தமிழக அரசியல் தலைவர்கள் தொண்டர்களை ‘அடிமை’களாக வைத்திருக்கும் சர்வாதிகாரம், பெரியாரிடமிருந்து வந்தது என்று ‘தமிழ் இந்து’ நாளேட்டில் அக்டோபர் 22 அன்று க. திருநாவுக்கரசு என்பவர் (இவர் திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு அல்ல) எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து, விடுதலை இராசேந்திரன் எழுதிய மறுப்பு கட்டுரையை நவம்பர், 25 அன்று அந்த ஏடு சில மாற்றங்களுடன் வெளியிட்டது. அந்த மறுப்புக் கட்டுரை எழுதியனுப்பிய வடிவத்தில் இங்கே வெளியிடுகிறோம்.

‘பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா!’ என்ற கட்டுரை ‘பெரியார் அவமதிப்பு’ என்ற உள் நோக்கத்தை மட்டுமே கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ‘அரசியல் அதிகாரம்’ என்ற ஒற்றை இலட்சியத்தோடு செயல்படும் அரசியல் கட்சிகளின் ‘தலைமை பக்தி’யையும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும் ஒப்பிடுவதே தவறு. பெரியார் - தேர்தலுக்காக அரசியல் கட்சி நடத்தவில்லை. சமுதாய மாற்றத்துக்காக இயக்கம் நடத்தினார்.

“சுயமரியாதை அழித்தொழிப்பு இன்று தமிழக அரசியலில் முழுமை பெற்றிருக்கிறது என்றால், அதற்கான தொடக்கம், பெரியார் உருவாக்கி வளர்த்த சுயமரியாதை இயக்கத்திலும் திராவிடர் கழகத்திலும் இருக்கிறது” - என்கிறது கட்டுரை.

சுயமரியாதை என்ற சொல்லையே தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பெரியார். இன்று அரசியலில் நிகழும் அழித்தொழிப்புகள், பெரியார் பேசிய சுயமரியாதைக்கு முற்றிலும் எதிரானது.

தன்மானத்தைவிட இனமானமே பெரியது என்றார் பெரியார். சமூக சுயமரியாதைக்காக தனது சுயமரி யாதையை பலியாக்கி, கல்லடி, முட்டை வீச்சு, செருப்பு வீச்சுகளுக்கிடையே பெரியார் இயக்கத்தை நடத்தினார்.

அதற்கு மாறாக அதிகாரம் ஒன்றே இன்றைய அரசியல் கட்சிகளின் நோக்கம். அதிகாரத்தில் பங்கு போடத் துடிப்பவர்கள் தலைமைக்கு துதி பாடுகிறார்கள். கட்சித் தலைமைகள் இதை உற்சாகமாக வரவேற்று மகிழ்கின்றன.

பெரியார் - கடவுள் மத பக்தியை எதிர்த்தது போலவே தன்னை புகழ்ந்து பேசுவதையும் விரும்பாதவர்; தனது காலில் விழுவதை அனுமதிக் காதவர்; அதை கண்டித்தவர்; தன்னோடு கால்மீது கால் போட்டுக் கொண்டே மற்றவர்கள் பேசுவதில் தவறே இல்லை என்று கூறியவர். தன் முன்னால் தன்னிடம் பணிந்து கைகட்டி நிற்பதை வெறுத்தவர். மாறாக தன்னை கடுமையாக விமர்சித்துப் பேசுவதை வரவேற்றவர். அதன் மூலம் தமது கொள்கை பரவும் என்று கருதினார். அரசியல் தலைவர்களைப்போல் தன்னைத் தாக்கிப் பேசியவர்கள் மீது அவமதிப்பு வழக்குகளை அவர் தொடர்ந்தது இல்லை; மாறாக அந்த எதிர்ப்பையும் கொள்கையைப் பரப்புவதற்குப் பயன்படுத்த விரும்பியவர்.

ஒரு உதாரணம்; 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் இந்து கடவுள்களை அவமதித்ததாக அவரது எதிர்ப்பாளர்கள் பெரியார் படத்தை எரித்து செருப்பாலடித்தபோது தானே பாதி விலையில் தனது படத்தையும் செருப்பையும் அனுப்பி வைப்பதாக அறிக்கை விடுத்தார், பெரியார்.

புத்தர் இயக்கம் ஊடுருவலால் அழிக்கப்பட்டது போல் தனது இயக்கம் அழிந்துவிடக் கூடாது என்ற கவலை பெரியாரின் இயக்க சர்வாதிகாரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பல நேரங்களில் அதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“நான் சொல்வது சரியா தவறா என்று சிந்தித்துப் பார்த்துச் சரியென்று பட்டால் ஏற்றுக் கொள் ளுங்கள் என்று மக்களிடம் கேட்டுக் கொண்ட பெரியார், ஒரு போதும் அந்தச் சிந்தனை சுதந்திரத்தை, தனது இயக்கத்திலிருந்த பிற தலைவர்களுக்கோ, தொண்டர்களுக்கோ வழங்கவில்லை” என்கிறது கட்டுரை.

பெரியார் இயக்கம் நடத்தியது மக்களுக்கான சிந்தனை சுதந்திரத்துக்குத்தான். எனவே மக்களிடம் அந்தக் கேள்வியை வைத்தார். இயக்கத்துக்கான சிந்தனை சுதந்திரத்துக்கு அவசியமோ தேவையோ இல்லை. பெரியார் கொள்கைகளை ஏற்றவர்கள் தானே இயக்கத்துக்கு வந்தனர். இந்தக் குற்றச்சாட்டே அடிப்படையற்றது.

கட்டுரையாளர் கூறியதுபோல் கருத்து சுதந்திரத்தை பெரியார் அனுமதிக்காதவரும் அல்ல! இயக்கத்துக்குள்ளும் பிற தலைவர்களிடமும் தாராளமான கருத்து சுதந்திரத்தை பெரியார் அள வுக்கு வேறு தலைவர்கள் வழங்கியிருக்க முடியாது.

உதாரணத்திற்கு சில: • •பெரியார், பொதுவுடைமைக் கொள்கைகளை கைவிட்டார் என்று அப்போது பெரியார் இயக்கத்திலிருந்த தோழர்கள் சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் பெரியாரைக் கடுமையாக விமர்சித்து எழுதுவதற்கு தனது ‘குடிஅரசு’ ஏட்டிலே பெரியார் இடம் தந்தார்.

• •சுதந்திர நாளை ‘துக்க நாள்’ என்று பெரியார் அறிவித்தபோது அவரிடம் கருத்து மாறுபாடு கொண்டு அண்ணா ‘இன்ப நாள்’ என்று எதிர்த்து அறிக்கை வெளியிட்டார். அண்ணா மாறுபட்ட கருத்தை கூறினாலும் அந்த ‘சிந்தனை சுதந்திரத்தை’ பெரியார் அனுமதித்தார். அடுத்த ஆண்டு 1948இல் ஈரோட்டில் பெரியார் நடத்திய மாநாட்டில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அண்ணாவை அழைத்து சிறப்புச் செய்தார்.

1949இல் அண்ணா தாமாகவே வெளியேறினாரே தவிர, பெரியார் இயக்கத்தைவிட்டு நீக்கவில்லை என்று. இத்தகைய பண்பை இன்றைய தலைவர் களிடம் பார்க்க முடியுமா? • •பெரியார் நடத்திய ‘குடிஅரசு’ பல்வேறு மாறுபட்ட சிந்தனைகளுக்கு தனது பக்கங்களை ஒதுக்கியது. ‘கற்பு’ குறித்த பெரியார் கருத்தை மறுத்து தமிழறிஞர் பி.ஆர். பரமசிவ முதலியார் எழுதிய கட்டுரையை பெரியார் தனது ஏட்டிலேயே வெளியிட்டார்.

• •மறைந்த பொதுவுடைமை கட்சித் தலைவர் தோழர் பால தண்டாயுதமும், பெரியாரும் ஒரே மேடையில் பேசியபோது ‘தேசியம்’, ‘கம்யூனிசம்’ குறித்து பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு பெரியாரை மறுத்துப் பேசினார் பாலதண்டா யுதம். தோழரின் மறுப்பு உரையை எழுத்து வடிவமாக கேட்டுப் பெற்று தனது ‘விடுதலை’ நாளேட்டில் வெளியிட்டார் பெரியார்.

• •பொதுக் கூட்ட மேடைகளிலேய தனது கருத்தை எதிர்த்து; கேள்விகள் கேட்க அனுமதித்தவர் பெரியார்.

• •தனது மனைவி நாகம்மையாரை பொது வுடைமையாக்குவீர்களா? என்று பொதுக் கூட்டத்தில் நேரில் எதிர்ப்பாளர்கள் கேட்ட போதுகூட பெரியார் ஆத்திரப்படவில்லை. இதை நாகம்மையாரிடம் கேளுங்கள் என்று பதிலளித்த தலைவர். அவரது ‘சிந்தனை சுதந்திரம்’ அந்த எல்லைக்கு நீண்டது. இன்றைய அரசியல் தலைவர்களிடம் இந்தப் பண்புகளைப் பார்க்க முடியுமா? இப்படிப் பல நிகழ்வுகளைப் பட்டியலிட முடியும்.

எல்லா சர்வாதிகாரிகளும் சொல்லும் அதே நியாயத்தைத்தான் பெரியாரும் தனது சர்வாதி காரத்துக்கு சொல்வதாக - கட்டுரையாளர் எழுது வதை வரலாறு மன்னிக்காது. ஏனைய சர்வாதி காரிகளைப்போல் பெரியார் கேள்விக்கு அப்பாற்பட்ட தலைவராக இருந்ததில்லை. அதற்காக அதிகாரங்களைத் தேடி ஓடியதும் இல்லை. ஏனைய சர்வாதிகளைப்போல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களைப் பணிய வைத்தவர் அல்ல; மாறாக அதிகார அடுக்குமுறைகளை எதிர்கொண்டு மக்களை நிமிர்ந்து நிற்கச் சொன்னவர். இரண்டு முறை ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் தன்னை நோக்கி வந்த போதும் பிடிவாதமாக மறுத்தவர்.

விடுதலைக்குப் போராடும் ஒரு இராணுவம், தளபதியின் சர்வாதிகாரக் கட்டளைக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்பதைப் போன்றதுதான் பெரியாரின் இயக்கச் சர்வாதிகாரம்.

இன்று அ.இ.அ.தி.மு.க.வின் தலைவர் ஜெயலலிதா, தொண்டர்களால் தெய்வமாக்கப்படுகிறார். மதச் சடங்குகளே அரசியல் போராட்ட வடிவங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இவை எல்லாம் பெரியார் பேசிய சுயமரியாதைக் கொள்கைகளுக்கே நேர் எதிரானது. சொல்லப் போனால், பெரியார் சுயமரியாதைக் கொள்கைகளுக்கே சவால் விடக் கூடியவை. இதை பெரியார் கொள்கையின் வழி வந்தவைகளாக எழுதுவது உண்மைகளை தலைகீழாகப் புரட்டிப் போடுவதே ஆகும்.

இந்த அரசியல் கட்சிகளின் ‘தலைமை பக்தி’க்கான ஊற்றுக்கள் எங்கிருந்து தொடங்குகிறது? குருவுக்கு சீடன் அடிமையாவதையும் மேல் ஜாதிக்கு கீழ் ஜாதி பணிந்து போவதையும் புனிதமாகவும் சமூக தர்மமாகவும் இந்த சமூகத்தில் காலம்காலமாக கட்டமைக்கப்பட்ட உளவியலின் தொடர்ச்சி தானே? ஆன்மிகத் தலைவர்களை கடவுள்களாக்கி குடியரசுத் தலைவர்களாக இருந்தாலும் அவர்களின் காலடியில் அமர வேண்டும் என்பதை ‘தர்மமாக்கிய’‘ஏற்றத்தாழ்வு’ தத்துவங்களின் நீட்சிதானே? இதைப் பெரியார் இயக்கத்துடன் முடிச்சுப் போடுவது முறைதானா? இப்படி மனிதர்களை ஏற்றத் தாழ்வு சிறைக்குள் அடைத்து வைத்த ‘புனிதங்களையும்’, ‘தர்மங்களையும் எதிர்த்து கேள்வி கேட்ட பெரியார் இயக்கம்தான் இந்த சீரழிவுக்கு காரணம் என்று குற்றம் சாட்டுவது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு தானே?

முதல் சுயமரியாதை மாநாட்டை செங்கல்பட்டில் நடத்தியவரே பெரியார்தான்! மாநாட்டுத் தலைவராக சவுந்தரபாண்டியனை தேர்வு செய்தவரும் பெரியார் தான்! அதற்குப் பிறகு முன்மொழிதல், வழிமொழிதல் என்ற போலி சடங்குகள் வேண்டாம் என்று பெரியார் நேர்மையாக அறிவித்தது கட்டுரை யாளருக்கு சர்வாதிகாரமாகத் தெரிகிறது. அந்த சடங்குகள் நடந்திருந்தால் பெரியார் ஜனநாயகவாதியாக மாறியிருப்பாரோ! நல்ல வேடிக்கை! உ.பி.யில் மாயாவதி ஆட்சியின் ஊழல் முறைகேடுகளுக்கும் அம்பேத்கர்தான் காரணமாக இருந்தார் என்று எழுதினாலும் வியப்பேதும் இல்லை! பெரியாரின் சமூக பங்களிப்புகளை - மடை மாற்றம் செய்யும் முயற்சிதான், இந்தக் கட்டுரை! 

Pin It