அப்பன் தமிழினத்தான் ஆத்தாள் தமிழச்சி

எப்படிடா ஆவேன்நான் இந்தியனாய் - இப்புவியில்

தப்பாய் வரலாற்றைத் தாங்கி வாடும் செந்தமிழே

எப்படியும் மீட்பேன் உனை

நாயது குட்டி போட்டால்

நாய்க்குட்டி நாளும் ஏய்க்கும்

ஊளைநரியது குட்டி போட்டால்

நரிக்குட்டி; தமிழைப் பேசும்

தாயவள் குட்டி போட்டால்

தமிழ்க் குட்டி ஆவ தில்லை

தேய்பிறை இந்தி யாவில்

தேசியக் குட்டி நாமே!

குழந்தைகளிடம் மம்மி, குமரியிடம் ஐ.லவ்.யு

விழைந்தபடி வீடெல்லாம் பேச - நுழைந்ததுவே

இம்மா நிலமெங்கும் ஆங்கிலம்! இந்நிலையில்

செம்மொழியா நீ தமிழே செப்பு.

டீஸ்டால், டெக்ஸ்டைல்ஸ், திரிஸ்டார், கோல்டுஅவுஸ்

சீபுட்ஸ், சிக்கன்ஸ்டால், டெய்லரிங் - வால்தூக்கி

இம்மா நிலமெங்கும் தேள்கொடுக்காய்த் கொட்டுகையில்

செம்மொழியா நீ தமிழே செப்பு.

சன்டி.வி., ராஜ்டி.வி. விண்., ஜெ., விஜய் டி.வி.

என்டி.வி. இப்பெயரில் எத்தனையோ - கன்னமிடும்

இம்மா நிலத்தில்நீ சீரழிந்தாய் செந்தமிழே!

செம்மொழியா நீ தமிழே செப்பு.

ஆறெல்லாம் கடலின் பக்கம்

அறிவெல்லாம் புகழின் பக்கம்

ஊரெல்லாம் உறவின் பக்கம்

ஊறும்தேன் மலரின் பக்கம்

தேரெல்லாம் தெருவின் பக்கம்

திண்தோள்ம ணியரசன் பக்கம்

சீரெல்லாம் குறட்பா பக்கம்

சீர்வளம்த மிழ்த்தேசம் பக்கம்.

இந்திய பொதிச் சுமையை

இடுப்பிலே ஏற்றிய தால்

முந்தய பெருமையெலாம்

முற்றும் தொலைத்தோமே

சங்கமும் இழந்துவீர

சரித்திரம்தான் இழந்தோம்

சிங்கமும் உருவம் மாறி

சிறுநரி ஆயிற்றம்மா

வீங்கிடும் கரும்புத் தோட்டம்

வெப்பு நோய் கொண்டதம்மா

தாங்கிடும் தேன் குடத்தில்

தவளைகள் துள்ளல் அம்மா

ஓங்கிடும் தனித்த சீர்த்தி

ஒடுங்கிற்றே திராவி டத்தால்

ஈங்கினி என்ன உண்டு

இருண்டபின் ஞாயிறேது

ஆதிக்க இந்தி யாவுள்

அடைபட்ட புலியாய் ஆனாய்

பாதிப்பில் தமிழ ரெல்லாம்

பள்ளத்தில் குப்பை ஆனோம்

ஓதிடும் வழிபாட்டின் கண்

ஒளிகல்வி திரையில் பண்பைச்

சாதிக்கும் கலையில் இதழில்

சரிந்தாய்நீ தமிழே தாயே

சிங்களனைப் போரிட்டுக் கொண்டு வந்து

செழுஞ்சோழன் கல்லணையைக் கட்டிப் பார்த்தான்

திங்களென ஒளிவீசி இமயம் சென்று

திண்தோளன் சேரனவன் கொடி பொறித்தான்

பொங்குதமிழ் வெளிச்சமிட சங்கம் கண்டு

புகழ்மணந்தான் பாண்டியனும் ஆனால் இன்றோ

தங்கமலை வெப்பத்தால் உருகிப் போச்சே!

தணலாற்றில் தமிழ்ப் பிணங்கள் மிதக்கலாச்சே!

காவிரிநீர் கன்னடத்தான் கண்அ சைவில்

கவிதை கொண்ட பாலாறோ தெலுங்கன் கையில்

பூமுல்லை பெரியாறும லையாளி கையில்

புகழ்சரிந்து கிடக்கின்றோம் இந்தி யத்தால்

தேமதுரத் தமிழினத்தான் தேம்பித் தேம்பி

தினமழுது சாகின்றான் தமிழா!கேள் கேள்

ஏமாந்தோம் இந்தியத்தால் திராவிடத்தால்

இனிநாமும் தமிழ்த்தேசம் காண்போம் வாவா.

நாலடியில் இரண்டடிமண் தமிழர் அல்லார்

நடவு செய்யும் மண்ணாச்சே தமிழர் பூமி

காலடியைத் தமிழ்த்தலைக்கு மேலே வைத்து

கைத்திறத்தைக் காட்டுகின்றான் பிற இனத்தான்

பாலடிதான் திருக்குறளின் அறத்துபாலின்

பண்பாட்டில் நிமிர்ந்தவனே! புறநாநூற்று

வேலடியால் பகைசாய்த்தோம்! மீண்டெழும்பி

விசைகொண்டு தமிழ்த்தேசம் காண்போம் வாவா!

இந்தியத்தால் துருப்பிடித்த இரும்பாய் ஆனோம்!

இன்றளவும் திராவிடத்தால் வளமை கெட்டோம்!

பந்தயத்துக் குதிரையென நமது வேகம்

பனிநனைந்த நத்தையென ஆன தம்மா!

நந்தமிழன் தலைதூக்கி நிமிர் வதற்கு

நலம்பயக்கும் தமிழ்த்தேசம் ஒன்றே தீர்வு

எந்தமிழர்க் குஇன்னல் விளைந்தால்காண், காண்

சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!

Pin It