“இராமராஜ்ய இரதயாத்திரை’ தமிழகத்துக்குள் நுழைவதை எதிர்த்து, காவிப் பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பு தமிழக எல்லையில் மறியல் போராட்டம் நடத்தி, பல்லா யிரக்கணக்கில் கைதாகி, தமிழ் மண் மதக் கலவரத்துக்கு அனுமதிக்காது; இது பெரியார் மண் என்பதை இந்தியா முழுமைக்கும் உணர்த்தியது. எச்.ராஜா என்ற பார்ப்பனர், திரிபுராவில் லெனின் சிலை உடைப்பை நியாயப்படுத்தி, தமிழ் நாட்டிலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பதிவிட்டதைத் தொடர்ந்து, பெரியார் சிலை உடைப்புகள் தொடங்கிய நிலையில் அதற்கு எதிர்வினைகளும் எழுந்தன. சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் வர்ணாஸ்ரமத்தை அடையாளப்படுத்தி, தாங்கள், ‘பிராமண பிறப்பில்’ வந்தவர்கள் என்று அடையாளப்படுத்தும் ‘பூணூலை’ கழகத் தோழர்கள் சில பார்ப்பனர்களிட மிருந்து அறுத்து எதிர்வினை யாற்றினர்.

இதில் இராவணன், உமாபதி, இராஜேஷ், பிரபாகரன் ஆகிய நான்கு தோழர்கள் காவல்துறையில் தாமாகவே முன்வந்து சரணடைந்தனர்.

மயிலாடுதுறையில் இராமராஜ்ய யாத்திரை, பெரியார் சிலை உடைப்பு களுக்கு எதிர்வினையாக ‘சூத்திரன் தவம் செய்யக் கூடாது’ என்பதற்காக அவன் தலையை வெட்டிய ‘ராமன்’ (வால்மீகி இராமாயணம் அப்படி கூறுகிறது) படத்தை செருப் பாலடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘சூத்திரர்’களை இழிவு செய்யும் இராமர் யாத்திரையை தமிழகம் ஏற்காது என்று முழக்கமிட்டு கைதானார்கள். சென்னை மற்றும் மயிலாடுதுறை தோழர்கள் கைது செய்யப்பட்டு முறையே சென்னை, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு, இப்போது நிபந்தனை பிணையில் விடுதலையாகியுள்ளனர். ஆனால் பெரியார் சிலையை உடைக்கத் தூண்டிய எச்.ராஜா மீது எந்த வழக்கையும் தமிழக அரசு பதிவு செய்யவில்லை.

இராமனை செருப்பாலடித்ததாக 14 தோழர்கள் கைது செய்யப்பட் டனர். மீத்தேன் எதிர்ப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கண்டன ஆர்ப்பாட் டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றதால் அவரும் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மகேஷ், நடராசன், மகாலிங்கம், இளையராஜா, செந்தில் குமார், நாஞ்சில் சங்கர், விஜயராகவன், தில்லைநாதன், கார்த்திக், திராவிடன் ஜாஹிர், கவிஞர் முருகதாசன், சுப்பு மகேஷ் (தமிழர் உரிமை இயக்கம்), ராஜசேகரன் (மக்கள் அரசு கட்சி) ஆகிய 14 தோழர்கள் கைது செய்யப் பட்டனர்.

பூணூல் அறுப்பைக் கண்டித்து நடிகர் எஸ்.வி. சேகர் தலைமையில் மயிலாப்பபூரில் பார்ப்பனர்கள் பொதுக் கூட்டம் நடத்தினர். இராமன் படம் செருப்பால் அடிக்கப்பட்டதை எதிர்த்து மயிலாடுதுறையில் வணிகர்களை கடையடைப்பு செய்யு மாறு பா.ஜ.க.வினர் மிரட்டி கடைகளை மூட வைத்தனர்.

இராமன் படத்தை அவமதித்ததால் கழகத் தோழர் நாஞ்சில் சங்கர் மரணமடைந்துவிட்டதாக முகநூல் வழியாக பொய்யான தகவல்களை போலிப் படங்களை தயாரித்து பரப்பியதோடு, தோழர்களுக்கும் பேராசிரியர் ஜெயராமன் அவர்களுக்கும் கொலை மிரட்டல்களை விடுத்து வருகின்றனர். இது குறித்து ‘சைபர் கிரைம்’ துறையிலும் காவல் துறையிடத்திலும் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட் டுள்ளது.

வடநாட்டு வர்ணாஸ்ரம இராமனை தமிழ்மண் ஏற்காது என்பது கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. பெரியார் திடலில் ‘இராவண லீலா’வை 1974ஆம் ஆண்டு அன்னை மணியம்மையார் நடத்தியபோது இராமன், சீதை உருவங்கள் எரிக்கப்பட்டன. அப்போது தொடரப்பட்ட வழக்கில் மணியம்மையார் உள்ளிட்ட தோழர்களை விடுதலை செய்த நீதிமன்றம், இது வழக்கமாக பெரியார் பின்பற்றும் போராட்ட வடிவம் தான் என்று தீர்ப்பளித்தது. பெரியார் மட்டுமின்றி, சைவத்தை ஏற்ற தமிழறிஞர்களான மறைமலையடிகள், பூரணலிங்கம் பிள்ளை போன்ற தமிழறிஞர்களும் இராமாயணத்தை விமர்சித்துள்ளனர். இராஜகோபாலாச் சாரியே ‘இராமன்’ கடவுள் அல்ல; அவன் ஒரு இதிகாசப் பாத்திரம் என்று கூறியதோடு, இராமன் மீது விமர்சனத்தையும் முன் வைத்துள்ளார்.

அதேபோன்று சேலத்தில் சங்கரமடம் தாக்கப்பட்ட வழக்கில் நங்கவள்ளி கிருஷ்ணன், மனோ, இராஜேந்திரன் ஆகிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு 8 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு சேலம் சிறையிலிருந்து, மார்ச் 27 அன்று நிபந்தனை பிணையில் விடுதலையானார்கள். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களுடன் சென்று சிறை வாயிலில் வரவேற்றார்.

இராமர் ரதயாத்திரை-பெரியார் சிலை உடைப்புகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

கடந்த 20ஆம் தேதி புதுக் கோட்டையில் தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித் தும், இராம ரதயாத்திரையைக் கண்டித்தும் நாமக்கல் மாவட்டம் சார்பில் பள்ளிப்பாளையத்தில் தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து 20.3.2018 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

கண்டன ஆர்பாட்டத்திற்கு திவிக நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட பொருளாளர் முத்துப் பாண்டி முன்னிலையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்புரையாற்றினார். மேலும், திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த, குமாரபாளையம் நகரத் தலைவர் தண்டபாணி, பள்ளிப்பாளை யம் சஜீனா, மீனா, தமிழ் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆதவன் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த மாணிக்கம் ஆகியோர் தங்களது கண்டன உரையை பதிவு செய்தனர். இறுதியாக தோழர் கவுதமன் நன்றி யுரையாற்றினார்.

திருப்பூர் : பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து, பெரியாரிய கூட்டமைப்பு சார்பில் தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து திராவிடர் விடுதலைக் கழகம் தலைமையில் 07.3.2018 மாலை 5 மணிக்கு திருப்பூர் பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்பாட் டத்திற்கு திவிக திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு எச். ராஜா உருவ பொம்மையை செருப்பால் அடித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கண்டமங்கலம் : 24-03-2018 அன்று மாலை 4.30 மணியளவில் விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை பெரியார் ஜெயரட்சகன் ஒருங்கிணைத்தார் நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் அழகுமுருகன் பெரியார் தி.வி.க ஒருங்கிணைப்பாளர் கோகுல் காந்திநாத், பெரியார் சிந்தனையாளர் இயக்க செயலாளர் தீனா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி விழுப்புரம் மாவட்ட தலைவர் நாகு, புதுச்சேரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பரப்புரை செயலாளர் விஜி, கண்டமங்கலம் திராவிடர் கழக பெரியார் பெருந் தொண்டர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் தலைமை உரைக்கு பின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் இராமர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு ஆகியோர் பெரியார் சிலை உடைப்பை கண்டித்தும் பார்ப்பன ஆதிக்கத்தையும் ஆர்.எஸ்.எஸ்-ன் மக்கள் விரோத செயலை கண்டித்து சிறப்புரையாற்றினார்கள்.

தூத்துக்குடி : 22.03.3018 அன்று தூத்துக்குடி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் இரத யாத்திரை தூத்துக்குடி வருவதைக் கண்டித்து பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக மாவட்ட தலைவர் குமார் தலைமையில், ஆதித் தமிழர் கட்சி மாநில தென் மண்டல செயலாளர் இரா. வே.மனோகர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால். அறிவழகன், ஆதித்தமிழர் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் அருந்ததி அரசு , ஆதித் தமிழர் கட்சியின் மாவட்ட பொருப்பாளர் மாரிச்செல்வம் ஆகி யோர் கலந்து கொண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கைது செய்து அடைக்கப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

Pin It