தீண்டாமையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு மட்டுமே, மதமாற்றத்தை மக்களுக்கு தாம் முன்மொழிவதாகப் பெரியார் கூறுகிறார். மற்றபடி முஸ்லிம் மதத்தில் உள்ள மூட நம்பிக்கை, பெண்ணுரிமை மறுப்பு கருத்துகள், சுயமரியாதைக்காரர்களுக்கு உடன்பாடானது அல்ல என்றும் கூறுகிறார். அம்பேத்கர், மதமாற்றத்தை அறிவித்தபோது, ஒரு தோழர், பெரியாருக்கு கடிதம் எழுதி, மதத்தை மறுக்கும் சுயமரியாதைக்காரர்கள், மத மாற்றத்தை ஆதரிக்கலாமா என்று கேட்டதற்கு, பெரியார் விளக்கமளித்து, ‘குடி அரசு’ ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை வெளியிடுகிறோம்.

“எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால் தான் அதை மனிதத் தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதை புஸ்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பொருமானவர்களே ஒழிய காரியத்துக்கு பொருமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும்.

வெளிப்படையாய் நாம் பேசுவதானால் அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும், நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபணை என்ன என்று கேட்கின்றோம். முகம்மதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்.

கோஷா இருக்கலாம். கடவுள் இருக்கலாம். மூட நம்பிக்கை இருக்கலாம். மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம். சமதர்மமில்லாமலுமிருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகம்மதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். நாஸ்திகருக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். சமதர்மவாதிகளுக்கும், பொது உடமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற - ஒதுக்கப்பட்டிருக்கின்ற - தாடிநத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, நாயினும், மலத்திலும் புழுத்த விஷக் கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் - தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டு இருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா? இல்லையா என்று கேட்கின்றோம்.

உண்மையாகவே சுயமரியாதைக்காரருக்கு இந்தச் சமயத்திலும் வேலை இருக்கிறது என்றுதான் நாம் கருதுகிறோம். ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவப் பிள்ளை, கிறிஸ்தவ நாயக்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லீம் என்றோ அழைக்க இடமில்லாமலும், அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்ற சமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு “எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக்கொள்ள வேண்டும்” என்கின்றவன் போனால் இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும் “சரி எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்” என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம். நமக்குக் கடிதம் எழுதின நண்பர், “இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது. பெண்களுக்கு உறை போட்டு மூடி வைத்து இருக்கிறார்கள்” என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும் தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம்.

இது பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம். இஸ்லாம் மார்க்கம் தாண்டவமாடும் துருக்கி, ஈஜீப்ட், பர்ஷியா முதலிய இடங்களில் மூடி கிடையாது என்பதோடு, அம்பேத்கர் தமது மனைவிக்கு மூடி போடா விட்டால் எந்த முஸ்லீமும் அவரை கோவிலுக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. எப்படி இருந்தாலும் நாம் அதைப் பற்றி இப்போது விவகரிக்க அவசியமில்லை என்று கருதுகிறோம். ஆகவே, தோழர் அம்பேத்கர் மதம் மாறுவதில் எந்த மதம் மாறப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது. உலகாயுத மதத்தையோ, நாஸ்திக மதத்தையோ தழுவவோ அல்லது முஸ்லீம் மதத்தைத் தழுவவோ போகிறாரோ என்பதும் நமக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும் வெறும் ஏமாற்றமும் சூடிநச்சியும்  கண்டதும், சண்டாளன், பாவி, இழி குலத்தவன், தீண்டத்தகாதவன் என்று மனிதனை வெறுத்துத் தள்ளுவதும், ஒருவர் உழைப்பை ஒருவர் கொள்ளை கொள்ளுவதுமான காரியங்களை மதக்கட்டளையாகக் கொண்டதுமான இந்து மதத்தை விட்டுவிடுகிறேன் என்றால், அதைப் பொருத்த வரையில் முதலில் அதற்கு உதவி செய்ய வேண்டியது ஒவ்வொரு சுயமரியாதைக்காரனுடைய வும் கடமை அல்லவா என்று கேட்கின்றோம்.

இந்து மதம் சீர்திருத்தமடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூடிநச்சிக்காரர்களும்  சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை. இந்துமதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம். இந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை. அதை சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்துமத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொருத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொருத்தது அல்ல. எந்த மகாத்மாவானாலும்,  சீர்திருத்தக்காரனானாலும், சுவாமி பட்டம் பெற்றவனானாலும், தன்னுடைய சீர்திருத்தத்தை மதம், சாஸ்திரம் அனுமதிக்கிறது என்று வேஷம் போட்டுத்தான் சீர்திருத்தம் செய்ய ஆசைப்படுகிறாரே ஒழிய வேறில்லை.

எந்த வேதமும், எந்த மதமும், எந்த சாஸ்திரமும் இந்த மகாத்மாவுக்கும், சுவாமிக்கும் சீர்திருத்தம் செய்ய எங்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. அது வேதத்தின் சாரமான - பகவான் வாக்கான என்று சொல்லப்படும் கீதையிலும், மனு சாஸ்திரத்திலும், பராசர் ஸ்மிருதியிலும் பச்சையாய் சொல்லி இருக்கிறது. இவற்றை விவகாரத்துக்கு இடமானது என்று சொல்லிவிட முடியாது. இன்று பொது ஜனங்களை ஏமாற்ற, தற்கால சாந்தியாக சொல்லிக் கொண்டாலும் அந்த முறைக்கும், சாஸ்திரத்துக்கும் மாத்திரமல்லாமல் பழக்க வழக்கங்களுக்கும் அரசியல் காப்பளித்துவிட்ட பிறகு இந்த விவகாரத்துக்கு இடமேது என்று கேட்கின்றோம். இன்று ஏமாற்றி ஓட்டு வாங்கிக் கொண்டு நாளைக்கு எந்த ஊர் என்று கேட்டால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்? ஆகவே தீண்டாமை விஷயத்தில் இவ்வித  குழப்பம், இருவித அருத்தம், சமயம் போல் திருப்பிக் கொள்ளும் சௌகரியம் ஆகியவைகள் இல்லாத மதமே தீண்டாமையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு ஏற்றதாகும் என்பது நமது அபிப்பிராயம். வெகு நெருக்கடியான சமயத்தில் அம்பேத்கர் இடமும், சிவராஜு இடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொது ஜனங்களிடம் லட்சக்கணக்கான பணமும் வசூல் செய்து கொண்டு அதைச் செலவழித்து எலக்ஷனில் வெற்றியும் அடைந்து கொண்டு கடைசியில் தீண்டாமை விலக்கு சம்பந்தமாக சட்டம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் தானே இன்று அம்பேத்கர் வேறு மதத்துக்குப் போகிறாரே என்று வயிற்றில் அடித்துக் கொள்ளுகிறார்கள்? இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள்

அம்பேத்கர் வேறு மதத்துக்கு போவதை அனுமதிக்கக் கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா? இதையெல்லாம் கவனித்தால் ஒரு காரியமும் செய்ய முடியாது. ஆதலால் அம்பேத்கருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன் அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரடையவும் கடமையாகும் என்பது  மதபிப்பிராயம்.

குடி அரசு, தலையங்கம் 17.11.1935

Pin It