தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியில் உள்ள 5.75 இலட்சம் பணத்தை இரயில்வே நிர்வாகத் திடம் பொய்யாமொழி என்ற கூலித் தொழிலாளி ஒப்படைத்தார். அவரின் செயலை இரயில்வே நிர்வாகம் பாராட்டியிருக்கிறது.

சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார். இவர் கடந்த 1ஆம் தேதி சேலம் விரைவு இரயிலில் சென்னை வந்தபோது அவர் கொண்டுவந்த பையில் 10.75 இலட்சம் ரூபாயை பையுடன் தவறவிட்டார். சென்னை எழும்பூர் சென்றதும் கொண்டுவந்த பெட்டியில் பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து எழும்பூர் இரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் இரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் உள்ள பணத்தை எடுத்த பொய்யாமொழி போலீஸில் ஒப்படைத்தார். 10.75 இலட்சரூபாயில் 5.75 இலட்சம் மட்டுமே இருந்த காரணத்தால், இரயில்வே போலீஸார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அப்போது வேறு ஒரு மர்மநபர் ஒருவர் அதில் இருந்த பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. பணத்தைக் கொண்டுவந்து கொடுத்த முதியவர் பொய்யாமொழிக்கு இரயில்வே நிர்வாக அதிகாரி பரிசு ஒன்றையும் வழங்கினார். பொய்யாமொழி, பெரியார் கொள்கையாளர். அடுத்தவரின் உடைமைக்கு ஆசைப்படாதவர். எளிமையானவர் என்று தாம்பரம் பகுதியில் உள்ள இரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.

“எனக்குப் பொய்யாமொழி எனப் பெயர் வைத்ததே தந்தை பெரியார்தான். 1980ம் ஆண்டு இரயில்வே கூலியாக வேலையைத் தொடங்கினேன். 1992ல் சூப்பர்வைசராகப் பணி உயர்வு பெற்றேன். தற்போது மாதம் 10000 முதல் 15000 வரை சம்பாதிப்பேன். நேர்மையாக நடக்க வேண்டும். யாரையும் ஏமாற்றக் கூடாது என்ற கொள்கைளில் உறுதியாக இருக்கிறேன். இதுபோல் பயணிகள் தவறவிட்ட பொருள்களைப் பலமுறை இரயில்வேயிடம் ஒப்படைத்திருக்கிறேன். ஆனால் தற்போது தான் இரயில்வே நிர்வாகம் எனக்குப் பரிசளித்திருக்கிறது. அடுத்தவரின் பொருள்களுக்கு ஆசைப்பட்டதில்லை. இந்தப் பணத்தை தொலைத்தவர் என்னைச் சந்தித்து, எனக்குப் பணம் கொடுத்தார். நான் வாங்க மறுத்துவிட்டேன். என்னுடைய உழைப்பில் கிடைத்த பணத்தில் மட்டும்தான் வாழ்வேன். அவரின் அன்பிற்காக அவர் வாங்கிக் கொடுத்த ஒரு டீயை மட்டும் சாப்பிட்டேன்” என்கிறார் பொய்யாமொழி.

செய்தி : ‘விகடன் டாட் காம்’, நவம்பர் 9