உலகத்தின் மிகப்பெரிய பயங்கரவாதி கொல்லப்பட்டான். உலகத்தின் ஊடகங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கின்றன. நடுநிலையாளர்களோ முதல் பயங்கரவாதி அமெரிக்க வல்லாதிக்கம்தான், இரண்டாவது பயங்கரவாதிதான் பின்லேடன் என்றும் பெருங்கதையாடிக் கொண்டிருக்கிறார்கள். பழிக்குப்பழி வாங்கிவிட்டதாக அமெரிக்க அதிபரும் அமெரிக்க மக்களும் துள்ளிக்குதிக்கிறார்கள். நெப்டியூன் ஈட்டி என்னும் அந்த நடவடிக்கையில் பங்குபெற்ற அத்தனை கடற்படை வீரர்களும் அமெரிக்க தேசத்தின் மற்றும் உலகத்தின் மாபெரும் வீரர்களாக ஊதிப்பெருக்கப்படுகின்றனர். இரண்டு நிமிடங்களில் தொண்ணூறு தண்டால் எடுப்பார்கள் என்றும் அடுத்த இரண்டு நிமிடங்களில் அய்ம்பது தடவை உக்காந்து உக்காந்து எழுந்திருக்கும் பயிற்சியையும் செய்வார்கள் என்றும் இன்னும் பலபல பயிற்சிகள் செய்து உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள் என்றும் அவர்களுக்கு ஆகும் செலவு மட்டும் பல கோடிகளைத்தாண்டும் என்றும் இந்த அமெரிக்க சூரப்புலிகளைப் பற்றிய பல கட்டுக்கதைகள் உருவாகின்றன.

அமெரிக்க உளவு நிறுவனமான சிஅய்ஏ கூட குப்புறக்கிடந்த தன் மானத்தை தூக்கிநிறுத்தி வெற்றி வெற்றி என்று கூவிக்கொண்டிருக்கிறது. புல்தடுக்கி பயில்வான்கள் இந்தா செயிச்சோம்டம்ல என்று வீரக்கதை பாடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில வருடங்களுக்கு ஆங்கிலப்படம் பார்க்கவென மழைக்குக்கூட திரையரங்குப்பக்கம் ஒதுங்க முடியாது. அனைத்து ஆங்கிலத்திரைப்பட இயக்குனர்களும் இந்தா பாருடா எம் அமெரிக்க வீரத்தை என்று ஓராயிரம் கலிங்கத்துப்பரணிகளை ஆங்கிலத்தில் இந்த அமெரிக்க சீல்களைப்பற்றி பாட ஆரம்பித்துவிடுவார்கள். எத்தனை பதவிகளோ பட்டங்களோ? நம்ம ஊரு வீரப்பனை மயக்கமருந்து கலந்து பிடித்த விசயகுமாரும் செந்தாமரைக்கண்ணனும் கிடைத்த பணத்தை என்ன செய்வது எப்படி செலவு செய்வது என்று அருணாச்சலம் பட ரேஞ்சில் முழி பிதுங்கிக்கிடக்கும்போது இந்த அமெரிக்க சீழ்கள், ச்சீ அமெரிக்க சீல்கள் கிடைக்கும் பணத்தில் வளர்ப்பு மகன் கல்யாணம் ரேஞ்சில் செலவளித்தாலும் இன்னும் பத்து தலைமுறைக்கு பணம் அப்படியே இருக்கும்.

osama_601
ஒருபக்கம் இப்படி ஒரு கொண்டாட்டங்கள் தூள்கிளப்பிக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் இசுலாமியச்சமூகம் அஞ்சலிக்கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது. காசுமீரத்தை சேர்ந்த நம் அருமைத்தோழர் செயது அலி கிலானி ஒசாமா பின்லேடனை தியாகி (காசுமீர் விடுதலைக்காக நான் அங்குசென்று போராளியாக போராட விரும்புகிறேன் என்று முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார் ஒசாமா) என்று சொல்லி அவர் நிராயுதபாணியாக இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அஞ்சலிக்கூட்டம் நடத்தியிருக்கிறார். இன்னும் பல இசுலாமிய நாடுகள் கனத்த மௌனத்தை சுமந்தாலும் ஏமன், சிரியா, பக்ரைன் போன்ற சில நாடுகளில் இசுலாமியத்தோழர்கள் அஞ்சலிக்கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்; இன்னும் நடத்திவருகிறார்கள்.

ஆனால் நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் கடப்பாறையை முழுங்கியவர்கள்போன்று இன்னும் நட்டுக்குத்தாக நின்று கொண்டு ஓசாமா அப்பாவி மக்களை கொன்றதால் அவர் பயங்கரவாதிதான் ஆனால் அந்த பயங்கரவாதியை உருவாக்கியது அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் என்று பிலாக்கனம் பாடிக்கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையாக அஞ்சலிக்கூட்டம் நடத்தவோ அந்த மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரனுக்கு ஒரு மெழுகுவர்த்தி ஏத்தவோ இந்த நடுநிலையாளர்கள் குழாம் தயாராகயில்லை. மனிதஉரிமை புடுங்கிகள் நிராயுதபாணியாக இருந்த பின்லேடன் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கவோ அல்லது அமெரிக்கவீரர்கள் இந்த நடவடிக்கைக்கு கிளம்பும்போதே பின்லேடனைக்கொல்லுமாறு கட்டளையிடப்பட்டார்கள் என்று அமெரிக்க அதிகாரிகளே சொல்வதைக் கண்டிக்கவோ இவர்கள் தயாராகயில்லை. அதுபோன்ற நினைப்பு இவர்களின் அறம் அழிந்த போன மனதிற்கு வந்ததா என்றே எனக்கு அய்யமாகயிருக்கிறது. அப்படி ஒரு போரியல் மரபுகளும் அறமும் அற்றுப்போன ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த அறமும் நீதியும் அற்றுப்போன அரசிடம்தான் நாம் மீண்டும் மீண்டும் நீதியையும், அறத்தையும் வேண்டி நிற்கவேண்டியிருக்கிறது என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவேண்டும். நிற்க.

ஒசாமா பின்லேடன் மிகப்பெரிய பணக்கார சௌதி குடும்பத்தை சேர்ந்தவர். அமெரிக்க வல்லாதிக்கம் இசுரேலிய நாட்டுடன் சேர்ந்து கொண்டு எண்ணெய் வளம் கொண்ட அரேபிய நாடுகளை கொள்ளையடிப்பதற்காக, அதற்கு இடையூறாக இருக்கும் இசுலாமியர்களை கொன்றொழிக்கும் உண்மையை அறிந்ததனால் வேறு வழியின்றி அமெரிக்காவிற்கு எதிரான மாபெரும் போரில் இறங்கியவர். முதன்முதலில் இவர் ஆப்கானிசுதானில் ரசியாவின் பாட்டாளிவர்க்க கட்சி சமூக சனநாயகவாதிகளாக திரிந்து அதன்பின்பாக ஆப்கன் ஆக்கிரமிப்பை நடத்தியபோது அதை எதிர்த்து ஆப்கானிசுதானில் சென்று ஆப்கானிய நாட்டவராகவே வாழ்ந்து அம்மண்ணிலேயே வீரமரணமடைந்தவர். இவர் ஒரு கட்டிடக்கலை பொறியியல் பட்டம் பெற்றவர் என்றும் ஒரு செய்தி உள்ளது.

osama_340சௌதியில் பெரும் பணக்கார குடும்பத்தில் பிறந்த ஒசாமா பின்லேடனை பாலத்தீனிய விடுதலைப்போராட்டம் கவர்ந்திழுக்கிறது. அமெரிக்க இசுரேலயக்கூட்டை அவர் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்கிறார். மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் இருக்கும் எண்ணெய் வளங்களை தனது பகாசுர நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதற்காக அமெரிக்க அரசு மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் இருக்கும் இசுலாமிய நாடுகளில் தனக்கு தலையாட்டும் பொம்மை அரசுகளை ஆட்சியில் அமர வைக்கிறது (உதாரணம் ஆயிரம் அடித்தாலும் வலியைத்தாங்கிக்கொண்டு ஒபாமாவை தன் மகன் என்று கடித முத்தம் கொடுக்கும் நம்ம லிபிய அதிபர் கடாபி) அல்லது நிலவுகிற அரசை சனநாயகத்தை இறக்குமதி செய்கிறேன் பேர்வழி என்னும் பெயரில் படையெடுத்து காலி செய்வது, பின்பு ஒரு பொம்மை நீதிமன்றத்தை நிறுவி அந்த இசுலாமிய அதிபரை தூக்கிலிடுவது அல்லது தூக்கியெறிவது, இல்லாது போனால் சிஅய்ஏ மூலமாக உள்நாட்டு எதிர்ப்பாளர்களுக்கு பணத்தையும் ஆயுதத்தையும் வாரி வழங்கி, நிலவுகிற ஆட்சிக்கு எதிராக ஊதிப்பெருக்கப்பட்ட உள்நாட்டு புரட்சிக்குழுவை உருவாக்குவது. இந்த மூன்று விதமான திருவிளையாடல்களை நிகழ்த்துவதன்மூலம் தமக்கு சாதமான ஆட்சியைக்கொண்டு வருவது அல்லது தமக்கு முற்றிலும் எதிரான ஆட்சியை தூக்கி எறிவது போன்ற செயல்களில் அமெரிக்க அரசு ஈடுபட்டது. இதற்கு இதர அய்ரோப்பிய நாடுகள் எரியும் வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்னும் பெயரில் தமது பங்கையும் சீரும் சிறப்புமாக செய்து வருகின்றன. இந்த மொள்ளமாரிகளுக்கு இசுரேலிய தெள்ளமாரி ‘யெஸ் பாஸ்’ என்னும் பாணியில் தொண்டூழியம் செய்து தமது தேசிய நலன்களையும் ஆயுதபலங்களையும் பெருக்கி வருகிறது.

மேற்சொன்னது போன்ற நிலைமைகளில் தான் நமது ஒசாமா களத்திற்கு வருகிறார். சூடானில் இருக்கும் மேற்குலக நாடுகளின் தலையாட்டி அரசை தூக்கியெறிய ஒரு மதரீதியான புரட்சிக்கு முயற்சி செய்கிறார். அந்நாடு அவரை அமெரிக்க அரசு கொலை செய்வதற்கு உதவி செய்ய தயாராகயிருந்த நிலையில் அவர் அந்நாட்டை விட்டு வெளியேற நேரிடுகிறது. சௌதி அரேபியா இவரின் குடிமகன் அந்தஸ்தை ரத்து செய்கிறது. அவரது செல்வந்தக்குடும்பமும் இவரை ‘யாரும் இவனோடு தண்ணி வெண்ணி புலங்கக்கூடாது’ என்று நாட்டாமை விசயகுமார் பாணியில் தள்ளிவைக்க சர்வதேச அனாதை ஆகிறார் ஒசாமா. இந்நிலையில் 1979ல் ரசியாவின் சமூக ஏகாதிபத்திய அரசு ஆப்கானிசுதானின் மீது படையெடுக்க, அந்த அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்து தமது இசுலாமிய மத நாடுகளில்  ஒன்றான ஆப்கானை காக்கவேண்டுமென்பதற்காக இவர் ஆப்கானிற்கு பயணப்படுகிறார். (கதை நமது சே குவேராவின் கதை போலவே இருக்கிறதா? என்ன சேகுவேரா அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபாவின் புரட்சியில் பங்கேற்று பின்பு பொலிவியாவின் புரட்சிக்கு உதவி செய்வதற்காக சென்று சிஅய்ஏவால் கைது செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்படுகிறார்).

சேகுவேராவின் வீரஞ்செறிந்த புரட்சிகர வரலாற்றில் ஓரளவு வர்க்கப்பார்வையிருக்கும். அவர் பிறந்து வளர்ந்த நாடுகள் மற்றும் காலங்களில் வர்க்கரீதியான ஒடுக்குமுறை இருந்தது. ஆனால் ஒசாமா இருந்த நாடுகள் மற்றும் காலங்களில் கடுமையான மதரீதியான ஒடுக்குமுறைகளும், வர்க்கரீதியான ஒடுக்குமுறைகளும் இருந்தன. நேரடியாக, மேலோட்டமாக அவரின் கண்ணுக்கு மதரீதியான ஒடுக்குமுறையே (அன்றைய பாலத்தீனியப்போராட்டத்திலிருந்து இன்றைய லிபியாவரை) பட்டது. எனவே இவர் மதரீதியான எதிர்ப்பை கையிலெடுத்துக்கொண்டார். ஆனால் இருவருமே ஏகாதிபத்திய எதிர்ப்புவாதம் என்பதில் அணிசேர்கிறார்கள். அதுதான் முக்கியமான விடயம்.

சமீபத்தில் அளித்த செவ்வியொன்றில் இந்திய பொதுவுடமைக்கட்சி (மாவோவியர்)யின் பொதுக்குழுச்செயலர் தோழர் கணபதி ‘இந்த இந்திய அரசை நாங்கள் உறுதியாக தூக்கியெறிவோம்’ என்றார். அதுபோக அல்குவைதா போன்ற இயக்கங்களுக்கும் மாவோவியர்களுக்கும் இடையேயுள்ள உறவு பற்றி கேட்கும்போது நெருப்பில் விரலைவைத்ததுபோல் பதறி பதிலளிக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் எப்படி ஒரு வர்க்க ஸ்தாபனம் பல்லாயிரக்கணக்கான நேர் மற்றும் எதிர்மறை அனுபவங்களோடு (பாரிஸ் கம்யூன் தொடங்கி இன்றைய நேபாளம் வரை) நடைபோடுகிறதோ, அதுபோலவேதான் இன்றைய ஏகாதிபத்தியமும் ஆளும்வர்க்கங்களும் ஒரு கூட்டை ஏற்படுத்தி எப்படி ஒடுக்கப்படும் மக்களின் இயக்கங்களை ஒடுக்குவது என்பதில் ஓயாது சிந்தித்து செயலாற்றுகின்றன.

எப்படி அரசியல்ரீதியாக ஆளும் வர்க்கங்கள் சார்க் என்னும் பெயரில் ஒருங்கிணைந்ததுவோ, அதைப்போல ஒடுக்கப்படும் மக்களுக்கான ஆயுதமேந்தும் இயக்கங்களும் சிகம்போசா என்னும் பெயரில் ஒரு அரசியல்ரீதியான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தின. இப்போது வெறும் அரசியல்ரீதியான, பண்பாட்டு ரீதியான, பொருளாதாரரீதியிலான கூட்டுக்கள் மட்டும் தெற்காசியா பிராந்தியத்தில் எழும் போராட்டங்களை ஒடுக்கப் போதாது என்பதால் ராணுவக்கூட்டொன்றும் உருவாகி விட்டது. அதனால்தான் இந்திய அமெரிக்க ராணுவக்கூட்டுப்பயிற்சி, இந்திய இலங்கை ராணுவக்கூட்டுப்பயிற்சி போன்றவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுபோதாதென்று போர்க்களங்களில் இந்த ஆளும்வர்க்கக்கூட்டு ஒன்றொன்றுக்கொன்று உதவிக்கொண்டதை நாம் ஈழத்தில் நேரடியாகவே கண்டோம்.

என்னதான் மக்கள் பலம் இருந்தாலும், (இதற்காக மக்கள் பலத்தை நான் குறைவாக எடைபோடுகிறேன் என்று வாசகர்கள் தயவுசெய்து புரிந்து கொள்ளவேண்டாம்) மாபெரும் படையை தன்னகத்தே கொண்டுள்ள இந்த இந்திய அரசை தோழர் கணபதி சொன்னதுபோல் உறுதியாக ராணுவரீதியாக தூக்கியெறிவது சாதாரண விடயமல்ல. அதிலும் மாறிவரும் உலக சூழல்களுக்கேற்ப, முக்கியமாக செப்டெம்பர் 11க்குப்பின்பு (நான் சோபாசக்தி -அ.மார்க்சு கும்பலின் ‘ஆயுதப்போராட்டம் இனிமேல் ஒத்துவராது’ என்ற கருத்தாக்கத்தோடு கடுமையாக முரண்படுகிறேன்) அய்க்கிய முன்னணியின் அணிச்சேர்க்கை என்பது மிக மிக முக்கியம். எனவே வெறும் பாட்டாளி வர்க்க, விவசாய, தேசிய முதலாளிகளின் அணிச்சேர்க்கையோடு இன்னபிற இயக்கங்களின் அணிச்சேர்க்கையும் இந்த இந்திய ஆளும் வர்க்கத்தை தூக்கியெறிய நமக்குத் தேவைப்படும். உதாரணமாக இந்திய வெள்ளையரசை மாவோவியர்கள் நீண்டகால நோக்கில் இப்போது இதயப்பகுதியில் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். உல்பா போன்ற தேசிய இயக்கங்கள் அந்தந்த தேசியப்பகுதிகளில் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோக இந்திய அரசு வீழ்த்தப்பட்டு ஒரு புதிய சனநாயக அரசு ஒன்று கொண்டு வரப்படுமென்றால் இந்தியாவின் மக்கள்தொகைப்படி உலகின் ஆறில் ஒருவர் அந்த புதியசனநாயக அரசின் உறுப்பினராகயிருப்பார்.

இதை எந்நிலையிலும் உலக ஏகாதிபத்தியங்கள் அனுமதிக்கப்போவதில்லை. எனவே உலக ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகயிருக்கும் அத்தனை சக்திகளும் ஒருங்கிணைக்கப்படவேண்டும். உதாரணமாக அல்குவைதா போன்ற இயக்கங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் மேலும் காசுமீரத்தின் விடுதலைக்காகப்போராடும் அத்தனை இயக்கங்களையும் உள்ளடக்கிய அய்க்கிய முன்னணியே இந்திய வெள்ளை அரசை தூக்கியெறிய உதவும். இப்படிப்பட்டதொரு தொலைநோக்குப்பார்வையே நமக்குத்தேவை. இல்லையேல் இந்திய அரசு எந்த மனிதஉரிமைகளையும் கண்டுகொள்ளாமல் இசுரேலின் மொஸாட் இலங்கை இனவாத அரசுக்குச் சொன்னதை அப்படியே இந்தியாவிலும் செயல்படுத்தும். அதாவது ‘பத்து தமிழர்களைக்கொல்லுங்கள், அதில் ஒருவரேனும் விடுதலைப்புலி இருப்பார்’, அதுபோல இந்திய வெள்ளை அரசு பாட்டாளிவர்க்க தலைமையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் போர்தொடுத்து ‘பத்து பழங்குடியினரை கொல்லுங்கள் அதில் ஒருவரேனும் மாவோவியர் இருப்பார்’ என்று படையெடுத்து அழிக்கும். இதிலிருந்து எங்ஙனம் நம் இந்திய பொதுவுடமைவாதிகளுக்கு அல்குவைதா பயன்படும் என்பது விளங்கும்.

ஆம் உண்மைதான். ஒசாமா அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர்தான். அல்குவைதா மக்களோடு இயைந்து உருவாக்கப்படாமல் அமெரிக்காவால் தனது சுயதேவைகளுக்காக திடுமென ஊதிப்பெருக்கப்பட்ட அமைப்புதான். ஆனால் அதன் இன்றைய உடனடித்திட்டம் என்ன என்பதுதான் நமது தேவை. அவைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீவிர எதிரிகள், நாம் அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டிய தேவையில் இருக்கிறோம். இன்று எதிரி என்பவன் ஒரு தேசம் என்ற அளவிலோ அல்லது நாடு என்ற அளவிலோ இல்லாமல் சர்வதேசிய அளவில் வியாபித்து நிற்கிறான். ஒரு முற்போக்கு நாடுகூட உருவாக விடாமல் கண்ணுங்கருத்துமாக கண்காணிக்கிறான். எங்கெங்கு மக்கள் யுத்தம் நடந்தாலும் அதை அழிக்க உடனடியாக தமது படைகளை அனுப்புகிறான். அவன் எதிர்ப்புரட்சியை சர்வதேசமாக்குகிறான். எனவே நாம் புரட்சியை சர்வதேசியமாக்க வேண்டிய நிலையிலுள்ளோம். மாறாக இன்னும் ஒசாமா பயங்கரவாதி என்று கதைப்பது நீண்டகாலநோக்கில் உலக ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்கான, அதிலும் ராணுவரீதியாக வீழ்த்துவதில் எந்த பலனையும் தராது.

ஒருமுறை நான் மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தியிடம் அமைப்பு பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “தோழர் நாங்கள் மே பதினேழு இயக்கத்தை இன்னும் ஒரு அமைப்பாக கொண்டுவரவில்லை, அதை ஒரு மேலோட்டமான (சிறந்த வார்த்தை இருந்தால் போட்டுக்கொள்ளவும்) அமைப்பாக, போராட்டம் நடத்துவதற்கான, ஈழப்பிரச்சனைகளை, ஈழமக்களின் நியாயத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ஒரு குடைபோன்றதொரு அமைப்பாகத்தான் வைத்திருக்கிறோம். அதனால்தான் எங்கள் போராட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்கிறார்கள். இது ஓர் அமைப்பாகயிருந்திருந்தால் இதுபோன்றதொரு மக்கள் குழாம் எங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு வந்திருக்காது” என்றார்.

அது உண்மைதான். ஓர் இயக்கம் ஒரு எதிர்ப்பியக்கமாகயிருக்கும் வரை அது வெறும் பரந்துபட்ட மக்கள் திரள் அமைப்பாகயிருந்தால் போதுமானது, ஏனெனில் அதுவே ஒரு பரந்துபட்ட மக்கள்திரளை தம்முள் இணைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றதாகயிருக்கும். ஆனால் எப்போது ஒரு அமைப்பு நிலவுகின்ற வெள்ளையரசை சுக்குநூறாக உடைப்பதோடன்றி புதியதொரு அரசைக்கட்டவேண்டும்; புதியதொரு சமூகத்தை படைக்கவேண்டுமென்ற ஆசைப்படுகிறதோ அப்போது அது உறுதியாக ஒரு கெட்டிப்படுத்தப்பட்ட உருக்கு போன்றதொரு அமைப்பாக உருவெடுக்கவேண்டிய தேவையிருக்கிறது. ஒசாமாவிற்கு புதியதொரு அரசுருவாக்கம் (அது இசுலாமிய சட்டதிட்டத்தை அடிப்படையாகக்கொண்டது) பற்றிய எண்ணங்கள் இருந்தாலும், அவருக்கு அதுபற்றிய அனுபவங்களோ, அல்லது அதுபற்றிய அவாக்களோ இல்லை. முல்லா முகமது ஓமருக்கு அதுபற்றிய அனுபவங்கள் இருந்தாலும், ஒசாமா ஆப்கானில் சென்று தங்க ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே அந்நாடு அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதுபோக முல்லா முகமதுவின் ஆட்சி அப்போது நிலவிய சார்பு உற்பத்திமுறையை பெருமளவு ஒன்றும் மாற்றிவிடவில்லை. அவர்களின் பிரக்ஞை எல்லாம் சமூக, பண்பாட்டுத்தளங்களிலேயே (கொச்சையாக சொல்வதென்றால் மேற்கட்டுமானங்களிலேயே) இருந்தது.

ஆனால் இந்த பரந்துபட்ட அல்குவைதா என்னும் அமைப்பு தானாக உருவாகியதா அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக இசுலாமிய மக்களை ஒட்டுமொத்தமாக எதிர்த்ததன் மூலம் உருவாக்கியதா, அல்லது ஒசாமா பின்லேடன் முனைந்து இதுபோன்ற அமைப்பை உருவாக்கினாரா அல்லது இந்த அனைத்துக்காரணிகளும் இதுபோன்ற அமைப்பு உருவாக்க காரணமாகயிருந்ததா என்பது பற்றி நமக்குத் தெளிவான புரிதல் இல்லாது இருந்தாலும் ஒன்று மட்டும் உறுதி, உலகின் ஆயுதந்தாங்கிய இசுலாமியர்கள் தம்மை எந்தவித அமைப்பாக்கமும், வென்றெடுத்தலுமின்றி அல்குவைதாவின் கிளைகளாக கருத ஆரம்பித்தார்கள். இதுதான் அல்குவைதாவின் வெற்றியின் துவக்கம். உலக முழுவதிலும் இருக்கக்கூடிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது தாங்கொணா வெறுப்பைக்கொண்டிருந்த போராட்டங்கள் அல்குவைதா என்னும் குடையின்கீழ் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கொண்டுவரப்பட்டன. சாத்தியமான இடங்களில் எல்லாம் எந்தவித அமைப்பாக்கல் நிபந்தனையுமின்றி இதுபோன்ற போராட்டங்களுக்கு ஆயுத, பண மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அல்குவைதாவினர் வழங்கினர்.

osama_600
எப்படி சகாப்தம் படைத்த ஸ்டாலின்கிராடில் ஒரு ஜெர்மானிய போர்வீரன் கூறியபடி ரசியாவின் ஒவ்வொரு வீடும் ஒரு கோட்டையாகவும், ஒவ்வொரு தெருவும் ஒரு போர்க்களமாகவும் இரண்டாம் உலகப்போரில் மாறியதோ, எப்படி அதை தோழர் ஸ்டாலின் மாற்றினாரோ அப்படி ஒசாமாவும் அவரின் அல்குவைதாவும் அனைத்து இசுலாமியர்களையும் ஒரு பொது எதிரிக்கெதிராக போர்வீரனாக மாற்றினார். அந்தப்போர்வீரர்கள் அவர்களின் முடிவை அவர்களே எடுத்தபடி அவர்களுக்கு சாத்தியப்பட்டபடி அவர்களினால் ஆன அளவில் அங்கங்கே கொரில்லா தாக்குதலையும், தற்கொலைத் தாக்குதலையும் தொடுத்தார்கள். வீட்டிலிருந்து தோசை சுட்டுக்கொண்டு வருவதுபோல் ஒரு குண்டை செய்து கொண்டுவந்து மேற்குலக நாடுகளில் போட்டுத்தாக்கினார்கள். இதில் பச்சை பாலகனிலிருந்து பல்லுப்போன தாத்தாவரை அடக்கம். அதிலும் பெண்போராளிகளின் பங்கு அலாதியானது.

இதுபோன்றதொரு குடைபோன்ற அமைப்பில் ஒரு நம்பிக்கையான விடயம் என்னவெனில் தலைமை பற்றிக் கவலைப்பட தேவையில்லை. தலைமை ஒரு கட்டளை மய்யமாகவில்லாமல், ஒரு தகவல் பரிமாற்று மய்யமாகயிருக்கும். ஒரு சாதாரண தபால்காரனின் வேலைதான் ஒபாமாவுக்கு. அதனால்தான் கொரில்லா போரின் விதிகளை எல்லாம் மீறி ஒசாமா ஒரு இடத்தில் சுமார் அய்ந்து ஆண்டுகள் தங்கியிருந்தது. கொரில்லா யுத்தத்தில் முதல் விதியே (அது மூலவுத்திரிதியிலான காடுகளாக இருந்தாலும் சரி அல்லது நகர்ப்புற கொரில்லா யுத்தமாக இருந்தாலும் சரி) ஒரு இடத்தில் இருக்கக்கூடாது என்பதுதான். முக்கியமாக நகர்ப்புற பொறுப்பாளர்கள் நகரின் ஒரு இடத்தில் தங்கியிருந்தாலும் அவர்கள் அந்த இடத்தில் முக்கியமாக அந்த வீட்டில் மிஞ்சிப்போனால் ஆறுமாதம் அல்லது ஒரு வருடம் அதற்கு மேல் தங்கவே மாட்டார்கள். ஏனெனில் நகர்ப்புறம் என்பது ஒப்பீட்டளவில் எதிரி வலுவாகயிருக்கும் இடம்.

தோராபோரா காடுகளின் அங்குலங்களை கொரில்லா யுத்தத்தின்படி நடையால் அளந்த ஒசாமாவிற்கு இந்த கொரில்லா யுத்தத்தின் அரிச்சுவடி அத்துப்படி. ஆனாலும் அவர் ஏன் அங்கே தங்கியிருந்தார் என்பதற்கான விடை என்னைப் பொறுத்தளவில் அவர் பரந்துபட்ட இசுலாமிய மக்களின் போராட்டத்திற்கு ஒரு குறியீடாக மாறவிரும்பினார் என்பதுதான். முக்கியமாக இதுபோன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களில் இதுபோன்ற குறியீடுகளும் வழிபாட்டு நபர்களும் அவசியம். உதாரணம் சே குவேரா. எனவே ஒரு வீரமரணத்தின்மூலம் (எப்படி பெர்சியன்களுக்கெதிரான வீரமரணத்தின்மூலம் முந்நூறு ஸ்பார்டன்களும் ஸ்பார்டா மக்களின் அடுத்தகட்ட போராட்டத்திற்கு குறியீடாகி அந்தப்போரை எழுச்சிக்குள்ளாக்கினார்களோ) ஒரு போராட்டக்குறியீடாக மாறி போராட்டத்தை எழுச்சியோடு முன்கொண்டு செல்ல ஒசாமா உதவியிருக்கிறார். அதுபோக ஒரு நெகிழ்வான அமைப்பொன்றை கட்டியதன் மூலம் பெருவாரியான மக்களை தமது போராட்டத்தில் இணைத்துக்கொண்டார். வெறும் குறியீடுகளையும் தாண்டியும் மிளிர்ந்தார்.

ஈழப்போராட்டம் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பின் கீழ் நடந்தததன் விளைவாக இன்று போராட்டங்கள் அன்று போல் இல்லாமல் ஒரு முடிவற்ற சாத்வீகமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. தமது தேசிய இனத்தின் எல்லைகளுக்கு மட்டுமல்லாமல் சாத்தியமான அத்தனை வழிகளிலும் ஒரு போராட்டம் நடைபெறவேண்டும். உதாரணமாக பெரு பொதுவுடைமைக்கட்சி பாட்டாளி வர்க்கத்தை அடிப்படையாகக்கொண்டாலும் அதன் தலைமைக்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதும், உதாரணமாக தோழர் கொன்சாலா கைது செய்யப்பட்டதும் இன்னபிற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டதும் அப்போராட்டமானது முன்புபோல் வீச்சாக இல்லாமல் போனது. அதுபோக என்னதான் பொதுவுடமைவாதிகள் சர்வதேசவாதிகள் அல்லது சர்வதேச அனாதைகள் என்று சொல்லிக்கொண்டாலும் தோழர் சுனிதிகுமார் கோசு சொன்னதுபோல் அவர்கள் தேசியவாதிகளாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக தோழர் கொன்சாலா கைது செய்யப்பட்டதும் இந்திய மாவோயிஸ்டுகளும், நேபாள மாவோயிஸ்டுகளும் வெறும் அறிக்கைகளோடும், கண்டன ஆர்ப்பாட்டங்களோடும் நிறுத்திக்கொண்டார்களே தவிர ஒன்றும் அரசுக்கெதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்திவிடவில்லை. அதுபோல இந்திய மாவோவியர்களின் தலைவர்களான ஸ்யாம், மகேசு, முரளி ஆகியோர் கொல்லப்பட்டபோது நேபாள மாவோவியர்கள் ஒன்றும் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்திவிடவில்லை. வெறும் ஆதரவு என்ற தளத்தோடு இவர்களும், இவர்களின் மக்கள் ஆதரவு தளங்களும் நிற்கின்றன.

ஆனால் அல்குவைதா அப்படியில்லை. தேச எல்லைகளைக்கடந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அதற்கெதிரான போரையும் சர்வதேசியமாக்கியிருக்கிறது. பரந்து பட்ட மக்களையும் போராட்டத்தில் இணைத்திருக்கிறது.

osama_203அதுபோக அம்பேத்கர் தலித்துகளைப் பற்றிப் பேசும்போது இந்திய ஒன்றியத்தில் அவர்கள் ஒரு தேசிய இனம் என்பார். ஸ்டாலினின் தேசிய வரையறைக்கு முன்பாகவும், இன்னபிற தேசிய இன வரையறைக்குள்ளாகவும், ஏன் இன்னுஞ்சொல்லப்போனால் தமிழ்த் தேசிய பொதுவுடமைக்கட்சியின் மொசைக் தேசிய இன வரையறைக்குள் கூட அம்பேத்காரின் தலித்துகள் ஒரு தேசிய இனம் என்னும் வரையறை சிக்காது என்றாலும் இந்த வரையறையே (ஈழத் தேசிய இனத்தை, அதன் விடுபடும் உரிமைகளை சிறிதளவும் மதிக்காமல் சிங்கள தேசிய இன பெருங்கதையாடலோடு இணைக்கும் அ.மார்க்சு-சோபாசக்தி கும்பல், தமக்குள்ளேயே பல்வேறு பண்பாட்டு முரண்பாடுகள் கொண்ட இலங்கை இசுலாமியர்களை ஒரு தேசிய இனமாக கதையாடி நிறுத்தும் முயற்சியின் சதி பற்றி தோழர் வளர்மதியிடம் பேசினால் அவர் இக்கும்பலின் ஈழ எதிர்ப்பு-சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை நன்கு விளக்குவார்) வெறும் கற்பிதமானது என்றாலும் இதற்கும் தேசிய அளவில் இல்லாமல் ஒடுக்குமுறை ரீதியிலான ஒற்றுமையுண்டு. உதாரணமாக உத்தரப்பிரதேச பகுஜன் சமாஜ கட்சியில் நம்மூரு சிவகாமி அய்ஏஎஸ் சேருவது போன்றவைகள்.

அதுபோன்ற ஒரு தேசிய இனமல்லாத அல்லது தேசிய இன வரையறைக்குள் அடங்காத சோகால்டு தேசிய இனமாக இசுலாமியர்களை அவர்களின் மேல் தாம் மேற்கொண்ட ஒடுக்குமுறைகளின் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிவிட்டது என்று சொல்லலாம் (வாசகர்களே மீண்டும் சொல்கிறேன் இது கொச்சையான புரிதல்தான்.). சர்வதேச இசுலாமியர்களின் எதிர்ப்புணர்வு ஒரு மாதிரியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த எதிர்ப்புணர்வை அமைப்பாக்கியவர் நமது ஒசாமா பின்லேடன். நெகிழ்வான அமைப்பொன்றின் அமைப்பு அதிகாரமில்லா அல்லது அவ்வகையான அதிகாரத்திற்கு கட்டுப்படா அல்லது அமைப்பு அதிகாரமின்றி சுயேச்சையான அதிகாரமுடைய செயல்வீரர்களாக அனைத்து அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாள இசுலாமியர்களும் மாற்றப்பட்டார்கள். அதுபோன்ற கட்டற்ற அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டமைத்த (கறாரான தேசிய இன வரையறைக்குள் கட்டுப்படாத) அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய இனமொன்று வேறுவழியின்றி அமெரிக்க மற்றும் அதன் அடிவருடி அரசுகளுக்கெதிராக ஒரு தெருச்சண்டையில் இறங்கியது.

அதுபோக இன்று ஆயுதப்போராட்டத்தின் சாத்தியமின்மை மற்றும் போதாமை போன்ற விவாதங்கள் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் அ.மார்க்சு போன்றோரின் விவாதங்கள் எந்த அடிப்படையும் இன்றி (ஆயுதப்போராட்டம் சாத்தியமா இல்லையா என்பது மூலவுத்தி பகுதிகளை அடிப்படையாகவும், பிரதான அம்சமாகவும் கொண்டே நடைபெறும். அப்படி ஒரு விவாதத்தை நடத்திவிட்டு தமது விவாதங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் அயர்ந்துபோய் சென்னையில் ஓய்வெடுக்கிறது புதியபோராளிகள் எனும் கலைப்புவாதக்கும்பல்) ஆயுதப்போராட்டமே இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கு ஒத்து வராது என்று பேசுகிறது. இந்நிலையில் முக்கியமாக ஆயுதப்போராட்டத்தின் மூலவுத்திப்பகுதிகளான, வெள்ளை அரசு எந்திரத்தின் அதிகாரம் ஒப்பீட்டளவில் வீரியமின்றிக் காணப்படும் காடுகளை ஏகாதிபத்தியங்கள் வேண்டுமென்றே அழித்துவருகின்றன. இந்நிலையில் தோழர் கியாப்பின் மின்னல்வேக நடவடிக்கைகளான குறைவான மக்களைக்கொண்டு பெரியளவிலான எதிரிகளை அழிக்கும் கொரில்லா நடவடிக்கைகள் நகர்ப்புறங்களில் கடைப்பிடிக்கப்படவேண்டும். அது போன்றதொரு தாக்குதல்களை அல்குவைதா மிகப் பரந்தளவில் கைக்கொண்டதை நாம் கண்டோம். அதுபோக நகர்ப்புற நீண்டகால ஆயுதப்போராட்டத்தை துவக்கி வைத்தததில் ஒசாமாவின் பங்கு அபரிமிதமானது.

மக்களைக் கொன்றதால் ஒசாமா பயங்கரவாதி என்று சொல்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர்களுக்கு பல தசாப்தங்களுக்கு முன்னதாகவே தனது ஓரியண்டலிசம் என்னும் புத்தகத்தில் தோழர் எட்வர்டு செயது பதில் சொல்லிவிட்டார் “எம்மை நாகரிகமற்றவர்கள் என்று சொல்வதன்மூலம் அந்த மேற்கத்திய நாட்டவர்கள் தம்மை நாகரிகமானவர்களாகக் காட்டிக்கொண்டார்கள்” என்கிறார் அவர். அதுபோல ஒசாமா பின்லேடன் என்ற அந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை பயங்கரவாதியாக காட்டியதன்மூலம் தம்மை நாகரிகமானவனாக, தம் செயல்களை நாகரிக சமூகத்தின் செயல்களாக காட்டிக்கொண்டது மேற்கத்திய சமூகம். அந்த மேற்கத்திய ஆளும் வர்க்கங்களின் பார்வையை மூக்குக்கண்ணாடியாகக் கொண்டு உலகை பார்ப்பவர்கள் நமது முற்போக்குவாதிகள்.

அதுபோக இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய நாடுகளில் வாழ்கின்ற மக்களின் அரசியல் அறிவு என்பது மிக மிக முக்கியம். முதலாளித்துவ நாடாக பீத்திக்கொள்ளும் அமெரிக்கா (முதலாளித்துவம் என்பது நிலப்பிரபுத்துவத்தை விட ஒப்பிட்டளவில் மிகுந்த அரசியல் அறிவு பெற்றது. உதாரணமாக அரை நிலப்பிரபுத்துவ அரைக்காலனிய நாடான இந்தியாவில் நிலவும் உற்பத்தி முறையை விட அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாட்டில் நிலவும் உற்பத்தி முறை மேம்பட்டது என்ற நோக்கில் அம்மக்களின் அறிவு என்பது ஒப்பீட்டளவில் மேம்பட்டதே. எனவே ஒப்பீட்டளவில் மேம்பட்ட அரசியல் அறிவு பெற்ற அம்மக்கள் தம் அரசு செய்யும் தவறுகளைக் கண்டித்தே ஆகவேண்டும். சமமற்ற இந்த வர்க்கப்போரில் நடுநிலைமை என்ற பெயரில் கதையாடிக்கொண்டிருப்பது எந்தப் பலனையும் தரா. ஒன்று அவர்கள் அமெரிக்காவின் அடாவடித்தனங்களை கண்டிக்கவேண்டும். அந்த அரசை தூக்கியெறிய போராட்டங்களில் இறங்கவேண்டும் அல்லது வேறு வழியற்ற அல்குவைதாவின் செயல்களை ஆதரிக்கவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பன் தம்பி அர்ச்சுனன் பேச்சுவார்த்தைக்கு வந்து அரசால் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் அறங்கள் பற்றி அ.மார்க்சு குறிப்பிடும்போது அவர் சொல்வார், ‘தனிமனிதனான வீரப்பன் (காட்டிலாகா அதிகாரி சீனிவாசனை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுட்டுக்கொன்ற விவகாரம்) அறங்களைப் பின்பற்றாவிட்டால், இந்த அரசுக்கு போரியல் அறங்களை பின்பற்றவேண்டிய கடமையிருக்கிறது’ என்பார். ஆனால் தற்போது என்ன நடக்கிறதென்றால் அரசுகள் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் அரசியல் அறங்களை கைவிட்டு விட்டு அம்மணக்குண்டியாக களத்தில் நிற்கின்றன. ‘பத்து இசுலாமியர்களைக்கொல், ஒரு அல்குவைதா இருப்பான்’ என்பது போலல்லாமல் ‘ஒட்டுமொத்த இசுலாமியர்களையும் கொல் எண்ணெய் வளம் கிடைக்கும்’ என்ற நோக்கில் இசுலாமியர்களைக்கொல்வது அல்லது அம்பேத்கார் மொழியில் சொல்வதென்றால் மாநிற அமெரிக்க அடிமைகளை உருவாக்குவது என்று செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் முற்போக்காளர்களோ ‘அப்பாவி மக்களை செப்டம்பர் 11ல் கொன்றழித்ததால் ஒசாமா பயங்கரவாதி ஆனால் இரண்டாம் இடத்திலிருக்கும் பயங்கரவாதி’ என்று கதையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்ணன் பாமரன் சொல்வதுபோல் 2001, செப்டம்பர் 11க்கு முன்பாக இசுலாமிய நாடுகளில் அமெரிக்க நிகழ்த்திய எண்ணற்ற செப்டம்பர் 11களை எத்தனை அமெரிக்கர்கள் கண்டித்தார்கள்? அறமும் வழுவும் அற்றுப்போன இந்த அமெரிக்க சமூகத்திடம் அறமும் வழுவும் பற்றிப்பேசுவதன் காரணமென்ன? பலன்களென்ன? எந்த மனித வெடிகுண்டுத்தாக்குதல்களையும் அமெரிக்க வீதிகளில் தம் நாட்களில் நடத்த தூண்டுவிக்காமல் அநியாயமாகக் கொல்லப்பட்ட சதாம் உசேனின் கொலைக்காக எத்தனை அமெரிக்க மக்கள் பொங்கியெழுந்து கண்டனம் தெரிவித்தார்கள்? ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது எத்தனை அப்பாவி சிங்கள மக்கள் சிங்கள அரசுக்கெதிராக எத்தனை போராட்டங்களை நடத்தினார்கள்?

muslim_boy_369முரண்பாடு கூர்மையடைந்த நிலையில் நடுநிலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. இது இசுலாமியர்களுக்கு வாழ்வா சாவா பிரச்சனை, எனவே அமெரிக்க மக்கள் ஒன்று அமெரிக்க அரசு அப்பாவி இசுலாமிய மக்களை கொல்வதைத் தடுத்து நிறுத்தவேண்டும் அல்லது அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் அழிவிற்கு தம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும் அல்லது சோ கால்டு அப்பாவி அமெரிக்க மக்கள் மத்தியில் அல்குவைதா குண்டுகள் வெடிப்பதை ஆதரிக்கவேண்டும். தோழர் கவிஞர் முகமது தார்வீஸ் சொன்னதுபோல் ‘அவர்கள் நாங்கள் மரித்துபோவதைக்காணவே விரும்பினார்கள்.’ கொலைக்களங்களில் இருந்து எப்படியேனும் தம் மக்களை தப்பவைக்கவேண்டும், எப்படியேனும் நம் மக்களை இந்த எந்த அறமும் போரியல் விதிகளும் அற்ற அரசு கொல்வதை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற ஆற்றாமையில் வருவது இந்த அப்பாவி மக்கள் படுகொலை.

இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது மடமடவென்று குண்டுகளைப்பொழிகிறது இலங்கை இனவாத ராணுவத்தின் சமாதானம் பேசவந்த அலுமினியப்புறாக்கள். செஞ்சோலையில் அப்பாவிக்குழந்தைகள் கொல்லப்பட்டபோதும் கைகட்டி வாய்மூடி நின்றது சர்வதேச சமூகம். அந்த சர்வதேச சமூகத்தில் சிங்கள அப்பாவிகளும்தான் இருந்தார்கள் என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. என்னதான் தேசிய இனவெறிபோதைக்கு தெரியாமல் ஆளாகியிருந்தாலும் ‘பச்சைப்புள்ளைகளை கொல்லாதீங்கடா பாவிகளா’ என்று தம் சிங்கள அரசிடம் சொல்லக்கூடவா வக்கற்றுப்போனது அந்த சிங்கள அப்பாவிகளின் நாக்குகள் (சொல்லியிருந்தாலும் அதை சிங்கள அரசு கேட்காது என்பது வேறுவிடயம்).

வேறு வழியில்லை என்னதான் செய்வது தமிழ் மக்களை, எப்படித்தான் நம் அப்பாவி மக்களை காப்பது என்று வழி தெரியாமல் ‘இனிமேல் தமிழர்கள்மேல் தாக்குதல் தொடுத்தால் அதற்கான பலனை விளைவை சிங்களச் சமூகம் பெறவேண்டியிருக்கும்’ என்று வெளிப்படையாக மிரட்டினார்கள் புலிகள். உடனே ‘அய்யோ அம்மா புலிகள் அப்பாவி சிங்களர்களை கொல்லப்போகிறார்கள்’ என்று கூப்பாடு போட்டது ஒரு கும்பல். வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் பாருங்கள். அமெரிக்க ராணுவவீரர்களின் பிணங்கள் பெட்டி பெட்டியாக விமானத்தில் வந்து இறங்கியபோதுதான் அப்பாவி அமெரிக்க மக்களுக்கே வியட்நாம் அப்பாவி மக்கள்மீது கருணை வர ஆரம்பித்தது. அவர்கள் தெருக்களில் இறங்கி கதறி அழுது “எங்கள் பிள்ளைகளை கொல்லக்கொடுக்காதே” என்று அமெரிக்க அரசை படைகளை வியட்நாமிலிருந்து திரும்ப அழைக்கச்சொல்லி வற்புறுத்தினார்கள்.

பட்டால்தான் அறிவு வரும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் கையறுநிலையில் இருக்கும் ஒரு சமூகம் ஏதேனும் செய்து தம் குழந்தைகளை, மக்களை காக்க வேண்டிய நிலையிலிருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடவேண்டும். ஏகாதிபத்திய சுனாமியில் மாட்டிக்கொண்ட இசுலாமியச் சகோதரர்கள் எப்படியேனும் வெளியில் வரவேண்டும் என்ற நிலையில் அல்குவைதா “உன் சுனாமியை நிறுத்து, அல்லது அந்தச்சுனாமியின் வலியை உன் மக்களையும் நான் உணரச்செய்வேன்” என்று சொன்னது. அன்பு வாசகர்களே, பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பாருங்கள் அவனின் வலி புரியும், தப்பிக்க இயலா புதைகுழியிலிருந்து தப்பிக்க நினைப்பவன் எதையும் தவ்விப்பிடிப்பான். பிடிப்பது கயிறா அல்லது காப்பாற்ற வந்தவனின் தலைமுடியா, அல்லது வெளியில் தம்மைக்காப்பாற்ற இயலாமல் நிற்கும் சிறுவனின் கையா என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. என்ன கிடைத்தாலும் அதைப்பிடித்துக்கொண்டு வெளியே வர முயற்சி செய்வான். அதுதான் அல்குவைதா விடயத்திலும் நடந்தது; நடக்கிறது. இனிமேலும் அப்பாவிகள் அப்பாவிகளாகவே இருந்தாலும் அப்படித்தான் நடக்கும்.

நினைவில் வையுங்கள். அல்குவைதா வெறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்தான். அவர்களுக்கு நிலவும் இசுலாமிய எதிர்ப்பு ஏகாதிபத்திய அரசுகளை உடைத்து தூள்தூளாக்குவது ஒன்றுதான் வேலை. மாறாக மாற்று அரசு கட்டுவதல்ல. அப்படிக்கட்டுவது அவர்கள் இப்போது கட்டியுள்ள நெகிழ்வான அமைப்பால் இயலாத காரியம். இதைப்புரிந்து கொள்ளவேண்டியது பரந்து பட்ட மக்களின் கடமை.

இல்லையில்லை, இது பயங்கரவாதம்தான், இது மக்கள் போராட்டமல்ல என்று நீங்கள் சொன்னால் மக்கள் போராட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பை யார் உங்கள் கையில் கொடுத்தது என்ற கேள்வி வரும். ஏனெனில் உங்கள் பார்வை வர்க்கப்பார்வை என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் தோழர் ரேமண்ட் வில்லியம்ஸின் கருத்துக்களிலேயே இனவாதம் இருந்தது என்று கண்டித்தவர் தோழர் எட்வர்டு செயது. அதுவும் உண்மைதான் என்று சுயவிமர்சனம் ஏற்றுக்கொண்டவர் தோழர் வில்லியம்ஸ்.

சரி இறுதியாக என் நண்பன் ‘பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் இறந்ததைப்பற்றி என்ன நினைக்கிறாய்’ என்று என்னிடம் கேட்டான். அதற்கு நான் சொன்னேன் “தோழன் எட்வர்டு செயது இல்லையே உங்களுக்கு பதிலளிக்க” என்று. ஒன்று மட்டும் மனதில் வையுங்கள். நீங்கள் தோழன் ஒசாமாவை பயங்கரவாதி என்று சொன்னதற்கு உங்களை வரலாறு குப்பைத்தொட்டியில் தூக்கியெறிந்தாலும் எறியும். ஏனெனில் வரலாறு ஈவிரக்கமற்றது.

- சார்லசு அன்ரனி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It