தேர்தல் குறித்த சில தகவல்கள்:

• மொத்த வாக்குகளில் 31 சதவீதத்தைப் பெற்ற பா.ஜ.க. 282 தொகுதிகளையும் 19.3சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், 44 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 43.3 சத வீதத்தைப் பெற்றுள்ள அ.இ.அ. தி.மு.க. 37இடங்களைக் கைப்பற்றியது. 23.6 சதவீத வாக்குளை பெற் றுள்ள தி.மு.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

• 80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் முஸ்லிம்கள் - 19 சதவீதம் இருந்தும்,போட்டியிட்ட 55 முஸ்லிம் வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இங்கு பா.ஜ.க. நிறுத்திய வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. முஸ்லிம் ஓட்டுகளை பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பிரித்துக் கொண்டதே இதற்குக் காரணம்.

• 428 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 7 தொகுதிகளில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. ஒருவர்கூட வெற்றி பெறவில்ல. பா.ஜ.க.வில் வெற்றி பெற்ற 282 பேரில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை.

• இந்தத் தேர்தலில் அறிமுகமான நோட்டா (எவருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை) தமிழகத்தில் தனது செல்வாக்கைப் பதிவு செய்துள்ளது. நோட்டா பெற்ற வாக்குகள் 5,54,389 (1.4 சதவீதம்). நீலகிரி ரிசர்வ் தொகுதியில் மிக அதிகமாக46,559 வாக்காளர்களும் சிவகங்கை தொகுதியில் மிகக் குறைவாக 4,748 வாக்காளர்களும்‘நோட்டா’வை தேர்வு செய்துள்ளனர். ‘படுகர்’ சமூகத்தின் வேட்பாளர் எவரும் நீலகிரி தொகுதியில் போட்டியிடாதது ‘நோட்டா’வை தேர்வு செய்ய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதிலும் ‘நோட்டா’ வுக்கு கிடைத்த வாக்கு 59 லட்சத்து 97ஆயிரத்து 54.

• ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாத 1,652 கட்சிகளில் பகுஜன் சமாஜ், தி.மு.க.,இந்திய கம்யூனிஸ்ட் தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகளும் அடங்கும்.

• தமிழகத்தில் கன்னியாகுமரியில் மதவாத அடிப்படையில் பா.ஜ.க. வும் தர்மபுரியில் ஜாதிவாத அடிப்படையில் பா.ம.க.வும் வெற்றி பெற்றுள்ளன. ‘தர்மபுரி ஜாதிய வெற்றி’ தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் கிடைக்கும் என்று நம்பியிருந்த பா.ம.க.வுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

• தமிழ்நாட்டில் பா.ஜ.க.7 தொகுதிகளிலும், ம.தி.மு.க. 5 தொகுதி களிலும்,பா.ம.க. 4 தொகுதிகளிலும் தே.மு.தி.க. 3 தொகுதிகளிலும் டிபாசிட் இழந்துள்ளது. காங்கிரஸ் கன்னியாகுமரி தவிர, 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. சிவகங்கை பா.ஜ.க. பார்ப்பன வேட்பாளர் எச்.ராஜா டெபாசிட்டை இழந்துள்ளார். மற்றொரு பார்ப்பன பா.ஜ.க. வேட்பாளர் இல.கணேசனும் தென் சென்னையில் தோல்வியடைந்தார்.

• 61 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.‘சுதந்திர’ இந்தியாவில் பெண் உறுப்பினர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளது இந்த முறைதான். (11.3 சதவீதம் பேர்) 33 சதவீத உரிமைப் போராட்டத்துக்கு கிடைத்திருப்பது 11.3 சதவீதம்தான்.