இப்பெயர் கொண்ட புத்தகமொன்று வரப்பெற்றோம். இஃது பல்லாவரம், வித்யோதயா மகளிர் கல்லூரியின் தமிழாசிரியர் ஸ்ரீமதி நாகை நீலாம்பிகை அம்மையாரால் எழுதப்பட்டது. தமிழ் பாஷையின் வளர்ச்சி தினே தினே குறைந்துகொண்டுவரும் இக்காலத்தில் வடமொழி கலவாது, தனித்தமிழில் கட்டுரைகள் வரையப்பட்டு, அதுவும் ஓர் புத்தக ரூபமாக வெளிவந்திருப்பது தமிழுலகுக்கு ஓர் நல்விருந்தென்றே கூறுவோம்.

இத்தகைய புஸ்தகங்களே தமிழ்வளர்ச்சிக்கு உற்ற சாதனங்களாகும். நமக்கு அநுப்பப்பட்டுள்ள இப்புத்தகத்தின்கண் வடமொழிச்சொற்கள் எங்கணும் கண்டோமில்லை. அதன் அருமை பெருமையை நன்கு விளக்குவான் வேண்டி “தமிழில் வடமொழி கலத்தல் ஆகாது” என்னும் கட்டுரையை இதனடியில் பிரசுரித்திருக்கின்றோம். இப்புத்தகத்தின் விலை ஒரு ரூபா நான்கணாவாகும். இத்தகைய பல புத்தகங்களை வெளியிடுமாறு கடவுள் அநுக்கிரகம் இச்சகோதரிக்குக் கிடைக்குமாக.

(குடி அரசு - நூல் மதிப்புரை - 31.01.1926)

Pin It