இந்தியாவை இந்திநாடாக்க அமீத்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழுப் பரிந்துரைத்துள்ளது. தேர்தலில் வடமாநிலங்களின் வாக்குகளைக் குறி வைத்து இந்த அதிரடி நடவடிக்கையில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இறங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகம் கொந்தளித்துள்ளது.

அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, முதல் முறையாக 1976ம் ஆண்டில் அலுவல்பூர்வ மொழி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இக்குழுவில் மக்களவை எம்பி.க்கள் 20, மாநிலங்களவை எம்பி.க்கள் 10 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இக்குழு செயல்படுகிறது. இக்குழு அதன் 11வது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் வருமாறு:

  • இந்தி மொழி பேசும் மாநிலங்களில் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், ஒன்றிய பல்கலைக் கழகங்கள், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் இந்தி மொழியிலும், பிற மாநிலங்களில் உள்ளூர் மொழியான தாய்மொழியிலும் பயிற்றுவிக்க வேண்டும்.
  • இந்தி மொழியை ஐநா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக்க வேண்டும்.
  • இந்தி மொழிக்கு `ஏ’ பிரிவு அங்கீகாரம் வழங்கப்பட்டு, 100 சதவீதம் பயன்படுத்தப்பட வேண்டும். விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே ஆங்கில மொழியை பயன்படுத்தலாம்.
  • நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழில்நுட்பம், தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் இந்தி அல்லது தாய்மொழி வழியில் பயிற்றுவிக்க வேண்டும்.
  • கட்டாயமாக ஆங்கிலம் இருந்தே ஆக வேண்டும் என்ற படிப்புகளுக்கு மட்டுமே ஆங்கில வழியில் பயிற்று விக்க வேண்டும்.
  • அரசு பணியாளர் தேர்வுகளில் ஆங்கில வினாத்தாள் முறையை ஒழித்து விட்டு, இந்தியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
  • பயிற்சி நிறுவனங்களில் இந்தியை பயன்படுத்த வேண்டும்.
  • கேள்விதாள்களை ஆங்கிலத்தில் அளிப்பது ஒழிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் இந்தியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.
  • தொழில்நுட்ப கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
  • கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாக்கப்படாமல் அதனை பொது மொழியாக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It