பது தான் இவர்களின் உயர்ந்த ’தமிழர் பண்பாடு.’ மொத்தத்தில் பார்ப்பனியத்திற்கு முற்போக்கு சுண்னாம்பு அடித்தால் அது தான் தமிழ் பார்ப்பனியம்.

தமிழ், தமிழ் என்று வாய் கிழிய பேசும் தமிழினவாதிகள் அனைவரும் தமிழ் நாட்டில் தான் இருக்கிறார்கள். ஆனால் தமிழுக்காக இவர்கள் ஒன்றையும் செய்தது கிடையாது. அப்படி ஏதேனும் இருந்தால் அந்த சாதனைப் பட்டியலைத் தரட்டும், பார்க்கலாம். ஆனால் சர்வதேசியம் பேசும் ம.க.இ.க தமிழுக்காக செய்தது ஏராளம். திருவையாற்றில் பார்ப்பன கூட்டம் தமிழை நீச மொழி என்று சொல்லி தமிழில் பாட மறுத்ததையொட்டி திருவையாறு உற்சவத்திற்குள் புகுந்து பறையிசை முழங்கி ’தமிழில் பாடு இல்லையேல் தமிழ்நாட்டை விட்டு ஒடு’ என்று பார்ப்பன கும்பலின் மொழி வெறித் தீண்டாமையை தமிழகம் முழுவதும் அம்பலமாக்கியது ம.க.இ.க. தான். இதை தமிழினவாதிகள் செய்திருக்க வேண்டியது தானே, யார் தடுத்தார்கள், ஏன் செய்யவில்லை ?

அதன் பிறகு பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து ’அனைவரும் இந்து, இந்துவே ராமர் கோவிலை கட்ட வா’ என்று தமிழ் மக்களையும் இந்து என்று கூறி கரசேவைக்கு அழைத்த பார்ப்பன கும்பலை அம்பலமாக்கும்வகையில் ’எல்லோரும் இந்து என்றால் எங்களையும் கருவறைக்குள் விடு’ என்கிற முழக்கத்துடன் சேரி மக்களையும்,பெண்களையும் அணிதிரட்டிக் கொண்டு திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்தோம். தமிழகம் முழுவதும் இது விவாதத்தை கிளப்பியது. தமிழுக்காக இந்த நடவடிக்கையை செய்ய வேண்டாம் என்று தமிழினவாதிகளை தடுத்தது யார், ஏன் செய்யவில்லை? இதை செய்யாதது மட்டுமல்ல தமிழ் தேசப் ‘பொதுவுடைமை’க் கட்சி என்கிற ஒரு தமிழ் தேசியக் கட்சி பார்ப்பன தேசியத்தின் நாயகனான ‘இராமனை தமிழ்ப் பழங்குடி’ என்று கூறி பெருமை கொள்கிறது. பார்ப்பன தேசியத்தின் உதவியோடு தான் தமிழ் தேசியம் அமைக்கப்போகிறார்கள் போலிருக்கிறது.

பாசிச ஜெயல்லிதாவின் பண்பாட்டு ரீதியான பார்ப்பனமயமாக்கல் திட்டப்படி நாட்டார் கோவில்களில் ’கிடா வெட்டத் தடைச்சட்டம்’ கொண்டு வந்த போது எந்த தமிழ் தேசியவாதியும் மீசையை முறுக்கிக்கொண்டு, அருவாளைத் தீட்டிக்கொண்டு போய் கிடாவை வெட்டவில்லையே ஏன்? ம.க.இ.க தானே தமிழ் மக்களிடம் போய் ’சாமி பேச்சக் கேப்பியா மாமி பேச்சக் கேப்பியா’ என்று கிடாவை வெட்டியது.

அதன் பிறகு பார்ப்பன கும்பல் திருச்சியில் பெரியார் சிலையை இடித்து தள்ளியபோது உடனே இராமன் உருவப்படத்தை செருப்பால் அடித்து அய்யா சிலையின் காலடியில் இழுத்து வந்து போட்டது யார்? அதையும் நாங்கள் தானே செய்தோம். அதை ஏன் நீங்கள் செய்யவில்லை, நாங்கள் செய்து விட்டோம் என்பதாலா?

தில்லையில் நடராசனை விட பெரிய ஆட்டம் காட்டிய திமிர் பிடித்த தீட்சித பார்ப்பனக் கும்பலின் குடுமியை பிடித்து ஆட்டி பத்து ஆண்டுகளாக விடாப்பிடியாக போராடி தமிழுக்கு உரிய மரியாதையை பெற்றுத்தந்தவர்கள் யார்? தமிழை சிற்றம்பல மேடையில் ஏற்றியவர்கள் யார்? தமிழ், தமிழ் என்று மந்திரம் பாடும் நீங்களா இல்லை நாங்களா? நீங்கள் ஏன் இதை செய்யவில்லை. சிதம்பரம் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா?

மேற்கண்ட நடவடிக்கைகள் சில தான். இது போன்று இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் தேசியம் பேசும் கற்பனாவாதக் கூட்டம் செய்யவில்லை மாறாக சோசலிசம், கம்யூனிசம், சர்வதேசியம் பேசும் ம.க.இ.க தான் செய்துள்ளது. இதையெல்லாம் ஏன் தமிழ்த் தேசியவாதிகள் செய்யவில்லை இந்த கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் நேர்மையான பதில் இருக்கிறதா? இருக்காது, சந்தர்ப்பவாதத்திலேயே நேர்மையான சந்தர்ப்பவாதம் நேர்மையற்ற சந்தர்ப்பவாதம் என்று வகை பிரிக்கும், என்ன வகை என்றே தெரியாத சந்தர்ப்பவாதிகளிடம் இதற்கெல்லாம் பதில் இருக்காது. மாறாக அவதூறுகள் தான் இருக்கும்.

தற்போது எமது அமைப்பை பற்றியும், தோழர்களைப் பற்றியும் அவதூறைக் கிளப்ப ’அதிரடியான்’ என்கிற, தன்னை யார் என்று அறிவித்துக்கொள்ளாத நபர் கிளம்பியுள்ளார். அவர் எம்மைப் பற்றி தொடர்ச்சியாக எழுதப்போகிறாராம். அதாவது அம்பலப்படுத்தப்போகிறாராம். ”மருதையன், பார்ப்பனத்தலைமை, புலியை எதிர்ப்பவர்கள், தமிழ் விரோதிகள், இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்” என்பதைத்தவிர இவர்களிடம் எம்மைப் பற்றி ‘அம்பலப்படுத்த’ ஒன்றும் இல்லை. குருட்டுத்தனமான புலி ஆதரவு, குருட்டுத்தனமான ம.க.இ.க எதிர்ப்பு நிலையிலிருக்கும் அதிரடியான் போன்றவர்களிடமும் விவாதிக்க நமக்கு விரும்பமும் இல்லை நேரமும் இல்லை, அந்த நேரத்தில் மேற்கண்ட எமது நடவடிக்கைகளைப் போல ’தமிழ் மக்களுக்கு’ உருப்படியான காரியத்தையாவது செய்வோம். எனவே அவர்கள் தாராளமாக,ஆசை தீர எம்மை வைய்யட்டும். நாம் அதைப் பற்றி இனி சட்டை செய்வதில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டோம். இனி இதில் நாம் பங்கு பெறப் போவதுமில்லை. நன்றி.

- சர்வதேசியவாதிகள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It