முன்னாள் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி (தற்போது திராவிடர் விடுதலைக் கழகம்) மற்றும் முன்னாள் பெ.தி.க பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் (தற்போது தந்தை பெரியார் திராவிடர் கழகம்) ஆகியோர் மீது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளரும், திராவிடர் கழகத் தலைவருமான திரு. கி. வீரமணி அவர்களால் சென்னை உயர்நீதிமன்றத்தில் காபிரைட் ஐ - அதாவது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே சொந்தமான பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகை மற்றும் இதர தொகுப்புகள் , புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் ஆகியவற்றை மீறி வெளியிட்டதற்காக ரூ. 15,00,000/- இழப்பீடு கேட்டு 2008ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் ஒன்றன்பின் ஒன்றாக உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை திரு. கி. வீரமணி அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுமல்லாமல், பெரியார் தன் எழுத்துகளுக்கு தனியாக காப்புரிமை கொண்டாடாததால் பெரியாரின் எழுத்தும் பேச்சும் , அவர் இறந்து 25 ஆண்டுகள் கழிந்ததும் அதே காபிரைட் சட்டப்படியே யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும், பொதுமக்களின் பொதுவுரிமைப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது என்றும் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார்கள். ஆனால் மீண்டும் திரு. கி. வீரமணி அவர்கள் புதிதாக இரண்டு இடைநிலை மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் கொளத்தூர் மணி தற்போது பெரியார் திராவிடர் கழகத்தில் இல்லை; தனியாக திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளார் என்றும் , பெரியார் திராவிடர் கழகத்திற்குப் பதிலாக திராவிடர் விடுதலைக் கழகத்தை தரப்பினராக வழக்கில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும்; மற்றொரு மனுவாக ‘குடிஅரசு’ புத்தக வெளியீடு சம்பந்தமாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் புதிய மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

மனுக்கள் மீதான விசாரணை 08.11.2018 வியாழன் அன்று நீதிபதி. எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கொளத்தூர் மணி சார்பாக வழக்கறிஞர்கள் எஸ் . துரைசாமி, வை. இளங்கோவன் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கறிஞர் எஸ். துரைசாமி வாதிடுகையில், கொளத்தூர் மணி தரப்பில் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் , இந்த வழக்கையே நிராகரிக்கக் கோரும் (reject the plaint) மனுவினை தாக்கல் செய்துள்ளோம் என்றும், அந்த மனுவையும் விசாரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்கள் தம் உத்தரவில், reject the plaint - வழக்கை 23.11.2018 அன்று முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், அதற்கு பின் மற்ற மனுக்களை விசாரிப்பதாகவும் உத்தரவிட்டுள்ளார்கள். வழக்கு விசாரணை மீண்டும் 23.11.2018 அன்று நடைபெறுகிறது.