“இலங்கை அரசு இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் உளவுப்பணி ஆலோசகர்களுக்கும் தம் மண்ணில் இடம்கொடுத்திருந்ததால் அரபு நாடுகளுடனான நல்லுறவில் அதற்கு ஏற்பட்டிருந்த பாதிப்பைப் போக்கி, மீண்டும் நல்லுறவு ஏற்பட இந்த மோதல்கள் வசதி செய்து கொடுத்தன.”

தீர்ப்பதற்கே மிகவும் சிரமப்படுகிற அளவுக்கு சிக்கல் நிறைந்திருக்கும் இலங்கை இனமோதலைச் சரிசெய்வதற்கு சுலபமான ஒரு தீர்வை உண்டாக்கும் மிகப் பெரிய காரணிகளுள் ஒன்று - தமிழர்களின் பாரம்பரியமான தாயகம் என்று கருதப்படும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்களின் அரசியல் இருப்புநிலை. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, இருபெரும் இனங்களுக்கிடையே தமிழர்கள் வளர்ந்து வரும் பாட்டிகாலோ, அம்பாறை மாவட்டங்களில் வசித்து வரும் தமிழர்கள் - முஸ்லிம்களுக்கு இடையேயான இறுக்கத்தினால் நிலைமை மோசமடைந்துள்ளது.

இந்தச் சிக்கல் அதன் இன்றைய பரிமாணங் களை எவ்வாறு வலிந்து பற்றிக் கொண்டது என்றும், பல்வேறு முக்கிய தலைவர்களால் வலிந்து தோற்றுவிக்கப்பட்ட இந்தத் தொடர்பு தேசிய அளவிலும் சர்வ தேசிய அளவிலும் பயன் படுத்தப்பட்டமை குறித்தும் பகுத்துப் பார்ப் பதற்கான முயற்சியே இந்தக் கட்டுரையின் உருவாக்கம். நேர்மையுடன், எதார்த்தத்துடன் முரண்பட்டிருக்கக்கூடிய தீர்க்கப்படாத அக-இன அம்சங்கள், அவநம்பிக்கைகள் சில அதற் குள்ளேயே மறைந்திருக்கின்றன என்பது இந்தப் பகுத்தாயும் போக்கில் கண்டறியப்படும்.

பாட்டிகாலோவில் முஸ்லிம்கள் - தமிழர்கள் மோதல் - அதன் உட்பொருளும் விளைவும்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கறைப் பட்டில் 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் மத்தியில் ஏறத்தாழ பத்து நாட்கள் வரை நீடித்த மிகப் பெரிய வன்முறை வெடித்ததுடன் இந்தப் பிரச்சினை தன்னைத்தானே அடையாளம் காட்டியது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்; அதன் விளைவாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த அரசு ஊடகமும், அரசும், தமிழர்கள் தாக்கிய செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்த வேளையில் நடுநிலையான முஸ்லிம் தலைவர்கள் பாட்டிகாலோ உள்ளும், சுற்றுவட்டாரத்திலும் எச்சரிக்கையும் அமைதியும் வேண்டும் என்று கோரினர். இந்த வன்முறை நிகழ்வுகளில் இஸ்ரேலர்களுக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்று உடனடியாகத் தகவல்கள் வெளியாயின (தமிழினப் போராளிகளை அடக்குவதற்கு இலங்கை அரசுக்கு இஸ்ரேலின் உதவி தேவைப் பட்டதால் 1985-ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இலங் கையில் இஸ்ரேலர்களின் புழக்கம் இருந்தது). பாட்டிகாலோவைச் சேர்ந்த முதியவர்கள் சிலரும், தமிழ் அமைச்சர்களான கே.டபிள்யூ.தேவநாயகம், சி.ராஜதுரை ஆகியோரும் கலவரம் நடந்ததற்கான நேரடியான காரணம் என்று ‘வெளி நபர்களை’யே சுட்டிக்காட்டினர்.

இந்த மோதல்கள் அதுவரை கவனத்திற் படாமல் இருந்த இலங்கை இனமோதலைப் பற்றிய ஒரு நோக்குநிலையை வெளிச்சத்துக்குக் கொணர்ந்தன. குறிப்பாக, சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே இருப்பது என்று வழக்கமாகக் கருதப்பட்டு வந்த இந்த மோதல் முஸ்லிம்களுக்கும், இந்த இரண்டு இனக்குழுக் களுக்கும் இடையேயான உறவுகளையும் சிக்கலாக்கு கிறது. தமிழர்கள் - முஸ்லிம்கள் முரண்பாடு, தன் போக்கில் சிங்களவர்கள் - தமிழர்கள் முரண் பாட்டின் தன்மையையும் உட்பொருளையும் காத்திரமாகப் பாதிக்கிறது.

முதலாவதாக, இந்த மோதல் தமிழர்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளுள் ஒன்றை நிறைவேற்ற இயலாமல் சிரமத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக, இலங்கையிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலம் என்று இணைவாகக் கூறப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிர்வாகரீதியாக ஒருங்கிணைக்க இயலாத நிலைக்குக் கொண்டு செல்கிறது. பின்னோக்கிப் பார்க்கும் பொழுது, 1985, ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமிழர்கள் - முஸ்லிம்கள் கலவரங்கள் கெடுவாய்ப்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ‘இணைப்பு - ஊ’ -யை நிராகரிப்பதற்கு அரசு முன்வைக்கும் ‘சாக்குப் போக்கை உருவாக்கிக் கொடுத்தது; அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருந்த முன்மொழிகள் எல்லாம் இந்தியாவின் மத்தியஸ்தர்களால்கூட, அரசியல் தீர்வுக்கான அடிப்படை என்றே ஒப்புக் கொள்ளப்பட்டன.

இரண்டாவதாக, இந்த முஸ்லிம் - தமிழர் மோதலானது ‘இன மோதல் உண்மையில் வடக்கு மாகாணத்தில் மட்டுமே வரையறைப்படுத்தப் பட்டது’ என்று அரசாங்கம் தன் நிலைப்பாட்டை மேலும் அழுத்தமாக, அடிக்கடி கூறும்படி செய்தது. அந்த நேரத்தில், இலங்கைத் தீவின் ஒவ்வொரு பிரதேசத்திலும் தேசிய இன நிர்ணயம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து விரிவாக (வாக்குரிமை) ஆதரவைத் தேடியது. வடக்கிலும், கிழக்கிலும் - குறிப்பாக, வடக்கு மாகாணத்தில், இப்படிப்பட்ட ஒரு சமநிலையை அடையும் நோக்கத்தில் சிங்களவர்களின் புதிய குடியேற்றங்கள் தொழிற்பட்டிருக்க வேண்டும் என்றுகூட விவாதிக்கப்பட்டது. இத்தகைய புள்ளி விவர அடிப்படையிலான மறுகட்டமைப்பான பூர்வீகத் தமிழ்த் தாயகம் என்ற கருத்துப் படிவத்தை முனைப்புடன் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.

மூன்றாவதாக, இந்த மோதலானது அரசு அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் - சிங்களவர் களின் குடியேற்றத்தை நிகழ்த்துவதற்கு வசதி செய்து கொடுத்தது; அதன் விளைவாக, முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையோராகவும் பொருளாதார நிலையில் வளமாகவும் இருந்த அம்பாறை மாவட்டத்தில் அந்த முஸ்லிம்கள் அவற்றையெல்லாம் இழந்து கையறு நிலையை அடைந்தனர்.

நான்காவதாக, சர்வதேச உறவுகளின் நோக்கு நிலையில் பார்க்கும்போது இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இலங்கை அரசு இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் உளவுப்பணி ஆலோசகர் களுக்கும் தம் மண்ணில் இடம்கொடுத்திருந்ததால் அரபு நாடுகளுடனான நல்லுறவில் அதற்கு ஏற்பட்டிருந்த பாதிப்பைப் போக்கி, மீண்டும் நல்லுறவு ஏற்பட இந்த மோதல்கள் வசதி செய்து கொடுத்தன. கிழக்கு மாகாணத்தில் ஹெலி காப்டர்கள் மூலம் வீசிப் பரப்பப்பட்ட ஒரு துண்டறிக்கையின் 3-ஆம் பக்கத்தில் பின்வரும் முக்கியமான வரிகள் இடம் பெற்றிருந்தன.

“பாலஸ்தீன விடுதலை அமைப்பு என்றால் என்ன? இந்த (நாடுகள்) லெபனான், லிபியா என்பவை யாவை? இவையெல்லாம் உலகின் முஸ்லிம் நாடுகள். வடக்கிலிருந்து பயங்கர வாதிகள் தங்கள் கைகளில் பிச்சைப் பாத்திரங் களை ஏந்திக் கொண்டு இந்த நாடுகளுக்குச் சென்று, அங்கு நிதியுதவியும், ஆயுதப் பயிற்சியும் பெற்றனர். அதே தமிழ்ப் பயங்கரவாதிகள் முஸ்லிம் நாடுகளிலிருந்து பெற்றுவந்தவற்றை இப்போது இலங்கைவாழ் முஸ்லிம்களை அழிப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.”

இந்தத் தமிழர் - முஸ்லிம் மோதல் முதன் மையாக மத மோதல் என்று மெய்ப்பிக்க அரசாங்க அளவிலான முஸ்லிம் தலைவர்களால் - குறிப்பாக, முஸ்லிம் சமய நலத்துறை மூலமாகக் கூட ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மசூதிகளிலும், முஸ்லிம் புனிதத் தலங்களிலும் ஏற்பட்ட சேதாரங் களைப் பற்றிய ஒரு கணக்கெடுப்பு உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம் சமய நலத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு செய்த பரிந்துரை மிக முக்கியமானது:

“இயல்பு நிலைமை திரும்பாத வரையில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட வேண்டும். மக்களே கேட்டுக் கொண்டும்கூட, நிரந்தர சிறப்புக் காவற் படை முகாமிட்டிருப்பது தெரிவிக்கப்பட வில்லை.”

இவ்வகைக் கருத்து, அரசு தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் உள்ளூர் முஸ்லிம்களுக்கு ஆயுதங் களை வழங்கவும், முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் பாட்டிகாலோ பகுதிகளுக்கு ஊர்க் காவல் படையை அளிக்கிற அளவுக்கும் இட மளித்தது; இந்த நடவடிக்கைகள் அறிமுகமான பிறகு உள்ளூர் முஸ்லிம் தலைவர்களே கண்டனம் செய்கிற அளவுக்கு வன்முறை அதிகமானது. அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பொருத்தமான சூழ்நிலை ஏற்பட்டது.

உண்மையில், பாட்டிகாலோவில் நடைபெற்ற இந்த முஸ்லிம் - தமிழர்கள் மோதலுக்குப் பின்னால் இருக்கிற அடிப்படைப் பிரச்சினையை உருவாக்குவது எது?

இந்தப் பகுதிகளில் தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகளே இதற்கான நேரடியான காரணம் என்று கூறப்படுகிறது. தமிழ்ப் போராளிகள் 1982 முதல் வடக்கில் ஆதிக்கம் கொள்ளத் தொடங் கினர். அங்குதான் அவர்கள் முனைப்பான படை யாக உருவெடுத்தனர். வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்களைத் தாக்குதல், அரசு நிறுவனங்களின் வாகனங்களையும், தனிநபர் வாகனங்களையும் கைப்பற்றுதல் போன்ற முன்மாதிரிகளை முதன் முறையாகத் துவங்கினர். தலைமறைவு இயக்கம் என்ற வகையில், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத் துக்காக அந்தப் பகுதியின் வாய்ப்பு வளங்களையே சார்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததானது; என்றாலும், இந்தச் சார்புநிலை உருவாக்கக்கூடிய அகவயப்பட்ட சமூக நெருக்கடிகள், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அரசுப் பாதுகாப்புப் படைகளின் கொடிய அடக்குமுறைகளின் காரணமாக, காத்திரமான ஒரு முரண் இயக்க நிலையாகக் கருதவில்லை. ஒன்றை மற்றொன்று பாதிக்கிற இந்த முன்மாதிரி ஓர் ஒன்றுபட்ட பண்பாட்டுச் (தமிழ்) சூழலுக்குள் வளர்ச்சியுற்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அரசாங்கப் பாதுகாப்புப் படைகள் அடக்கு முறை நடவடிக்கைகளை விரிவாக்கியதற்கு எதிர் வினையாக, பாட்டிகாலோ மாவட்டத்துக்குள்ளே திரிகோணமலைக்குத் தெற்குத் திசையை நோக்கிப் போர் உணர்ச்சி பரவத் தொடங்கியபோது, போராளிக் குழுக்கள் வேறொரு சமுதாயப் பண்பாட்டு அமைவில் வளர்த்தெடுத்த அதே வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கின. ஆனால், பாட்டிகாலோவில் வேறுபட்டதொரு சமய - இனக்குழுவினர் - முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். திடீரென அங்கே பிரச்சினைகள் முளைக்கத் தொடங்கின. குறிப்பாக, முஸ்லிம்களில் பெரும்பாலானோருக்குப் பாதிப்பு ஏற்பட்ட போது சிக்கல்கள் உருவெடுத்தன. அரசு அதிகாரிகளுக்கு இலங்கை முஸ்லிம் லீக் அமைப் பால் அனுப்பப்பட்ட சில கடிதங்கள் முஸ்லிம் களிடையே கருத்துரைப்பதற்கென்றே இருந்த தலைவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலைப் பாட்டினை விளக்குகின்றன. 1985, மே, 8-ஆம் தேதி அன்று - அதாவது, அக்கறைப்பட்டில் மோதல் நடந்த சில வாரங்களுக்குள் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தின் இந்தச் சில வாசகங்களைச் சான்றாகக் கூறலாம்:

“வெளிப்புறப் படைகள் இங்குள்ள முஸ்லிம்களைத் தூண்டிவிடுகின்றன என்று நாங்கள் தினமும் செய்தித்தாள்களிலிருந்து தகவல் அறிகிறோம். வெளிப்புறப் படைகள் முஸ்லிம்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தியதாக ஓர் அமைச்சர் கூட கருத்து தெரிவித்திருக்கிறார். அகதிகளுள் பெரும்பான்மையோர் தமிழர்களே என்று எடுத்துரைத்து, மெய்ப்பிப் பதற்கு தமிழர் அமைச்சர்கள் அரும்பாடு பட்டு வருகின்றனர். இந்தக் குரலெடுப்பால் தமிழர்களிடையே கிளர்ச்சி ஏற்படுகிற சூழல் ஏற்படுகிறது. முஸ்லிம்களின் நிலைப்பாடு, தமிழர்களின் முன்பும், முழுத் தேசத்தின் முன்பும் திட்டவட்டமாக எடுத்து வைக்கப் பட்டுள்ளது. ஒருங்கிணைந்த இலங்கை தான் எங்களின் கோரிக்கை. இதுவரை தமிழர்களின் சார்பில் எங்களை எந்தத் தமிழர்களும் (பயங்கரவாதிகள் அல்லது விடுதலைப் போராளிகள்) அணுகவில்லை. முஸ்லிம்களைச் சம்பந்தப்படுத்தாமலே தமிழர்கள் தங்கள் போரை நடத்தியிருக்க முடியும்.

ஆயினும், கடந்த ஆறு மாதங்களாக, தமிழர்கள் விடுதலைப் போருக்கு முஸ்லிம்கள் நிதியுதவி செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் துணிவுடன் முஸ்லிம் வீடுகளில் நுழைந்து பணம் கொடுக்கும்படி கேட்டனர். முஸ்லிம் களின் வசமிருந்த துப்பாக்கிகளை அரசு திரும்பப் பெற்றுக் கொண்ட நிலையில் பயங்கரவாதிகளை எதிர்த்து நின்று தடுக்க முஸ்லிம்களால் முடியவில்லை. இது ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டே போனது. ஒரு முஸ்லிம் வீட்டுக்கு இரண்டாவது தடவை பணம் கேட்டுச் சென்ற பயங்கரவாதிகள், அவர் தம்மால் பணம் கொடுக்க இயலாத நிலையை எடுத்துச் சொன்னபோது, அவருடைய மகளைக் கடத்திச் சென்று விடுவதாகக் கூறி மிரட்டினர். இதைப் போன்ற நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் அனைத்துக் கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெற்றன. அக்கறைப்பட்டு முஸ்லிம்கள் ‘முஸ்லிம்களை விட்டு விடுங்கள்’ என்று பயங்கரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்து துண்டறிக்கைகளையும் சுவரொட்டி களையும் அச்சிட்டு வெளியிட்டதற்கு இது தான் காரணம்!”

ஆயினும், உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் மிகவும் தெளிவான மனோபாவத்துக்கு மாறினர். தங்களை ஒதுக்கிவிட்டதாகக் குற்றம் சாட்ட முனையாமல் பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர முனைந்தனர். இந்தச் சூழல் பாதிக்கப்பட்டவர் களையும், பாதிப்பை ஏற்படுத்திய பாதகர்களையும் அடையாளப்படுத்துகிற ஒன்றல்ல, இரண்டு தரப்புகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மதிப்பிடுகிற நிலைக்குச் சென்றனர்; பாதிக்கப் பட்ட பகுதியில் பாதுகாப்பு உணர்வை உருவாக்குவது அவசியம் என்று கருதினர். இந்தப் பாரபட்சமற்ற நோக்கத்துடன்தான் 1970-1977-இல் கல்வித்துறை அமைச்சராக இருந்த பதியுதின் மஹமது உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் போராளிகளின் தலை மையைத் தொடர்புகொள்ளத் திட்டமிட்டு, சென்னைக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பினர்.

தமிழர்களின் போராட்டப் போக்கில் முஸ்லிம்கள் சந்திக்கக்கூடிய குறிப்பிட்ட சிக்கல் களுக்கு இந்த மோதல் ஓர் அறிகுறியாகும். எனினும், கணிசமான அளவில் வசித்துக் கொண்டிருந்த ஒரே பிராந்தியத்தில் - அதாவது, கிழக்கு மாகாணத்தில் தங்கள் அரசியல் வலிமையை இழந்துவிடுவோமோ என்ற முஸ்லிம் சமூகத்தின் இயல்பான அச்சமே இது என்பது வெளிப்படையானது. தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்று கருதப்பட்ட வேளையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள எல்லாப் பகுதிகளையும் விட்டு விட்டு, அம்பாறை மாவட்டத்தை மட்டும் பிரிப்பதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திய போது அம்பாறை மாவட்டத்தை விலக்கி விட்டனர். அவர்கள் கிழக்கு மாகாணத்தில் பாட்டிகாலோ, திரிகோண மலை மாவட்டங்களைப் பற்றி மட்டுமே பேசினர்.

டிசம்பர், 12-ஆம் தேதி அன்று அனைத்து - இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பின் அம்பாறை மாவட்ட ஒன்றியத்திலிருந்து பதியுதின் மஹமதுவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் அரசியல் கோரிக்கை களைப் பின்வருமாறு தொகுத்துரைக்கிறது:

“மாகாண சட்ட மன்றங்களை நிறுவும் பொருட்டு மேன்மைமிகு ஜனாதிபதி முன் வைத்துள்ள வரைவை வரவேற்கிற அதே வேளையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்தின் மற்ற பகுதிகளை விட்டுவிட்டு, அம்பாறை மாவட்டத்தை மட்டும் பிரிக்கவும், பாட்டி காலோ, திரிகோணமலை மாவட்டங்களை வடக்கு மாகாணத்துடன் இணைக்கவும் கோரியுள்ளதைக் கடுமையாக மறுதலிக் கின்றனர்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இந்தக் கோரிக்கை கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதான சமூகங்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக் கிடை யேயான இனத்துக்குரிய சமநிலையைப் (ethnic balance) பாதிப்பது மட்டுமல்லாமல், இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் வலிமையையும் தீவிரமாகப் பாதிக்கும்.

அம்பாறை மாவட்டம் கிழக்கு மாகாணத்தி லிருந்து பிரிக்கப்பட்டால், கிழக்கு மாகாணத்தி லுள்ள 3,75,355 நபர்களுக்கு - அதாவது, இந்த நாட்டின் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமா னோருக்கு, தகுதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். சுருங்கக்கூறின், இந்த நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் முக்கியத்துவம் அற்ற ஒரு சிறுபான்மை இனமாக முஸ்லிம் சமூகம் குறைக்கப்பட்டு விடும்; இலங்கையில் அது தனது அரசியல் வலிமையை முற்றிலும் இழந்துவிடும்.”

இது, அம்பாறை மாவட்டத்தில் சிங்கள ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பதற்கான முனைவு என்று வெளிப்படையாகத் தெரிகிறது.

தமிழில் : சா.ஜெயராஜ்

(தொடர்ச்சி - அடுத்த இதழில்)