கண்போற் காத்தேனே - என்னருமைப்-
        பெண்ணை நான்தானே (கண்)

        மண்ணாய்ப் போன மாப் பிள்ளை
        வந்ததால் நொந்தாள் கிள்ளை
மணமக னானவன் – பிணமக னாயினன்
குணவதி வாழ்க்கை எவ் - வணமினி ஆவது? (கண்)

        செம்பொற் சிலை, இக் காலே
        கைம் பெண்ணாய்ப் போன தாலே
திலகமோ குழலில் - மலர்களோ அணியின்
உலகமே வசைகள் - பலவுமே புகலும் (கண்)

        பொன்னுடை பூஷ ணங்கள்
        போக்கினாளே என் திங்கள்!
புகினும் ஓர் அகம் சகுனம் தீ தென
முகமும் கூசுவார் - மகளை ஏசுவார்! (கண்)

        தரையிற் படுத்தல் வேண்டும்
        சாதம் குறைத்தல் வேண்டும்
தாலி யுற்றவள் - மே லழுத்திடும்
வேலின் அக்ரமம் - ஞாலம் ஒப்புமோ? (கண்)

        வருந்தாமற் கைம்பெண் முகம்
        திருந்துமோ இச் சமுகம்
மறுமணம் புரிவது – சிறுமைஎன் றறைவது
குறுகிய மதியென - அறிஞர்கள் மொழிகுவர் (கண்)

Pin It